திருவடி தரிசனம்

சிவன்கோட்டை... சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த பூமி. சுற்றிலும் மகான்களின் ஜீவ சமாதிகள். கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நகரம், 1956-ஆம் ஆண்டுதான் தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லாவுடன் இணைக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்ராஜா ஆட்சி செய்த பகுதி இது என்கிறது சரித்திரம். நகருக்கு மேற்குப் புறத்தில் நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து, மகாதேவர் கோயில், தீர்த்தக் குளம் போன்றவற்றை அமைத்தாராம். இப்போது காலம் சிதைத்த எச்சங்களே உள்ளன. சிவன்கோட்டையே காலப்போக்கில் மருவி, செங்கோட்டை ஆனதாம்!
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமே ஆன்மிக பூமியாக விளங்கியது. சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதியாக செங்கோட்டை இருந்ததால், அங்கே துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதைக் கடந்துதான், ஆரியங்காவு, அச்சங்கோயில், சபரிமலை என கேரளத்தின் புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களில் இருந்தும் செங்கோட்டைக்கு பஸ் வசதி உள்ளது. ரயில் வசதியும் உண்டு. ஊரின், காவல் நிலைய நிறுத்தத்தின் அருகில், பழைய சினிமா தியேட்டர் ஒன்று. அதை ஒட்டி, சாலையில் வலப்புறம் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சிறிய சிமென்ட் பாதை. சுற்றிலும் பச்சைப் பசேலென வயல். அடுத்து பொதிகை மலையின் வண்ணமயமான தோற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இயற்கையை ரசித்தபடியே அதில் செல்கிறோம். சற்று தொலைவில் ஆற்றங்கரையில் அழகான ஆலயம்... அது, சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சமாதி ஆலயம்.
ஒரு சிவாலயத்துக்கு உண்டான அம்சங்களோடு திகழ்கிறது. கருவறை கோஷ்டங்களில் தட்சிணா மூர்த்தி, முருகன், பிரம்மா சிலைகள். சமாதி ஆலயத்தின் இடப்புறம் ஒரு புற்று. ஆறுமுக சுவாமிகளுக்கு பாம்புகளோடு நெருங்கிய பழக்கம் இருந்ததாம். முன்னே ஒரு மண்டபம். அதைக் கடந்து உள்ளே சென்றால், சுவாமிகளின் சமாதி கருவறை. மேலே லிங்கப் பிரதிஷ்டை ஆகியுள்ளது.
நந்தி, பலிபீடம் எல்லாம் உள்ளன. அதனால், பிரதோஷ பூஜையும் நடக்கிறது. பூஜைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். நாடி வருபவர்களின் வேண்டுதல் களை நிறைவேற்றி, இன்றும் தன் ஆன்மிக சாதனையின் மகிமையை எடுத்துக் காட்டுகிறார் சுவாமிகள்.
சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சரித்திரம்... சாதாரண மனிதராக வெளித் தெரிந்த ஒருவர், மகானாகப் பரிமளித்த உன்னத சரித்திரம்.
சைவ வேளாண் மரபில் வந்த பெரியநாயகம் பிள்ளை, தில்லை நடராஜப் பெருமான் மீது தீராக் காதல் கொண்டவர். இதே ஊரைச் சேர்ந்த பொன்னம்மாளை இவருக்கு மணம் முடித்து வைத்தனர். வருடங்கள் சென்றன. இல்லறம் நல்லறமாக நடந்ததாயினும் குலம் தழைக்க குழந்தைப் பேறு இன்றி இருவரும் மனவருத்தம் கொண்டனர். தெய்வம் பல வணங்கியும், தலம் பல சென்றும் நாட்கள் சென்றதுதான் மிச்சம். ஒருநாள் திடீரென தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினர்.
பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடி, திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப் பெருமானைத் துதித்து தங்கள் குறை தீர மனமுருகி வேண்டினர் அந்தத் தம்பதி. முருகனும் அருள் புரிந்தான்.
கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பௌர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தது ஆண் குழந்தை. முருகன் கருணையால் பிறந்த குழந்தை ஆதலால், ஆறுமுகனின் பெயரையே வைத்தனர். அந்தக் குழந்தையே, நூறு வயது பூவுடலுடன் இருந்து, சித்துகள் பல புரிந்து, புத்தரைப் போல், வள்ளலாரைப் போல் பௌர்ணமியில் தோன்றி பௌர்ணமியிலேயே ஸித்தியான சித்தபுருஷர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்.
இவர் பிறந்த பிறகு, சீனிவாசன், சிதம்பரநாதன் என இரு ஆண்களும், கல்யாணி என்ற பெண் குழந்தையும் உடன் பிறந்தனர். ஆறுமுகப் பெருமான் பிள்ளைக்கு இளவயதில் நற்கல்வி கொடுக்கப்பட்டது. வளர்ந்து வாலிப வயதடைந்த இவருக்கு தகுந்த பணியும் கிடைத்தது. அருகில் உள்ள சீவநல்லூர் கிராமத்தின் கிராம அதிகாரி பணிதான் அது!
ஆறுமுகப் பெருமான் பிள்ளையின் நிர்வாகத் திறனால் செழித்து வளர்ந்தது சீவநல்லூர். கொல்லம் ஜில்லா கலெக்டரும், செங்கோட்டை தாசில்தாரும் இவரைப் புகழ்ந்தனர். இந்த நிலையில், புளியரை கிராமத்தைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை இவருக்கு மணம் முடித்து வைத்தனர்.
இல்லறமும் அரசுப் பணியும் நல்ல முறையில் தொடர்ந்தது ஆறுமுகம் பிள்ளைக்கு! இல்லறத்தின் பயனாக, பொன்னம்மாள், உலகம்மாள் என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். வெளிப் பார்வையில் இவர் அதிகாரி; இல்லறவாசி! இருந்தாலும், அவர் மனத்துள் ஏதோ ஓர் தனிமை. தாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா என்ற இனம் புரியாத எண்ணம் உள்ளத்தில்!
கிராம அதிகாரியான இவரிடம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவர் தண்டல்காரராகப் பணியாற்றினார். இட்ட வேலையை முகம் கோணாது செய்பவர்; சிவ பக்தர். மொத்தத்தில் பிள்ளைக்கு வலது கரமாகவே இருந்தார்!
ஒரு நாள் மாலை நேரம்! கணக்குப் பேரேட்டுக் கட்டுகளைச் சுமந்து சீவநல்லூரில் இருந்து வந்தனர் இருவரும். சற்று தொலைவு வந்ததும், ''ஐயா, வயிறு சற்று சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று இதோ வந்துவிடுகிறேன்...'' என்று சொல்லிவிட்டு, பேரேட்டுக் கட்டுக்குக் காவலாக பிள்ளையவர்களையே நிறுத்திவிட்டுச் சென்றார் கைலாசம்.
நேரம் ஆனது. இருள் கவியத் தொடங்கியது. பாதையில் தனி ஆளாக நின்றிருந்த பிள்ளையவர்கள், கைலாசத்துக்கு என்ன ஆனதோ என்று எண்ணி, அவரைத் தேடி தோப்புக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி, அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அப்படி என்ன கண்டார் அவர்..?
தோப்பில் உள்ள ஓடைக்கு அருகே, ஒரு பள்ளத்தில் கைலாசம் பத்மாசனம் போட்டு, வாயுஸ்தம்பம் மூலம், தரை மட்டத்திலிருந்து உயர்ந்து அந்தரத்தில் நிஷ்டை கூடி இருப்பதைக் கண்டார். தன்னிடம் பணியாற்றும் கைலாசமா இது. அவருக்கு அதிர்ச்சி. சாதாரண வேலையாள் இல்லை; இவர் ஒரு ஞானவான் என்று உணர்ந்தவர், தனது தேடல் இங்கேதான் முடிவடைய வேண்டும் என்று எண்ணினார்.
