ஓம் நமசிவாய

சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களில் ஒன்று அந்தகா சுர சம்ஹாரம்.
ஒரு முறை, சிவபிரானின் கண்களை விளையாட்டாக மூடினாள் பார்வதிதேவி. இதனால் அகில உலகங்களும் இருளில் (அந்தகாரத்தில்) மூழ்கின. சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியனவும் தங்களது ஒளியை இழந்தன. இந்த இருளைக் கண்ட அச்சத்தில், அம்பிகையின் கரங் களில் வியர்வை அரும்பியது.
அதே நேரம்... சிவபெருமானின் நெற் றிக் கண்ணில் இருந்து வெளி வந்த கடும் வெப்பம், அம்பிகையின் வியர்வையுடன் ஒன்றுசேர்ந்து, கருவாக உருவானது. அதிலிருந்து கரிய நிறம், ஜடா முடி மற்றும் தாடி- மீசை... என பயங்கர தோற்றத்துடன் கூடிய குழந்தை ஒன்று தோன்றியது. அதன் குரல் அழுகையும் சிரிப்பும் கலந்து நாராசமாக இருந்தது. அம்பிகை உட் பட அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்த அந்தக் குழந்தைக்கு பார்வை இல்லை. எனவே, 'அந்தகன்' என்று பெயர் பெற்றான்.
இந்த நிலையில்... இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய அசுர சகோதரர்கள் பூமியில் ஆட்சி செய்தனர். இவர்களில், இரணியகசிபுவுக்கு பிரகலாதன் உட்பட மூன்று புதல்வர்கள். இரண்யாட்சனுக்கு புத்திரப்பேறு வாய்க்கவில்லை. எனவே அவன், சிவனாரை தியானித்து இருள் நிறைந்த குகை ஒன்றில் கடுந்தவம் புரிந்தான்.
காலம் கனிந்ததும் சிவனார், அவனுக்குக் காட்சி அளித்தார். அவரிடம் மகப்பேறு வேண்டி பிரார்த்தித்தான் இரண்யாட்சன். சிவபெருமான், ''உனக்கு மகன் பிறக்க மாட்டான். எனினும், எவராலும் வெல்ல முடியாத வலிமை மிக்க ஒருவனைத் தருகிறேன். அவனையே உன் மகனாக வரித்துக் கொள்!'' என்று கூறி, அந்தகனை ஒப்படைத்தார். அகமகிழ்ந்தான் இரண்யாட்சன்.

