பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்!

பெரும்பாலான சென்னைவாசி களுக்குப் பெரியபாளையத்தைப் பற்றித் தெரியாமல் இருக்காது. சென்னை- கொல்கத்தா சாலை யில் சென்னையை அடுத்து வரும் புழல் சிறை, செங்குன்றம், காரனோடை டோல்கேட் தாண்டி, தேசிய நெடுஞ்சாலையில் நேராகப் பயணித்தால் தடா வழியாக காளஹஸ்தி, திருப்பதி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லலாம். நேராகச் செல்லாமல் காரனோடை டோல்கேட் தாண்டியதும், இடப் பக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் பெரியபாளையம் வரும்.

அருள்மிகு பவானி அம்மன் என்னும் சக்தி வாய்ந்த நாயகி, இங்கே குடி கொண்டு தன் அரசாட்சியை செலுத்தி வருகிறாள். மஞ்சளின் மணம் துலங்க... வேப்பிலையின் வாசம் விளங்க... இவள் குடி கொண்டிருக்கும் பெரிய பாளையம் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும்... அருள் மழை சுரக்கும்.
பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிப்பதற்கு அவள் சந்நிதியை நாடி நித்தமும் வரும் பக்தர்கள் ஏராளம். தன் அருளுக்குப் பாத்திரமாகும் அடியவர்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு, அவர்களைக் குறை இல்லாமல் வாழ வைத்து வருகிறாள் பவானி அம்மன். சாதாரண நாளில் கூட பக்தர்களின் கூட்டம் இங்கு விழி பிதுங்கும் என்றால், ஆடி மற்றும் தை முதலான விசேஷ காலங்களில் இங்கு கூடும் கூட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். அது போன்ற சந்தர்ப்பங்களில் சென்னையில் இருந்து விசேஷ பேருந்துகள் இயக்கப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு, பவானி அம்மனுக்குத் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்.
பவானி அம்மன் கோயில் கொண்ட இந்த பெரிய பாளையத்தில் விசேஷமான சிவாலயம் ஒன்றும் இருக்கிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்கள் எவருக்கும் தெரியாது என்பது துரதிர்ஷ்டமே! இத்தனைக்கும் சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள், இந்த சிவாலயத்தைத் தாண்டித்தான் அம்மனின் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைக்க முடியும். ஆனால், இந்த சிவாலயம் அமைந்திருக்கும் விவரம் பலருக்கும் தெரியாது. ஓரளவு நல்ல பராமரிப்பிலேயே இந்த ஆலயம் இருந்து வருவது, பாராட்டத் தக்கது!
சென்னையில் இருந்து பவானி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் முன்பாக, பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூர்ணாம்பா சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். அருமையான சிவாலயம். இந்தத் தலத்து இறைவனை புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர். புண்ணிய நதியாம் ஆரணி நதிக்கு அந்தப் பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்; இந்தப் பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில்.
சிறியது என்றும் சொல்ல முடியாது; பெரியது என்றும் சொல்ல முடியாது. அந்த அளவுக்குக் கச்சிதமான ஆலயம். ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள், ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவத் தலம். உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் மெயின் ரோடு அமைந் திருக்கும் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விசேஷ நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.
இந்த ஐமுக்தீஸ்வரர் லிங்க வடிவத்தை மாபெரும் தவ சிரேஷ்டரான வால்மீகி முனிவர், பிரதிஷ்டை செய்து வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. பாரத தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார். பொங்கிப் பிரவாகிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைந்து தவம் புரிந்தார். மாபெரும் முனியின் மாதவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார். வால்மீகி முனிவர் ஏகத்துக்கும் மகிழ்ந்தார். ''யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவா... எனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
எம்பெருமானும் மனம் கனிந்தார். லிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, 'வால்மீகி ஆசிரமம்' என்ற பெயரும் இருப்பதாக தல புராணம் சொல்கிறது. தவிர, பஞ்சபூதங்களான ப்ருத்வி (மண்), நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் 'ஐமுக்தீஸ்வரர்' என இறைவன் அழைக்கப்பட்டாராம். அந்த சுவாரஸ்யமான கதையைப் பார்ப்போமா?
