கயிலைநாதன் தரிசனம்!

சிலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
-'நிலம் இல்லாதவர்கள், காசு-பணம் இல்லாதவர்கள், வீடு இல்லாதவர்கள், நல்ல கணவனோ மனைவியோ இல்லாதவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், உயர்ந்த பதவி இல்லாதவர்கள், இவையனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாதவர்கள்... இப்படி, இல்லாதவர்களே உலகில் அதிகம்; இருப்பவர்களோ குறைவு! இந்த நிலை ஏன்?' என்ற கேள்விக்கு, வள்ளுவர் தரும் பதிலே மேற்கண்ட திருக்குறள். அதாவது... ''இல்லாதவர்கள் அதிகமாக இருக்கக் காரணம்... அவர்கள், நாள் கிழமைகளில் நோன்பு மற்றும் விரதம் இருப்பதே கிடையாது'' என்கிறார் அவர்.
வள்ளுவர் மட்டுமா நோன்பு, விரதம் குறித்து சொன்னார்? இவற்றின் உன்னதத்தை, கார்த்திகைப் பெண்களிடம் அந்த சிவபெருமானே விவரித்துள்ளார்.

கந்தன் தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள்மைந்தன் எனும் பெயராகுக மகிழ்வால் எவரேனும்நுந்தப் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்தந்தம் குறைமுடித்தே பரம் தனை நல்குலம் என்றான்
அதாவது, ''கார்த்திகைப் பெண்களே! நீங்கள், கந்த பெருமானுக்கு பாலூட்டிப் போற்றியதால், அவன் கார்த்திகேயன் எனும் பெயர் பெறுவான். கார்த்திகை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர் எவராக இருந்தாலும், அவர்களது குறைகள் நீங்கும்; வேண்டுதல் நிறைவேறும்; அவர்களுக்கு முக்தி அளிப்பேன்'' என்கிறார் ஈசன்!

கார்த்திகை விரதம் மட்டுமா விசேஷம்? சிவனாருக்கு உகந்த சோமவார விரதமும் சிறப்பானதுதான்.
கடும் தவம் இருந்த உமாதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற்றது கார்த்திகை சோமவார நன்னாளில்தான் (திங்கட்கிழமை). தனது துயர் நீங்க சிவனாரின் திருவடியில் விழுந்த சந்திரன், அவரின் திருமுடியில் இடம்பெற்ற திருநாளும் இதுவே! மேலும் உலகம் போற்றும் மகான்கள் பலரும் கார்த்திகை சோமவாரத்தில் பரவச நிலையை எட்டியுள்ளனர்.
1948-ஆம் ஆண்டு! அடியார்களின் வேண்டுகோளுக்காக, அருணாசல புராணத்தை விவரித்துக் கொண்டிருந்தார் ரமண மகரிஷி. பார்வதிதேவியானவள், சிவ பெருமானின் இட பாகத்தைப் பெற்றதை விவரித்த போது, ரமணரின் குரல் கம்மியது; கண்களில் நீர் பெருக்கெடுத்தது. புராணத்தை விவரித்ததும் ஆழ்ந்த மௌனத்துக்குச் சென்றார் ரமணர் (ஆதாரம்: சூரிநாகம்மாள் -
ஸ்ரீரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்- 30.7.1948). ஆக... உமையவள், சிவனில் பாதியாக இடம்பெற்ற கதை அத்தனை உயர்வு மிக்கது! பொதுவாகவே சோமவாரம் சிறப்புமிக்கது; கார்த்திகை மாத சோமவாரம் மேலும் விசேஷத்துக்கு உரியதாக அமைந்தது இதனால்தான்!
கார்த்திகை சோமவாரத்தில் விரதம் மேற்கொள்வது மிகுந்த பலனைத் தரும். முக்கியமாக... கார்த்திகை மாத பௌர்ணமிக்குப் பிறகு வருகிற சோமவாரம் (திங்கட்கிழமை) அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்குப் பிறகு வருகிற சோமவாரம் ஆகிய நாட்களில் விரதம்
இருந்து இறைவனை வழிபட்டால், எல்லா நலன்களையும் பெறலாம்!
திருக்கார்த்திகை தீபத் திருநாளில், சிவாலயங்கள் பலவற்றில், சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உண்டு. இதுகுறித்து ஞான நூல்கள் என்ன சொல்கின்றன?
'அகிலத்துக்கே சக்கரவர்த்தி நான்' எனும் இறுமாப்புடன் இருந்தார் மகாபலி சக்கரவர்த்தி. ஒருநாள், தனது படை- பரிவாரங்களுடன் ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமுமாக சிவாலயத்துக்கு சென்றார். இறைவனை தரிசித்து விட்டு, பிராகார வலம் வரும் போது, மிகப் பெரிய நெய் தீபத்தில் இருந்து நெய் ஒழுகி, மகாபலியின் உடலில் பட்டது. இதில் அந்த இடமே புண்ணாகிவிட, எத்தனையோ மருந்துகள் போட்டும் பலனில்லை!
உடலில் புண்; மனதில் வேதனை. இதனால் ஆட்சி செலுத்துவதில் கவனம் செலுத்த முடியாமல், இறைவனிடமே முறையிட்டார் மகாபலி. அப்போது, 'மகாபலி, அகங்காரத்துடன் ஆலயத்துக்கு வந்ததால் நேர்ந்த வினை இது! இன்று முதல் உனது அகங்காரத்தைத் துறந்து, நற்சிந்தனையுடன் நெய்தீபம் ஏற்றி வந்தால், உனது துயரம் விலகும். நீயும் நற்கதி அடைவாய்!' என்று இறைவனின் குரல் அசரீரியாக ஒலித்தது.
மெய்சிலிர்த்த மகாபலி, அதன்படியே நெய்தீபம் ஏற்றி வந்தார். ஒரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் (வளர்பிறை), அவர் தீபம் ஏற்றியபோது, சிவபெருமான் காட்சி தந்து அருளினார்.
சிவனாரின் ஜோதி வடிவைக் கண்டு பயந்துபோன தேவர்கள், இறைவனின் வெப்பத்தைத் தணிக்க பொரி, அவல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து இறைவனை வணங்கி வழிபட்டனர். மகாபலிக்கு, ஜோதி வடிவாக இறைவன் தரிசனம் தந்ததைக் குறிக்கும் வகையில், கார்த்திகை மாதம்- கார்த்திகை நட்சத்திர (வளர்பிறை) நாளில் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் உண்டானதாம்! முற்காலத்தில் 'சுட்கப்பனை' என அழைக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில் 'சொக்கப்பனை' என மருவியது.
இத்தகு புண்ணியம் மிகுந்த திருக்கார்த்திகை திருநாளிலும், கார்த்திகை சோமவார (திங்கட்கிழமை) தினங்களிலும் விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்வோம்; புண்ணியம் பெறுவோம்!
 
 

Comments