காஞ்சி காமாட்சி ஆதி காமாட்சி மகா காளேசுவரர்

புனித பாரதத்தின் ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள் ஒன்றாக காமராஜபீடம் என்றும்; காமகோடி பீடம் எனவும் போற்றப்படுவதே காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயில்.
அருட்பார்வையினால் அண்டிவரும் அடியார்களின் கோரிக்கைகளை ஈடேறச் செய்து அருள்பவளாக, அகிலத்திற்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவளே அன்னை காமாட்சி. தாயின் உள்ளம் கருணையின் பிறப்பிடம்; அதனால்தான் தனது குழந்தைகள் புரிந்திடும் தவறுகளையெல்லாம் மன்னித்து அவர்களைக் காத்தருள்கிறாள் அன்னை.
மகாலட்சுமியும் மகாசரஸ்வதியும் இருபுறம் நின்றுகொண்டு சாமரம் வீச, உபசாரம் செய்யும் நிலையில் கொலுவீற்றிருப்பவள் காமாட்சி. தனது வலது கண்ணால் நான்முகனுக்கும், இடது கண்ணால் நாராயணனுக்கும், கருணா கடாட்சத்தை அருளியவள். விருப்பங்களை அவள் நிறைவேற்றுவதால் “காமா-அட்சி’ என்று போற்றப்படுகிறாள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அருளுவதோடு நமது விருப்பத்தின் எல்லையாகிய மோட்சத்தையே எழுந்தருளி “காமகோடி காமாட்சி’ என்று போற்றப்படுகிறாள். உலகுக்கெல்லாம் தாய் என்பதால் சகல லோக ஜனனி என்றும்; பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதால் “பக்த சௌபாக்யதாயினி’ என்றும் போற்றப்படுகிறாள்.

பந்தகனை வதைத்து!
நான்முகனை நோக்கிக் கடும் தவமிருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றிருந்த பந்தகாசுரன், ஆணவ மிகுதியால் மூவுலகங்களையும் கைப்பற்றி அமரர்களுக்கும், முனிவர்களுக்கும் கடும் துன்பத்தை விளைவித்து வந்தான். அசுரனால் துரத்தப்பட்டவர்கள் அரனிடம் சரணடைந்தனர். நான்முகன் தந்த வரங்கள் பெற்ற அசுரனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்று கூறிய எம்பெருமான், கைலாசத்திற்கு வடக்கில் உள்ள “கோமுகி’ எனும் இடத்தில் உள்ள மாபிலத்தின் வழியே சென்று, காஞ்சி மகா÷க்ஷத்ரத்தை அடைந்து காமாட்சியை வழிபடுமாறு அறிவுறுத்தினார்.
“அரன்’ கூறிய அறிவுரையை ஏற்று தேவர்களும் காஞ்சியை அடைந்து, செண்பக மரத்தின் மீது கிளிகளாய் அமர்ந்து தேவியைத் துதித்தனர்.
அன்னையும் தேவர்களின் கோரிக்கையை ஏற்று, பதினெண் கரங்களுடன் பைரவியாகத் தோன்றி பந்தகாசுரனை சம்ஹாரம் செய்து, அவனது தலையை ஏந்திய கன்னித் தெய்வமாக, காமகோடி பீடத்தை அடைந்தாள்.

சின்னஞ்சிறுமியாக பட்டாடை உடுத்தியபடி!
சின்னஞ்சிறுமியாகத் தோன்றிய அன்னையின் கரத்தில் அசுரனின் தலை, குருதி சொட்டிடக் கண்டு தேவர்கள் மூர்ச்சையாயினர். அவர்கள்மீது கருணை கொண்ட அன்னை, சர்வாலங்கார பூஷிதையாக, பட்டாடை உடுத்தி சின்னஞ்சிறுமியாக, திவ்ய மங்கள ரூபிணியாகக் காட்சி தந்தாள். தேவர்கள் அவளை வணங்கி பலவாறு துதித்தனர்.
தேவர் உலகப் பெருந்தச்சன் விஸ்வகர்மா, ரத்ன சிம்மாசனம் அமைத்திட, பிரம்மா முத்துக் கொண்டையையும், நாராயணன் நவரத்ன கிரீடமும் தந்து, சிவபெருமான் ஸ்ரீசக்ரம் கொண்ட பதக்கத்தையும் அருளி அதே கோலத்தில் காஞ்சியிலேயே அமர்ந்தபடி, பூவுலகோர்க்கு அருள்பாலித்து வருமாறு கோரினார்.