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமானை நேரில் கண்டு வணங்குவதற்காக ஒரு முறை கயிலாயம் சென்றனர். அப்போது, கயிலயங்கிரியைக் காவல் காத்து வரும் நந்திதேவரின் முறையான அனுமதி பெறாமலேயே ஐந்து பேரும் உள்ளே நுழைந்து விட்டார்கள். நந்திதேவரின் கோபத்துக்கு ஆளான தங்களுக்கு உள்ளே சாபம் காத்திருக்கிறது என்பது தெரியாமலேயே கயிலைவாசனின் முன்னால் போய் பயபக்தியுடன் நின்றார்கள். அது- கயிலை வாசன் கடும் தவத்தில் இருக்கும் நேரம்... அந்த வேளையில் எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறினால் அவ்வளவுதான்! பாவம், பஞ்சபூதங்களுக்கு இந்த விவரம் தெரியாது போலும்!
''இறைவா... கயிலைவாசா... நீலகண்டா... எம் பெருமானே... உன்னைத் துதித்து உன் அருள் பெற வேண்டியே, பஞ்சபூதங்களாகிய நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். எங்களுக்கு இரங்கி, அருள் புரிந்து எங்களைக் காத்தருள்வாய் காலகண்டா'' என்று தொழுதார்கள்.
அருளை எதிர்பார்த்துச் சென்றவர்களின் வாழ்வில் இருள்தான் படர்ந்தது. சில விநாடிகள் கழித்துக் கயிலை வாசன் கண் திறக்கும்போது, அந்த உக்கிரத்தை பஞ்சபூதங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவனின் கோப முகத்தைப் பார்த்து ஏகத்துக்கும் நடுங்கி விட்டனர். தாங்கள் ஏதோ தவறு இழைத்து விட்டோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
இறைவன் அவர்களைப் பார்த் துத் திருவாய் மலர்ந்தருளினார்: ''பஞ்சபூதங்களே... தவறு புரிந்து விட்டீர்கள். நந்திதேவரை அலட் சியம் செய்து, அவரின் அனுமதி இல்லாமல் என்னைத் தரிசிக்க வந்ததே தவறு. என்னைத் தரிசிக்க வேண்டிய காலம் அல்லாத வேளையில் உள்ளே புகுந்து என் பணிக்கு இடையூறு விளைவித்து விட்டீர்கள். அனுமதி இல்லாமல் குரங்குகள் போல் கயிலாயத்தில் நுழைந்த நீங்கள் குரங்கு வடிவிலேயே பூலோகத்தில் அலைவீர்கள்'' என்று சபித்தார்.
பஞ்சபூதங்கள் விதிர்விதிர்த்துப் போனார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த குரலில், ''இறைவா... எங்களின் தவறை நாங்கள் உணர்ந்து விட்டோம். நந்தி தேவரின் அனுமதி இல்லாமல் முறை தவறிய வேளையில் கயிலாயத்துக்குள் புகுந்தது எங்களின் பிழை. இதற்காக வருந்துகிறோம். எங்களின் விதிப்படி தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொள்கிறோம். பூலோகத்தில் குரங்குகளாகவே திரிகிறோம். என்றாலும், இந்த சாபம் எங்களுக்குச் சற்று கடுமையாக இருக்கிறது. எனவே, குறுகிய காலத்திலேயே நாங்கள் பழைய உருவை அடைய ஒரு விமோசனத்தையும் தந்தால் நன்றி உடையவர்களாக இருப் போம்'' என்றனர்.
பஞ்சபூதங்களின் பரிதவிப்பில் மனம் இரங்கினார் இறைவனார். ''தொண்டை நாட்டிலே உத்தர வாகினியாக ஆரணி நதி பாயும் பிரதேசத்தில், வால்மீகி முனிவர் பூஜித்த சுயம்பு லிங்க வடிவம் தாங்கிய திருக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு வந்து என்னை வழிபடுங்கள். சாபம் நீங்கும்!'' என்றருளினார்.
