ஜைன ராமாயணம்

பாரத மக்களின் வாழ்க்øக்கு வழிகாட்டும் நூலாக விளங்குவது ஆதி கவி வால்மீகி இயற்றிய ராமாயணம். அதன் காவிய நாயகனான ராமனின் நீதியும், நேர்மையும், தந்தை சொல் காக்க வேண்டி அவன் காடு சென்ற பெருமையும், நல்லது தீயதை வெல்லும் என்பதில் உறுதியும். அவனது வீரமும் சாதி மதங்களைக் கடந்து அனைவரையும் ஈர்த்தன.
அதனால் பௌத்தர்களும், ஜைனர்களும், முகம்மதியர்களும் கூட ராமாயண நூல்கள் இயற்றினார்கள். குறிப்பாக, ஜைன சமயத்தில் பல ராமாயணங்கள் தோன்றின.
ராமனது உயர்வையும், பெருமையையும் பேசும் முக்கியமான ஜைன நூல்கள்:
1. பௌமசரிய- விமல சூரி இயற்றியது கி.பி.3,4ம் நூற்றாண்டு
2. வாசுதேவ ஹிந்தி - சங்கதாசர் - கி.பி.600
3. பத்மபுராணம் - ரவிசேனன் - கி.பி. 672
4. பௌம சரிய - ஸ்வயம்பு - கி.பி.8ஆம் நூற்றாண்டு.
5. சௌபந்ந மகாபுருஷ சரிய - சீலாச்சார்ய - கி.பி. 868
6. உத்தரபுராண - குணபத்ரர் - 9ம் நூற்றாண்டு
7. பிருஹத் கதாகோச - ஹரிசேன - கி.பி. 931-932
8. மகாபுராணம் - புஷ்பதந்த - கி.பி. 965
9. கஹாவலி - பத்ரேஸ்வர - 11ஆம் நூற்றாண்டு
10. யோகசாஸ்திர ஸ்வோகபக்ஞ வ்ருத்தி - ஹேமசந்திர - 12ஆம் நூற்றாண்டு
11. த்ரிஷஷ்டி - சலகபுருஷ - சரிதம் - ஹேம சந்திர - 12ஆம் நூற்றாண்டு
12. சத்ருன்ஜய மகாத்மியம் - தஜேஸ்வர - 14ஆம் நூற்றாண்டு
13. புண்ய கந்த்ரோதய புராணம் - கிருஷ்ணதாஸ - 14ஆம் நூற்றாண்டு
14. ராம சரிதம் - தேவ விஜய கணின் - கி.பி. 1596
15. லகு - திரிஷஷ்டி - சலாகபுருஷ சரிதம் - மேகவிஜய - கி.பி. 17ம் நூற்றாண்டு.
ஜைன ராமாயணங்களுக்கு உள்ளே போகுமுன் ஜைன சமயத்தின் சில அடிப்படைக் கொள்கைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அதில் சுத்த அறிவே வடிவான ஒரு பிரம்மா கிடையாது. பிரபஞ்சம் பிறப்பும் இறப்பும் அல்லது தோற்றமும் முடிவுமற்று என்றும் நிலைத்திருப்பது. பிரபஞ்சம் ஆறு திரவியங்கள் அல்லது வஸ்துக்களால் ஆனது - ஜீவன், அஜீவன், ஆகாசம், தர்ம தத்துவம், அதர்ம தத்துவம், காலம் என பொருள்கள் பரமாணுக்களால் ஆனவை. ஜீவனுக்கு உணர்வு, அறிவு, பிறப்பு, இறப்பு உண்டு. அது தோன்றி மறைவதல்ல. என்றும் நிலைத்தது. காலம் உண்மையாக நிலைத்த பொருள். செயல்களும், மாறுபாடுகளும் காலப் போக்கினால் நிகழ்பவை. பிரபஞ்சம் மூன்று லோகங்கள் உடையது. அவை ஊர்த்வ, மத்ய, அதோ லோகங்கள் எனப்படுபவை. கர்மக் கொள்கை ஜைனதத்துவத்தின் முதுகெலும்பு.
ஜைன சமயத்தில் ஆதி காலத்தில் 63 சலாக (சிலாக்ய) புருஷர்கள் இருந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்கரவர்த்திகள், 9 வாசுதேவர்கள், 9 பல தேவர்கள் என்று முதலில் 54 ஆக இருந்ததைப். பிறகு வாசுதேவர்களின் பகைவர்களான 9 பிரதி வாசுதேவர்களையும் சேர்த்து 63 சலாக புருஷர்கள் ஆனார்கள்.
