ஆன்மீக வினா -விடைகள்

குழந்தைகள் இல்லாத நான், கயா அல்லது காசிக்குச் சென்று, எனக்கு நானே பித்ரு கடன்களைச் செய்து கொள்ளலாமா?

'பிண்டம் போட புதல்வன் இல்லை. எனவே எனக்கு வேறு கதி இல்லை!' என்று நீங்கள் நினைப்பது தவறு. பீஷ்மர் பிரம்மச்சாரி; அவருக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால், எல்லோரும் அவருக்குத் தர்ப்பணம் செய்வது உண்டு. புத்திரன் இல்லாமல் இறந்தவர்களுக்கு, மற்றவர்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். எப்படி?

முன்னோர் ஆராதனையின்போது, தன் குலத்தில் பிறந்தவர்களுக்கு பிண்டம் வைப்பதுண்டு. அப்படி... தங்கள் குலத்தில் பிறந்த எவரேனும் ஒருவர், முன்னோர் ஆராதனையின்போது, தங்களையும் சேர்த்துக் கொள்வார் (யெ அக்னி தக்தா: யே அளக்னி தக்தா:) தர்ப்பணத்தின் போது, 'தாய்- தந்தை, பந்துக்கள், குழந்தைகள் ஆகியோரை இழந்து தனிமரமாக அனாதையாக இறந்தவர்களுக்கு, இந்த நீரை அளிக்கிறேன்' என்று சொல்வதுண்டு. இதில் வாரிசு இல்லாத நீங்களும் அடங்குவீர்கள்.

எனவே, மரணத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை இப்போதே செய்யத் தேவையில்லை. இறந்து போன நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்த கயா, காசி போன்ற தீர்த்த ஸ்தலங்களை அணுகுவோம். முற்காலத்தில்... 'காசியில்தான் உயிர் பிரிய வேண்டும்' என்பதற்காகவே அந்தத் தலத்துக்குச் செல்வார்கள் முதியோர்கள். ஆனால் அவர்கள், தனக்குத் தானே பிண்டம் போட்டுக் கொள்ள மாட்டார்கள்!

'ஒருவன் புத்திரனைப் பெறுவது... தான் இறந்த பிறகு பிண்டம் போடுவதற்கே!' என்கிறது தர்மசாஸ்திரம். நீங்கள் சொல்வது போல், உயிருடன் இருக்கும்போதே தனக்குத் தானே பிண்டம் போட்டுக் கொள்ளலாம் என்றால், புத்திரன் வேண்டும் என்று எவரும் கவலைப்பட மாட்டார்களே! தவிர, தர்மசாஸ்திரத்தின் அறிவுரையும் அர்த்தமற்றதாகி விடும்.எனவே, தாங்கள் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் நிம்மதியாக வாழ்க்கையை நடத்துங்கள். இயன்ற வரையிலும் நல்ல காரியங்களைச் செய்து வாழுங்கள். தங்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

கருட புராணம் குறித்த கேள்வி ஒன்றுக்கு, 'கருட புராணம் படிப்பது, இறந்துபோனவரின் ஆன்ம சாந்திக்கு நல்லது' என்று பதிலளித்திருந்தீர்கள்.
அதன் பின் கருட புராணம் படிக்க ஆரம்பித்தேன். அதில், பிள்ளை (ஆண்) இல்லாதவர்கள் மரணத்துக்குப் பின் அனுபவிக்க நேரிடும் தண்டனைகளையும், அவர்கள் புத் நரகத்தில் (புத்திரர்கள் இல்லாததால் இறந்த பின் சேரும் நரகம்) சேர்வர் என்பதையும் படித்தபோது, மனதில் கவலை சூழ்ந்தது.

காரணம்- என் பெற்றோருக்கு நாங்கள் ஐந்து பெண்கள்; ஆண் வாரிசு இல்லை. கருட புராணத்தின்படி, என் பெற்றோருக்கும் நரகம்தான் முடிவா? இத்தனைக்கும், தனது நேர்மையான உழைப்பால் எங்கள் அனைவரையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்த பெற்றோருக்கு, புண்ணியம் அல்லவா கிடைக்க வேண்டும்?! இதன் காரணமாக, தொடர்ந்து கருட புராணம் படிக்க எனக்கு மனம் வரவில்லை. என் மன நெருடலைப் போக்க வழிகாட்ட வேண்டும்!


