ஆற்றில் வந்த அழகு பாலா!

பாலா_ உச்சரிக்கும்போதே உள்ளத்தில் உவகை பொங்கச் செய்யும் உன்னத திருநாமம்! 'பாலாதிரிபுரசுந்தரி' என்றும் 'ஸதா நவவர்ஷா' என்றும் வேதங்கள் போற்றும் இந்த தேவி, தன் திருக்கரங்களில் ஏடும் அட்ச மாலையும் ஏந்தி ஞான தேவதையாகக் காட்சி தருபவள்.
'பண்டாசுரன் எனும் அசுரனை வதைத்த பிறகு பாலா, தன் அன்னையான லலிதாம்பிகையிடமே ஐக்கியமானாள்!' என்று இந்த தேவியின் மகாத்மியங்களை விவரிக்கிறது லலிதோபாக்யானம். தன்னைத் தேடி வருவோருக்கு, கல்வி, செல்வம், திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி என்று சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்தி இவள்!
உருவிலும் வயதிலும் சிறியவளாக புராணங்கள் குறிப்பிடும் இந்த தேவியை தரிசிக்க, வேலூர் மாவட்டம்- நெமிலி திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும்.
காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலை விலும் அமைந்துள்ளது நெமிலி.
இந்தத் தலத்தில் பாலா எழுந்தருளியது எப்படி?!

வேலூர் மாவட்டம், தாங்கி எனும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி ஐயர். வேத வித்தகரான இவரின் மனைவி சாவித்திரி. ஒரு முறை, குடும்பச் சூழலின் காரணமாக ராமசுவாமி ஐயர் ஊரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. எனவே, மனைவி மற்றும் குழந்தைகள் மூவருடனும் நெமிலியை வந்தடைந்தார் ராமசுவாமி ஐயர்.
அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், 'ஒரு வீடு கிடைக்கும் வரை, இங்கேயே தங்கலாம்' என்ற முடிவுடன் உள்ளே நுழைய முற்பட்டனர். ஆனால் திண்ணையில் அமர்ந்திருந்த சிலர், ''இங்கேயா தங்கப் போகிறீர்கள்? இது, பேய்கள் நடமாடும் இடமாயிற்றே! வேண்டாம், இங்கிருந்து போய் விடுங்கள்!'' என்று எச்சரித்தனர். மௌனமாக கேட் டுக் கொண்ட ராமசுவாமி, குடும்பத்துடன் அந்தச் சத்திரத்திலேயே தங்கினார்.
உள்ளே நுழைந்ததும் சாவித்திரி அம்மாள், சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றி வைத்தார். இரவு வேளை வந்தது. அனைவரும் உறங்கினர். ஆனால் ராமசுவாமி, விடிய விடிய சூக்தம், புருஷ சூக்தம் ஆகிய வற்றை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இதனால் தீய சக்திகள் அங்கிருந்து விலகின.
பொழுது விடிந்தது. அசம்பாவிதம் எதுவும் நேராமல், ராமசுவாமியின் குடும்பம் பாதுகாப்பாக இருந்ததைக் கண்ட ஊரார் வியந்தனர். 'இவர்களி டம் தெய்வ சக்தி குடிகொண்டுள்ளது!' என்று கருதிய ஊர்மக்கள் மளிகைப் பொருட்கள் உட்பட பல்வேறு உதவிகளையும் செய்து தந்தனர். ராமசுவாமியின் குடும்பம் மகிழ்ச்சியுடன் புது வாழ்க்கையை ஆரம்பித்தது.
காலங்கள் ஓடின. தன் மூத்த மகன் வீரராகவனுக்கும் இரண்டாவது மகன் சுப்ரமணியனுக்கும் திருமணம் செய்து வைத்தார் ராமசுவாமி. இவர்கள் இருவரும் தங்கள் தந்தையைப் போலவே வேதங்களைக் கற்று, இறை சிந்தனையுடன் வாழ்ந்து வந்தனர்.
அந்தக் குடும்பத்துக்கு அருள்புரிய திருவுளம் கொண்டாள் பாலாதிரிபுரசுந்தரி.
ஒரு நாள் இரவு! சுப்ரமணியனின் கனவில் சுமார் ஒன்பது வயதுள்ள சிறுமி தோன்றினாள். அவள், ''அன்னை ராஜராஜேஸ்வரியின் அறிவுரைப்படி, பாலாவாகிய நான் ஆற்றில் மிதந்து வருகிறேன். என்னை, உனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே அமர்த்திக் கொள்'' என்று அருளி மறைந்தாள்.
