புதுவஞ்சேரி ஸ்ரீகயிலாசநாதர்

சென்னை நகருக்குள் பதுவஞ்சேரி கிராமத்தில் ஸ்ரீகயிலாசநாதரின் பழைமையான ஆலயம் இருக்கிறது. ஆனால், எங்களின் ஆலயம் பற்றி வெளியூர்க்காரர்கள் பலருக்கும் தெரியவில்லை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது! பக்தர்களது வருகையும் பராமரிப்பும் குறைந்து போனதால், இந்த ஆலயம் ஒருகட்டத்தில் அப்படியே மண்ணோடு மண்ணாக மூடிப் போய் விட்டது. இங்கு சிறப்பான ஆலயம் ஒன்று இருந்ததையே நாங்களும் மறந்தே போனோம்.
இதையடுத்து சுமார் 25 வருடங்களுக்கு முன்புதான் புதைந்திருக்கும் கோயிலை கண்டுபிடித்தோம்; மீண்டும் கோயிலை எழுப்பினோம். ஊர்மக்களான நாங்கள் ஒன்று கூடி இந்தக் கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறோம். பழம்பெருமை வாய்ந்த கயிலாசநாதர் ஆலயத்துக்கு ஒரு முறை வாருங்கள்; ஆன்மிக அன்பர்கள் பலருக்கும் தெரியப்படுத்துங்கள்' எனும் வேண்டுகோளுடன் கடிதம் ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தனர், பதுவஞ்சேரி கிராம மக்கள்.
பதுவஞ்சேரி... தாம்பரத்துக்கு அருகில் இருக்கிறது இந்த கிராமம். தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பதுவஞ்சேரி ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்!
தாம்பரம்- வேளச்சேரி சாலையில், தாம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாடம்பாக்கம் எனும் கிராமம். இங்கு அமைந்துள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நேர் தெற்காக சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்.
பதுவஞ்சேரி கிராமத்துக்குச் சென்றபோது, பிரமிப்புதான் ஏற்பட்டது. பச்சைப் பசேலென்ற வயல்வெளியின் நடுவில் அமைதியாகக் காணப்படுகிறது அருள்மிகு திரிபுரசுந்தரி நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம். கடும் வெயில் காலத்திலும் ஆலய வளாகத்துக்குள் சில்லென்று வீசுகிறது சுகமான காற்று. இந்த ரம்மியமான சூழ்நிலை, ஆலயத்துக்கு வரும் பக்தர்களைப் பரவசமாக்குகிறது!

தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாமே புனிதம் வாய்ந்தவையாகக் கூறப்படுகின்றன. காரணம், முன்னொரு காலத்தில் சித்தர்கள் இந்தப் பகுதியில் அதிகம் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பதுவஞ்சேரிக்கும் ஒரு மகிமை உண்டு. கல்வெட்டுத் துறையின் பழைய சான்றுகள் 'புஞ்சேரி அக்ரஹாரம்' என்று பதுவஞ்சேரியைக் குறிப்பிடுகின்றன. இங்கு அந்தணர்கள் அதிக அளவில் வசித்து வந்தனராம்! மூன்று சிவாலயங்களும் வைணவ ஆலயம் ஒன்றும் இன்று தரிசிக்கக் கிடைக்கின்றன. இவற்றுள், ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைத்தான் தரிசிக்க உள்ளோம்.
ஸ்ரீகயிலாசநாதரைத் தரிசிப்பதற்கு முன், இந்த ஆலயம் இங்கு அமைந்த விதத்தைத் தெரிந்து கொள் வோம். மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத் தில் இருந்து இதற்கான கதை தொடங்குகிறது.
சுமார் 20 வருடங்களுக்கு முன் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம், தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. இந்த ஆலயப் பணிகளை சிறப்புற கவனிக்க பதுவஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி (இப்போது இவர் இல்லை) என்பவரது தலைமையில் 31.7.90 அன்று திருப்பணிக் குழு ஒன்றை அமைத்தார் வாரியார் ஸ்வாமிகள். இந்தக் குழுவினரின் முயற்சியால்தான் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரதி ஞாயிறுதோறும் மாலையில்... ராகுகால வேளையில் சரபேஸ்வரர் ஸ்வாமிக்கு விசேஷ வழிபாடுகள் துவங்கின. ஆனால், அடுத்து வந்த ஓரிரு வருடங்களில், தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்துக்குள் தேனுபுரீஸ்வரர் ஆலயம் வந்தது. அரசின் இந்த அறிவிப்பால், ஏற்கெனவே இயங்கி வந்த திருப்பணிக்குழு கலைக்கப்பட்டது.
தன்னைத் தலைவராகக் கொண்டு இயங்கி வந்த 'ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத் திருப்பணிக் குழு' திடீரென கலைக்கப்பட்டு விட்டதால், கிருஷ்ணமூர்த்தி மன நிம்மதியை இழந்தார். 'இறைவனுக்கு இனி நான் எப்படி சேவை செய்வேன்?' என்று கலங்கினார்.
ஒரு நாள் இரவு கிருஷ்ணமூர்த்தியின் கனவில் தோன்றிய துறவி ஒருவர், 'இறைப் பணி செய்ய முடியவில்லையே என்று கவலைப்படாதே... இதே பதுவஞ்சேரி கிராமத்தில் லிங்கத்துமேடு என்று அழைக்கப்படும்இடத்துக்கு நாளை காலை செல். அங்கு பெரிதாகவுள்ள மேட்டுப் பகுதியை தூய்மைப்படுத்து. உன் மனம் நிம்மதி அடையும்' என்று அருளி மறைந்தாராம்!
மறுநாள்! துறவி குறிப்பிட்ட லிங்கத்துமேடு பகுதியை நோக்கி ஆர்வத்துடன் நடையைக் கட்டினார் கிருஷ்ணமூர்த்தி. கனவில் தனக்கு வந்த உத்தரவுப்படி, மேடான இடத்தில் இருந்த மரம், செடி- கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினார். பிறகு மண்வெட்டியால், மேட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டினார். அப்போது கறுப்பாக கல் ஒன்று தென்பட்டது. சிவலிங்க பாணத்தின் சாயலில் தென்பட்ட அந்தக் கல்லைப் பார்த்ததும், கன்னத்தில் போட்டுக் கொண்டவர், உடனே ஊருக்குள் சென்று இதுகுறித்து அனைவரிடமும் தெரிவித்தார்.