ருட புராணம் படிப்பது, இறந்தவரின் ஆன்மா சாந்தி அளிப்பதுடன், நம் மன அமைதிக்கும் குடும்ப செழிப்புக்கும் வழி வகுக்கும்! துக்க வீட்டில் கருட புராணம் படிக்கும்போது, ஸ்ரீமந் நாராயணன்- ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரது உரை யாடலை ஆழ்ந்து கேட்கும் மனம், துயரத்தில் இருந்து விடுபட்டு, இறந்தவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற உதவும்.
'புத்' எனும் துயரில் இருந்து கரையேற்றுபவன் புத்திரன் என்றே கருட புராணம் விளக்கம் தருகிறது. ஆனால் தங்களின் மனம், 'புத்திரர் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை' என்று ஏற்றுக் கொண்டது போலும். இது தவறு. புத்திரன் இல்லை என்றால் மோட்சமும் இல்லை என்று தர்ம சாஸ்திரம் சொல்லாது. மோட்சத்துக்கும், புத்திரனுக்கும் சம்பந்தம் இல்லை.
இறந்தவரின் அறம் அவரைக் கரையேற்றி விடும். ஆனாலும் அவரிடமிருந்து வந்த நாம், அவருக்குச் செய்யும் கடமைகளில் இருந்து நழுவக் கூடாது என்கிறது சாஸ்திரம். அவரின் ஜீவ அணுக்களால் நம் உடல் தோன்றியது. ஆக... அவரின் ஜீவ அணுக்களில் ஒரு பகுதி நம்மிலும் உண்டு. இந்தத் தொடர்பை அறிந்து, இறப்பு தீட்டைக் கடைப்பிடிக்கிறோம். மரணம் தவிர்க்க முடியாதது. துயரம் ஒருபுறம் இருந்தாலும் அதிலேயே ஆழ்ந்து விடாமல், ஈமச் சடங்குகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். 'அவர் கரையேறி விட்டார்' என்ற எண்ணம் நம் மனதில் பதியும்போது, நமது செயல்பாடுகள் சிறப்பு பெறும்.

'காசியில் உயிர் துறந்தால் மோட்சம்' என்கிறது புராணம். நம் முன்னோர்கள் இதற்காகவே காசிக்குச் செல்வர். அவர்களில், புத்திர பாக்கியம் வாய்த்தவர்களும் உண்டு; வாய்க்காதவர்களும் உண்டு.
புராண விளக்கங்களைத் தெரிந்து கொள்ள குறிப்பிட்ட அணுகுமுறை தேவை. குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதற்கு முன்னும் பின்னும் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

வம்ச விருத்திக்குப் புத்திரன் வேண்டும். புத்திரனைப் பெற்றுக் கொள்வது சிறப்பு என்பதை அறிவுறுத்துவதே சாஸ்திரத்தின் நோக்கம்.
புத்திரர் இல்லாதவர்களுக்கு, மகள் வயிற்றுப் பேரன் மூலம் ஈமச் சடங்கை நிகழ்த்தச் சொல்லும். பேரனும் இல்லையெனில், மகள் ஈமச் சடங்கைச் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். இப்படி புத்திரரில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக ஒவ்வொருவராக குறிப்பிடும் சாஸ்திரம்... உறவுகள் எவரும் இல்லையெனில், தொடர்பு இல்லாத ஒருவனும் ஈமச் சடங்கு செய்யலாம் என்றும் ஒரு வாய்ப்பு தருகிறது! இந்த மண்ணில் தோன்றியவன் ஈமச் சடங்கை இழக்கக் கூடாது என்பதே சாஸ்திரத்தின் நோக்கம். அனாதைகளுக்கும் ஈமச் சடங்கை நிறைவேற்ற வற்புறுத்துகிறது அது!
ஆக, புத்திரர் இல்லாத தந்தையின் ஈமச் சடங்குகளை, மகள்களே ஏற்று அவருக்கு சாந்தியளிக்க இயலும். ஆகையால், மனக் குழப்பத்திலிருந்து வெளிவந்து நடக்க வேண்டியதைக் கவனியுங்கள்.

பகவானின் பரசுராம அவதாரம், துவாபர யுகம் அதாவது கிருஷ்ணாவதாரம் வரை நீடித்தது என்கிறார்களே... இதுகுறித்து தங்களின் கருத்து?


