ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்’

பசு, இந்தியப் பண்பாட்டின் சின்னமாக விளங்குகிறது. கோமாதா என்ற பெயர் அகில இந்திய அளவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் புனிதமானதாகச் சொல்லப்பட்டு வருகிறது.
பசு-ஏகாதச ருத்ரர்களுக்குத் தாய்; அஷ்ட வசுக்களுக்கு மகள்; பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கு சகோதரி.
சாது என்ற சொல்லுக்கு ஓர் இலக்கணமாக பசு திகழ்கிறது. விலங்குகளில் பசுவின் சாதுத்தன்மை மிகவும் பிரசித்தம்.
பசு நமக்குப் பல பொருள்களைச் சலிப்பில்லாமல் அளிக்கிறது. பசு வழங்குகின்ற பொருள்கள் அனைத்தும் கடவுளை பக்தி செய்வதற்கும், தெய்வ காரியங்களுக்கும் உபயோகமாகின்றன.
மனிதனுக்குப் பயன்படாத வைக்கோல், தவிடு முதலியவற்றைத் தனது ஆகாரமாக ஏற்று, அவற்றுக்கு பதிலாக மனிதனுக்கு மிகவும் அவசியமான பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களைப் பசு அளிக்கிறது.
இந்து சமயத்தில் பசு தெய்வமாகவே வழிபடப்படுகிறது. இதிஹாசங்கள், புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவை பசு மிகவும் புனிதமானது என்று பேசுகின்றன.
இந்து ஆலயங்களிலும், திருமடங்களிலும், ஆசிரமங்களிலும் பல நூறு ஆண்டுகளாக தினசரி கோ பூஜை நடைபெற்று வருகிறது. முதலில் பசு நீராட்டப்படுகிறது; அதன் உடலின் முக்கியமான பகுதிகளில் மஞ்சள் மற்றும் குங்குமம் இடப்படுகின்றது. கொம்புகளில் பூ சுத்தப்பட்டு, கழுத்தில் சூட்டப்படுகின்றன. அதன்பின்னர் நைவேத்தியம் அளிக்கப்படுகிறது; பசு அதை உண்ணுகிறது. பிறகு தூப, தீபம் காட்டப்பட்டு, நிறைவாக கற்பூரம் ஏற்றப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு பூஜை முடிந்ததும், பூஜை செய்பவர்கள் பசுவை பக்தியுடன் வலம் வருகிறார்கள். அதன் வால்பகுதியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள்.
ஸ்நானத்திற்கு உகந்தது
பசுவே தெய்வம் என்று மக்கள் போற்றுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. பசு அளிக்கின்ற பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் ஆகியவற்றைக் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கிறார்கள். பஞ்சகவ்யம் மிகவும் புனிதமானது. முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானுக்கு இது மிகவும் உகந்தது.
தமிழக சைவ சமயாசாரியர் தலைவராகிய திருஞானசம்பந்தர் திருமங்கலக்குடி என்ற திருத்தலத்தை அடைந்து, அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பாடினார். அந்தத் திருப்பதிகத்தின் ஐந்தாவது திருப்பாடலில் பஞ்சகவ்யம் பற்றி அவர் குறிப்பிட்டார்.
“ஆனில் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி’ என்ற அந்தத் திருப்பாடலின் முதல் அடியில், “பசுவினிடத்து உண்டாகும் பாங், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் ஆகிய ஐந்து தூய பொருட்கள் அடங்கிய பஞ்சகவ்யத்தில் மூழ்கி’ என்று சொல்லப்படுகிறது.
சிவபெருமான் பசு அளிக்கும் பஞ்சகவ்யத்தில் நீராடி மகிழ்வார் என்ற சம்பந்தர் இங்கே தெரிவிக்கின்றார்.
சம்பந்தருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவர், திருநாவுக்கரசர். பல அரிய திருப்பதிகங்களை அவர் அருளியிருக்கிறார். அவற்றில் பஞ்சகவ்யம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு சிலவற்றை மட்டும் இங்கே தெரிவிக்கிறேன்.
சம்பந்தருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுபவர், திருநாவுக்கரசர். பல அரிய திருப்பதிகங்களை அவர் அருளியிருக்கிறார். அவற்றில் பஞ்சகவ்யம் பற்றிய குறிப்புகளைக் கொண்ட சிலவற்றை மட்டும் இங்கே தெரிவிக்கிறேன்.
சமய உண்மைகளை உணர்ந்து, சைவ நெறியில் தம்மை இணைத்துக் கொண்டு திருநாவுக்கரசரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கொடிய சமணர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை முயன்றார்கள்.
நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் வீசி எறிந்தார்கள். நாவுக்கரசர் சிவபெருமானைப் பாடி அந்தக் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.
அப்போது அவர் பாடியது, நமச்சிவாயத் திருப்பதிகம் என்று போற்றப்படுகிறது. அந்தத் திருப்பதிகம் “சொற்றுணை வேதியன் சோதி வானவன்’ என்ற முதல் அடியைக் கொண்ட முதலாவது திருப்பாடலுடன் தொடங்குகிறது.
இன்றைக்கும், ஆபத்துக் காலத்தில் இந்தத் திருப்பதிகத்தைப் பாடினால் ஆபத்து உடனடியாக நீங்கும்.
இந்தத் திருப்பதிகத்தின் இரண்டாவது திருப்பாடலில் “ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்’ என்ற சொற்கள் உள்ளன.
“பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம், சிவபெருமான் அபிஷேகத்திற்குப் பஞ்சகவ்யம் அளித்தல்’ என்று இந்தச் சொற்களுக்குப் பொருள்.