சாப விமோசனம் பெற்ற திருப்தியில் கயிலாயத்தை விட்டுப் புறப்பட்ட பஞ்சபூதங்கள் பூலோகத்துக்கு வந்தனர். இறைவனார் அருளியபடி, ஆரணி நதிக் கரை க்ஷேத்திரம் வந்து, அங்கு வால்மீகி முனிவர் வணங்கிய சுயம்பு வடிவத்தை வணங்கி, சாபம் நீங்கப் பெற்றனர்.
பஞ்சபூதங்கள் இங்கு குரங்கு வடிவில் தங்கி இருந்து, இறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட நிகழ்வை விளக்கும் சுதைச் சிற்பம் ஒன்று ஆலயத்துக்குள் காணப்படுகிறது. அதாவது, லிங்க பாணத்தில் நெற்றிப் பகுதியில் ஐந்து குரங்குகள் காணப்படுகின்றன. இதே நிகழ்வை விளக்கும் விதமாக ஒரு லிங்க வடிவமும் (சிலா) ஆலயத்துக்குள், அம்பாள் சந்நிதிக்கு அருகில் தரிசனம் தருகிறது.
ஆலய தரிசனம் செய்வோமா?
கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். ஆலயத்துக்குள் நுழைந்ததும் சுவரிலேயே சூரியன், சந்திரன், பைரவர், வீரபத்திரர் ஆகிய சிலா வடிவங்களை தரிசிக்கிறோம். சற்று நடந்ததும் இடப் பக்கம் ஆலய அலுவலகம். அடுத்து, நவக்கிரக சந்நிதி. இந்த ஆலயத்துக்கு பரம்பரை தர்மகர்த்தாவாக அர்ச்சகர் பரம்பரையினரே இருந்து வருகின்றனர். நாம் ஆலயத்துக்குச் சென்ற நேரத்தில் ராமநாத குருக்களும் நடராஜ குருக்களும் இருந்தனர்.
பிராகார வலப் பகுதியில் இருக்கிறோம். எனவே, முதலில் வலம் வருவோம். பலிபீடம்- மூஞ்சூறு வாகனத்துடன் கூடிய வரசித்தி விநாயகர் சந்நிதி, நாகர், உற்சவத்தின்போது அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி விக்கிரகங்களை வைக்கப் பயன்படுத்தப் படும் அலங்கார மண்டபம், பலிபீடம் மற்றும் கருடாழ்வாருடன் கூடிய தேவி- பூதேவி சமேத வேங்கடேச சீனிவாச பெருமாள் சந்நிதி ஆகிய வற்றைத் தரிசித்தபடியே வலம் வருகிறோம்.
தற்போது, நாம் இருப்பது மேற்குத் திசையில். இங்கேதான் ஆரணி நதியை ஒட்டி கரையில் ஆலயத்தின் பிரதான வாயில். மூன்று நிலை ராஜகோபுரம். பல்லவ ராஜாக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தைக் கட்டி யதாகச் செய்தி. இதைக் கடந்ததும் கொடி மரம், பலிபீடம், நந்திதேவர் மண்டபம். கடந்து உள்ளே போனால் ஐமுக்தீஸ்வரர் மற்றும் அன்ன பூர்ணாம்பாவை தரிசிக்கலாம். ஆனால், பிராகார வலத்தை முதலில் நிறைவு செய்து விடுவோம்.
பிராகார வலத்தில், அடுத்து தரிசிப்பது ஐயப்பன் சந்நிதி, பலிபீடம்- மயில் வாகனத்துடன் கூடிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகனார் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி, யாகசாலை மண்டபம்... இப்படி நீள்கிறது பிராகார வலம். தவிர பிராகார வலத்தின்போது ஐமுக்தீஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் துர்கை, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு, தல விருட்சமான வில்வத்தையும் காணலாம்.
வலம் முடிந்து ஐமுக்தீஸ்வரரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். இறைவனுக் கும் இறைவிக்கும் அடுத்தடுத்து சந்நிதிகள். மேற்குப் பார்த்தவை. இரு தெய்வங்களுக்கும் பொதுவான மகா மண்டபம். இங்கே ஆலய வாகனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மூஞ்சூறு, மயில், ரிஷபம், பிரதோஷ ரிஷபம் என்று வாகனங்கள் பளிச் சென்று காணப்படுகின்றன.
