மதுரை - வெற்றிலைத் திருவிழா

கிராமத்தில்தான் சாதி, மத மோதல்கள் அதிகம் என்று சொல்வதுண்டு. அப்படியிருக்கையில் மதுரையில் இரு கிராமங்களில் சாதி, மத ஒற்றுமைக்காக ஒரு விழாவே எடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம்.
“வெற்றிலை பிரி திருவிழா’ என்றழைக்கப்படும் இவ்விழாவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், வெற்றிலையின் மகத்துவங்களையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
வெற்றிலைக்கு ஆன்மிகத்தில் அதிக இடமுண்டு. கம்பராமாயணத்தில் ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை, “இளம் வெற்றிலையை யார் மடித்துக் கொடுக்க ராமன் உண்பான்’ என்று வருந்தியதாக ஒரு காட்சி உண்டு.
தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது, முதல் தாம்பூலத்தை கண்ணன் பெற்றுக்கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது.
திவ்ய பிரபந்தத்தில், “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான்’ என்று கண்களில் நீர்மல்கி மனம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.
கடவுளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. இந்துமதப் பண்டிகைகள், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன வடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதிகம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை என்பர்.
திருமணம் நிச்சயமாவதை நிச்சய தாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலை பாக்கு கொடுத்து விட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறித் துணிய மாட்டார்கள். இவையெல்லாம் வெற்றிலை குறித்த ஆன்மிக நம்பிக்கைகள்.
வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்குத் தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. எனவேதான், சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. இது வெற்றிலையின் மருத்துவக் குணம்.
ஆன்மிகம், மருத்தவக் குணங்களைக் கடந்து, “வெற்றிலைப் பிரி திருவிழா’ என்பதன் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒற்றுமைக்கும் வழி வகுக்கிறது, வெற்றிலை.
அது என்ன விழா, எதற்காக நடத்துகிறார்கள்?
மேலூர் அருகேயுள்ளது தும்பைப்பட்டி. இது தியாகி கக்கன் பிறந்த ஊர். பல்வேறு சாதியினர், மதத்தினர் வாழும் கிராமம். இந்த ஊராட்சியில் வாழும் மக்கள் “நாங்கள் சாதி, மத வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்பதை சித்திரை முதல்நாள் வெற்றிலை கொடுத்து, கொண்டாடுவதன் மூலம் நிரூபிக்கிறார்கள்.
சித்திரை முதல் நாளில் தும்பைப் பட்டி ஊராட்சியில் தெற்குவளவு மந்தையில் கிராம அம்பலக்காரர்கள் தலைமையில் அனைத்து சாதி, மத மக்கள் கூடினர். அனைத்து சாதிகளின் பிரதிநிதிகளும் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்கப்பட்டனர். பின் ஊர் கணக்குப்பிள்ளை, மேலூர், கீழையூர், பூதமங்கலம் ஊர் மக்களை அழைத்தார். அவர்களில் பல்வேறு சாதியினர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களுக்கு தும்பைப்பட்டி பள்ளிவாசல் பொறுப்பில் உள்ள முஸ்லிம் பிரமுகர் வெற்றிலை பாக்குகளை வழங்கினார். “வெற்றிலை பிரி திருவிழா’ என அழைக்கப்படும் இந்த நடைமுறையானது எண்ணூறு ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம். இஸ்லாமிய பள்ளி வாசல் சார்பில் வழங்கப்படும் வெற்றிலையை, இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினருக்கும் பிரித்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
“ஆண்டு முழுவதும் அனைத்து சமூதாயத்தினரும் ஒற்றுமையுடன், சிறப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இதில் ஆன்மிகமும் இருக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அக்கறையும் இருக்கிறது’ என்கிறார்கள் தும்பைப்பட்டி கிராம மக்கள்.
அதுபோல “வெள்ளலூரிலும் “வெற்றிலை பிரி திருவிழா’ நடைபெற்றது. மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டது வெள்ளலூர் நாடு. இதில் வெள்ளநூர், அம்பலக்காரன்பட்டி, உறங்கான்பட்டி, மலம்பட்டி மற்றும் குறிச்சிபட்டி ஆகிய பகுதிகளை ஐந்து மாகாணங்கள் எனக் குறிப்பிடுவர். இந்த மாகாணங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சித்திரை முதல்நாள் அன்று வெள்ளலூர் மந்தைக் கருப்பணசாமி கோயிலில் அம்பலக்காரர்கள் கூடினர். சும்மா நூற்றைம்பது கிலோ எடை உள்ள வெற்றிலைக் கட்டுகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இது பிரிக்கப்பட்டு, விவசாயப் பணிக்காக கால்நடைகளைப் பராமரிக்கும் யாதவ இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் வழங்கினார் பெரிய அம்பலக்காரர். பின்னர் விவசாயக் கருவிகளை உருவாக்கும் விஸ்வகர்மா சாதியினருக்கு வெற்றிலை வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பதினொரு அம்பலக்காரர்களுக்கு வெற்றிலை வழங்கப்பட்டது. பின்னர் வெள்ளலூரைச் சேர்ந்த திருமணமான குடும்பத்தினரை அழைத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கு வெற்றிலை, ஒரு பாக்கு வீதம் வழங்கப்பட்டது.
அம்பலக்காரர்கள் இங்கு பெற்றுக் கொண்ட வெற்றிலை பாக்கை, தங்கள் பகுதியில் உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று அந்தக் கிராமங்களில் உள்ள இருபதாயிரம் குடும்பங்களுக்கும் கொடுத்தனர். இவற்றைப் பெற்றுக் கொண்ட மக்கள், தங்கள் வீடுகளில் நாழியில் உள்ள புது நெல்லருகில் கலப்பை வைத்து சாமி கும்பிட்டனர். உழவு மாடுகளுக்கும் பூஜை செய்தனர். பின்னர் சேர்த்து வைக்கப்பட்ட மாட்டுச் சாணங்களை வயல்வெளிக்குக் கொண்டு சென்று கொட்டி, இந்த ஆண்டு விவசாயத்திற்கான புதிய பணிகளைத் துவங்கினர்.
மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு நல்லதல்ல என்கிறார்கள். வெற்றிலை பாக்கை எப்போது வலது கையால்தான் வாங்கவேண்டும். மங்களம், மகிமை, சுபிட்சம் இவற்றுக்கு மேலாக ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்றால் இந்த வெற்றிலை சாதாரண இலை அல்ல.. வெற்றி இலை!’

Comments