பசு இறைவனே
திருநாவுக்கரசர் திருவையாறு திருப்பதிகத்தில் இறைவனது அரிய குணங்கள், அருட்செயல்கள் என்பனவற்றை மிக அருமையாகப் பட்டியலிட்டுப் பாடியிருக்கிறார். இறைவன் அனைத்துமாக விளங்குபவர் என்ற பேருண்மையை இந்தத் திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலும் எடுத்துச் சொல்கிறது.
இந்தத் திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலின் முதல் அடி, “ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே!’ என்பது ஆகும்.
“திருவையாறு திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், பசு வழங்குகின்ற பஞ்சகவ்ய அபிஷேகத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்பவராகத் திகழ்கிறார்’ என்று இந்த அடிக்குப் பொருள்.
இறைவன் பிரபஞ்சமாய் நிற்கும் நிலையை வகுத்துக் கூறுவது திருத்தாண்டகத் திருப்பதிகம். இறைவன் நின்ற நிலையை எடுத்துச் சொல்லுவதால், நின்ற திருத்தாண்டகம் என்ற பெயர் அமைகிறது.
அப்பர் பெருமான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தில் எட்டாவது பாடல் வருமாறு:
ஆவாகி, ஆவினில் ஐந்துமாகி,
அறிவாகி, அழலாகி, அவியுமாகி,
நாவாகி, நாவுக்கோர் உரையுமாகி,
நாதனாய் வேதத்தினுள்ளோனாகிப்,
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்,
புக்குகளால் வாசமாய் நின்றானாகித்,
தேவாதி தேவர் முதலுமாகிச்,
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே.
இறைவன் பசுவாகவும், பசு அளிக்கும் ஐந்து பொருள்களாகவும் (பஞ்ச கவ்யம்), யாகத்திற்குரிய அறிவாகவும், யாக அக்னியாகவும், ஹவிஸாகவும், நாவாகவும், நாவுக்கு ஏற்ற உரையாகவும், நாதனாகவும், வேதத்தின் அர்த்தமாகவும், மலராகவும், மலரின் வாசனையாகவும், தேவராகவும், தேவர்களின் தலைவராகவும், செழுஞ்சுடராகவும் பரவி நிற்கின்றார் என்று இந்தத் திருப்பாடலில் திருநாவுக்கரசர் அருளியிருக்கின்றார்.
கடவுளே பசுவாகவும், பசுவின் பஞ்சகவ்யமாகவும் திகழ்கின்றார் என்ற விளக்கத்தை கவனியுங்கள்.
மூன்றாவது சைவசமயாசிரியராகிய சுந்தரரும் பசு வழங்கும் பஞ்சகவ்யம் பற்றிப் பாடி அருளியிருக்கின்றார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநனிபள்ளி என்ற திருத்தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கி ஒரு திருப்பதிகம் பாடி அருளினார்.
திபருநனிபள்ளி திபருப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாடலில், “ஆனிடை ஐந்து அமர்ந்தான்’ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
“பசுவினிடம் தோன்றுகின்ற ஐந்து பொருள்களாகிய பஞ்சகவ்யத்தை விரும்புபவர் சிவபெருமான்’ என்று இந்தச் சொற்களில் சுந்தரர் பக்தியுடன் தெரிவிக்கின்றார்.