தொடர்ந்து, 'தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது!' என்ற அகங்காரம் தலை தூக்க... மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். உலகை பாய் போல சுருட்டி எடுத்துச் சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்தான். துயரம் பொறுக்காத தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று அபயம் வேண்டினர்; உலகை மீட்குமாறு பிரார்த்தித்தனர்.
திருமால், வராக அவதாரம் எடுத்தார். கடலுக்கடியில் சென்றவர், இரண்யாட்சனை அழித்து பூமியை மீண்டும் நிலைப்படுத்தினார். இரண்யாட்சனுக்குப் பிறகு முடி சூட்டிக் கொள்ள வேண்டிய அந்தகனுக்கு பார்வை இல்லையாதலால், இரணியகசிபு அரசாட்சியை ஏற்றான். இவனும் பிரம்மனிடம் பல வரங்களைப் பெற்றவன். சகோதரனைப் போலவே முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தியதுடன், 'தானே கடவுள். தன்னையே துதிக்க வேண்டும்; தனது நாமத்தையே அனைவரும் உச்சரிக்க வேண்டும்!' என்றும் பிரகடனம் செய்தான்.
ஆனால் அவனின் மூத்த மகனான பிரகலாதன், திருமாலின் மீது பக்தி கொண்டவன். எப்போதும் மகா விஷ்ணுவின் பெயரையே உச்சரித்து வந்தான். இதனால் இரண்யகசிபுவுக்கு, தன் மகன் மீதும் திருமாலின் மீதும் பெருங்கோபம் ஏற்பட்டது. மகனென்றும் பாராமல், பிரகலாதனை பலவாறு துன்புறுத்தினான்.
முடிவில், 'விஷ்ணு தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்!' என்று பிரகலாதன் சொல்ல... அங்கிருந்த தூண் ஒன்றை பெருங்கோபத்துடன் உதைத்தான் இரண்யகசிபு. மறு கணம், தூணைப் பிளந்து நரசிம்மமாக வெளிவந்த திருமால், இரணியகசிபுவின் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றார். பிறகு, பிரகலாதனுக்கு முடிசூட்டினார்.
பார்வை இல்லாததால் ராஜ்யமும் சுக போகங்களை அனுபவிக்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைக்காமல் போய் விட்டனவே என்ற வேதனையில் காட்டுக்குச் சென்ற அந்தகன், அங்கு, பிரம்மனை தியானித்து கடுந்தவம் மேற் கொண்டான்.
அவன் முன் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரங்களை கேட்குமாறு பணித்தார். ''கண் பார்வையும், அழகான மேனியும் வேண்டும். அத்துடன், மரணமே இல்லாத பெருவாழ்வும் வேண்டும்!'' என வேண்டினான் அந்தகன்.
அவனுக்கு பார்வையையும் அழகான உரு வத்தையும் அளித்த பிரம்மன், 'சாகா வரம் தர முடியாது!' என்று மறுத்து விட்டார். சற்று நேரம் யோசித்த அந்தகன், ''பெண் ஒருத்தியால் மட்டுமே எனது மரணம் நிகழ வேண்டும். பேரழகுடன் கூடிய அவள், எனக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். அவளிடம் மோகம் கொள்ளும் தருணத்தில் எனக்கு மரணம் உண்டாக வேண்டும்!'' என்று கேட்டான். அவனது விருப்பப்படியே வரம் தந்து மறைந்தார் பிரம்மன்.
இதையடுத்து அந்தகன், பூலோக அரசர்கள் அனைவரையும் வென்றான். மந்திரமலை அடிவாரத்தில் பெரிய நகரை உருவாக்கிய அந்தகன், விருப்பப்படி வாழத் தொடங்கினான். மது- மாது என்று சுகபோகங்களில் திளைத்தான். அவனுக்கு தர்யோதனன், வைபவசன், ஹஸ்தி என்று துர்மந்திரிகள் இருந்தனர். இவர்கள், தங்கள் மன்னரின் சுகபோகத்தில் எந்தக் குறையும் இல் லாமல் பார்த்துக் கொண்டனர்.
ஒரு நாள், காட்டில் குகை ஒன்றில், முனிவர் ஒருவர் தன் மனைவியுடன் தங்கியிருப்பதைக் கண்டனர். அந்தத் தம்பதி, பார்வதி- பரமேஸ்வரர் என்பதை அறியாத அமைச்சர்கள், அந்தகனிடம் சென்று முனி பத்தினியின் அழகை வர்ணித்தனர். இதைக் கேட்டு காமம் தலைக்கேறிய அந்தகன், 'எப்படியாயினும் அவளை அடைந்தே தீருவேன்!' என்று சூளுரைத்தான்.
அடுத்து, தனது சேனைகளுடன் குகையை அடைந்த அந்தகன், முனிவருடன் போரிட்டான். முனிவராகிய சிவபெருமான் அவனது படைகளை சின்னாபின்னமாக்கியதுடன் அந்தகனையும் தாக்கினார். அவரது ஆக்ரோஷ தாக்குதலைக் கண்டு ஓட்டம் பிடித்தான் அந்தகன்.
அந்தகனுக்கு முடிவு காலம் நெருங்கியதை உணர்ந்தார் சிவனார். அந்த குகையிலேயே தங்கியிருக்குமாறு தேவியைப் பணித்தவர்... தேவிக்குத் துணையாக நந்திதேவரை அமர்த்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

Comments