ஆன்மீக கேள்வி -பதில்கள்

ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் 108 கொண்டக்கடலைகளைக் கோர்த்து மாலை அணிவிக்கிறோம். 'உயிருள்ள விதைப் பொருளான கொண் டக்கடலையை ஊசியில் கோர்ப்பது அதை வதைப்பதற்கு சமம்' என்கின்றனர் சிலர். பகவானுக்கு கொண்டக்கடலை மாலை அணிவிக்கலாமா, கூடாதா?

'இயற்கையின் அன்பளிப்பான புஷ்பங்கள் நிறைந்த நாடு' என்று வந்தே மாதரம் எனும் பாடல் தெரிவிக்கிறது (புல்லகுசுமித). 'இலை, பூ, நீர், பழம்- இவற்றில் ஒன்றை எனக்கு அளித்தால் போதும்' என்கிறார் கண்ணன். மாலைக்கு உகந்தது புஷ்பம். ஆதாரமில்லாத தகவல்களைக் காட்டி விருப்பப்படி மாலை அணிவிப்பது தவறு. ஈசன் நஞ்சை உண்டார் என்பதால் அவருக்கு விஷத்தை நிவேதனம் செய்யலாமா? 'அசைவது, அசையாதது- அத்தனையிலும் நான் உறைந்திருக்கிறேன்' என்கிறார் கண்ணன். அதற்காக கல்லையும், மண்ணையும் அவருக்குப் படைக்கலாமா?  உலகத்தில் தென்படும் அத்தனை பொருள் களிலும் நவக்கோள்களின் சாந்நித்தியம் உண்டு என்கிறது ஜோதிடம். பூவில் ஒன்று, காயில் ஒன்று, பழத்தில் ஒன்று என்பதாக விளக்கப்பட்டிருக்கும். அத்தனையும் அவர்களின் பெருமையை உயர்த்திக் காட்ட பயன்படுத்தப்பட்டவை. அனைத்துக்கும் ஒரு வரையறை உண்டு. மாலையாகப் போடுவதற்கு புஷ்பத்துக்கு இருக்கும் தகுதி மற்றவற்றில் இல்லை. 

கொண்டக்கடலையை குத்தினால் வலிக்கும் என்கிறீர்கள். கோழி, ஆடு, மாடு இவற்றைக் குத்தினாலும் வலிக்கும். அதுவும் உயிர்தானே? காய்கனிகளை மாலையாக மாற்றுவதைவிட, புஷ்பத்தைப் பயன்படுத்துங்கள். அது மாலையாவதற்கென்றே வடிவெடுத்திருக்கிறது. கொண்டக்கடலை, சாப்பிடுவதற்கு பயன்படுபவை. சிந்தனையோடு செயல்படுவதே சிறப்பு.

ஏழு பிறவி, ஈரேழு பிறவி என்கிறோம். எனில், மறுபிறவி என்பது உண்டா? எத்தனை பிறவிகள் உள்ளன?

