யாத்திரைக்கு போகலாமா?

தலம், தீர்த்தம், மூர்த்தி இவை மூன்றும் பொருந்தி இருக்கும் இடத்தைப் புண்ணிய தலம் என்கிறார்கள். ஒரு புண்ணிய தலத்திற்கு யாத்திரை போகிறவர்கள் கடவுளுடைய திருநாமங்களை சொல்லிக் கொண்டும், புண்ணியக் கதைகளை கேட்டுக் கொண்டும் போவார்கள்.
தகாத உணவு வகைகளைத் தவிர்த்து, புலன்களை தீய வழியில் செல்லாமல் அடக்கி நடப்பார்கள்.
ராமனை கைகேயி பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்போது அவள் ராமனை நோக்கி, “நீ நீண்ட சடைகளைத் தாங்கி, மரவுரி தரித்து, கடும் தவத்தை மேற்கொண்டு, புண்ணிய நீர்த் துறைகளில் எல்லாம் நீராடி, பதினான்கு ஆண்டுகளைக் கழித்த பின், இங்கே திரும்பி வா!’ என்று கூறியதாக ராமாயணம் சொலிறது.
புண்ணிய தலங்கள் இருக்கும் பகுதிக்கு ராமன் செல்லாமல், அந்த தலங்களுக்குத் தொலைவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பது கைகேயி பிறப்பித்த உத்தரவின் பொருள்.
ராமன், அவள் சொன்னபடியே செய்தார். வனத்தில் தம்பியுடன் இருந்த காலத்தில் கிஷ்கிந்தா நகருக்குப்போக வேண்டிய அவசியம் வந்தது. அப்போது ராமன், தானே அவ்விடத்திற்குப் போகாமல், தம்பி லட்சுமணனை அனுப்பினார். அவ்வாறே, ராமாயணப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்திரஜித் இலங்கையில் இருந்து கொண்டு “நிகும்பலை’ என்றொரு யாகத்தைச் செய்யலானான். அந்த யாகம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் ராவணனின் கை ஓங்கி விடும். எனவே அந்த யாகத்தைக் கலைக்க ராமன், தம்பி லட்சுமணனையே அனுப்பி வைத்தார்.
வனத்தில் இருந்த காலத்தில் ராமர் தீர்த்த யாத்திரையை மட்டுமே மேற்கொண்டார்.
யாத்திரை சென்ற காலத்தில் ராமன் விராதனையும், கரனையும் வாலியையும், மாரீசனையும், கும்பகர்ணனையும், ராவணனையும் கொன்றாரே என்று கேட்கலாம். அவை அறத்தை நிலை நிறுத்துவதற்காகச் செய்தவை. சொலை பாதகச் செயலல்ல. இருப்பினும் ராமர் அதையும் ஒரு பாவம் என்றே கருதி, பரிகாரமாக ராமேஸ்வரத்தில் ஒரு சிவலிங்கத்தை எழுப்பி, பூஜை செய்து வழிபட்டு மன ஆறுதலடைந்தார்.
மகாபாரதத்தில் ஒரு சம்பவம். பாண்டவர்கள் திரௌபதியை மணந்து, இந்திர பிரஸ்தத்தில் வசித்து வந்தார்கள். ஒரு நாள் இரவில் சில வேதியர்கள் அர்ஜுனனிடம் வந்து தங்கள் பசுக்களை வேடர்கள் கவர்ந்து சென்று விட்டதாக முறையிட்டார்கள்.
அர்ஜுனன் அவர்களுக்கு ஆறுதல்கூறி அனுப்பினான். வேடரை வென்று பசுக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவனுடைய ஆயுதங்கள் இருந்த அறையில் தருமபுத்திரரும் திரௌபதியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் துயில்வதை அறியாமல் அவசரமாய் அந்த அறைக்குள் அர்ஜுனன் நுழைந்தான். தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அறையை விட்டு நீங்கும் சமயத்தில்தான், அவர்கள் அங்கு தூங்குவதை கண்டான். காலம் கடத்தாமல் அவன் வேடருடன் போரிட்டு, பசுக்களை மீட்டு அந்தணர்களிடம் தந்தான்.
அன்று இரவில், தான் செய்த பிழையை அண்ணனிடமும் பெரியோர்களிடமும் கூறி, இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டான். “பாரத தேசம் முழுவதும் நீ ஓராண்டு யாத்திரை செய்து வந்தால், இந்த பாவம் தொலையும்’ என்று பெரியோர் கூறினர்.
அதன்படி அர்ஜுனன் பல புண்ணிய தலங்களுக்குச் சென்றான். தீர்த்தங்களில் நீராடினான். தெற்கே தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் முதலிய தலங்களை தரிசித்துவிட்டு, மேற்குக் கரையோரமாகச் சென்றான். முடிவில் துவாரகையில் தங்கி, கிருஷ்ண பகவானைக் கண்டு வணங்கி, தன் யாத்திரையை அந்த ஊரிலேயே முடித்துக் கொண்டான்.
யாத்திரை சென்றதால் அவன் மனம் சிவபக்தியில் ஆழ்ந்தது. கண்ணபிரானை நண்பனாகவும் குருவாகவும் ஏற்றான். யாத்திரை செய்த புண்ணியத்தால் அவன் தவம் பலித்தது. பிற்காலத்தில் சிவபிரானிடத்தில் பாசுபதம் என்கிற அஸ்திரத்தையும் பெற்றான். பாரத வீரர்களுள் மிகச் சிறந்தவனாக அவன் விளங்கியது அவன் யாத்திரையை செய்ததன் புனித பலனே என்பர்.

Comments