அதிக லாபம் அருளும் ஆறுமுகம்

குளுகுளு ஊரான குன்னூரில் தனி ஆலயத்தில் குடி கொண்டு பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார், சிவசுப்ரமண்யசுவாமி.
இந்த ஆலயத்தின் தென்மேற்கு கோடியில் ஓர் அதிசயக் கிணறு உள்ளது. மக்கள் தினசரி இங்கிருந்து ஆயிரக்கணக்கான குடங்களில் தண்ணீர் பிடித்துச் செல்கிறார்கள். ஊரில் எங்கு தண்ணீர் வற்றினாலும் இந்தக் கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றுவது இல்லை.
கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 1800 அடி உயரத்தில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பது எப்படி என்று அங்கு யாரையாவது கேட்டால் “அந்த ரகசியம் முருகனுக்கே தெரியும்’ என்பதுதான் பதிலாக வருகிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான திருச்சுற்றில் கொடிமரம் உள்ளது.
தென் திசையில் ஆஞ்சனேயரும் விஷ்ணு துர்க்கையும் மகாமண்பட நுழைவாயிலின் இடதுபுறம் மங்கள விநாயகரும் அருள்பாலிக்க, வலதுபுறம் விசாலாட்சி சமேதராக விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் வள்ளி-தெய்வானையுடன் நின்ற கோலத்தில் கனிவான முகத்துடன் காட்சி தருகிறார், சிவசுப்ரமண்ய சுவாமி.
வடக்கு திருச்சுற்றில் பைரவரும் தட்சிணாமூர்த்தியும் வடமேற்கு மூலையில் நவகிரக நாயகர்களும் அருள்கின்றனர்.
சஷ்டி, கார்த்திகை, பூசம், பங்குனி உத்திரம், பொங்கல் போன்ற நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தைப்பூசம், பொங்கல் பண்டிகை நாட்களிலும் முருகன் துணைவியருடன் வீதியுலா வருவதுண்டு. கந்தசஷ்டி ஏழுநாட்களும் மறுநாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின்போது பக்தர்கள் கூட்டம் ஆலயத்தில் நிரம்பி வழியும் வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் நடைபெறுவதுடன் அன்னதானமும் உண்டு. கார்த்திகை தீபத்தன்று சொக்க பனை ஏற்றும் விழா இங்கு மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தன் தந்தைக்கு முதல் மரியாதை செலுத்திய பிறகே தன்னை வணங்க வேண்டும் என்று முருகன் நினைத்ததாலோ என்னவோ சிவபெருமானின் பிரமாண்ட திருமேனி மகாமண்பட முகப்பிலேயே உள்ளது.
இங்குள்ள விஷ்ணுதுர்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வாரங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு எலுமிச்சை விளக்கேற்றி, சிவப்பு அரளிப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், தடை நீங்கி விரைவில் திருமணம் இனிதே நடந்தேறும் என்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25ம் நாள் விஷ்ணு துர்க்கை சன்னதியின் முன் 8 அடி நீளமும் 8 அடி அகலமும் 10 அடி ஆழமும் கொண்ட பிரமாண்டமான ஹோம குண்டம் அமைக்கப்பட்டு சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. அந்த ஹோமத் தீ முழுவதுமாக அணைய 10 நாட்களாகுமாம். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு அனுமன் ஜெயந்தியன்றும் பைரவருக்கு வளர்பிறை அஷ்டமியிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
குழந்தைகள் கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குழந்தையை தட்டு, படி, உலக்கை, நெல், அரிசிகளுடன் ஆலயத்திற்குத் தந்து கொடுத்து விடுகின்றனர். பின்னர் அந்தக் குழந்தை முருகனின் குழந்தையாகி விடுகிறது. இப்படிச் செய்வதால், குழந்தையைச் சூழ்ந்திருந்த தோஷங்கள் விலகிவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பின்னர் முருகனின் குழந்தையாகக் கருதி அதை அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வூர் வியாபாரிகளுக்கும் இந்த முருகன் கண்கண்ட தெய்வம். அவர் சன்னதியிலேயே புதுக் கணக்குத் தொடங்குவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படிச் செய்வதால், வியாபாரம் செழித்து அதிக லாபம் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ளது சிவசுப்ரமண்ய சுவாமி ஆலயம்.

Comments