சந்தியா தாண்டவமாடும் வெள்ளியம்பல நடராஜர்

நடராஜர்வலது காலை ஊன்றி, பெரும்பாலும் இடது கால் தூக்கி திரு நடனம் புரிந்த நிலையிலேயே இருக்கிறார்.
ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வெள்ளியம்பலத்தில் மட்டும் நடராஜர் இடது கால் ஊன்றி வலது கால் துஆக்கி தாண்டவம் ஆடுகிறார். அவருக்கு ஆனி மாதம் நடக்கும் திருமஞ்சனம் முக்கியமானதாகும்.
பேராசிரியரும், மீனாட்சி அம்ன் கோயில் குடமுழுக்கு மலர் குழுத்தலைவருமான டாக்டர் அருணகிரியிடம் ஆனித் திருமஞ்சனம் குறித்து கேட்டோம்.
தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்க ளமாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வார்.
ஆனித் திருமஞ்சனத்தை யொட்டி நடராஜ பெருமான் எழுந்தருளியுள்ள ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். 
சிவபெருமான், திருவாதிரை நட்சத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தை தரும். மேலும் வெம்மையுள்ள கபடையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அனியை ஏந்தி கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிக சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனம் முக்கியமானதாகும்.
நடராஜருக்கு ஐந்து நடனசபைகள் உள்ளன. சிதம்பரத்தில் இருப்பது பொன்னம்பலம். இங்கு அவர் ஆடுவது ஆனந்தத்தாண்டவம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருப்பது வெள்ளியம்பலம். இங்கு அவர் ஆடுவது சந்தியா தாண்டவம். திருநெல்வேலியில் இருப்பது தாமிரசபை. இங்கு ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபை. இங்கு அவர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் இருப்பது ரத்தினசபை. இங்கு ஆடுவது காளிதாண்டவம்.
நடராஜர் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில் 24வது படலமாக கால் மாறி ஆடிய படலம் வருகிறது.
நடராஜர் கால் மாறி ஆடிய காரணம் என்ன?
மதுரையில் மீனாட்சியம்மனுக்கு சுந்தரேஸ்வரருக்கும் நடைபெற்ற திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலி மகரிஷியும், வியாக்ரபாதரும் சிவனிடம், இறைவா நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பார்த்த பின் தான் உணவு அருந்துவது வழக்கம் என்றனர்.
இதை கேட்ட இறைவன் இவர்களின் நியமத்தை காக்கும் பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்தினார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்ட பின் பதஞ்சலியும், வியாக்பாதரும் உணவு அருந்துகின்றனர்.
இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்ரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம். இந்த நடனமானது. நடராஜபெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான்.
இதே காலத்தில் வாழ்ந்த கற்காற்சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாடண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான். இப்படி நடனம் கற்கும்போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடன கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான். 64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வருகிறான். அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும்போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான்.
இதை யாரிடம் எப்படி கேட்பது? தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதை பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகிறது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்று ஒரே காலில் ஆடிக்கும்கொண்டிரு“கும் இறைவா எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா என வருந்திக் கேட்கிறான்.
அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால் என் முன்னால் கத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன். என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்க்கிறான். ராஜசேகபாண்டியன் அப்படியே மெய்சிலிர்த்து நின்று விடுகிறான்.
காரணம் பக்தனுக்காக இடது கால் ஊன்றி, வலது கால் தூக்கி ஆடுகிறார். நடராஜபெருமான் எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்துவரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்ற வரமும் வாங்கி விடுகிறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.
மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறி ஆடிய சந்தியா தாண்டவம் குறித்து பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் தொடக்கத்திலேயே காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில் ஆனந்த தாண்டவத்தை போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பம் உள்ளது என்றார் பேராசிரியம் அருணகிரி.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆனந்த பட்டர் இது குறித்து கூறுகையில்
நடராஜ பெருமான் ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நடக்கும். சித்திரை மாதம் வரும் திருவோணம், ஆனி மாதம் வரும் உத்திரம், மார்கழி மாதம் வரும் திருவாதிரை ஆகிய திருமஞ்சனங்கள் நடசத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடப்பது, மற்றவை வளர்பிறை திதியை வைத்து நடப்பது. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும்.

Comments

Post a Comment