பூஜையறை பொக்கிஷம்

திருவேங்கடநாதனின் அத்யந்த பக்தரான ஸ்ரீதாளப்பாக்க அன்னமாச்சார்யா, 14-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். 32,000 சங்கீத புஷ்பங்களால் இறைவனை அர்ச்சித்தவர்! அஹோபிலம் ஸ்ரீலட்சுமிநரசிம்மரைப் பற்றி 300 கீர்த்தனைகளைப் பாடியுள்ளார்! கர்னாடக இசையுலகில், 'பதகவித பிதாமகா' எனும் பட்டத்தைப் பெற்ற அன்னமாச்சார்யா, திருமலை திருப்பதியில் வழிபாட்டு சேவைகளை சிலாசாசனங்களாகவும், சங்கீர்த்தனங்களை செப்புத் தகடுகளாகவும் பொறித்துள்ளார். சுப்ரபாதம், திருக்கல்யாண உத்ஸவம், ஏகாந்த சேவை என இவர் துவக்கி வைத்த சேவைகளை இவருடைய சந்ததியினர் இன்றும் தொடர்கின்றனர்.

அன்னமாச்சார்யாவின் 12-வது தலைமுறையைச் சேர்ந்த தாளப்பாக்க வேங்கடமீனலோசனி, அன்னமய்யாவின் கீர்த்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறை முழுவதும் வேங்கடாசலபதி, விநாயகர் மற்றும் அன்னமாச்சார்யாவின் திருவுருவப் படங்களே அலங்கரிக்கின்றன. ஏலக்காய் மாலை சாற்றப்பட்ட லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் தாயாரின் விக்கிரகங்களே பிரதானமாக பூஜையில் இருந்தாலும், அன்னமய்யாவின் சிலையை அப்படி பொக்கிஷமாகப் பாதுகாத்து பூஜிக்கிறார் இவர்.
''எனக்கு சங்கீத குரு எஸ்.ஆர்.ஜானகிராமன். பக்தியோட வேதாந்த தத்துவத்தை போதிச்சவர் ஆச்சார்யா மல்லிகார்ஜுனராவ். சின்ன வயசுலயே திருப்பதிக்கு என் தாத்தாவோட போய், சேவையைப் பாத்திருக்கேன்'' என்று விழிகள் விரியச் சொன்னவர் தொடர்ந்தார்:
''87-ஆம் வருஷம் டிகிரி முடிச்சு, வேலைக்குப் போக ஆரம்பிச்சாலும் பாட்டு கத்துக்கறதுலதான் கொள்ளை ஆசை. பொண்ணு பொறந்ததும் பி.ஏ. மியூஸிக் சேர்ந்தேன். அப்பதான் எங்க அப்பா, ''திருப்பதில அன்னமாச்சார்யா புராஜக்ட் ஸ்டார்ட் பண்ணிருக்கா. நீ கத்துக்கயேன்''னாரு. ஆனா குடும்பத்தை இங்கே விட்டுட்டுப் போக முடியல. 'அன்னமய்யா வம்சத்தைச் சேர்ந்த நான் பாடணும்னு எழுதியிருந்தா வாய்ப்பை அவனே தருவான்'னு சொல்லிட்டு விட்டுட்டேன்.
அப்புறம்... 97ஆம் வருஷத்துல, தெலுங்கு வருஷ பிறப்பு அன்னிக்கி, சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்துல அன்னமாச்சார்யா கீர்த்தனை வகுப்பு தொடங்கறதை கேள்விப்பட்டு, அங்கே போய் கத்துக்கிட்டேன். அன்னிக்கி ராத்திரிலாம் தூக்கமே வரலை... அவரோட பாட்டுதான் கேட்டுக்கிட்டே இருந்தது!
அன்னமய்யாவோட வம்சத்துல வந்துட்டு, அவர் படம் நம்மகிட்ட இல்லயேன்னு தேடினேன்... கிடைக் கவே இல்ல. ஒரு முறை, திருப்பதிக்குப் போனப்போ... அன்னமாச்சார்யாவோட சிலையைப் பார்த்து பென்சில் ஸ்கெட்ச் பண்ணப்பட்ட ஒரு படம்! அதைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். அதை ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்து இங்கே ஒருத்தர்கிட்ட வரையக் கொடுத்தேன். அவர் வரைஞ்சி கொடுத்த தத்ரூபமான படம்தான் இது...'' என்று குதூகலத்துடன் விவரித்தார்.
பூஜையறையில் தலைப்பாகையுடன் இருந்த அன்னமாச்சார்யாவின் திருவுருவச் சிலை மனதைக் கொள்ளை கொண்டது. ''என்னோட தம்பி திருப்பதில மார்பிள் சிலைகள் பண்ணிட்டிருந்தான். அன்னமாச்சார்யாவுக்கு தலைப்பாகை போட்டு, ராஜா மாதிரி ஒரு சிலையைச் செதுக்கி எனக்கு கொடுத்தான். இன்னிக்கு நான் ராணி மாதிரி வாழறேன்னா அதுக்கு அன்னமய்யாவோட அருள்தான் காரணம்'' என்று சொல்லும் மீனலோசனி, அன்னமாச்சார்யாவைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளதை சிலிர்ப்புடன் விவரித்தார்.

Comments