‘தில்லை திருப்பெருந்துறை’

சைவத் திருத்தலங்களில் மிகவும் உயர்ந்தது, தில்லையம்பல நடராஜர் ஆனந்த நடம்புரியும் சிதம்பரம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை ஆவுடையார்  திருக்கோயில் போன்றே சிதம்பரத்திலும் ஒரு திருத்தலம் அமைந்துள்ளது. ‘தில்லை திருப்பெருந்துறை’ என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில், இறைவன் தமது திரு வடிகளை மூன்றுமுறை பதித்து பெருமை சேர்த்தருளியுள்ளார்.
ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு அருளிய இறைவன்!

சமயக்குரவர் நால்வரில் ஒருவர் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான். அவர் பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்துவிட்டு, இறுதியில் தில்லையம்பதிக்கு வந்தடைந்தார்.

ஸ்ரீ மாணிக்கவாசகர் தில்லையில் தங்கியிருந்த பர்ணசாலைக்கு அந்தணர் உருவில் எழுந்தருளினார் ஸ்ரீநடராஜப் பெருமான். ‘தாங்கள் பாடிய பாடல்கள் அந்தந்த தலங் களில்தான் பிரதி எடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, உங்களிடம் பிரதி எதுவும் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே அந்தப் பாடல்களை எல்லாம் தாங்கள்  மறுபடியும் பாடினால், அவற்றை நான் அழகாக ஓலைச்சுவடியில் எழுதிக் கொடுக்கிறேன்...’ என்றார் அந்தணர் உருவிலிருந்த இறைவன்!

வந்திருப்பது     இறையென்றறியாத ஸ்ரீ மாணிக்கவாசகர், தான் இயற்றிய திருவாசகப் பதிகங்களை ஒவ்வொன்றாகப் பாடப் பாட, அம்பலத்து அரசன் அவையனைத்தையும் ஓலைச்சுவடியில் படியெடுத்துத் தந் தருளினார்.

ஸ்ரீ மாணிக்கவாசகர் பாடிய பதிகங்கள் அனைத்தையும் தன் கைப்பட எழுதிய இறைவன், ‘மாணிக்கவாசகர் சொற்படி அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது...’ எனத்  திருச்சாத்திட்டு (கையொப்பம்) தில்லை சிற்றம்பலத்தின் வாயிற்படியில் (பஞ்சாட்சரப் படி) வைத்தருளினார். வந்தவர் இறையென்பதை அறிந்த மாணிக்கவாசகர், இறைவன்  திருவருளை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தார்.

தில்லை திருப்பெருந்துறை திருக்கோயில்!

பொதுவாக சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். அதிலும் சில சிவத்தலங்கள், குறிப்பாக ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் போன்றவை மேற்கு  நோக்கி அமைந்திருக்கும். ஆனால், தில்லை திருப்பெருந்துறை திருக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

இத்தல கருவறையில் ஆவுடையார் மட்டுமே திருக்காட்சி தருகிறது. சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத் திருமேனி மூன்று பகுதிகளாக அமைந்திருக்கும். மேலே பாணம்  பகுதி, அதனடியில் சக்தி பீடம், அதன்கீழ் ஒரு பீடம் அமைந்திருக்கும். இத்தலத்தில் சக்தி பீடத்தில் இறைவன் அருவமாக வீற்றிருப்பதால், இத்தல இறைவன் ஸ்ரீஆத்மநாதர் எனவும், ஸ்ரீ ஆத்மநாத ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ஸ்ரீயோகாம்பிகை. இத்தல இறைவி அரூபமாக விளங்குவதால், அம்பாள் கருவறையில் யோகபீடமும், அதன்மேல் அம்பாள் திருப்பாதங்களும் மட்டுமே உள்ளன. அப்பீடத் தின்மேல் ஸ்ரீ யோகாம்பிகை சிவயோகம் புரிந்து ஞானத்தை வழங்குகிறாள்.

பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆனி மகம் (ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை), மார்கழி திருவாதிரை, ஆவணி மூலம் போன்ற அனைத்து விசேஷ நாட்களும் திருக்கோயிலில் மிகவும் விமரிசையாகவும், பக்தியுடனும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகின்றன.  பக்தர்கள் வேண்டுவதை உடனடியாக நிறைவேற்றித் தரும் பெருமான்! நம்  வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய திருத்தலம் தில்லை திருப்பெருந்துறை திருத்தலம்!

குறிப்பு : சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு வடக்கே, தில்லை ஸ்ரீ காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வேங்கான் தெருவில் அமைந்துள்ளது தில்லை திரு ப்பெருந்துறை திருக்கோயில். மேலும் விவரங்களுக்கு : திரு. வை. பசவராஜ், 9443112098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments