நடண நாயகனே... போற்றி போற்றி!

பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று, சிவகங்கை மாவட்டம்- திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீதிருத்தளிநாதர் ஆலயம்.

கொன்றை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால், அந்தக் காலத்தில் கொன்றைவனம் என்று அழைக்கப்பட்டதாம் இந்த ஊர். சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனத்தில் எந்நேரமும் நறுமணம் சூழ இருந்ததால், தவம் செய்யத் தகுந்த இடம் என அறிந்த முனிவர்களும் ஞானிகளும் இங்கு வந்து தவமிருந்து இறையருள் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம்.
முனிவர்கள் அங்கே இங்கே சிறிதும் அசையாமல் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தவநிலையில் மூழ்கிப் போனதால், அவர்கள் மீது மண் புற்று வளர்ந்ததாம். அதைக் கூட அறியமுடியாமல், கடவுள் சிந்தனையில் ஆழ்ந்துபோயிருந்தார்கள் முனிவர்கள். புற்றுகள் முளைத்த இடம் என்பதால் இந்த ஊர் புற்றூர் என்றும், திருப்புற்றூர் என்றும் அழைக்கப்பட்டு, பிறகு அதுவே திருப்பத்தூர் என மருவியதாகச் சொல்வர்.
சுந்தரமூர்த்தி நாயனார் கோயிலை வடிவமைத்து, தேவாரமும் பாடி அருளிய தலம் இது. தளி என்றால் கல்லால் அடுக்கி வைக்கப்பட்டது எனப் பொருள்படும். முழுக்க முழுக்கக் கற்றளிக் கோயிலாக அமைந்த ஆலயத்தின் உள்ளே குடிகொண்டிருக்கும் சிவனாருக்குத் திருத்தளிநாதர் என்றே திருநாமம் அமைந்தது.
'மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
   விருப்பவன் காண் பொருப்புவலிச்
சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
   நற்கனகக் கிழிதருமிக்(கு) அருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
   புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவில் திருப்புத்தூரில்
   திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே’
என்று திருப்புத்தூர் தாண்டகத்தில் இந்தத் தலம் குறித்து திருநாவுக்கரசர் பாடிப் பரவியுள்ளார்.
உலகம் ஐம்பூதங்களால் இயங்குகிறது. அந்த ஐம்பூதங்களையும் ஆட்டுவிப்பவர், ஸ்ரீநடராஜர். தில்லையில் ஆனந்த தாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம், திருக்குற்றாலத்தில் திரிபுரா தாண்டவம், திருநெல்வேலியில் காளி தாண்டவம் எனக் காட்சியளிக்கும் இறைவன், திருப்பத்தூரில் கௌரி தாண்டவத்தில் காட்சி தந்து நம்மைச் சிலிர்க்கச் செய்கிறார். கௌரியான ஸ்ரீஉமையவளுக்காக ஆடிய தாண்டவம் என்பதால் கௌரி தாண்டவம் எனப் பெயர் அமைந்தது. 
பின்னாளில், ஸ்ரீமகாலட்சுமி இந்தத் திருநடனத்தைத் தரிசிக்க விருப்பம் கொண்டாள். இந்தத் தலத்துக்கு வந்து கடும் தவம் மேற்கொண்டாள். இறைவன், அவளுக்குத் தாண்டவக் கோலத்தில் காட்சி தந்தருளினார். எனவே, லட்சுமி தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. 
ஆலயத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜர். பத்துத் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி இருக்க,  நந்திதேவர் தாளம் இசைக்க, ஸ்ரீசிவகாமி அம்பாளுடன் காட்சி தரும் அழகே அழகு! இவர் சந்நிதிக்கு எதிரிலேயே தாண்டவ திருக்கோலத்தைத் தவமிருந்து தரிசித்த ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி கொண்டிருக் கிறாள். குறிப்பாக, சிற்ப நுட்பங்களும் இசைத் தூண்களுமாக கலைநயத்துடன் காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமான் சந்நிதியை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.
ஸ்ரீநடராஜருக்கு உகந்த மார்கழி திருவாதிரை நாளில், இவரைத் தரிசித்துப் பெரும்பேறு பெறலாம் என்பது ஐதீகம். தாருகாவனத்து முனிவர்கள் சிலர் சிவனாரை நிந்தித்து, மிகப் பெரிய வேள்வியை நடத்தினர். அப்போது, பிட்சாடனர் வேடமேற்று, அந்த முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்று, யாசகம் கேட்டார் சிவனார். அப்போது அவரின் அழகில் மயங்கிய ரிஷிபத்தினிகள், பிட்சாடனரின் பின்னே சென்றார்கள். இதை அறிந்து கோபமுற்ற ரிஷிகள், வேள்வித்தீயில் இருந்து யானையை ஏவினர். அந்த யானையைக் கொன்று அதன் தோலை எடுத்து ஆடையாக்கிக் கொண்டார் பிட்சாடனர். பிறகு வந்த முயலகனைச் சாய்த்து, அவன் மீது தன் வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடி, தான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். திருவாதிரை நாளில், இங்கு வந்து ஸ்ரீநடராஜரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வறுமையில் இருந்து விடுபட்டு, சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்!
தவிர, முனிவர்களும் ஞானிகளும் தவமிருந்த தலம் என்பதாலும், ஸ்ரீமகாலட்சுமியே ஆடல்வல்லானின் தாண்டவக் கோலத்தை தரிசிக்க விரும்பி தவம் இருந்தது இங்கே என்பதாலும், இங்கேயுள்ள இறைமூர்த்தங்கள் தவநிலையில் இருப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கே, சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீயோக பைரவரும் சிறப்பு வாய்ந்தவர். எனவே, இந்தத் தலத்தை யோக பூமி எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானையுடன் ஸ்ரீமுருகப் பெருமான் வடக்கு நோக்கியபடி காட்சி தருவதும் சிறப்பு என்கின்றனர். இந்த ஆலயத்தில் அருளும் ஸ்ரீயோக நாராயண பெருமாளும் விசேஷமானவர்.
திருப்பத்தூர் எனும் யோகபூமியில் குடியிருக்கும் திருத்தளிநாதர் ஆலயத்துக்கு வந்து ஆடல்வல்லானைக் கண்ணாரத் தரிசியுங்கள்; வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிகழ்வதை உணர்வீர்கள்!

Comments