'பல பிறவிகளைச் சந்தித்து ஆன்மிக அறிவை எட்டியவன் என்னோடு இணைகிறான்' என்கிறான் கண்ணன் (பஹ§னாம் ஜன்மனாமந்தை...). 'அம்பாளை ஆராதனம் செய்யும் பேறு பெற்றவனுக்கு அந்தப் பிறவியே கடைசிப் பிறவி' என்று பாஸ்கரராயர் தனது நூலில் விளக்குகிறார். ஜய- விஜயர்கள் பல பிறவிகளில் அரக்கர்களாகத் தோன்றினார்கள். அவர்களை அழிக்க அவதாரம் எடுத்தார் கடவுள் எனும் புராணத் தகவல் உண்டு. ராமாவதாரத்தில் இலக்குவனாகத் தோன்றியவன் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாக விளங்கினான் என்பர்.
'முற்பிறவியில் செய்த செயல்பாடு என்னைத் தாயாரின் கருவறையில் சிக்க வைத்து வாட்டி எடுக்கிறது. திரும்பவும் கருவறையை சந்திக்க வைத்து என்னை வதைக்காதே! உன்னோடு இணைத்துக் கொண்டு கருவறை சந்திப்பை அடியோடு அறுத்துவிடு' என்று பரம்பொருளை வேண்டுகிறார் ஆதிசங்கரர் (ஆனதள கர்ம ப்ரசங்காத்...)
'அறியாமையில் விளைந்த மாறுபட்ட செயல்பாடுகளுக்கு இணங்க மாறுபட்ட உயிரினங்களில் வடிவெடுத்து, தற்போது சிந்திக்கும் திறன் பெற்ற மனித வடிவில் தோன்றியிருக்கிறேன். துயரத்தில் தோய்ந்த சங்கிலித் தொடர் போன்ற பிறவி வரிசைகளில் இருந்து விடுபட எனக்குத் தருணம் கிடைத்து விட்டது' என்ற சிந்தனையாளர்களின் தகவல் தர்மசாஸ்திரத்தில் உண்டு (அனாத்யவித்யா வாசனையா...).
'உலக இயக்கத்துக்கு உறுதுணையாகச் செயல்பட்டேன். உயிரினங்களுக்கு உற்ற நண்பனாக இருந்தேன். தவத்தை மேற்கொண்டு ஆண்டவனை அடைய எண்ணினேன். ஆனால் தற்போது உயிர் பிரியும் தருணத்தில் இருக்கிறேன். எனது செயல்பாடு வீணானது' என்று கவலைப்பட்டான் ஒருவன். செயல்பாடு வீணாகாது. அடுத்த பிறவியில் இலக்கை சந்திக்கும் தருணம் முயற்சியின்றி கிடைத்துவிடும். இதற்கு இந்தச் செயல்பாடு உதவும் என்று சமாதானம் கூறும் தகவல் சாஸ்திரத்தில் உண்டு. பிறந்தவுடன் அறிவாளியாகத் தோன்றிய திருஞானசம்பந்தரும், சுகப்ரம்மமும் இதற்கு எடுத்துக்காட்டு.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப் பாலை சுவைக்கும் தகுதி எப்படி வந்தது? பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவன் அறிவாளி, மற்றவன் முட்டாள், வேறொருவன் போக்கிரி, மற்றொருவன் சோம்பேறி. இந்த மாறுதலுக்கு என்ன காரணம்? முற்பிறவியில் படைத்த படைப்பை மறுபிறவியில் அப்படியே தொடர்கிறார் பிரம்மன் என்கிறது வேதம் (தாதா யதாபூர்வ மகல்பயத்).

'கிழிந்த சட்டையைத் தூக்கியெறிந்து புதுச் சட்டையை ஏற்பது போல், நஞ்சு போன பூத உடலைத் துறந்து, புது உடலில் புகுந்து விடுகிறான் மனிதன்' என்கிறார் பகவான் கிருஷ்ணர் (வசாம்சி ஜீர்ணானி...). கணவனை இழந்த காரிகை துயரத்தில் துவண்டு போனாலும், சுதாரித்துக் கொண்டு, 'அடுத்த பிறவியில் நீயே எனக்குக் கணவனாக வாய்க்க வேண்டும்' என்று கடவுளை வேண்டுவாள் என்ற தகவல் புராணங்களில் உண்டு.
நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகிறான் ஒருவன். நோயின் காரணத்தை அலசிப் பார்த்தும் மருத்துவரால் அறிய முடியவில்லை. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. கடைசியில்... இவனது முற்பிறவி செயல்பாடே காரணம் என்று முடிவுக்கு வருகிறார் மருத்துவர். இந்தத் தகவல் ஆயுர்வேதத்தில் உண்டு (பாபம் கர்மச குர்வதாம்...).
இவை அனைத்துமே மறுபிறவியை ஊர்ஜிதம் செய்கிறது. பிறவியைத் தொடர்வதும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அவனவன் கையில் இருக்கிறது. ஈரேழு பிறவி என்ன? 'எண்ணிலடங்காத பிறவியைச் சந்திக்கலாம். ஒரு பிறவியோடு முற்றுப்புள்ளியும் வைக்கலாம்' என்பது ஆதிசங்கரர் முதலான சிந்தனையாளர்களின் கருத்து. தொடரும் பிறவிக்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க இயலும். ஆகவே, பிறவிகள் தொடரும் என்று நம்பலாம்.

என்னுடைய தாயார், பழுத்த சுமங்கலியாக வாழ்ந்து சிவலோகப் பிராப்தி அடைந்துவிட்டார். 20 வருடங்களாக அவரது திருமாங்கல்யம் என்னிடம் உள்ளது. இதை ஆபரணமாக மாற்றி அணிந்து கொள்ளலாமா?