வாசுதேவர்களும் பிரதிவாசுதேவர்களும் ஒவ்வொரு பிறப்பிலும் பகைவர்கள்தான். பலராமனும் வாசுதேவனும் ஹிந்து புராணங்களின்படி சகோதரர்கள், பலராமன், கிருஷ்ணன் மட்டுமல்லாது, காலச் சுழற்சியின் ஒவ்வொரு பாதிச் சுற்றிலும் ஒன்பது தடவைகள் தோன்றி, இருவருமாகப் பாதிச் சக்கரவர்த்திகளாக உலகை ஆளுகிறார்கள். ராமன், லட்சுமணன், ராவணன் முறையே எட்டாவது பலதேவன், வாசுதேவன், பிரதிவாசுதேவன்.
இந்தக் கருத்துக்கள் எல்லாம் ஜைன ராமாயணத்தில் வலியுறுத்தப்படுகின்றன.
இந்த ராமாயணங்களில் விமலசூரியும் வேறு சிலரும் பிராகிருதத்திலும், ரவிஸேனர், ஹேமசந்திரர், குணபத்ரர் ஆகியோர் சம்ஸ்கிருதத்திலும், ஸ்வயம்புவும் மற்றும் ஓரிருவரும் அபப்ரம்ச மொழியிலும் எழுதினார்கள். இவர்களுள் சிலர் திகம்பரர், ஏனையோர் சுவேதாம்பர ஜைனர். அதற்கேற்ப திகம்பர சுவேதாம்பரக் கருத்துக்களும் இந்த ராமாயணங்களில் காணப்படுகின்றன.
ஜைன ராமாயணத்தின் மூலம் எது என்று கேட்டால் ஆதி நூலான பௌமசர்ய என்ற பத்மன் (ராமன்) கதையை இந்திரபூதி கௌதமர் என்ற சீடருக்கு மகாவீரர் சொல்ல, பின் வழி வழியாகச் சீடர்கள் வாயிலாக வந்ததாக விமலசூரி குறிப்பிடுகிறார்.
ஆனால், மகாவீரர் புத்தருக்குச் சற்றே மூத்த அவரது சமகாலத்தவர். வால்மீகிக்குப் பல காலம் பின்னே வந்தவர். எனவே இக்கூற்றை ஏற்க முடியாது என்று அறிஞர் கருதுகிறார்கள். மேலும் விமலசூரியின் பௌமசர்ய நூலைப் படித்தால் கதையம்சத்தைப் பொருத்த வரையில் அத வால்மீகியின் கதைதான் என்பதில் சந்தேகமில்லை.
ஜைன ராமாயணங்கள், பலவற்றில் காணப்படும் கதை இதுதான்:
சாகேத மன்னன் தசரதனுக்கு நான்கு மனைவியர். அபராஜிதா, சுமித்ரா, சுப்ரபா, கைகேயி. அபராஜிதாவின் பிள்ளை பத்மன். அவன் ராமன் என்று அழைக்கப்பட்டான். சுமித்ராவின் பிள்ளை நாராயணன். அவன் லட்சுமணன். கைகேயின் மகன் பரதன், சுப்ரபாவின் பிள்ளை சத்ருக்னன். மிதிலையின் மன்னன் ஜனகர். அரசி விதேஹி, அவர்களது மகள் சீதை. ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடக்கிறது. ராமனுக்குப் பட்டம் கட்ட தசரதன் நிச்சயித்தபோது கைகேயி பரதனுக்கு ராஜ்யத்தைக் கேட்கிறாள். நாள் கைகேயி ராமனைக் காட்டுக்குச் செல்லுமாறு கேட்கவில்லை. ராமன் தானாகவே காட்டுக்குச் செல்லத் தீர்மானிக்கிறான்.
இலங்கையரசன் ராவணன் சீதையைக் கவர்ந்து செல்கிறான். கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு அரசில் உள்ள உரிமையை வாலி மறுக்கு, ராமன் சுக்ரீவனுக்கு உதவி, அரசைப் பெற்றுத் தருகிறான். சுக்ரீவனது துணையோடு இலங்கையில் சீதை இருப்பதையறிந்து, அவனது படைகளோடு சென்று, ராவணனோடு போர் செய்து, லட்சுமணன் ராவணனைக் கொல்ல, சீதை மீட்கப்பட்டு, அயோத்தி திரும்புகிறான் ராமன்.