திருநீற்றின் சிறப்பு
சைவ நெறியில் திருநீறும், வைணவ நெறியில் திருநாமமும் மிகவும் இன்றியமையாத புறச் சின்னங்கள். விபூதி பூசாதவன் சைவனே அல்லன் என்பது சைவ ஆசாரியர்களின் திடமான கொள்கை.
மிக முக்கியமான சமயச் சின்னமாகிய திருநீறு தயாரிக்க உரிய மூலப்பொருளைப் பசு வழங்குகிறது. திருஞானசம்பந்தர் இதனை ஒரு திருப்பாடலில் தெரிவித்து அருளி இருக்கிறார்.
திருத்தருமபுரத்தை வழிபட்டுத் திருநள்ளாறு சென்று அடைந்தார், அவர். அங்கு இறைவனை வணங்கிப் “போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.
இது தமிழக சைவ சமய வரலாற்றில் தனிச் சிறப்புப் பெற்று விளங்கும் திருப்பதிகம் ஆகும்.
இந்த ஒப்பற்ற திபருப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாடல், “ஆன்முறையால் ஆற்ற வெண்ணீறு ஆடி’ என்ற சொற்களுடன் தொடங்குகிறது.
பசுவிடமிருந்து முறைப்படி எடுக்கப்பட்ட “திருவெண்ணீற்றை (விபூதியை) உடல் முழுவதும் பூசி’ என்று இந்தச் சொற்களுக்கு அர்த்தம்.
திருநீறு பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை எவரும் எப்படியாவது தயாரித்து விடலாம் என்று கருதக்கூடாது.
“ஆன்முறையால்’ என்ற சொற்களைக் கூர்ந்து கவனியுங்கள். பசுவின் சாணத்திலிருந்து விதிப்படி திருநீறு தயாரிக்கப்படுவதை இந்தச் சொற்கள் உணர்த்துகின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற புனிதமான விபூதியை இறைவன் மிகவும் விரும்புகிறார். ஆற்ற ஆடி என்று கூட்டவேண்டும். அதாவது இறைவன் விபூதியை மிகவும் உகந்து மேனி முழுவதும் பூசிக் கொள்ளுகிறார் என்ற செய்தி இங்கே தரப்படுகிறது.
பசுவைப் போற்ற வேண்டும் வணங்க வேண்டும் என்று புறநானூறு, பட்டினப்பாலை ஆகிய மிகப் பழைய சங்க கால நூல்களும் வலியுறுத்துகின்றன.
திருவள்ளுவர் அருளிய திருக்குறளை எல்லோரும் போற்றுகிறார்கள். அவர் என்ன சொல்கிறார்?
“ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுமானால், அங்கு அந்தணர்கள் வேதங்களை ஓதுகின்ற புனிதமான தொழிலை மறந்துவிடுவார்கள்; பசுக்கள் பால் தருவது குறைந்து போகும்’ இந்தச் செய்தியை “ஆ பயன குன்றும் ஆறு தொழிலோர் நூல் மறப்பர், காவலன் காவான் எனின்’ என்ற குறட்பாவில் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.
நமது பண்பாட்டின் தூய சின்னமாகிய பசு செழிப்பாக வாழ்ந்து, மக்களுக்கு உபயோகமான பொருள்களைத் தர வேண்டுமானால், நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். இது, திருவள்ளுவர் தந்துள்ள தீர்ப்பு!

Comments

Post a Comment