கைலாசத்துக்கு அருகே தானும் அமர்ந்தார். ஒரே ஒரு கண நேரம் கண் மூடி தியானித்தார். உலகம் சுழல்வது போல் இருந்தது. பல பிறவிகள் நினைவில் வந்து போயின. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளானது. எவையெல்லாமோ தன்னை விட்டு விலகுவது போன்ற மயக்கம். தலையில் இருந்து பெரும் சுமையை இறக்கி வைத்த உணர்வு. கண் திறந்து பார்த்தார். ஆனால், கைலாசம் இன்னும் தன்னுணர்வு வந்தபாடில்லை.
சாலையை நோக்கி நடந்தார். நடையில் அமைதி தெரிந்தது. கைலாசம்- தன் பார்வையில் ஒரு பணியாள்தான்! பிறப்பிலும் தொழிலிலும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவர். ஆனால், ஆண்டவன் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவர்! ஆத்மானுபவம் பெற்றும் எந்த கர்வமும் இன்றி எத்தனை பணிவு?! இறைவன் முன் சாதி பேதம் ஏது? திருப்பாணாழ்வாரும் திருநாளைப்போவாரும் இறைவனே போற்ற இருந்தவர்கள் ஆயிற்றே! - நினைக்க நினைக்க ஆறுமுகம் பிள்ளைக்கு ஞானம் மெள்ளப் புலப்படலாயிற்று.
அங்கே... கைலாசம் நிஷ்டை கலைந்து எழுந்தார். சாலையின் ஓரத்தே எஜமானரை நிறுத்திவிட்டு வந்த நினைவு எழுந்தது. பதைபதைப்புடன் ஓடி வந்தார். ''மன்னிக்கணும் ஐயா. நேரம் ஆகிவிட்டது.'' என்றார்.
''கைலாசம்... உமக்கு நேரம் ஆகி விட்டது; எனக்கு நேரம் வந்துவிட்டது. நடந்ததை அறிந்தேன். எனக்கும் அந்த ஆத்மானுபவத்தை அருள வேண்டும். உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும்'' என்று ஆறுமுகம் கைகூப்பி வணங்கினார் கைலாசத்தை!
''எஜமான்! இது பாவம். நான் தகுதியற்றவன்...'' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கைலாசம். ஆனால் பிள்ளையவர்கள் விடவில்லை. வேறு வழியின்றி அப்போதே பரம்பொருளை நினைத்து, சீவனைச் சிவமாக்கி புருவ மத்தியில் நிறுத்தி பிரம்மோபதேசத்தை பிள்ளையவர்களின் காதில் ரகசியமாக உபதேசித்தார் கைலாசம்.
இருள் மண்டிய குகையிலிருந்து பர ஒளி உலகுக்கு வந்த உணர்வு அவருக்கு! ஒரு நிமிட உபதேசத்தில் அவர் உலகமே மாறியது.
சில நாட்களில் இவரின் தந்தை உலக வாழ்விலிருந்து விடை பெற்றார். ஆறுமுகம் பிள்ளையின் அலுவலகப் பணியும் ஆத்ம விசாரமும் தொடர்ந்தது. இந்த நாட்களில் சில மகான்களின் தொடர்பும் கிடைத்தது. கடையம் அய்யம் பட்டர், கோடகநல்லூர் சுந்தர சாஸ்திரி, ஆம்பூர் ஹரிஹர சாஸ்திரி, இலத்தூர் ராமஸ்வாமி சாஸ்திரி ஆகிய மகான்கள், பிள்ளையின் சாவடியில் கூடி, ஆன்மிக விசாரம் செய்தனர். இது, இவரது ஆன்மிகப் பயிருக்கு நல்ல உரமாக அமைந்தது.