எனவே இது வால்மீகி ராமாயணக் கதையே. சிறு சிறு மாற்றங்களும், ஜைனத் தத்துவம், கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதைத் தவிர, கதையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
விமலசூரி, தான் ராமாயணத்தை இயற்றியதன் காரணத்தை அறிமுகத்திலேயே தெளிவுபடுத்துகிறார். ராமாயண நிகழ்ச்சிகள் பலவற்றை இவை எல்லாமே பொய்யாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அறிவுக்குப் பொருந்தாது. கற்றறிந்தோர் இவற்றை நம்ப முடியாது என்று எழுதுகிறார். மற்றும் ராமனது வாழ்க்கை வரலாற்றை உண்மையாக எடுத்துச் செல்ல வேண்டும். அடுத்து மகாவீரரது கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்ப வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.
ஆனால் வால்மீகி ராமாயணத்தை விட்டு விட்டு, அவரால் வெளியே வரமுடியவில்லை. அவரது பௌம சரியத்தில் கதாநாயகன் பத்மன், ஆனால் அவரது நூல் முழுவதும், ராமனாகவே இருக்கிறான். சில இடங்களில் ராகவனாகவும், ரகுநாதனாகவும் அழைக்கப்படுகிறான்.
நூலில் அனுமனது பெயர் ஸ்ரீசைல. ஆனால் பல இடங்களிலும் அனுமன் என்ற பெயரே காணப்படுகிறது. சீதையின் இரண்டு புதல்கவர்கள் அநங்கலவணன், மதனாங்குசன். ஆனால் நூலில் பல இடங்களிலும் லவகுசர்களே.
ஜைன ராமாயணத்தில் பானுகர்ணன் என்பது கும்பகர்ணனது பெயர். ஆனாலும் பல இடங்களிலும் வரும் பெயர் கும்பகர்ணனே, சுக்ரீவனின் அரசி சதாரா. ஆனால் அவளைத் தாரா என்றே அழைக்கிறார் விமலசூரி. வால்மீகியின் இந்திரன் தேவராஜா. ஆனால் ஜைன ராமாயண இந்திரன் தேவர் தலைவனல்ல, வெறும் வித்யாதரர்களின் தலைவனே. ஆனால் அவனோ சுதேந்திரன், சுராதிபதி, சுரபதி, தேவேந்திரன் என்றே பௌம சரிதையில் பேசப்படுகிறான்.
வால்மீகியில் அனுமன் சூரிய புத்திரன். ஆனால் ஜைன ராமாயணத்தில் அனுமனது தந்தை பவனஞ்ஞயன் என்ற வித்யாதரன். தாய் அஞ்சன சுந்தரி, பின்னால் அவர்கள் பவனன், அஞ்சனா என்றே அழைக்கப்படுகிறார்கள். மேலும் அஞ்சனாவின் பெருமையை விளக்கும் வரலாறும் ஜைன ராமாயணத்தில் வருகிறது. பவனஞ்ஜயன் அஞ்சனாவைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தால் அவளிடம் பாராமுகமாக இருந்து விடுகிறான். ஒரு சமயம் ராவணனுக்கு உதவும் பொருட்டு ஒரு போருக்குச் சென்றிருந்தபோது ஓரரிவு, பெண் ஹம்சமொன்று தன் புருஷனைப் பிரிந்து வருந்துவதைக் கேட்டு, மனந்திருந்தி ஒரு நொடியில் தாமதிக்காமல் தன் நகருக்கு வந்து, அஞ்சனா சுந்தரியைக் கண்டு, அவளுக்குச் செய்த கொடுமையை மன்னிக்குமாறு வேண்டி, அன்றிரவை அவளோடு கழித்துவிட்டு, தான் வந்ததற்கு அடையாளமாகத் தன் முத்திரை மோதிரத்தை அவளிடம் கொடுத்து விட்டுப் போகிறான். ஆனாலும் அவள் கர்ப்பவதியானதும், இரு வீட்டினரும் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தனது தோழி வசந்த திலகையின் ஆதரவில் அனுமனைப் பெற்றெடுகிறாள். நான் செய்த காரியம் முடிந்து பவனஞ்ஞயன் திரும்பிவந்து உண்மை வெளியாகிறது.
ஜைன சமயத்தில், பதினாறு வணங்கத்தக்க பெண்டிரில் ஒரவராக அஞ்ஜனை போற்றப்படுகிறாள்.