ஈசன் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப் பக்கமாக ஒரு மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவாலயத்துக்கு உண்டான அனைத்து விக்கிரகங்களும் இங்கு தரிசனம் தருகின்றன.
ஐமுக்தீஸ்வரர். வானர வடிவில் வந்த பஞ்சபூதங்கள் ஐந்து பேருக்கும் முக்தி கொடுத்ததால், இறைவனுக்கு இந்தப் பெயர். சிலர் ஐமுகத்தீஸ்வரர் என்றும் சொல்கிறார்கள். அதாவது குரங்குகள் வழிபட்டு, தங்கள் சாபத்தை விலக்கி பழைய முகங்களைப் பெற்றதால் இந்தப் பெயராம்.
ஐமுகத்தீஸ்வரர், அழகான- சாதாரணமாக லிங்க வடிவம். மேற்குப் பார்த்த வடிவம் என்பதால், ஆவுடையின் கோமுகம் நமக்கு இடப் பக்கமாக விளங்குகிறது. நாகாபரணம் தரித்து நற்காட்சி தரும் அந்த நாயகனை வணங்கி, அம்மனின் சந்நிதிக்குச் செல்கிறோம்.
அம்மனின் திருநாமம்- அன்னபூர்ணாம்பா! இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு கதை உண்டு.
வால்மீகி முனிவரின் சீடர்களுள் ஒருவராக இருந்தவன் சித்திரவர்மன் எனும் மன்னன். காம ரூபம் என்ற நாட்டை ஆண்டு வந்தான். இறை பக்தியில் சிறந்து விளங்கினான் இந்த மன்னன். நாட்டு மக்கள் நன்றாகத்தான் இருந்தனர். திடீரென நாட்டில் மழை நின்று போனது. விளைச்சல் இல்லை. குடிமக்கள் பெரிதும் அல்லலுற்றனர். சிவபக்தனான சித்திரவர்மன், தன் குரு வால்மீகி முனிவர் ஸ்தாபித்த லிங்க வடிவைத் தினமும் வணங்கினான். மலர்களால் பூஜித்தான். இதே நேரத்தில் மன்னனின் பக்திக்கு இரங்கிய அன்னை உமை, மோகினி வடிவம் எடுத்தாள். கையில் பாத்திரம் சுமந்தாள். பசியாலும் பஞ்சத்தாலும் வாடி நிற்கும் அனைவரின் வயிறும் வாழ்த்துமாறு அன்னதானம் செய்தாள். பசியும் பஞ்சமும் பறந்து போயிற்று. இதனால் இந்த அன்னை, அன்னபூர்ணாம்பா எனப்பட்டாள். நாடு சுபிட்சம் அடைந்ததால் மனம் மகிழ்ந்த மன்னன் சித்திரவர்மன், இந்தப் பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரருக்கு ஆலயம் கட்டி, விமானங்களை எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. இந்த மன்னனின் திருவடிவை சுதையாகவும் ஆலய முகப்பில் காணலாம்.
அம்பாள் சந்நிதி முன் நிற்கிறோம். பலிபீடம், சிம்ம வாகனம். அன்னம் பாலிக்கும் தேவி, சிறு வடிவத்தில் அழகாகக் காட்சி தருகிறாள். எந்த ஒரு பசியும் நம்மை அண்டாதிருக்க, அவளிடம் பிரார்த்தனை செய்து விட்டு வெளியே வருகிறோம். அன்னையின் மகா மண்டபத்தை ஒட்டி சிறிய சந்நிதியில் சில விக்கிரகங்கள். அனைத்தும் சிலா வடிவில்! என்னென்ன விக்கிரகங்கள்?
தல வரலாறு விளக்கும் லிங்க வடிவம். அதாவது ஐந்து குரங்குகளைத் தன் பாணத்தில் தாங்கி இருக்கும் லிங்கத் திருமேனி; வால்மீகி முனிவர் வழிபட்ட இன்னொரு சிவலிங்கம்; குரங்குகள் ரூபத்தில் பஞ்சபூதங்கள் இங்கு ஈசனை வழிபட்ட நிகழ்வை ஒட்டி ஒரு ஆஞ்சநேயரின் திருமேனி; வால்மீகி முனிவரின் உருவம்; சித்திரவர்ம மன்னன். ஐந்து திருமேனிகளையும் வணங்கி வெளியே வருகிறோம்.
ஆலயத்தின் ராமநாத குருக்கள் நம்மிடம் சொன்னார்: ''விழாக்கள், விசேஷங்கள் எல்லாமே நன்றாகத்தான் நடக்குது சார். ஆனா, எங்களுக்கெல் லாம் என்ன ஒரு குறைன்னா, பல பேருக்கு இப்படி ஒரு சிறப்பான கோயில் இங்கே இருக்கிறது தெரி யவே மாட்டேங்குது. பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குப் போறவங்க, இனியாவது ஈசனையும் தரிசிக்க இங்கே எட்டிப் பார்த்தா ரொம்ப மகிழ்ச்சி. பஞ்சபூதங்களுக்கே சாப விமோ சனம் அருளிய பெருமான், சாமான்யனான நமக்கு அருள மாட்டாரா என்ன?''
வாஸ்தவம்தான். எத்தனையோ ஆலயங்கள் வழி பாடு இல்லாமல் இருக்கிறது... வசதி இல்லாமல் இருக்கிறது என்றெல்லாம் படிக்கும் அன்பர்களுக்கு, 'பக்தர்கள் வரவே மாட்டேன் என்கிறார்கள். இந்தக் கோயிலைப் பற்றிப் பலருக்கும் தெரியவில்லை' என்கிற இந்தச் செய்தி புதிதுதானே?!
வால்மீகி வணங்கிய, பஞ்சபூதங்கள் சாப விமோசனம் பெற்ற, சித்திரவர்மனின் நாடு செழிக்க உதவிய இந்த ஐமுக்தீஸ்வரரையும், அன்னை அன்னபூர்ணாம்பாவையும் இரு கரம் கூப்பித் தொழுவோம்.
தகவல் பலகை
தலம் : பெரியபாளையம்
மூலவர் : ஐமுக்தீஸ்வரர், அன்னபூர்ணாம்பா.
சிறப்பு : வால்மீகி முனிவர் வழிபட்டது, பஞ்சபூதங்கள் சாபம் நீங்க இங்கே வந்து வழிபட்டுள்ளன.
எங்கே இருக்கிறது?:
சென்னை - கொல்கத்தா சாலையில் சென்னையை அடுத்து வரும் புழல் சிறை, செங்குன்றம், காரனோடை டோல்கேட் தாண்டி, தேசிய நெடுஞ்சாலையில் நேராகச் சென்றால் தடா வழியாகத் திருப்பதி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லலாம். நேராகச் செல்லாமல் இடப் பக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் பெரியபாளையம் வரும். புகழ் பெற்ற பவானி அம்மன் இங்குதான் குடி கொண்டுள்ளாள். புராண முக்கியத்துவம் வாய்ந்த ஆரணி நதிக்கரைக்கு அந்தப் பக்கம் பவானியும், இந்தப் பக்கம் ஐமுக்தீஸ்வரரும் குடி கொண்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு. கோயம்பேட்டில் இருந்து சுமார் 30 கிமீ. தொலைவு.
எப்படிப் போவது?:
சென்னை நகரத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெரியபாளையத்துக்கு இப்போது நகரப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. வள்ளலார் நகர், அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, பாரிமுனை போன்ற பல பேருந்து நிலையங்களில் இருந்தும் பஸ் வசதி தாராளமாக இருக்கிறது.
நடை திறப்பு : காலை 6:00 - 11:00 மாலை 4:00 - 8:00
தொடர்புக்கு:
ராமநாத குருக்கள், நடராஜ குருக்கள்
அருள்மிகு ஐமுக்தீஸ்வரர் ஆலயம்,
பெரியபாளையம் - 601 102.
ஊத்துக்கோட்டை வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.
போன்: (044) 2792 7824, 94440 86357

Comments