திருக்கூத்து தரிசனம்!

அறுபத்து மூன்று நாயன்மார்களும் மிகவும் உயர்ந்தவர்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் இயல்பினால் தனிச்சிறப்புடன் திகழ்பவர்கள்; பக்தியினால் வளர்ந்த நமது பண்பாட்டின் தூய்மையான காவலர்களாக விளங்குபவர்கள்.
அளவிட முடியாத அவர்களது பெருமையை இறைவனே விவரித்திருக்கின்றார்.
“பெருமையினால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்; ஒருமையால் உலகை வெல்வார்; ஊனமேல் ஒன்றுமில்லார்; அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்; இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்’ என்று சிவபெருமான், சைவ சமயாசாரியார்களில் மூன்றாமவராகிய சுந்தரருக்குக் கூறி அருளியிருக்கிறார்.
அறுபத்து மூன்று நாயன்மார் என்ற இந்த அடியவர்கள் தம் பெருமையினால், தமக்குத் தாமே ஒப்பாவார்கள். (வேறு எவரும் அவர்களுக்கு ஒப்பானவர்கள் இல்லை) அவர்கள் இறைவனோடு ஒருமைப்பட நிற்பவர்கள்; எனவே அவர்கள் உலகையே வெல்பவர்கள்; அவர்களுக்கு எந்தவிதமான துன்பங்களும் வராது.
அந்த சிவனடியார்கள் பிறர் எவரும் நிற்பதற்கு அரிய நிலையில் நிற்பவர்கள்; நிறைவான அன்பு கொண்டவர்கள் என்பதால், மகிழ்ச்சியையே நிறைய அனுபவித்து வருபவர்கள்; அவர்கள் இம்மை, மறுமை ஆகியவற்றைக் கடந்து இன்பநிலையில் நிற்பவர்கள்.
இத்தகைய இந்த அடியார்களை நீ சென்று அடைவாயாக என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிவபெருமான் ஆணையிட்டுக் கூறியிருக்கிறார்.

திருமந்திர வரலாறு
திருக்கயிலாயத்தில் சிவ பெருமான் திருக்கோயிலில் முதற்பெருங்காவலராக என்றென்றும் விளங்குபவர் நந்திதேவர். அவரது மாணவர்களுள் சிவயோகியாரும் ஒருவர். அவர் அனிமா முதலிய எட்டுச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்.
அகத்திய முனிவரின் நண்பராகிய அந்த சிவயோகியார் அவரைக் காண்பதற்காகத் திருக்கயிலாயத்திலிருந்து கிளம்பித் தென் இந்தியா நோக்கி வந்தார். வழியில் திருக்கேதாரம், நேபாளம், காசி, திருக்காளத்தி, திருவாலங்காடு முதலிய தலங்களைப் பணிந்து, காஞ்சி நகரை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கி இறைவனை வணங்கிப் போற்றினார்.
பின்னர், அந்த சிவயோகியார் தில்லைப் பதி சென்று, சிவபெருமானின் திருக்கூத்தினைக் கண்டுகளித்தார்.
பார்வதி தேவி பசுவின் கன்றாக இருந்து சிவபெருமானை வழிபாடு செய்து, அவருடன் எழுந்தருளியிருந்து உயிர்களுக்கு அருள் புரியும் திருத்தலம் திருவாவடுதுறை சிவயோகியார் அந்தப் புனிதத் தலத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டார். அங்குச் சில தினங்கள் அவர் தங்கி இருந்தார்.
சிவயோகியார் திருவாவடுதுறையிலிருந்து கிளம்பிச் செல்ல ஆரம்பித்தார். அவர் சென்ற வழியில் காவிரிக் கரையில் ஒரு சோலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் கதறி அழுததை அவர் கண்டார்.