மன்மதனின் கணைகளை ஏந்தி!
“ஸுமபாணேக்ஷû கோதண்ட மண்டிதா’ என்று போற்றப்படுபவள் காமாட்சி. மன்மதனின் மலர்கணைகளாக மல்லிகை, நிலோத்பலம், தாமரை, மா, அசோகம் ஆகிய ஐந்துவகை மலர் அம்புகளையும் கரும்பு வில்லையும் தனது கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறாள்.
காஞ்சிபுரத்தில் உள்ள அத்தனை திருக்கோயில்களுக்கும் மையமாக அமைந்துள்ள காமாட்சியம்மன் திருக்கோயில் தென்கிழக்கு திசைநோக்கிய சன்னதியைக் கொண்டுள்ளது. புரியாத புதிர். திருவாரூரில் கமலாம்பிகை சன்னதியும், வடமேற்கு திசையில், சற்றே விலகி நேராக இல்லாமல் அமைந்திருப்பது போல, காமாட்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். உற்சவ காலங்களில், காஞ்சிபுரத்துக் கோயில்களின் உற்சவத் திருமேனிகள் அத்தனையும், காமாட்சியம்மன் ஆலயத்தை வலம் வருவதும் வழக்கமாக உள்ளது.
முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரர் தியானத்தில் இருப்பது போன்ற சிலை வடிவம் உள்ளது. அடுத்து 24 தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபம். அதனைக் கடந்துதான் காமாட்சியம்மன் சன்னதியை அடைய வேண்டும். நான்கு கரங்களோடு, பாசம், அங்குசம் மற்றும் மலர்க் கணைகளை வலது கரத்திலும்; கரும்பு வில்லை இடது கரத்திலும் ஏந்தியபடி காட்சி தருகிறாள் அன்னை. காமாட்சியம்மனை மூலவராகவும், தவம் இருக்கும் கோலத்திலும், தேவர்களுக்கு காட்சி தந்த பிலாகாச காமாட்சியாகவும் காண முடிகிறது.
கிபருத யுகத்தில், துர்வாச முனிவர் இரண்டாயிரம் சுலோகங்களாலும் திரேதா யுகத்தில் பரசுராமர் 1500 சுலோகங்களாலும், துவாபர யுகத்தில் தௌம்ய முனிவர் ஆயிரம் சுலோகங்களாலும், கலியுகத்தில் மூகசங்கரர் ஐந்நூறு சுலோகங்களாலும் காமாட்சியை போற்றிப் பாடியுள்ளனர்.

மூகசங்கரர் யார்?
போஜராஜனுக்கும், காளிதாசனுக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதத்தில், காளியின் கோபத்துக்கு ஆளாகிய கவிஞர் காளிதாசன், மறுபிறவியில், வாய் பேசா ஊமையாக காஞ்சி மாநகரத்தில் பிறந்தான். பேச்சுத்திறனின்றி பிறந்த அவனை “மூகர்’ என்றே அழைத்தனர்.
ஸ்ரீவித்யா உபாசகரான அவனது தந்தை காமாட்சியை தியானித்தபடி இருந்த நேரத்தில், கன்னி உருவில் தோன்றினாள் அன்னை. அந்த அற்புதக்காட்சியை ஊமையாக இருந்த சிறுவனும் கண்டு வியந்தான். அந்த அழகினை வர்ணிக்க, அவனது முற்பிறவி உணர்வுகள் துடித்தன. இருப்பினும் தனது ஊமை மொழிகளால் “பே! பே!’ என்று உரக்கக் கத்தி சைகை காட்டினான். சிறுவனின் அலறலுக்குக் காரணம் அந்தக் கன்னியே என்று கருதி, அவனை அவ்விடத்தை விட்டு அகலுமாறு கூறினார் பெரியவர். அவர் அறியார் அவள் காமாட்சி அன்னையே என்று!
அவரது நிலை கண்டு புன்முறுவல் செய்தாள் அன்னை! அவளது திருவாயிலிருந்து தாம்பூலத்துளிகள் மூகன் மீது தெளித்து, அவன் வாயிலும் விழுந்தன! அன்னையின் கருணையால் கவிபாடும் திறமை மீண்டும் பெற்றான் மூகன்.
“மூக சங்கரர்’ எனும் துறவி 1600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சிறுவயதில் பேச்சாற்றல் இன்றி இருந்த அவரை, அவரது தாய் காமாட்சியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது, ஒருநாள் அன்னையின் அருளால், பேசும் திறன் பெற்றதோடு, வடமொழியில் கவிபாடும் திறனும் பெற்றான். அந்தச் சிறுவன் இயற்றிய நூலே ஐந்நூறு சுலோகங்களைக் கொண்ட “முகபஞ்ச சதீ’. சதீ என்றால் நூறு. மூகன் இயற்றிய ஐந்நூறு பாடல்கள் என்று அதன் தலைப்பு ஆகும். காமாட்சியை ஒருகணம் நினைத்தாலே, பேச்சாற்றலையும் புகழையும் பெறலாம் என்று, அதன் 57வது பாடல் கூறுகிறது.