கிருஷ்ணாவதாரத்தின்போது (துவாபர யுகம்) ஸ்ரீபரசுராமரும் இருந்தார்; இவரிடம் கர்ணன் வில்வித்தை கற்றார் என்ற தகவல் உண்டு. அது மட்டுமா? ராமாயண காலத்தில் (திரேதா யுகம்), ஸ்ரீராமனும் பரசுராமனும் சந்தித்த சம்பவமும் உண்டு. சிரஞ்ஜீவியான ஸ்ரீபரசுராமர் இப்போதும் இருக்கிறார்!

பரசுராமர் தவிர இன்னொரு உதாரணம் அனுமன். ஆம், ராமாயண அனுமன், மகாபாரதத்தில் பீமனுடன் உரையாடுகிறார். இவரும் சிரஞ்ஜீவியே!

தெய்வ அவதாரங்கள்... தங்களின் அவதார நோக்கம் முடிந்த பிறகும் மக்கள் மனதில் இருக்கிறார்கள். எங்கும் நிறைந்த கடவுளின் அவதாரங்களுக்கு மறைவு இல்லை. மனதில் பதிய வேண்டிய கதாபாத்திரங்கள், மறையக் கூடாது.

என் வயது 63. சிறு வயது முதல் எனக்குப் பெரிதும் உதவியவர் என் சகோதரியின் கணவர். இவர் இறந்ததையட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களில் மோட்ச தீபமும், சந்நிதியில் நெய்தீபமும் ஏற்றி என் நன்றிக் கடனைச் செலுத்தினேன். இதைக் கண்ட உறவினர்கள் கேலி செய்தனர். நான் மோட்ச தீபம் ஏற்றியது தவறா?


றந்தவருக்காக மோட்ச தீபம் ஏற்றுவது நல்ல நடைமுறை. நல்லதைச் செய்யும்போது மற்றவர்களது கேலி-கிண்டல்களை பொருட்படுத்தக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அறிஞர்கள் கிண்டல் செய்ய மாட்டார்கள்.

மற்றவர்களைப் பற்றி தாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்களின் கேலிச் சொற்களுக்குச் செவி சாய்த்து, அதுகுறித்து ஆராய்வது... நீங்கள் ஏற்றிய மோட்ச தீபத்துக்குக் களங்கத்தை உண்டாக்கும்.
தாங்கள் மோட்ச தீபம் ஏற்றி, பெருமை பெற்று விட்டதை பொறுக்காதவர்கள் கிண்டல்தான் செய்வார்கள். 'நம்மால் இப்படிச் செய்ய இயலவில்லையே!' என்ற அவர்களது தாழ்வு மனப்பான்மையும் இதற்கு ஒரு காரணம். எனவே, கேலிப் பேச்சுகளைக் கண்டுகொள்ள வேண்டாம்.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யலாமா? செய்து கொள்ள நேர்ந்தால் என்ன பரிகாரம்...?


ரே கோத்திரத்தில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை தர்ம சாஸ்திரம் ஏற்காது. அவர்களின் உறவை, சகோதர உறவாகவே பார்க்கிறது அது.

தன் குடும்பத்தாருக்கும், பங்காளிகளுக்கும் கொடை அளிப்பதில் சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை. ஒருவன்... கன்றோடு பசுவை கொடை அளிக்க விரும்புகிறான் எனில், அந்த தானத்தைப் பெறுபவன், மாற்று கோத்திரத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

அதுபோல், முன்னோர் ஆராதனையில் பங்கு பெறுபவனும், மாற்று கோத்திரத்தில் இருக்க வேண்டும். தனது கோத்திரத்தைச் சார்ந்தவன் மரணமடைந்தால், அவனுக்காக 'நீராடல்' வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

இந்த நடைமுறை தோன்றியது எப்போது என்று நமக்குத் தெரியாது. நம் முன்னோர், இவற்றை அலட்சியப்படுத்த முற்படவில்லை. அவர்களது சிந்தனையில் குறை காண்பது தவறு! இரு சகோதரிகளுக்குப் பிறந்த ஆணும், பெண்ணும் மணம் புரிந்து கொள்வ தில்லை; 'உடன்பிறப்பு' என்ற எண்ணம், மன நெருடலை அளிக்கும்! வம்ச பரம்பரை என்பது, 'ஆண்' வழி நிர்ணயிக்கப்படுகிறது.


குறிப்பிட்ட ரிஷி வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு, அதே ரிஷி வம்சத்தில் பிறக்கும் பெண், சகோதரி ஆவாள். ஆகவே அவன் மணக்கும் பெண், மாற்று கோத்திரமாக இருக்க வேண்டும்.