மூலன் என்பவன் அங்கே பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் இந்த உலகில் வாழும் காலம் முடிவடைந்ததால் இறந்து போனான். அவனது உடல் நிலத்தில் கிடந்தது. பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி அழுது கொண்டிருந்தன.
சிவயோகியார் பசுக்களின் பெருந்துயரத்தைக் கண்டார். பசுக்களின் துயரத்தை நீக்குவதற்காக அவர் தமது உடம்பினை பாதுகாப்பான ஓர் இடத்தில் மறைத்து வைத்து விட்டு, தாம் பயின்று உணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) என்னும் பவன வழியினால், தமது உயிரை மூலனது உடம்பில் செலுத்தித் திருமூலர் என்ற பெயருடையராய் எழுந்தார்.
பசுக்கள் மகிழ்ச்சியடைந்தன. திருமூலர் அவற்றை மேய்த்து அருளினார்.
பின்னர் மூலனுடைய மனைவி அவரை நெருங்கியபோது, அவளுடன் தமக்கு எத்தகைய உறவும் இல்லை என்று தெரிவித்துவிட்டு, அந்த ஊரில் இருந்த ஒரு பொது மடத்தில் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார். யோகம் கலைந்து எழுந்த திருமூலர், முதல்நாள் பசுக்கள் இருந்த இடத்தில் தமது உடம்பை மறைத்து வைத்த பகுதியை அடைந்து, தம் உடம்பைத் தேடினார். வைத்த இடத்தில் உடம்பு காணப்படவில்லை!
அது சிவபெருமானின் திருவருட் செயலே என்பதை உணர்ந்த திருமூலர், திவாவடுதுறை திருக்கோயிலில் அமர்ந்தார். அங்கு அவர் ஒரு வருடத்திற்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் வருடங்கள் சிவயோகத்தில் அமர்ந்து இருந்து, மூவாயிரம் திருப்பாடல்களைப் பாடி அருளினார். அந்த அரிய அருள் நூலுக்குத் திருமந்திர மாலை என்ற பெயரைத் திருமூலர் சூட்டினார். அதுவே திருமந்திரம் என்று விளங்குகிறது.
பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாகத் திருமந்திரம் விளங்குகின்றது.

சிவானந்தக் கூத்து
திருமூலர் தில்லையில் நடராசப் பெருமானின் திருக்கூத்து தரிசனம் கண்டு இந்த உலகில் நெடுங்காலம் வாழ்ந்தார். பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் ஆகியோரும் திருக்கூத்து தரிசனம் அனுபவித்தவர்கள்.
சிவபெருமான் நிகழ்த்தி அருளி உள்ள திருக்கூத்து பல வகைகள் அமைந்ததாக விளங்குகிறது. எனினும் சிவானந்தக் கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்று ஐந்து வகைகளாக அதனை திருமூலர் விவரிக்கின்றார்.
பலவாகிய கூத்துகளை இயற்றுகின்ற சிவபெருமானது ஆற்றலை யாராலும் அளவிட முடியாது. எனினும் என்னால் இயன்ற வகையில் தொகுத்துக் கூறுகிறேன் என்று திருமூலர் தொடங்குகிறார். சிவானந்தக் கூத்து என்பது ஆன்ம அறிவைக் கடந்து நிற்க பராசக்தியிடமாக நிகழ்ந்து அளவில்லாத மகிழ்ச்சி வெள்ளத்தை அளிக்கும் கூத்து என்று திருமூலர் தெரிவிக்கிறார். சிவானந்தக் கூத்து எல்லாவற்றுக்குமே ஆனந்தமாய் விளங்கும்.
“ஆனந்தம்; ஆடரங்கு ஆனந்தம்; பாடல்கள் ஆனந்தம்; பல் இயம் ஆனந்த வாச்சியம் ஆனந்தம்; ஆக அகில சராசரம் ஆனந்தம்; ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே’ என்ற திருப்பாடல் சிவபெருமானின் இந்தக் கூத்து அனைத்துக்கும் இன்பம் தரும் என்று தெரிவிக்கிறது.
அடுத்தது, சுந்தரக் கூத்து. இது ஐந்தொழில் பற்றிய கூத்து என்று திருமூலர் தெரிவிக்கின்றார். வகைவகையாகச் சொல்லப்படுகின்ற எல்லாப் பொருள்களும் இறைவனின் சுந்தரக் கூத்துள் அடங்கும் என்பது தொகுத்துச் சொல்லப்படுகிறது.
தேவதாரு வனம், தில்லைவனம், திவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் கொடுகொட்டி பாண்டரங்கம், காபாலம் ஆகிய சங்காரக் கூத்துகளையும், அஷ்ட மூர்த்தத்தில் நின்ற அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்துகளையும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களுக்கான ஐந்து கூத்துகளையும், சுழுமுனை நாடியில் அறியப் படுகின்ற ஆறு ஆதாரங்களுக்கான ஆறு கூத்துகளையும் உறுதியாக ஆடி அருளுகிறார் என்று பொற்பதிக் கூத்து முதல் திருப்பாடலில் திருமூலர் தெரிவிக்கின்றார்.