அன்னையின் முன்னே ஸ்ரீசக்ரம்
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்ரமே, அன்னையின் முன்பு உள்ளது. அதனுள்ளே வசினி தேவதைகள் எண்மரின் திரு உருவங்கள் அமையப் பெற்றுள்ளன. அர்ச்சனை, வழிபாடு, அபிஷேகம் எல்லாம் இந்த ஸ்ரீசக்ரத்துக்கே நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில், இரவு பத்துமணிக்கு மேல் நவாவரண பூஜையும், பன்னிரண்டு மணிக்கு சுமங்கலி பூஜையும் நடைபெறுவது தனிச் சிறப்பு.

அரூபலட்சுமி கள்ள வாரணரும்
அழகுக்கே இலக்கணமானவள் திருமகள். அவள் இங்கே “அரூபலட்சுமி’யாக எழுந்தருளியுள்ளாள். திருமாலின் கரிய நிறத்தை சுட்டிக்காட்டி கேலி செய்த திருமகள், திருமாலின் சாபத்தை ஏற்று அரூபமானாள். “அஞ்சன காமாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறாள். காமாட்சியம்மனின் குங்குமப்பிரசாதத்தை திருமகள் மீது அர்ச்சித்தபின்னரே தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்வது வழக்கம்.
புதுப்பொலிவு கொண்ட திருமகளைக் காண கள்ளவாரணராக திருமாலும் காமாட்சி அம்மன் கோயிலில் குடிபுகுந்துவிட்டார். திவ்ய தோசங்களுள் ஒன்றான இந்த சன்னதி, காமாட்சியம்மன் கோயிலில் எப்படி அமைந்தது என்பது புரியாத புதிர்.

பஞ்ச கங்கை
காசி திருத்தலத்தில், கங்கை நதிக்கரையில், பஞ்சகங்கா எனும் ஸ்நானகட்டம் உள்ளது. அதனை நினைவூட்டுவதே காமாட்சியம்மன் கோயிலில் அமைந்த பஞ்ச கங்கை தீர்த்தம். பண்டாசுரனின் அசுரர் படையை அழித்த பூதகணங்களும் அசுர குணம் பெற்றுவிட்டனர். அவர்களைப் புனிதப்படுத்திட ஈசன் கங்கையை இங்கே பெருகிடச் செய்தாராம்.
துர்வாச மகரிஷி, காமாட்சியைப் போற்றி, “சௌபாக்கிய சிந்தாமணி’ எனும் நூலை இயற்றியுள்ளார். அதனுள் குறிப்பிட்ட வழிமுறைகளிலேயே இங்கு பூசனைகள் நடைபெறுகின்றனவாம். காமாட்சியம்மனை தரிசித்த பின்னர் அன்னபூரணியின் தரிசனமும் நமக்கு கிடைக்கிறது.
பூர நட்சத்திர நாட்களில் “தங்கரத திருஉலா’ நடைபெறுவது சிறப்பு அம்சம். மாசி மாதம் நடைபெறும் பெருவிழாவில், “பண்டாசுரவதம்’ ஐதிக திருவிழாவாக சிறப்பு பெறுகிறது. அகத்தூய்மையோடு அன்னையை வழிபடுவோர், வாழ்வில் விரும்பியதெல்லாம் பெறுகிறார்கள் என்பது உண்மை!