விழித்தெழுந்தார் சுப்ரமணி. அன்னை பராசக்தியே பாலாதிரிபுராசுந்தரியாக தனது இல்லம் தேடி வரப் போகிறாள் என்பதை எண்ணி பேரானந்தம் அடைந்தார்! விடிந்ததும் தனது கனவு பற்றி குடும்பத்தாரிடம் விவரித்தார் சுப்ரமணியன். அத்துடன், உதவிக்கு சிலரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள குசஸ்தலை ஆற்றுக்குச் சென்றார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தனது கனவில் வந்த சிறுமியைத் தேடினார் சுப்ரமணி. ஆனால், வெகுநேரம் ஆகியும் சிறுமி கிடைத்தபாடில்லை. ஒரு கட்டத்தில், சுப்ரமணியன் ஆற்றில் மூழ்கும் நிலை! உடன் வந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
மறுநாள்... எவரும் துணைக்கு வராத நிலையில் தனியாகப் புறப்பட்டார் சுப்ரமணி. குசஸ்தலை நதிக்குச் சென்று தனது தேடுதலைத் தொடர்ந்தார். இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
மூன்றாம் நாள்! மிகுந்த நம்பிக்கையுடன் ஆற்றில் மூழ்கித் தேடிக் கொண்டிருந்தார் சுப்ரமணியன். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் பல பாகங்களுக்கும் சென்று தேடியும் எதுவும் புலப்படவில்லை..
எனினும் நம்பிக்கை இழக்காத சுப்ரமணி அன்னையைப் பிரார்த்தித்த வாறு... ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார். அப்போது அவர் கரங்களில் சுண்டுவிரல் அளவிலான சின்னஞ் சிறிய விக்கிரகம் தவழ்ந்தது! சிற்றாடை இடை உடுத்தி மின்னலெனச் சிரிக்கும் பாவனையுடன் காட்சியளிக்கும் அந்த விக்கிரகத்தை உற்றுக் கவனித்த சுப்ரமணியத்தின் முகத்தில் மலர்ச்சி.
'தனது கனவில் சிறுமியாக வந்த பாலாதிரிபுர சுந்தரியே, சிறு விக்கிரமாக தன் கரங்களில் தவழ் கிறாள்!' என்பதை உணர்ந்தார். பரவசம் பொங்க அந்த சிறிய விக்கிரகத்துடன் வீடு வந்து சேர்ந்தார். ஆம், சுப்ரமணியின் இல்லத்தையே கோயிலாகக் கருதி அங்குக் குடியேறினாள் பாலா.
நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில்... நெமிலியில் பாலா குடியேறிய செய்தி கிராமம் முழுவதும் பரவியது. பிறகென்ன?! நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கிராமத்தாரது உதவியுடன் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டன. அனைவரும் பாலாதிரிபுர சுந்தரியை வணங்கிச் சென்றனர். விரைவில், அனைவருக்கும் வரங்களை வாரி வழங்கும் நெமிலி பாலாவின் மகிமை எங்கும் பரவியது. சுப்ர மணியனின் வீடு பாலா பீடமானது.
இப்படி, கலியுகத்தில் பாலா தன்னை வெளிப்படுத்துவாள் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார் கருவூர்ச் சித்தர். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர்... 30 கண்ணிகள் கொண்ட தனது, 'கருவூரார் பூஜாவிதிகள்' என்ற நூலில், 'ஆதியந்தம் வாலையவன் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு! சோதியந்த நடுவீடு பீடமாகி...' _ எனத் துவங்கும் வரிகளில் பாலா மற்றும் பாலா பீடம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கருவூராரின் வாக்குப் பலித்தது போலும்! ஆம், அகிலம் காக்கும் அன்னையாக நெமிலியில் இன்றும் கோலோற்றுகிறாள் பாலா.
நாமும் அவளை தரிசிக்கலாமா...?
நெமிலி கிராமத்தில் உள்ள பெரிய கடைத் தெருவில் இருந்து பிரியும் சத்திரத் தெருவில் அமைந்திருக்கிறது பாலாவின் ஆலயம். இதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. முதல் வாயில் வழியாக பாலா குடிகொண்டிருக்கும் உள்கூடத்துக்குச் செல்லலாம். இரண்டாவது வாயில், பாலாவை ஆராதிக்கும் குடும்பத்தினர் வசிக்கும் இல்லத்துக்குரியது. நாம் முதல் வாயில் வழியாக நுழைகிறோம்.
