அன்னை வரம் கேட்ட பிள்ளை

எப்பொழுதும் ஆற்றங்கரைக்கு தனியாகத்தான் செல்வாள் அந்த ரிஷி பத்தினி.
தன் கணவரின் அதிகாலை நியமநிஷ்டைகளுக்காகத் தண்ணீர் எடுத்து வரச் செல்லும் அவள், குடம்கூட கொண்டு செல்ல மாட்டாள்.
தினமும் ஒரு புதுக்குடத்தை, ஆற்றுமணலால் உருவாக்குவாள். பதிவிரதையின் சொல்லுக்கு பஞ்ச பூதங்களும் கட்டுப்படுமே..! அதனால் மண், தானே குழைந்து குடமாகி நிற்கும். அதில்தான் நீர் எடுத்து வருவாள்.
தினமும் ஒரே மாதிரி நடந்துவிட்டால், அப்புறம் விதிக்கு என்ன வேலை? ரொம் காலமாகவே சரியாக சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த விதி ஒருநாள், தன் கோர உருவத்துடன் அவளைப் பின் தொடர்ந்து சென்றது.
அதை அறியாத முனி பத்தினி, வழக்கம் போல் நியம நிஷ்டைகளைச் செய்து முடித்தாள். பின்னர் குடம் செய்வதற்காக ஆற்று மண்ணில் கைவைத்தாள்.
அதேசமயம், ஆற்று நீரில் விழுந்தது ஒரு பிம்பம். அது ஆகாயத்தில் பறந்தபடியே காதல் செய்து கொண்டிருந்த ஆணும் பெண்ணுமான இரு கந்தர்வர்களின் நிழல்.
நிழல், நிஜத்தை மறைக்க நினைவில் கொஞ்சம் தடுமாறினாள் அந்தப் பத்தினி. அண்ணாந்து நோக்கி கந்தர்வ தம்பதியின் லீலைகளைக் கண்டவள், தானும் தன் கணவரும் இருந்த ஏகாந்த நிலையை எண்ணி ஒரு சில வினாடிகள் தன்னிலை மறந்தாள்.
சட்டெனத் தவறு உணர்ந்தவள், பானை செய்யும் வேலையைத் தொடர, ஊஹூம் பானை உருவாகாமல் மண்ணாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் முடியாமல்போகவே, பயத்தோடு ஆசிரமம் திரும்பினாள்.
வெறும் கையுடன் திரும்பும் மனைவியைப் பார்த்ததுமே, நடந்த அனைத்தையும் ஞான திருஷ்டியில் அறிந்தார் முனிவர்.
சினத்தோடு தன் மகன்களை அழைத்தார். “தாயின் தலையைக் கொய்து வாருங்கள்!’ என ஆணையிட்டார். மறுத்த மகன்கள் சாம்பலாக கடைசி மகன், அப்பாவின் வார்த்தையை அமலாக்கி, அதற்கு வரமாக அன்னையையும் அண்ணன்களையும் கேட்டான்.
தந்தை வரம் தந்தார். மகன் அவசரத்தில் தாயின் தலையை அவளுக்குத் துணை நின்ற பெண்ணின் உடலோடு பொருத்திவிட, மாறிய தலையோடு உயிர்தெழுந்த அந்தத் தாய் இந்தப் பிரபஞ்சத்துக்கே அன்னையானாள்.
அந்த மகன், திருமாலின் அவதாரமான பரசுராமர். தாய் ரேணுகா, தந்தை ஜமதக்னி முனிவர் என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும் தானே..!
ரேணுகாதேவி உயிர்த்தெழுந்த இடத்திலேயே கோயில் கொண்டாள் என்றும்; அந்த இடத்தில் அவளது பெயர் எல்லம்மா என்றும் சொல்கிறார்கள் வடகர்நாடகாவில் உள்ள பக்தர்கள். அன்னையின் கோயில் இருப்பதும் அங்கே தான். வட கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள சௌதத்தியில்.
வண்ணமயமான கோயில். நெருங்கும்போதே மஞ்சள், குங்கும மணம் நாசியில் நுழைந்து மனதை நெகிழச் செய்கிறது. இங்குள்ள கடைகளில் எல்லா நாளிலுமே மஞ்சளும் குங்குமமும் ஏராளமாக விற்பனை ஆகிறது. காரணம், ரேணுகாதேவிக்கு அவற்றை அர்ப்பணித்து வேண்டினால், எல்லா நலனும் வளமும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடக்கும் திருவிழாவை ஜாத்ரா என்கிறார்கள். அன்றைய தினம், லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகிறார்கள். ஏராளமான பக்தர்கள் இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்து, பச்சை ஆடை அணிந்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் தேவதாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோயில், இப்போது அறநிலையத்துறை வசம் உள்ளது.
அக்காலத்தில், ஜாத்ராவின்போது பெண் குழந்தைகளை கோயிலுக்கு தானமாக நேர்ந்து விடும் வழக்கம் இருந்ததாம். அந்தப் பழக்கம், அரசால் தடை செய்யப்பட்டு விட்டது.
தாயால் மகன் பிறப்பான்; ஆனால் மகன் கேட்ட வரத்தால் பிறந்த இந்த அன்னையை தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

Comments