ஜைன ராமாயணத்தில் காணப்படும் வேறு மாற்றங்களில் முக்கியமானது ராவணனது பாத்திரம், அவன் ஜைன சமயத்தின் 63 சலாக புருஷர்களில் ஒருவன். ஜீன சுவாமியின் பெரும் பக்தன். கல்விகேள்விகளில் சிறந்தவன். தன் ஆற்றலாலும், தவத்தாலும் பல அஸ்திரங்களைப் பெற்ற பராக்ரமசாலி. ராமன், லட்சுமணன், ராவணன் மூவரும் பலதேவன், வாசுதேவன், பிரதிவாசுதேவனாகப் பிறந்தவர்கள்.
ஜைன ராமாயணத்தில் ஏகபத்தினி விரதமில்லை. ராமனுக்கு நான்கு முக்கிய மனைவிகள். மைதிலி, பிரபாவதி, ரதிநிபா, ஸ்ரீதமா என்பவர்கள். ராமனுக்கு மொத்தம் எட்டாயிரம் மனைவிகள். லட்சுமணனுக்குப் பதினாறாயிரம். அனுமனுக்கும் பல மனைவியர். ஜைன ராமாயணங்களில் வசிஷ்டர், விசுவாமித்திர், அகஸ்தியர் வரலாறுகள் கிடையாது. மந்தரை, அகலிகை, சபரி கிடையாது.
வால்மீகியில் வனவாசத்தின் போது ராமன் பல முனிவர்களைச் சந்திக்கிறான். அவர்களிடமிருந்து பல அஸ்திரங்கள் பெறுகிறான். இங்கு பத்மன் பல ஜைனத் துறவிகள், சாதுக்களுடைய ஆசிரமங்களுக்குச் செல்கிறான். ஜீனர் கோவில்கள், சைத்யங்கள், புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிக்கிறான். பத்மன், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் அவற்றைத் தரிசித்து, சமய போதனைகள், விரதங்கள், அற வழி பற்றிய நல்லுரைகளைக் கேட்கிறார்கள்.
ஜைன ராமாயணத்தில் வேள்விகளுக்கும், அதில் வரும் பலி முதலியவற்றிற்கும் கொல்லாமை வழி விளக்கங்கள் தரப்படுகின்றன.
பெண் பாத்திரங்களில் சீதை ஜனகர் - அரசிவிதேஹாவின் புதல்வி. பூமியில் கிடந்தவளல்ல. இலங்கைப்போர் முடிந்த பிறகு வால்மீகியில் வரும் அக்னிப் பரீட்சையோ வேறெந்த விதமான பரீட்சைகளும் இல்லாமல், ராமன் சீதையை ஏற்றுக் கொள்கிறான். குணபத்ரன், மற்றும் சிலரது ராமாயணங்கள் ராமர் பட்டாபிஷேகத்தோடு முடிந்து விடுகின்றன. பிற ராமாயணங்களில் இரண்டாவது முறை சீதை தன் கற்பை நீரூபித்துவிட்டு, தானாகவே வெளியேறி துறவேற்று, அருகனை வழிபட்டு வாழ்கிறாள்; பிறகு சுவர்க்கத்தில் பிறக்கிறாள். லட்சுமணன் இறந்தபிறகு, ராமன் ராஜ்யத்தைத் துறந்து, ஜைனத் துறவியாகி விடுகிறான். பிறகு கேவல ஞானம் பெற்று, விடுதலை எய்துகிறான். நாலாவது நரகத்தில் உழலும் லட்சுமணனும், ராவணனும் வரும் பிறவிகளில் மோட்சம் எய்துவார்கள் என்று ராமன் தீர்க்க தரிசனம் தருகிறான். அதன்படி அடுத்து வரும் அரை காலச்சுற்றில் ராவணன் ஒரு தீர்த்தங்கரர்.
இப்படி ஜைன தத்துவங்களைத் தாங்கி அவற்றை விளக்கும் வகையில் இயற்றப்பட்டவை ஜைன ராமாயணங்கள். ஜைன சமயத்தில் அவதாரத்திற்கு இடமில்லை. எனவே ராமன் மனிதரில் சிறந்தவன், ஒரு புரு÷ஷாத்தமனே. ஜைன ராமாயணங்கள் புராணங்களாக இருக்கின்றன. சிலவற்றின் பெயர்கள் பத்மபுராணம், ராமாயண புராணம் என்றுள்ளன. இலக்கியம் என்று பார்த்தால், வால்மீகி ராமாயணம்தான், ஜைன ராமாயணங்களல்ல.

Comments