அரங்கனுக்கு மாமனார் ஆன குலசேகராழ்வார்!


ராமபிரான் ஒருவரையே மனதில் நிறுத்தி, அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார். ராமரின் ஜன்ம நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தில் அவதரித்தவர்! ராமாயணக் கதையை எவர் விவரித்தாலும் உருகிப் போய்விடுவார் குலசேகர ஆழ்வார்; தன்னையே மறந்து விடுவார். சில தருணங்களில்... கொதித்து எழுந்து, தன் சேனைகளைத் திரட்டி, ராவணனை அழிப்பதற்குப் புறப்பட்டு விடுவார்! இத்தனைக்கும் இவருக்கு திடவ்ரதன் என்றும் பெயர் உண்டு!
'ராம' எனும் திருநாமத்தைக் கேட்டாலே மெய்ம்மறந்து விடுவார் குலசேகர ஆழ்வார். இவர் மட்டுமா? ராமபிரானை சிந்தையில் வைத்திருக்கும் அனைவருமே இப்படி நெகிழத்தான் செய்வார்கள். குலசேகர ஆழ்வாரின் அளவற்ற பக்தியால் விளைந்த பாசுரங்கள், பெருமாள் திருமொழி என்றே அழைக்கப்படும் பேறு பெற்றவை!
ராமபிரான் மீது அன்பு வைத்தவர், ராமர் ஆராதித்த அரங்கனின் மீது அன்பு பாராட்டாமலா இருப்பார்? இதனால்தான் வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பெருமையாக, குலசேகரப் பெருமாள் எனும் திருநாமத்தைப் பெற்றார் இவர்! ஸ்ரீராமரை மனதில் கொண்ட குலசேகர ஆழ்வாரின் முதல் பாடல், அரங்கனை முன்னிறுத்திதான் அமைந்திருந்தது!
இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றிஇனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவிதிருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னிதிரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்கண்ணினைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?
'தெளிந்த நீரைக் கொண்ட காவிரி, தனது அலைகள் எனும் கைகளால் திருவடிகளை இதமாகப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் திருவரங்க நகரில்,
இருளானது சிதறி ஓடும்படி ஒளி வீசும் மாணிக்கக் கற்களை நெற்றியிலும் மிக நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு அரவு அரசன் ஆதிசேஷனின் படுக்கையில் கண்வளரும் நீலரத்தினக் கல் போன்ற பெரிய பெருமாளை, கண்கள் குளிர வணங்கி மகிழ்வுறும் நாள் எந்நாளோ?' என்று அரங்கனை எண்ணி எண்ணி ஏங்குகிறார் குலசேகராழ்வார்!
அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக மிக அவசியம். இந்த ஏக்கமும் தாபமும் இருந்தால் போதும்... அரங்கனே இதற்காகச் செயல்படத் தொடங்கி விடுவான்.
ஸ்ரீதரன் என்ற அன்பர்... சில மாதங்களுக்கு முன் பெருமாளை தரிசிக்க திருவரங்கம் வந்தார். அப்போது, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வாசலில் உள்ள பெருமாளின் பாதுகையைக் கண்டு சிலிர்த்தார். அந்த நிமிடமே அவருக்குள் ஓர் எண்ணம்... 'இங்கே வேலை கிடைத்தால் நன்றாக இருக்குமே?' என்று! அடுத்து ஆலயத்துக்கு வந்தவர், பெருமாளை தரிசித்தார். அரங்கன் சந்நிதியில் வைத்து, ''இந்த முறை பெருமாளை விட்டுப் பிரியவே மனமில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இங்கேயே வந்து விடலாம்போல் தோன்றுகிறது'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
பிறகென்ன? இந்த வார்த்தை அரங்கனின் செவியில் விழாமலா இருந்திருக்கும்?
இதையடுத்து, அவர் வேலை பார்த்த இடத்தில் ஏகப்பட்ட தடைகள்; பல்வேறு சிக்கல்கள். மனம் விரும்பியபடி வேறு வேலை ஏதும் அமையாத சூழ்நிலை! அப்போதுதான், ஒரு நிறுவனத்தில் இருந்து கணினித் துறைத் தலைவராகப் பதவியேற்கும்படி அவருக்கு அழைப்பு வந்தது! கடிதத்தைப் பார்த்து விட்டு, அரண்டு போனார் ஸ்ரீதரன். பின்னே? ஸ்ரீரங்கத்தில் எந்தக் கல்லூரி வாசலில் நின்று பாதுகையைப் பார்த்து அரங்கனின் அருகிலேயே இருக்க ஆசைப்பட்டாரோ, அந்தக் கல்லூரியில் இருந்தே வேலைக்கான அழைப்பு வந்தால்..? வியந்துதானே போவார்! அவருக்கு முதலில் வேலையில் சங்கடமான சூழ்நிலை! ஆனால், பிறகு..? எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! இப்படித்தான் நம் ஏக்கத்தைக் கண்டு பரவசமாகி சதுரங்கம் ஆடுவான் அரங்கன்! இப்படி சதுரங்கம் ஆடுவதற்காகவே, தன் மீது ஏக்கத்துடன் எவரேனும் வருகின்றனரா என்று அரங்கன் ஏக்கத்துடன் காத்திருப்பான்!