சுவாமி சிவானந்தர், ஒருமுறை இமயத்தை நோக்கி பயணப் பட்டார். வழியில் காசிக்குச் சென்றார். இந்தி மொழி புதிது. வடநாட்டுப் பழக்கவழக்கங்களும் தெரியாது. ஒரு கடைக்குச் சென்று பால் கேட்டார். அங்குள்ள வழக்கப்படி ஒரு மண்சட்டியில் பால் கொடுத்தான் கடைக்காரன். பாலைக் குடித்தபின், நம்மூர் வழக்கப்படி அதைக் கழுவி மீண்டும் கடைக்காரனிடம் கொடுத்தார் சிவானந்தர். அவ்வூர் வழக்கம்- அதைத் தூக்கி எறிந்துவிடுவது. சிவானந்தருக்கு இது தெரியாது. இவர் மீண்டும் அவனிடம் கொடுக்க முயல, கடைக்காரன் கோபத்துடன் கத்தினான்... ''தூக்கி எறி...''
அந்த ஒற்றை வார்த்தையே சிவானந்தருக்கு உபதேசமானது. அவ்வளவுதான்! அனைத்தையும் தூக்கி எறிந்து இமயத்தில் அமர்ந்தார். நெல்லை மாவட்டத்தின் பத்தமடையில் தோன்றி இமயத்தில் கரைந்த ஆன்மிக ஜோதி இவர்.
இங்கும் அப்படித்தான்! வைராக்கிய உணர்வு வரப்பெற்ற பிள்ளையவர்கள், தம் 35-ஆம் வயதில், பந்தம் பாசம் அறுத்து அனைத்தையும் தூக்கி எறிந்து வீதியில் இறங்கினார். கால்போன போக்கில் நடந்தார். தென்கயிலாயமான குற்றால மலை ஏறினார். செண்பகாதேவி அருவிப் பக்கம் சென்றார். அங்கே ஸ்ரீபராசக்தி கோயிலை ஒட்டி அருவிக்கரையில் இருந்த குகையை நோக்கிச் சென்றார். முற்றும் துறந்த முனிவர்கள் கூடும் குகை இது. அன்று அய்யம் பட்டர், ஹரிஹர சாஸ்திரி, சுந்தர சாஸ்திரி என மகான்கள் கூடியிருந்தனர். சுந்தரசதஸ் என்று அதற்குப் பெயர். இதனுள் சென்று அமர்ந்தாலே, அலைபாயும் மனது ஒருமுகப்பட்டுவிடும்.
அன்று சித்ரா பௌர்ணமி. ஞானவாராஹி அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர் அனைவரும். மூவரும் குகைக்கு உள்ளேயும், ஆறுமுக சுவாமிகள் குகை வாயிலிலும் அமர்ந்து மோனத் தவம் புரிந்தனர். நள்ளிரவு. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம் தவிர வேறு ஏதுமில்லை. திடீரென அந்த நள்ளிரவில் குகையை நோக்கி உறுமியபடி பாய்ந்தது ஒரு புலி. அதன் கண்களில் தீ ஜ்வாலை. சித்தத்தை பரவெளியில் நிறுத்தி உணர்வற்ற நிலையில் இருந்த சுவாமிகளைக் கவ்விச் சென்ற புலி, சற்று தொலைவில் இருந்த சித்தர் குகையில் விட்டுச் சென்றது. இந்த சித்தர் குகைக்கு அருகில் உள்ளது சித்தர் ஓடை. சித்த புருஷர்கள் கூடுமிடம். அந்த குகையில், புரியாத மொழியில் கல்வெட்டுகளில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.
பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கானகம் நிறைந்திருக்க, சிறிது நேரத்தில் தன்னுணர்வு வரப்பெற்ற சுவாமிகள் மெள்ளக் கண் திறந்து பார்த்தார். அவ்வளவுதான்! காண்பதற்கரிய காட்சியைக் கண்டு சித்தம் லயிக்க நின்றார். அவர் கண்ட காட்சி...

Comments