வேங்கடவனின் விஸ்வரூபம்!

ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் திருமலையில் வேங்கடவனுக்கு சுப்ரபாத சேவை நடைபெறும். அச்சமயம் சன்னதி இடையர் தீவட்டி பிடித்துக்கொண்டு வடக்கு மாட வீதியில் உள்ள அர்ச்சகர்கள் இல்லத்திற்குச் சென்று அவர்களை வணங்கி ஆலயத்திற்கு அழைப்பர்.
அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும் அர்ச்சகர்கள், திருமலையான் தங்கவாயிலை திறக்கும் சாவிக் கொத்தை தோளின் மீது சுமந்து இடையரை பின் தொடர்வர். மகாதுவாரம் அருகே வநதவுடன் நகாரா மண்டபத்தில் உள்ள கோயில் மணியை ஒலிக்கச் செய்வர். அந்த மணியோசையுடன் மகாதுவாரம் திறக்கப்படும்.
அர்ச்சகர்கள் பிரதான துவாரபாலகிகளை வழிபட்டு ஆலயத்திற்குள் நுழைவார்கள். சாவியை ÷க்ஷத்திர பாலகர் சிலையினருகே வைத்து கோயிலுக்குள் நுழைந்திட பாவனையாக அனுமதி பெறுவர். பின்னர், கொடி மரத்தை வலம் வந்து வெள்ளி வாயிலைக் கடந்து, தங்க வாயில் முன்பு நின்று ஸ்வாமியை வணங்குவார்கள்.
அர்ச்சகர்களை சன்னதி இடையர் அங்கு விட்டுவிட்டு மறுபடியும் திருமலையான் சன்னதி வீதியில் உள்ள பேடி அஞ்சநேயர் கோயில் அருகே உள்ள பெரிய ஜீயர் மடத்திற்கு வருவர்.
அங்கு தயாராக உள்ள பரிசாரக ரான ஏகாங்கியையும் அழைத்துக்கொண்டு ஆலயத்திற்குள் வருவர். அதற்குள் ஆலய அதிகாரியான பேஷ்கார், சுப்ரபாதம், சேவிக்கும் வேத பண்டிதர் ஆகியோர் தங்க வாயில் முன்பு வந்து விடுவார்கள்.
அன்னமய்யா வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் தம்புராவுடன் துயிலெழுப்பும் சங்கீர்த்தனம் பாடத் தயாராக இருப்பார். அத்துடன் சுப்ரபாத சேவைக்குக் கட்டணம் செலுத்திய பக்தர்களும் தங்க வாயில் முன்பு அனுமதிக்கப்படுவர்.
இவர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் சாவியைக் கொண்டு தங்க வாயிலில் உள்ள சிறிய துளை வழியாக உள்ளே போடப்பட்டுள்ள முதல் தாழ்ப்பாளையும் பின்னர தாழ்ப்பாளுக்குப் போடப்பட்டுள்ள பூட்டையும் திறப்பார்கள்.
பிறகு சன்னதி இடையர் பேஷ்காரிடமுள்ள சீலிடப்பட்ட சிறிய பையில் உள்ள சாவியை வெளியே எடுத்து சீலிடப்பட்ட மூன்று பெரிய பூட்டுகளை திறப்பார்.
தங்க வாயில் திறந்ததும் சன்னதி இடையர் தீவட்டியுடன் உள்ளே நுழைவார். பின்னர் அர்ச்சகர்கள் உச்ச ஸ்வரத்துடன், “கௌசல்யா சுப்ரஜாராமா’ என சுப்ரபாதம் பாடியபடி அவரை பின் தொடர்வார்கள்.
ஜீயர் மட ஏகாங்கி, பால், சர்க்கரை, வெண்ணெய், தாம்பூலம் உள்ள போனதும் தங்கவாயில் மூடப்படும். தங்கவாயில் முன்பு உள்ள வேத பண்டிதர்கள் அர்ச்சகர்கள் தொடங்கிய சுப்ரபாதத்தை தொடர்ந்து பாடுவர். ஸ்தோத்திரம், ப்ரபத்தி, மங்களாசாஸனம் முடிந்தவுடன் அன்னமய்யா வம்சத்தவர் அன்னமய்யா இயற்றிய திருப்பள்ளியெழுச்சி கீர்த்தனை ஒன்றை பூபாள ராகத்தில் இசைப்பார்.
தங்க வாயிலை மூடிய பிறகு தீவட்டி ஒளியில் அர்ச்சகர்கள் ராமர் மேடைக்கு வேயப்பட்டுள்ள கதவுத் தாழினை திறந்து, சயன மண்டபத்தில் சயனித்துள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்தியை வலம் வந்து திருச்சன்னதியை அடைவர்.
தீவட்டியுடன் சென்ற சன்னதி இடையர் குலசேகரப்படி அருகே நின்று அந்த வெளிச்சத்தில் எம்பெருமானை முதலில் தரிசனம் செய்து கொள்வார். அதன்பிறகு தீவட்டியை அர்ச்சகர்கள் வாங்கி பெருமாள் சன்னதியில் உள்ள தீபங்களை ஏற்ற, ராமர் மேடையில் உள்ள தீபங்களை இடையர் ஏற்றுவார்.
அர்ச்சகர்கள் ஸ்ரீனிவாச மூர்த்தியை நமஸ்கரித்து, கைதட்டி, திருப்பள்ளி எழுந்தளும்படி பிரார்த்திப்பர். பின்னர் அந்த சயன விக்ரகத்தை மூலமூர்த்தி சன்னதியில் எழுந்தருளப் பண்ணுவர்.
ஆனந்த நிலையத்தில் உள்ள குலசேகரப்படி அருகே திரையிட்ட பிறகு அர்ச்சகர்கள் பெருமாளுக்கு அனுஷ்டானங்களை முடித்து, ஜீயர் மடத்திலிருந்து வந்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பர்.
அடுத்த எம்பெருமானுக்கு நவநீத ஆரத்தி காட்டும்போது, தங்கவாயில் கதவுகள் திறக்கப்படும். அப்போது, பெருமாளின் தங்கப் பாதங்கள் மீது துளசி, புஷ்பங்கள் இல்லாமல் திருப்பாதத்தை மட்டுமே தரிசிக்கும் பாக்யத்தைதான் “விஸ்வரூப தரிசனம்’ என்பர்.

Comments