தங்கம் எப்போதும் தூய்மை உடையது. அணிந்து கொண்டாலும் கூட தூய்மை அகலாது. இதற்கு 'பர்யுஷிதம்' - பயன்படுத்திய மாசு இல்லை. இதை ஆபரணமாக மாற்றுவதில் தவறில்லை. அறுபதாம் கல்யாணத்தில், மனைவிக்குப் புதுத் தாலி அணிவித்து மகிழ்வான் கணவன். காலப்போக்கில் தனக்குப் பிறந்த பேத்திக்கு, தனது திருமாங்கல்யத்தை அழித்து மாலையாக மாற்றி அணிவிப்பது உண்டு.
பிறந்த குழந்தைக்கு அணிவித்த பொன் காப்பு, வெள்ளிக் காப்பு- இவற்றை அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளுக்கும் அணிவிப்பர். 'ஆகி வந்தது' என்ற பெருமையும் இதற்கு வந்துவிடும். துரதிர்ஷ்டவசமாக முதல் மனைவி இறந்த பிறகு அவள் அணிந்த திருமாங்கல்யத்தைப் இரண்டாவது மனைவிக்கு அணிவிக்கும் சம்பிரதாயமும் உண்டு. மகள் திருமணத்துக்காக, தனது திருமாங்கல்யத்தைப் பயன்படுத்திய தாய்மார்களும் உண்டு. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் 'தங்கப் பொட்டு' ஒன்று அணிந்து கொண்டு திருமாங்கல்யத்தை மகளுக்கு அளிப்பதும் உண்டு. ஆகவே, தயக்கம் இன்றி தாராளமாக பயன்படுத்தலாம்.

கல்வி, குடிநீர் மற்றும் உணவு ஆகியவை வியாபாரமாகி விட்டன. இவை குறித்து தர்மசாஸ்திரம் என்ன கூறுகிறது?


வேதம் போதிக்கும் ஆசான், அதற்குக் கூலியாகப் பணம் பெற்றுக்கொள்ள மாட்டான். கடமை என்று எண்ணி சேவை செய்வான். ஆனால் அவரை செல்வந்தர்கள் பராமரிப்பார்கள். பணம் பெற்றுக் கொண்டு கல்வி கற்பிப்பது தவறு என்கிறது தர்மசாஸ்திரம் (பிருதகாத்யாபனம்...). தனது பிழைப்புக்குக் கல்வியைப் பயன்படுத்துவதை தர்மசாஸ்திரம் ஏற்கவில்லை. முதல் அறிவு நூல்- வேதம். ரிஷிகள் அதை வெகுமதியாக அடுத்த பரம்பரைக்கு அளித்தனர். கல்வி என்பது பொதுச் சொத்து. இதை விற்க தனி மனிதனுக்கு உரிமை இல்லை என்கிறது தர்மசாஸ்திரம். குருகுலத்தில் படிக்கும் அத்தனை மாணவர்களும் குருவின் முழு பராமரிப்பில் கல்வி கற்றுத் திகழ்வார்கள். குலபதி என்கிற தகுதி அவர்களுக்கு உண்டு. குருகுலம், வியாபார நோக்கில் செயல்படாது.
இயற்கையின் உடைமை நீர். பிரம்மனின் முதல் படைப்பு அது! அத்தனை ஜீவராசிகளுக்கும் பொதுச் சொத்து இது. தனி மனிதன் அதில் உரிமை கொண்டாட முடியாது (ப்ரம்மணா ப்ரதமம் ஸ்ருஷ்டா:...). இதையும் வியாபாரமாக்க தர்மசாஸ்திரம் விரும்பாது. கிணறு, ஏரி மற்றும் குளங்கள் வெட்டுவதும், கரையில் படிக்கட்டுகள் அமைத்து சீர்படுத்துவதும், தண்ணீர்ப் பந்தல் வைத்துப் பராமரிப்பதும் பொதுச் சேவையாகக் கையாள்வர். இதை கடைச் சரக்காக மாற்றுவதை பாபம் என்கிறது தர்மசாஸ்திரம். மேலும் தண்ணீரை தானமாக, அதாவது இலவசமாக அளிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.
'அன்ன விக்கிரயம் பாபம்' என்கிறது சாஸ்திரம். விருந்தோம்பல் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது. உணவளிப்பது பண்பின் அடையாளம். அன்னதானத்துக்கு ஈடான தானம் வேறில்லை என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம். அரசர்கள் அன்னச் சத்திரங்களை ஏற்படுத்தினார்கள். பசியைப் போக்குவது பரமனின் பணிவிடை என்று முன்னோர்கள் எண்ணினர். இன்றும் தர்மஸ்தலா உட்பட பல ஆலயங்களில் அன்னதானம் நடைபெற்றுவருகிறது.
கல்வி, நீர், உணவு - இவை கடைச் சரக்காக மாறக் கூடாது என்கிற எண்ணம் மலர வேண்டும்.

அமாவாசையின் போது நல்ல காரியங்களைத் துவங்குவது வழக்கம். ஆனால்  பஞ்சாங்கத்தில்  'அமாவாசை-நல்ல காரியங்கள் தவிர்க்கவும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விளக்கம் தேவை.

ஜோதிடக் கண்ணோட்டத்தில் அமாவாசை நல்ல காரியங்களுக்கு உகந்தது அல்ல. சந்திர பலம் முற்றிலும் இல்லாத அன்று வளர்ச்சி பெறுவதற்கான காரியங்களுக்கு உகந்தது அல்ல!
நம்மில் பலர் தேய்பிறையைப் புறக்கணிப்போம். பிறை கண்ணுக்குப் புலப்படாத நாளை எப்படி ஏற்க முடியும்? திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்- இந்த ஐந்தை வைத்து நல்ல நேரம் நிர்ணயிக்கப்படுகின்றன. அமாவாசையன்று நல்லவற்றுக்கு இடம் அளிக்கவில்லை. முன்னோரை வழிபடும் நாளில் மற்றொரு வேலையைச் செய்வது சாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லை.
தலைவர்களின் நினைவு நாளில், வேலையில் இருந்து விலகி, தலைவரின் நினைவிலேயே இருக்க வேண்டும் என்கிறோம். அன்று நல்ல நாள் என்பது ஆதாரமில்லாத நம்பிக்கையில் விளைந்தது, ஆதாரம் இருக்கும்போது நம்பிக்கையைப் புறக்கணிக்கலாம்.

அமாவாசையன்று பூசணிக்காய் உடைப்பது நல்லதாமே! இதுகுறித்து விளக்குங்களேன்?

அமாவாசைக்கும் பூசணிக்காய்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அமாவாசை... முன்னோர்களின் ஆராதனை தினம். ஆகவே, ஆராதனைக்கு உகந்த காய்கனிகளுக்கு மட்டுமே சிறப்பு. பூசணிக்காயைப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதேநேரம், பூசணி விசேஷம் என்று எண்ணி, தேடி அலைந்து சாப்பிட வேண்டியது இல்லை. திருஷ்டி தோஷம் விலக பூசணிக்காய் உடைப்பது உண்டு. பித்ருக்கள் வரும் நாளில் இந்த தோஷம் தலை காட்டாது.
தினமும் பிராணாயாமம் செய்து வருகிறேன். 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்ன? விளக்குங்களேன்?

கர உகர மகரங்கள் சேர்ந்தது ஓம்காரம். மும்மூர்த்திகளை அது சுட்டிக்காட்டும். வேதத்தின் ஆதியில் இருப்பதே ஓம். மூன்று குணங்களைக் குறிக்கும். வேதத்தின் சாரம்; பிரம்ம பீஜம்; பிரம்மனின் கண்டத்திலிருந்து வெளிவந்த முதல் எழுத்து. அத்தனை தத்துவங்களும் ப்ரணவத்தில் அடக்கம். அகில பிரபஞ்சமும் இதில் அடங்கியிருக்கிறது. எல்லாமாக இருப்பதும் வேதத்தின் ஆரம்பமும்... ஓம்! முடிவும் இதுவே! அர்ச்சனையில் கடவுள் பெயர்களுக்கு முன்னால் 'ஓம்' என்று சேர்ப்பர். எல்லாமாகத் தென்படும் கடவுளை ஓம்காரத்தோடு சேர்த்துச் சொல்வதே சிறப்பு.
ஓம் என்கிற ப்ரணவத்தின் விளக்கவுரையைத் தெரிந்துகொள்ள ப்ரணவார்த்த தீபிகா, ப்ரணவார்த்த மஞ்சரீ முதலான நூல்களைப் படியுங்கள்.

Comments