பெண்ணை, கன்னிகாதானமாக ஏற்க வேண்டும். ஒரே கோத்திரத்தைச் சார்ந்தவன் தானம் பெற தகுதியற்றவன். எனவே, திருமணம் புரிய முடியாது.தவிர எல்லா கோத்திரங்களும் செழித்து வளர, மாற்று கோத்திரத் திருமணம் கைகொடுக்கும். ஒரே கோத்திரத்தில் மணம் செய்யும் நடைமுறையை ஏற்றால், அந்த கோத்திரம் காலப்போக்கில் எண்ணிக்கையில் சிறுத்து, கடைசியில் மறைந்தும் போக வாய்ப்பு உண்டு.
கோத்திரங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து வளரவே இந்த ஏற்பாடு என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஒரே கோத்திரத்தில் மணம் செய்வதை ஆயுர்வேதமும் ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து, 'அதுல்ய கோத்திரா த்யாயம்' என்ற தலைப்பில் விவரிக்கிறது ஆயுர்வேதம்.
மாமன் மகன், அத்தை மகன், மாமா மகள், அத்தை மகள்... இவர்கள் திருமணத்தில் இணைவதையும் தர்ம சாஸ்திரம் ஏற்காது. அதையும் மீறி 'தேசாசாரம்' என்ற நோக்கில் மணம் செய்பவர்களும் இருக்கிறார்கள்!
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது மருத்துவத்தின் பரிந்துரையை ஏற்று, உறவு முறையில் திருமணம் புரிவதைத் தவிர்க்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஒரே கோத்திரத் திருமணத் தையும் விஞ்ஞானம் தவிர்க்கச் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை!

ஒரே கோத்திரத்தில் திருமணம் நடந்து விட்டால் 'சாந்திராயணம்' எனும் விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சாஸ்திர சம்மதமான கடமைகளை ஆற்ற, கோத்திரம் மாறிய மற்றொருவளை மணக்க வேண்டும். ஏற்கெனவே மணந்தவளை, வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும் (மாதுலஸ்ய...).

திருமணத்தில், 'ஸப்தபதி' நிறைவு பெற்றால், தனது கோத்திரத்தில் இருந்து பிரிந்து, கணவன் கோத் திரத்துடன் இணைந்து விடுவாள் பெண்! வெறும் உடலுறவை மட்டுமே இலக்காக கொண்டதல்ல திருமணம். அறத்தைச் செயல்படுத்த மனைவி வேண்டும். இதற்காக திருமண பந்தத்தில் இணையும் போது, ஆசையும் தானாக நிறைவேறும்! ஆகவே, ஆசைக்காக இல்லாமல் அறத்தைச் செயல்படுத்தும் கண்ணோட்டத்துடன், திருமணத்தை நிறைவேற்ற வேண்டும்!

Comments

  1. நான் ,முருகேசன் வயது 48, மும்பையில் வசிக்கிறேன் ,கடந்த நவம்பர் 10ம் தேதி எனது தந்தை தமிழகத்தில் காலமாகி விட்டார் , நாங்கள் சகோதர ,சகோதிரிகள் 7 பேர் உடனிருந்து ஈமச்சடங்கு எல்லாம் செய்து விட்டோம் .
    இப்போது ஒரு சந்தோகம் , ஆதலால் சுவாமியின் உதவியை நாடுகிறேன் , நான் மும்பை நகரத்திலும் சகோதரரர் புனே,திருச்சி ஊர்களிலும் வசிக்கிறோம் , 30ம் நாள் காரியம் செய்ய வேண்டும் , நாங்கள் தனி தனியாக செய்வது சரியா?.சிலர் ஒரு இடத்தில மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர் ,எங்களது வேலையின் காரணமாக எல்லோரும் ஒரு இடத்தில கூடுவது சிரமம் , சொநத ஊரில் 2 சகோதரரர் 2 ,சகோதிரிகள் உள்ளனர், தந்தை உயிர் பிரிந்த இடத்தில அவர்கள் மட்டுமே செய்தால் போதுமா ? இல்லை நாங்கள் தனி தனியாக செய்வது சரியா?
    தாங்கல் எனது சந்தேகத்தை தீர்ப்பீர்கள் என்று நன்புகிறேன்.

    ReplyDelete

Post a Comment