கிராம மக்கள் ஒன்று கூடி மண்மேட்டை முழுவதுமாக வெட்டி, கடும் பிரயத்தனத்துக்குப் பிறகு, அந்தக் கல்லை வெளியே எடுத்தனர். அது- ஆவுடையாருடன் கூடிய பெரிய சிவலிங்கம்!
ஆவுடையாரின் நடுவே ஒரு வேப்ப மரத்தின் பகுதி ஊடுருவி பிரமாண் டமாக வளர்ந்திருந்ததால், அதன் நடுவில் ஒரு வெடிப்பு உருவாகி இருந்தது. இந்த சம்பவம் கடந்த 5.4.94 அன்று நடை பெற்றது. அது அக்னி நட்சத்திர வேளை... லிங்கத்துமேட்டில் தோண்டும் பணி துவங்கிய போது, உச்சியில் வெப்பத்தை கக்கியபடி இருந்தான் சூரியன். ஆனால், மணல்மேட்டை முழுவதும் கரைத்து, லிங்கத்தை வெளியே எடுத்து சுத்தமான இடத்தில் வைத்தபோது, வருண பகவான் தனது வந்தனங்களை, லிங்கத் திருமேனிக்குச் சொன்னான். ஆம்! வானத்தில் கருமேகங்கள் திடீரென திரண்டு மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை மழை நீடித்தது.
''சிவலிங்கம் வெளியே கொண்டு வரப்பட்ட வேளையில்... திடீரென அடைமழை பெய்ததை அந்த ஈசனின் ஆசியாகவே நினைத்தோம். பெரும் காற்றுடன் பெய்த கனமழையால் இங்கு உள்ள ஏரி-குளங்களில் நீர் நிரம்பின. இப்படி நீர் நிரம்பிய நிலையில் ஏரி-குளங்களைப் பார்த்து சுமார் 30 வருடங்களாகி விட்டது!
இதில், குறிப்பிட வேண்டிய ஒன்று... பதுவஞ்சேரியைச் சுற்றி உள்ள பகுதி களில் அன்று மருந்துக்குக்கூட மழை பெய்யவில்லை'' என்று அன்றைக்கு இந்த நிகழ்வின்போது உடன் இருந்த பதுவஞ்சேரியைச் சார்ந்த ஒருவர் பெருமிதம் பொங்கச் சொல்கிறார்.இதையடுத்து தொல்பொருள் துறையினர் லிங்கத்துமேடு பகுதியை ஆய்வு செய்தனர். மேலும் லிங்க பாணம் ஒன்றும், நிலத்துக்கு அடியில் ஓர் ஆலயத்தின் முழு அமைப்பும் (ஃபவுண்டேஷன்) கிடைத்தது. மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில்... அம்மன் சந்நிதியில் உள்ள கல்வெட்டுக்களின் மூலம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில் இது என்பதை தெரிவித்தனராம் தொல்லியல் ஆய்வாளர்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த தேனுபுரீஸ்வரர் ஆலய நிர்வாகிகளால் பதுவஞ்சேரியில் கயிலாசநாதர், திருவற்றீஸ்வர உடையார் ஆகிய தலங்கள் எழும்பியதாக அறிய முடிகிறது. இந்த ஆலயங்களை முறையே பராமரித்து வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்துவதற்காக தெலுங்கு பேசும் மக்களை நியமித்து, நிலங்களையும் அன்றே சாசனம் செய்து வைத்துள்ளனர் எனும் தகவலையும் கல்வெட்டு மூலம் அறிய முடிந்தது.
புதிதாக கோயில் ஒன்று கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த பதுவஞ்சேரி கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடம் முறையாகப் பேசி, இந்த கயிலாசநாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பைத் தாங்களே கேட்டுப் பெற்றுக் கொண்டனர். அன்றைக்குத் துவங்கப்பட்டதே 'கயிலாசநாத பக்த சங்கம்'. இன்றைக்கும் இந்த சங்கத்தின் பொறுப்பில்தான் ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆலயம் சம்பந்தப்பட்ட பூர்வாங்க வேலைகள் முடிந்தபின் திருப்பணிகள் துவங்கின. 'மரம் ஊடுருவிய ஆவுடையாரிலேயே கயிலாசநாதர் இருப்பது கூடாது. பின்னம் அடைந்த ஆவுடையாரை மட்டும் மாற்றி விடுவோம்' என தீர்மானித்த கிராமவாசிகள், புதிய ஆவுடையாரை நாகர்கோவிலில் வடிவமைத்து எடுத்து வந்தனர். இதில் கயிலாசநாதரின் லிங்க பாணத்தைப் பொருத்தினர். ஆலயத்தைத் தோண்டும்போது கிடைத்த இன்னொரு லிங்க பாணத்தை, பின்னம் அடைந்த ஆவுடையாரை சீர் செய்து பொருத்தி, பிரதிஷ்டை செய்தனர். தற்போது ஆலயத்தில் இரண்டு லிங்க வடிவங்களை யும் தரிசிக்கலாம்.
இனி, ஆலய தரிசனம் செய்வோமா?
கிழக்கு நோக்கிய திருக்கோயில். ஆலயத்துக்குள் நுழைந்ததும் வலப் பக்கத்தில் வரும் முதல் சந்நிதியில், மண்மேட்டில் இருந்து இரண்டாவதாக கிடைத்த பழைமையான லிங்கத் திருமேனியை தரிசிக்கிறோம். சேதப்பட்ட நிலையில் பூமியில் இருந்து கிடைத்த வடிவம் என்பதைப் பார்த்தாலே அறியலாம். இந்த பாணம் பொருந்தி இருக்கும் ஆவுடையாரில்தான், வேப்பமரம் ஊடுருவி இருந்தது. இதில் திருத்தங்கள் சில மேற்கொண்டு, பிரதிஷ்டை செய்தனர்.
இதையடுத்து, ஆதிநாயகனாம் ஸ்ரீகயிலாசநாதரை தரிசிக்கிறோம். நந்தி, பலிபீடம். சிவனாரின் சந்நிதிக்கு முன்பு ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீமுருகப் பெருமான் ஆகியோரின் திருவடிவங்கள்.