பொற்றில்லைக் கூத்து
சிவபெருமான் எல்லாவகையான கூத்துக்களையும் உருவத்திருமேனி கொண்டு பல தலங்களில் ஆடுவதே பொற்பதிக் கூத்து என்று உணர்த்தப்படுகிறது. பொன் என்ற சொல் தெய்வத் தன்மையைக் குறிக்கும். பொற்பதி என்ற தொடர் தெய்வத் தன்மையுடைய தலங்கள் என்று பொருள்.
பொற்பதிக் கூத்து என்ற பகுதியில்தான், சிவபெருமான் நிலம், நீர், அக்னி, காற்று, வெளி(வான்) ஆகிய பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் எவரும் அறியாத வண்ணம் திருநடனம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பொற்பதிகளில் மிகவும் சிறப்பானதாக விளங்குவது தில்லை. அதுவே சிதம்பரம். அதுவே பொன்னம்பலம். பொற்பதிகளுள் தலையாயது என்பதால், பொற்றில்லைக் கூத்து என்று திருமூலர் அதை வேறாக வைத்தார்.
தில்லைத் திருக்கோயிலில் உள்ள திருவலம்பலத்தில் சிவபெருமான் நிகழ்த்துகின்ற கூத்தே பொற்றில்லைக் கூத்து என்று திருமூலர் வலியுறுத்திக் குறிப்பிடுகிறார்.
சிவபெருமான் ஆடுகின்ற போது, அவருடன் ஆடுகின்றவை பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி, அவர் நாதாந்தத்தைக் கடந்து நிகழ்த்தும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடிய நிகழ்த்துகிறார்.
சிவபெருமான் திலலை அம்பலத்தில் நிகழ்த்துகின்ற தலைமை வாய்ந்த நடனம் அண்டசரா சரங்களுக்கு மான நடனம் ஆகும் என்று தில்லை திருகூத்தின் தலைமைச் சிறப்பையும், ஒப்பற்ற பயனையும் திருமூலர் மகிழ்ச்சியுடன் விவரிக்கின்றார்.
எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு விவரித்தாலும் தில்லைத் திருக்கூத்தின் பெருமையை முழுமையாக விவரிக்க இயலாது என்று நிறைவாகத் திருமூலர் தெரிவிக்கின்றார்.
இதுவரையில் சொல்லப்பட்ட நான்கு வகைக் கூத்துகளுமே அற்புதக் கூத்து என்று, அற்புதக்கூத்து பற்றி விவரிக்கையில் திருமூலர் மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் கூறுகின்றார்.
அற்புதம் என்றால் அதிசயம் என்று பொருள். ஒவ்வொரு கூத்தும் ஒவ்வோர் அதிசயம். சிவபெருமானைத் திருக்கூத்து நிகழ்த்தும் நிலையில் தரிசிப்பது எல்லாவகை தரிசனங்களுக்கும் உரிய பலனைத் தரும் என்றும் இந்த அற்புதக் கூத்து பகுதியில் திருமூலர் அறிவுறுத்துகின்றார்.
சிவபெருமான் எங்கும் திருநடனம் ஆடுகின்றார். பிரபஞ்சமே அவர் ஆடுகின்ற களம்; பிரபஞ்சமாகவே அவர் ஆடுகின்றார்.
எனினும் அவர் மிகவும் விரும்பி ஆடுகின்ற இடம் தில்லைச் சிற்றம்பலமே. இதனை எல்லோரும் உணர வேண்டும் என்பது திருமூலர் திருவாக்கு.
“நம் பெருமான், உகந்து ஆடும் இடம் திருஅம்பலந் தானே’ என்ற வரியில் இந்த உண்மையை அவர் வெளிப்படுத்துகின்றார்.
பொற்பதிகளிலும் பொற்றில்லையிலும் ஆடுகின்ற சிவபெருமான் அகண்ட வியாபகனாய் நிற்கும் அற்புதத்தைச் சிந்தித்து உணருங்கள்; அவர் மட்டும் தனியே நின்று ஆடவில்லை; உமையம்மை ஒருகால் நிற்கக் கொண்டு, அவர் காணவே ஆடுகின்றார். எனவேதான் அவரது கூத்து ஆனந்தமயமாகவும், ஞானமயமாயும் விளங்குகிறது. சிவபெருமானும் உமாதேவியும் ஒருவரே இருவராய் நின்று ஆடுகிறார்கள். அவர்கள் தமக்காக ஆடவில்லை; அகிலசராசரங்களின் நலனுக்காக ஆடுகிறார்கள்.
அளவிடமுடியாது பெருமையை உடையவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்று சிவபெருமானின் திருவாக்கினாலேயே புகழப் பெற்றார்கள் என்று, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவித்திருக்கிறேன் அல்லவா? அவர்களுள் ஒருவர் திருமூலர். அவர் இறைவனின் அற்புதக் கூத்துகளை வியந்து விவரித்திருக்கிறார்.
விஷ்ணு பகவான் தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக தச அவதாரங்களை எடுத்து அருளினார். அவற்றிலே கிருஷ்ண அவதாரத்தில் பல வகை அற்புத நடனங்களை அவர் நிகழ்த்தினார்.

Comments