அலங்காரத்தில் அசத்தும் ஆஞ்சநேயர்!


பக்த அனுமன், விஸ்வரூப தரிசனம் தரும் ஆறு தலங்களில் சின்னாளப்பட்டி
அஞ்சலி வரத (கைகூப்பி வணங்கிய நிலையில்) விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயிலும் ஒன்று. மற்றவை: சுசீந்திரம், நாமக்கல், சென்னை- நங்கநல்லூர், தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரம், லங்காவில் உள்ள நுவரேலியா.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்- மதுரை சாலையில் அமைந்துள்ள ஊர் சின்னாளப்பட்டி.
நான்கு பக்கமும் மலையால் சூழப்பட்டுள்ள இந்த ஊரில் வாயு மூலையில் சுமார் 16 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் அஞ்சலிவரத ஆஞ்ச நேயர். வாயு மைந்தனான ஆஞ்சநேயர், வாயு மூலையில் கோயில் கொண்டிருக்கும் இதுபோன்ற அமைப்பு சிறப்பான ஒன்று!
சஞ்சீவி மலை எனப்படும் இங்குள்ள மலையை 'சிறுமலை' என்றும் குறிப்பிடுவர். ராமாயண காலத்தில், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது, அவரின் பாதம் பட்ட தலம் இது என்பர். மலையும் மூலிகை மணம் கலந்த காற்றும் அனுமனின் அருளும் இந்தத் தலத்தின் வரப்பிரசாதம் எனலாம்!
திருக்கோயிலில், சூரியனையும் சஞ்சீவி மலையையும் நோக்கும் வண்ணம் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.
திருப்பதி ஏழுமலை யான் என்ன உயரமோ, அதே உயரத்துடன்
அஞ்சலிவரத ஆஞ்ச நேயரை வடிவமைத்து இருப்பதாகச் சொல் கின்றனர்.
தீட்சண்யமான பார்வை மற்றும் கூப்பிய கரங்களுடன் திகழும் இந்த ஆஞ்சநேயரின் திருமேனி, சாளக்கிராமத்தால் ஆனது. இரு கால்களுக்கு இடையே சுருட்டி வைத்திருக்கும் வாலும் அதில் கட்டப்பட்டிருக்கும் மணியும் வெகு அழகு. இவர், நவக்கிரகங்களையும் தன் வாலின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஐதீகம்.
எனவே, சனி, ராகு மற்றும் கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அஞ்சலிவரத ஆஞ்சநேயரை வழிபட்டு, நிவர்த்தி பெற்றுச் செல்கின்றனர். அனுமன், இங்கு
அஞ்சனை மைந்தனாக மட்டும் அல்லாமல்... ஜாம்பவந்தன், சுக்ரீவன், குமுதன், அங்கதன், நீலன், நளன், மைந்தன் மற்றும் துவிதனாகவும் அருள் வழங்குகிறாராம்!
இந்த அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு, செந்தூரக் காப்பு, பச்சைக் காப்பு, வடை மாலை மற்றும் ராஜ அலங்காரம் ஆகியவற்றுடன் 16 வகை திரவியங்களால் அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன.
தவிர, திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் பெறவும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர் பக்தர்கள். தங்களது பிரார்த்தனை பலித்ததும் உரிய அபிஷேக- ஆராதனைகள் செய்து, அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர்.
வருடம் முழுவதும் அனுமனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பெற்றாலும் சித்திரை மாதப் பிறப்பன்று செய்யப்படும் அலங்காரம் குறிப்பிடத் தக்கது. அன்று, 1008 (எண்ணிக்கையில்) பழங்கள் கொண்டு இவரை அலங் கரிக்கின்றனர்.
ஆனி மாதம் மூல நட்சத்திர திருநாளும் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. இதையட்டி, முதல் நாள் சுதர்சன ஹோமம், பஞ்ச சுக்ல ஹோமம், அனுமத் சகஸ்ர நாம ஹோமம் மற்றும் மகா சாந்தி ஹோமம் ஆகியன நடைபெறும். அப்போது, ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால், 108 இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் உட்பட 16 வகை அபிஷேகங்களும் கலசாபிஷேகமும் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வயோதிக அலங்காரத்தில் காட்சி தரும் அனுமன் மறு நாள் ஆனி- மூல நட்சத்திரத்தன்று பஞ்சமுக ஆஞ்சநேயராக தரிசனம் தருவார். ஆடி அமாவாசை நாளிலும் பஞ்ச முக ஆஞ்சநேயராக அலங்கரிக் கிறார்கள்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை யன்று அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு மற்றும் ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. 2-ஆவது சனிக்கிழமை- பச்சைக் காப்பு; தியான மாருதி அலங்காரம். 3-ஆவது சனிக்கிழமை- திருப்பதி ஏழுமலையான் அலங்காரம், 4-ஆவது சனிக்கிழமை பஞ்சமுக அலங்காரம்.
மார்கழி மாதம்- அனுமத் ஜயந்தியை ஒட்டி... யாக பூஜை, பாலபிஷேகம் (500 லிட்டர்), முத்தங்கி சேவை, இரவு புஷ்பாஞ்சலி ஆகியன நடைபெறுகின்றன. மறு நாள் செய்யப்படும் 1008 ஜிலேபி காப்பு மிகவும் விசேஷம்!

Comments