பெரிய கல்லால் ஆன ஸ்வஸ்திக் யந்திரம் ஒன்று லிங்கத் திருமேனியின் பீடமாக காணப்படுகிறது. இப்படி கல்லால் ஆன ஸ்வஸ்திக் பீடம் அமைந்திருப் பது அபூர்வமாம்! இத்தகைய லிங்க அமைப்பு எந்த காலத்திலும் அழியாமல் இருக்குமாம் (இதனால்தான் வெளி உலகுக்குத் தெரிய வேண்டிய நேரத்தில் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை ஆனதாம்!). விளக்கொளியில் ஜொலிக்கும் பிரமாண்ட லிங்கத் திருமேனி. சில வருடங்களுக்கு முன் வரை பழைய கொட்டகை ஒன்றில் காட்சி தந்தவர், இன்று ஆனந்தமாக தரிசனம் தருகிறார். ஸ்வஸ்திக் சக்கர பீடத்தினுள் அம்பாளின் ஸ்ரீசக்கரமும் இருக்கிறதாம். எனவே, ''ஸ்ரீகயிலாசநாதரைத் தரிசிக்கும் அதே வேளையில் அம்மனின் அனுக்கிரஹமும் நமக்குக் கிடைத்து விடும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர்.
'நமசிவாய' நாமம் கூறி வணங்கி விட்டு, நகர்ந்தால், பிராகாரம். கோஷ்டத்தில் ஸ்ரீபாலகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை ஆகிய தெய்வங்களை தரிசிக்கிறோம்.
ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீஅகத்தீஸ்வரர், பைரவர், சூரிய பகவான், நவக்கிரகம், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்குத் தனி சந்நிதிகள். பிராகார முடிவில் தெற்குப் பார்த்து ஸ்ரீதிரிபுரசுந்தரியின் சந்நிதி. ''நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் இந்த நாயகி, திருமணம் முதலான வரங்களை வழங்கு வதில் வரப்ரசாதி. ஸ்ரீகயிலாசநாதருக்கும் ஸ்ரீதிரிபுர சுந்தரிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். இங்கு வந்து வணங்கிய பல பெண்களுக்கும் திருமணத் தடைகள் விலகி, நல்லபடியாக புகுந்த வீடு போயிருக்கிறார்கள்'' என்கிறார் ஆலய அர்ச்சகர்.
சித்ரா பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை, ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்த மார்ச் மாதத்தில் பதினோரு சிவாச்சார்யர்களைக் கொண்டு ருத்ர ஜபம் மற்றும் மகா சிவராத்திரி, நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் போன் றவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படு கின்றன.
ஆலயங்களுக்குச் சென்று இறை உருவங்களைத் தரிசித்தால் நம் மனதில் நிம்மதி பிறக்கும் என்பர். ஆலயத்துக்குள் நுழைந்ததுமே மன நிம்மதியை அருளும் பதுவஞ்சேரி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்குச் சென்று, சிவதரிசனம் பெற்று சிறப்போமே!
தகவல் பலகை
தலம் : பதுவஞ்சேரி
மூலவர் : அருள்மிகு திரிபுரசுந்தரி நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர்
எங்கே இருக்கிறது?: தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள கிழக்குத் தாம்பரம் பேருந்து
நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பதுவஞ்சேரி ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
தாம்பரம்- வேளச்சேரி சாலையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாடம்பாக்கம் எனும் கிராமம். இங்கு அமைந்துள்ள அருள்மிகு தேனுபுரீஸ் வரர் ஆலயத்தில் இருந்து நேர் தெற்காக சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம்.
எப்படிப் போவது?: கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து எண் 51 ஏ-யில் பயணித்து, அகரம் தென் கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து ஆலயத்துக்கு நடந்தால் 10 நிமிடம்! 51 டி-யில் பயணித்து பதுவஞ்சேரி ரைஸ்மில் நிறுத்தத்தில் இறங்கினால், அருகிலேயே உள்ளது ஆலயம். தவிர மாடம்பாக்கம் மற்றும் தாம்பரம் வரை பேருந்தில் பயணித்து, அங்கிருந்து ஆட்டோ மூலமும் ஆலயத்தை அடையலாம்.
தொடர்புக்கு:
பாபு : 98406 36134
கே. சுரேஷ் : 99621 20209
10, காந்தி தெரு, பதுவஞ்சேரி,
மப்பேடு அஞ்சல், சென்னை - 600 073.

Comments

  1. மீண்டும் கோயிலை எழுப்பினோம். ஊர்மக்களான நாங்கள் ஒன்று கூடி இந்தக் கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறோம்.

    இறைபணிக்கு வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete

Post a Comment