ஆதிகாமாட்சி
காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலேயே உள்ள மற்றொரு கோயில்தான் ஆதிபீட பரமேசுவரி என்றும் ஆதிகாளிகாம்பாள் என்றும் வழங்கப்படும் ஆதிகாமாட்சி அம்மன் திருக்கோயில். சென்னை செல்லும் பாதையில் சென்று, கம்மாளத்தெருவில் உள்ள இக்கோயில் குமரக்கோட்டம் கோயிலையும் ஒட்டினாற்போல் உள்ளது.
அழகிய ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், அமர்ந்திருக்கும் சிம்மம், பிராகாரம் கொண்ட திருக்கோயில். தேவர்களுக்குத் தொல்லை தந்த அசுரர்களை காளியாக உருவெடுத்து வதம் செய்தாள் அன்னை. உக்கிரமான கோலத்தில் இருந்த அம்பிகையை சாந்தப்படுத்த “ஸ்ரீசக்ரம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் “காளி கோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருபவள் ஆதிபரமேசுவரி. மேற்கரங்களில் பாசமும், அங்குசமும் ஏந்தி, வலது கரம் அபயம் அளிப்பதாகவும்; இடது கரத்தில கபாலத்தை ஏந்தியபடியும் காட்சி தருகிறாள். அசுரர்களை வதம் செய்து அவர்கள் கபாலத்தைத் தான் ஏந்தியுள்ளாள். சிலர் அதனை “அன்ன பாத்திரம்’ என்றும் தவறாக கூறுகிறார்கள். அன்னபாத்திரம் ஏந்தி, அன்னபூரணியாக கோலம் கொண்டிருந்தால் வலது கரத்தில் கரண்டியையும் ஏந்தி இருப்பாள் அல்லவா! மண்பத்தில் இருகரங்களுடனும், மகிஷாசுரமர்தினியாகவும், கமலபீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்தபடியும் வெவ்வேறு கோலங்களிலும் காட்சி தருகிறாள்.
ஆதிகாமாட்சி சன்னதியின் முன்மண்டபத்தில் உள்ளது சக்தி லிங்கம். சிவலிங்கத் திருமேனியின் பாணத்தில் சக்தியின் திருஉருவம் பொறிக்கப்பட்ட அபூர்வமான தோற்றம் அர்த்தநாரீசுவர லிங்கம் என்றும் அழைக்கின்றனர். மேற்கரங்களில் சூலமும், அங்குசமும் ஏந்தியபடி, வலக்கரத்தில் பாசமும், இடக்கரத்தில் கபாலமும் கொண்டபடி வலது காலை தரையில் வைத்து, இடது காலை மடித்து அமர்ந்தபடி உள்ளாள். கன்னிப்பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சக்தி லிங்கத்தின் முன் பிரார்த்தனை செய்கின்றனர். கோஷ்ட தேவதைகளோடு உள் சுற்றில் மாடலீசுவரர், சப்தகன்னியர் மற்றும் “வீரிய லட்சுமி’ என்னும் தனிச் சன்னிதியும் உள்ளன. நடராத்திரி 13 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மகாகாளேசுவரர்
மாகாளன் எனும் அரவம் வழிபட்ட மாகாளேசுவரர் திருக்கோயில், காமாட்சி அம்மன் திருக்கோயிலின் மேற்கு ராஜகோபுரம் அருகில் உள்ளது. பன்னிரண்டு ஜோதிலிங்கங்களும் ஒன்றான மகாகாளேசுவரரை தரிசிக்க, உஜ்ஜயினி வரை போகவேண்டியதில்லை. நேராக காஞ்சிபுரம் சென்று, கம்பீரமாக எழுந்தருளியுள்ள மகாகாளேசுவரரை வணங்கி வழிபடலாம்.
புலித்தோலை ஆடையாக அணியும் சர்வேசுவரன், நாகங்களை ஆபரணமாகக் கொண்டவர் காளன் எனும் நாகமும் அவரது உடலை அலங்கரித்தவைகளில் ஒன்று. ஒரு சமயம், தன் உடலை அலங்கரிக்கும் காளனைக் காணாதிருந்த சிவபெருமான், அவன் பூவுலகம் சென்ற விவரமறிந்து சினமடைந்தார்.
ஈசனின் உடலில் அணிகளாகத் திகழும் பாக்கியத்தை இழந்த காளன், பூவுலகில் காளத்தி எனும் தலத்தில் ஈசனை வழிபட்டான். அவனது பூசையில் மகிழந்த மகேசன், காஞ்சித் திருத்தலத்தில் தன்னை வழிபடுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாகாளன், காஞ்சியில், உலகாணி தீர்த்தத்திற்கு மேற்கில் ஒரு பெரிய சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, மீண்டும் சிவலோக வாழ்க்கையைப் பெற்றான். இந்தக் கருத்து காளத்தி புராணத்திலும் இடம் பெறுகிறது. அண்மையில், மாகாளேசுவரர் கருவரையைச் சுற்றிலும் நவகிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரவம் வழிபட்ட திருத்தலம் என்பதால், ராகு-கேது தோஷ நிவர்த்திக்காக, மக்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுவதையும் காண்கிறோம்.

Comments