விநாயகர் சதுர்த்தி - பிள்ளையார் பூஜை!

முழுமுதற் கடவுளான விநாயகரை எளிமையாக பூஜிப்பது எப்படி? தெரிந்துகொள்ளுங்களேன்!
ஆவணி மாதம் வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி தினமே பிள்ளையார் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பார்வதியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது.
அன்றையதினம் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு தலைவாழை இலை ஒன்றைப் போடுங்கள்.... இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்கட்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள். அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றை சாத்துங்கள். சந்தனம், குங்குமம் இடுங்கள். விளக்கேற்றி வைத்து, ஊதுபத்தியைக் கமழச் செய்யுங்கள். உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொன்னபடியே வசதிக்கு ஏற்ற நிவேதனப் பலகாரங்களைச் செய்யுங்கள். பலகாரங்கள் தவிர, அவல், பொரி, கடலை, தேங்காய், விளாம்பழம், நாவற்பழம் போன்றவையும் விநாயகருக்கு விருப்பமானவைதான்.
நல்ல நேரத்தில் பிள்ளையாருக்கு தூப, தீபம் காட்டி, தெரிந்த துதிகளைச் சொல்லி பூஜித்து நிவேதனம் செய்யுங்கள். பிள்ளையாரின் பதினாறு பெயர்களைச் சொல்லித் துதித்தாலே போதும். பதினாறு பேறுகளும் கிட்டும் என்பது ஐதிகம்.
01. ஓம் சுமுகாய நம.
02. ஓம் ஏகதந்தாய நம.
03. ஓம் கபிலாய நம.
04. ஓம் கஜகர்ணகாய நம.
05. ஓம் லம்போதராய நம.
06. ஓம் விநாயகாய நம.
07. ஓம் விக்னராஜாய நம.
08. ஓம் கணாதிபதயே நம.
09. ஓம் தூமகேதுவே நம.
10. ஓம் கணாத் யட்சாய நம.
11. ஓம் பாலசந்திராய நம.
12. ஓம் கஜானனாய நம.
13. ஓம் வக்ரதுண்டாய நம.
14. ஓம் சூர்ப்பகன்னாய நம.
15. ஓம் ஹேரம்பாய நம.
16. ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம.
இந்தப் பெயர்களைச் சொல்லித் துதியுங்கள். அன்று இரவு அவசியம் சந்திரனைப் பாருங்கள். சதுர்த்தி நாட்களில் நிலவைப் பார்ப்பது கூடாது என்பார்கள். ஆனால் பிள்ளையார் சதுர்த்தியன்று மட்டும் அதில் விதிவிலக்கு உண்டு. அன்றைய தினம் சந்திரனைப் பார்த்தால்தான் விநாயகர் வழிபாட்டின் பூரணபலன் கிட்டும் என்கிறது பார்க்கவ புராணம். தும்பிக்கையானை நம்பிக்கையுடன் துதியுங்கள். அவன், நீங்கள் வேண்டுவன யாவும் கிட்டச் செய்வான்.

Comments