முதலில் நீண்டதோர் தாழ்வாரம். இங்கு வலப்புறத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாயைத் திறந்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து பெரிய கூடம். இங்குதான், மணிமண்டபம் ஒன்றில் கொலுவீற்றிருக்கிறாள் பாலா. மணிமண்டபத்தின் எதிரில் இருக்கும் அகன்ற பகுதியில் நாம் அமரவேண்டும்.
நமக்கு எதிரில் பெரிய திரை ஒன்று தொங்கவிடப் பட்டுள்ளது. அங்கு, நம் செவிகளில் விழும் பாலா திரிபுர சுந்தரியைப் போற்றும் பக்திப் பாடல்கள் நம் சிந்தையை நிறைக்கின்றன.
சில நிமிடங்களில் திரை விலக்கப் பட... அழகிய சிறு பீடத்தில் விரல் அளவேயான திருவடிவில் காட்சி தருகிறாள் அழகு பாலா!
இந்த அம்பிகை, நவ சக்திகள் (த்ரிபுரா, த்ரிபுரேசி, த்ரிபுர சுந்தரி, த்ரிபுர வாசினி, த்ரிபுரா, த்ரிபுரமாலினி, த்ரிபுர ஸித்தா, த்ரிபுராம்பா, மகா திரிபுர சுந்தரி), நவ யோகங்கள் மற்றும் நவ சக்கரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் கூறுவர்.
பாலாவின் மகாத்மியங்களுக்கு எல்லையே இல்லை என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.
ஒருமுறை, பாலாவுக்கு மண்டபம் எழுப்புவதற்காக நிதி திரட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போது, கவிஞர் எழில்மணியின் (ராமசுவாமி பரம்பரையைச் சேர்ந்தவர்) தாயாரது கனவில் தோன்றிய பாலா, 'நிதி கேட்டு அலையாதீர்கள். உங்கள் குடும்பம் மட்டுமே இதைச் செய்யட்டும்!' என்று அருளினாளாம். அதன்படி இவர்களே மண்டபத்தை எழுப்பினராம். இங்கு, உண்டியல் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது!
காஞ்சி மகாப் பெரியவாள், திருமுருக கிருபானந்த வாரியார், பரமஹம்ச புவனேஸ்வரி ஸ்வாமிகள், வள்ளிமலை சுவாமிகள், மயிலை குருஜி சுந்தராம ஸ்வாமிகள், கொடுவிலார்பட்டி சச்சிதானந்த பரஞ்ஜோதி சுவாமிகள் என்று மகான்கள் பலரும் இங்கு வந்து பாலாவை தரிசித்துள்ளனர். காஞ்சிப் பெரியவாள், நெமிலி சந்நிதியில் சில நாட்கள் முகாமிட்டு சந்திரமௌலீசுவரர் பூஜைகள் மேற் கொண்டுள்ளாராம்!
ஆண்டுதோறும் பாலாவின் சந்நிதியில் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நவ ராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு பிரம் மோற்சவம் என்றே கூறலாம். பிரதமை திதியில் கலச ஸ்தாபனம் செய்வதுடன் ஒன்பது நாட்களும்... காலையில் மஹன்னியாச பூர்வக ருத்திராபிஷேகம், சூரிய நமஸ்காரம், தேவி பாகவதம், சப்தசதி பாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை ஆகியன நடைபெறும். மாலை வேளையில்- குங்குமார்ச்சனை நடைபெறும். ஒன்பது நாட்களும் மலைமகள், அலைமகள் மற்றும் கலைமகள் அலங்காரத்தில் காட்சி தருகிறாள் அன்னை. நவமி அந்தியத்தில் நிகழும் 'மகிஷாசுர வதம்' வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். விஜயதசமியன்று இங்கு நடைபெறும் அன்னதானம் வெகுப் பிரசித்தி.
விழா நாட்களில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். டாக்டர் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உட்பட முக்கிய கலைஞர்கள் பலரது இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றுள்ளன! நவராத்திரி தவிர, புத்தாண்டு, மாதத்தின் முதல் ஞாயிறு, தை மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகள் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நெமிலி பாலா பீடம், தினமும் காலை 9 முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். சுப்ரமணியனின் கைகளில் கிடைத்த குழந்தை பாலாவை இப்போதும் அவர்களது அடுத்தடுத்த தலைமுறையினரே பூஜித்து வருகின்றனர்.
பாலா பீடத்தினர் ஆன்மிக யாத்திரையை மேற் கொள்வதால், பாலாவை தரிசிக்க விரும்புவோர் 04177-247216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டுச் செல்லலாம்.

Comments