ராஜா குலசேகரருக்கு அரங்கன் மீதும், அவனது அடியார்கள் மீதும் பித்தாகி பிணைந்து நிற்க வேண்டும் என்பதே ஆசை! வைணவக் குழாமில் இணைந்து கூத்தாடவே விருப்பம்! ஆனால், இதற்குக் குறுக்கே நின்றது அரசப் பொறுப்பு. மன்னரது எண்ணத்தை அறிந்த அமைச்சர்கள், திருமாலின் அடியார்களை அரண்மனைக்கே வரச்செய்து, மன்னரை வேறெங்கும் மெய் மறக்க முடியாதபடி செய்தனர்.
வைணவக் கூட்டம் நாளுக்கு நாள் பெருகியது. அரசப் பொறுப்புகளை மறந்தவராக, வைணவக் குழாமில் கலந்தவராக, பாகவத கோஷ்டியில் இரண்டறக் கலந்தவராக மாறினார் மன்னர்! ஸ்ரீராமநவமி உற்ஸவ நாளும் வந்தது. மன்னரின் ராம பக்தியை விவரிக்கவும் வேண்டுமோ? ஆராதனை மூர்த்திக்கு ஆபரணங்களாகச் சொரிந்தார். இந்த வேளையில், வைணவக் கூட்டத்தையும் மன்னரையும் பிரிக்க சூழ்ச்சி செய்தனர் மந்திரிகள். இறைவனது திருவாபரணம் சிலவற்றை ஒளித்து வைத்து, திருமாலடியாரே திருடிவிட்டனர் என்று பழி சுமத்தினர். மன்னரோ திருவாபரணம் களவு போனது பற்றி கவலைப்படவில்லை; அடியவர்கள் மீது ஏற்பட்ட பழிக்காக மிகவும் வருந்தினார்!
குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொடிய விஷம் கொண்ட பாம்பு இருக்கும் குடத்தில் கைவிட்டு, சத்தியம் செய்ய வேண்டும் என்பது வழக்கம்! சத்தியம் பிறழாதவர்களை பாம்பு தீண்டாது. அவ்வாறே, கொடிய விஷ நாகம் இருந்த குடம் வைக்கப்பட... அடியவர்கள் அனைவரின் சார்பாக, குடத்தினுள் தானே கையை விட்டார் மன்னர்! அனைவரும் அதிர்ந்தனர். அடியார்கள் அபகரித்திருந்தால்தானே மன்னரை பாம்பு தீண்டும்?!
தங்கள் தவறை உணர்ந்த அமைச்சர்கள், மன்னரிடம் மன்னிப்புக் கேட்டனர். மன்னருக்கோ, அரச வாழ்வில் கசப்பும் வெறுப்பும் மேலும் அதிகரித்தது. விளைவு... மகனை மன்னராக்கினார்! பற்றற்றோர் வாழும் தென்னரங்கம் நோக்கி தன் மகளுடன் பயணத்தைத் தொடர்ந்தார். இதில்... அமைச்சரின் சூழ்ச்சி என்பதெல்லாம் அரங்கனின் சித்தமன்றி வேறென்ன? அரங்கனை அடைய மன்னர் ஏங்கினார்; அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தான் அரங்கன்; அந்த மன்னரும் பின்னர் குலசேகர ஆழ்வாரானார்!
இந்த விஷயத்தில் அரங்கனுக்கு நிகர் அரங்கனே! ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் துவங்கி எவரை, எப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி இழுப்பதில் மாயன் இவன்! எவரேனும் 'தான்' எனும் அகங்காரத்துடன் இருந்தால், அவர்களது கண்ணை அவர்களின் கையாலேயே குத்திக் கொள்ளவும் வகை செய்துவிடுவான்!
மாவினைவாய் பிளந்து ... எனும் பாசுரத்தில் குலசேகராழ்வார் இப்படிக் கூறுகிறார்... 'குதிரை வடிவத்துடன் வந்த அசுரன் கேசியின் வாயைக் கிழித்து, அவன் இறந்தான் என்று மகிழ்ந்த அடியார்களிடம் அன்பு கொண்டவனை, கடல் நிறம் கொண்டவனை, என் கண்ணபிரானை, இந்திரன் பெருமழை பெய்வித்த போது, வலிமை கொண்ட கோவர்த்தன மலையைக் குடைபோல் தாங்கி ஆநிரை காத்த தலைவனை, அழகிய தமிழ்ப் பாடல்களைப்போல் இனிமையானவனை, வடமொழியில் உள்ள ஸ்ரீராமாயணம்போல் இனிமையானவனை, ஆதிசேஷன் மீது கண்வளரும் பெரிய பெருமாளை... என் நாக்கு தழும்பு ஏற்படும் வரை துதித்து, என் கைகளால் பறிக்கப்பட்ட மலர்களைத் தூவி வணங்கும் நாள் எந்நாளோ?' - என்று உருகுகிறார் குலசேகர ஆழ்வார்!
தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனை பாசுரத்தில், ஈட்டம் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே!
- என்று, ''அவன் நாமங்களைச் சொல்லி அழைத்து மெய் மறந்து நிற்கும் அவனுடைய அடியார் கூட்டத்தைக் காணும் வாய்ப்பு கிட்டினால், நமது கண்கள் அடைந்த பேறு அதுவே!'' என்கிறார் குலசேகராழ்வார்.
ஆழ்வார் கண்கள் மட்டுமா பேறு அடைந்தது..! யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ, அந்த அரங்கனையே மாப்பிள்ளையாக அடையும் பேறும் பெற்றார் ஆழ்வார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி! இவள்- ஆண்டாளுக்கு முன்னோடி! ஸ்ரீராமநவமியன்று குலசேகரவல்லியை மணந்தான் அரங்கன்!
இன்றும் கோயிலில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி உற்ஸவம் நடக்கிறது. அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க, பக்தர்களுக்கு தரிசனம் தந்தவாறே இருவருக்கும் திரு
மஞ்சனம் நடைபெறுகிறது. இருவரும் ஒரே ஆசனத்தில் இருந்து அருள்புரிவார்கள்! அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்ஸவம் அர்ச்சுனன் மண்டபத்தில் நடைபெறும்.
சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலான திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மொகலாயர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்தவர்கள், பஞ்சலோகத்தில் விக்ரஹத்தைச் செய்து வைத்தார்கள். குலசேகர ஆழ்வாரால்தான் பவித்ரோற்ஸவ மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே! இவரால் இயற்றப்பட்டதுதான் 'முகுந்தமாலை' எனும் அற்புத சம்ஸ்கிருத துதி.
பல்லாண்டு பாடும் பாகவதர் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமைப்படுகிறார் குலசேகரப் பெருமாள்!
எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், அரங்கனுக்கு ஆட்பட்டால், முந்தைய நிலை மறந்து, அரங்கன் அடியாருடனே உறவாகிவிடுவர்.
கோவையில் புகழ்பெற்ற ஆடிட்டர் ஸ்ரீராமச்சந்திரன். இன்று அங்கேயுள்ள பெரும்பாலான ஆடிட்டர்கள் இவரின் ஜுனியர்களே! அரங்கனிடம் பெரும் பிரியம் கொண்ட அவருக்கு, ஒரு கட்டத்தில் மனச் சங்கடமான சூழ்நிலை ஏற்பட... தான் சேர்த்த செல்வங்களை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்தார். கட்டிக் கொள்ள மூன்று ஜோடி ஆடைகளுடன், எளிமையாக வாழத் தேவை யானவற்றை எடுத்துக் கொண்டு, தன் துணைவியாருடன் ஸ்ரீரங்கம் வந்தார். இங்கு வந்த அவருக்கு, 'ராமானுஜ கூடம்' எனும் பாகவதர்களை அரவணைத்து போஷிக்கும் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினான் அரங்கன்! ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்காகவே அமைக்கப்பட்ட நெகமம் சாரிட்டி அமைப்பையும் கவனிக்கும் இவர், ஆடிட்டராக பணியாற்றிய போது கிடைக்காத மனநிம்மதி, திருவரங்கனுக்கு கைங்கர்யம் செய்யும் போது கிடைக்கிறது என்று ஸ்லாகிக்கிறார். ராமச்சந்திரனுக்கு நிகழ்ந்த சங்கடங்களும்கூட, ஸ்ரீரங்கத்துக்கு இவரை அழைப்பதற்காக அரங்கன் செய்த நாடகமே!
ஆடாதாரையும் ஆட்டி வைத்து ஆடுபவனல்லவா அரங்கன்?!
ஐப்பசி மாதத்தில் அரங்கனுக்கு
சர்வமும் தங்க மயம்தான்!
ரங்கன் திருவாராதனத்துக்கு மற்ற மாதங்களில் வெள்ளிக் குடத்தில் கொண்டு வரப்படும் வடதிருக்காவேரி(கொள்ளிடம்) தீர்த்தத்தை பயன்படுத்துவர். துலா மாதத்தில் மட்டும், விஜயரங்க சொக்கநாதர் அர்ப்பணித்த தங்கக் குடத்தில் அம்மா மண்டபத்தில் இருந்து எடுத்து வரப்படும் காவேரி தீர்த்தம் பயன்படும். மேலும் மூலவருக்கு முழுத் தங்கக் காப்பு, தங்கத் தோளுக்கினியானில் (பல்லக்கில்) புறப்பாடு, தங்க வட்டில் மூலம் திருமஞ்சனம் என சகலமும் தங்க மயமே! துலா மாதத்தில் மட்டும், மூலவர், உற்ஸவர், தாயார் மூவரும் சாளக்ராம மாலை சாத்திக் கொண்டிருப்பர். ஐப்பசி மாத அரங்கன் தரிசனம், தங்கம் சேரும் தனி தரிசனம்தான்!

Comments