தங்கத்தேரில் பவனி வரும் சாரதா தேவி

சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன், ஆதி சங்கரர் சிருங்கேரியில் துங்கபத்ரா நதிக்கரையில் மடமும், கோயிலும் எழுப்பி சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார்.
காலப்போக்கில் புகழ்பெற்று விளங்கிய அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
சில வருடங்களுக்கு முன்பு, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் சென்றார். அங்கு அபினவ வித்யா தீர்த்த மகா சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்ற பின், கோவையில் சாரதாம்பாள் கோயில் ஒன்றைக் கட்ட விரும்புவதாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் சூலூரைச் சேர்ந்த நஞ்சுண்டையர் என்ற பக்தர் ஒருவரும் சுவாமியிடம் ஆசி பெற வந்தார். அவரிடம் கோவையில் சாரதாம்பாள் கோயில் கட்ட ஓர் இடம் தேவை என சுவாமிகள் கேட்டார்.
அடுத்தநாளே தனது சகோதரருடன் மகா சுவாமிகளைச் சந்தித்த அவர், கோவையில் முக்கிய பகுதியாகத் திகழும் ரேஸ் கோர்ஸ் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தை சாரதாதேவிக்கு கோயில் கட்ட வழங்குவதாகத் தெரிவித்தார்.
பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோயில் விரைவில் உருவானது. கட்டுமான செலவுகள் அனைத்தையும் கோவை தொழிலதிபர் ஏற்றுக் கொண்டார். 1979ம் ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி தினத்தில் சாரதாதேவி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதான தெய்வமாக விளங்கும் சாரதா தேவியின் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. பின் வலக்கையில், தேன் குடத்தையும், முன் வலக்கையில் சின் முத்திரையும், முன் இடக்கையில் புத்தகத்தையும் ஏந்தி அமர்ந்த நிலையில் சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கும் அம்பாளைக் காண கண்கோடி வேண்டும்.
சாரதா தேவி ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சந்நதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சந்நதி உள்ளன. விநாயகர் சந்நதியின் தெற்குப் பகுதியில் வடக்குநோக்கி ஆதி சங்கரரின் சந்நதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது.
சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிருங்கேரி சென்று வழிபட இயலாதவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்!
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி என பல விழாக்கள் நடந்தாலும், இத்தலத்தின் தலையாய பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். நவராத்திரி விழாவாகும். இவ்வருடம் புரட்டாசி அமாவாசை (அக்டோபர் 15) மகா அபிஷேகத்துடன் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமாகிறது. அதற்குப் பின்னர் மூன்று நாட்கள் லட்சார்ச்சனையும், அதையடுத்து 4 நாட்கள் தேவிமகாத்மியம் பாராயணமும் நடைபெறும். நவமியன்று சத சண்டி யாகமும் தசமியன்று வித்யாரம்ப பூஜைகளும் நடைபெறும்.
இக்கோயிலில் சாரதாம்பாள் சரஸ்வதி சொரூபமாக அருள்பாலிக்கிறாள். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக இங்கு வித்யாரம்ப பூஜைகளில் கலந்து கொண்டால், அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை! வருடா வருடம் நடைபெறும் இப்பூஜையில் பெருவாரியான குழந்தைகள் கலந்து கொள்வது சிறப்பு!
நவராத்திரி நாட்களில் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, அம்சவாஹிணி, சரஸ்வதி, அன்னபூரணி, சாமுண்டீஸ்வரி மற்றும் கஜலட்சுமி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை அருள்பாலிப்பாள். நவராத்திரி விழா காலங்களில் அம்மன் தங்கத்தேரில் தினமும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவாள்.
தடைபட்ட பல திருமணங்கள் இந்த அம்மனின் திருவருளால் நிறைவேறுவதால் முகூர்த்த தினங்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
காலை 6 - 11.30; மாலை 5-8 மணி வரை தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.
இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவில் நீங்களும் கலந்து கொண்டு சாரதாம்பாள் அருளைப் பெறுங்களேன்!
கோவை ரேஸ் கேர்ஸ் பகுதியில் உள்ள இக்கோயிலை காந்திபுரத்தில் இருந்து 7ம் எண் பேருந்தில் பயணித்து அடையலாம். கோவை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

Comments