சின்ன சிறுசுகளின் செல்ல பிள்ளையார்

னக்குப் பிடிச்ச சாமி எது?

இந்தக் கேள்வியை சின்னக் குழந்தைகளிடம் கேட்டால், அநேகமாக எல்லாக் குழந்தைகளுமே ``பிள்ளையார்!'' என்று தான் சொல்லும்.
அதுமட்டுமல்ல, பிள்ளையாருக்கும் சின்னக் குழந்தைகளைத்தான் மிகவும் பிடிக்கும்.

இன்றைக்கு மட்டும் அல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பும் அப்படித்தான் இருந்தது. அதற்கு ஒரு சிறு உதாரணமாக சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது இலங்கையில்.

கோடைகாலம் ஒன்றில் குளிர், நிழலுக்காக பெரிய மரம் ஒன்றின் கீழ் கூடினார்கள் சிறுவர்கள் சிலர். அருகே இருந்த கிணற்றுக்குப் பக்கத்தில் கிடந்த கல் ஒன்று அவர்கள் கவனத்தை ஈர்த்தது.

பிள்ளையாராக பாவித்து அதைக் கும்பிட்டார்கள். கல்வடிவில் தன்னைக் கும்பிட்ட அவர்களது கருத்திலே கணபதி குடிகொள்ள, அந்த விளையாட்டு தினம்தினம் தொடர்ந்தது!

வேடிக்கையான அவர்களின் விளையாட்டு, அந்த இடத்தின் சொந்தக்காரருக்கு ஏனோ எரிச்சலை ஏற்படுத்தியது!

ஒருநாள் அவர்கள் விளையாடிவிட்டு வீடு திரும்பியபின், கோபத்தோடு அந்தக் கல்லை... ஊஹும் சின்னப்பிள்ளைகளின் செல்லப்பிள்ளையாரை கிணற்றிலே தூக்கிப் போட்டார் அவர்.

மறுநாள் அந்தச் சிறுவர்கள் அதே இடத்துக்கு வந்தார்கள்.

அங்கே... பிள்ளையார் இருந்திருக்கமாட்டார், தேடியிருப்பார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்?

அங்கே `ஜம்மென்று' அமர்ந்திருந்தார் `கம்' என்ற மந்திரத்தை உடைய கணபதி.

பிள்ளைகளின் பூஜை அன்றும் தொடர்ந்தது. இடத்தின் சொந்தக்காரருக்கு மேலும் கோபம் அதிகரிக்க, அன்றும் கிணற்றுக்குள் குதித்தார் பிள்ளையார்.
மறுநாள்.. அதற்கு அடுத்தநாள் இப்படியே தொடர... அதிர்ந்து போனார் இடத்தின் சொந்தக்காரர். ஆன்மிகப் பெரியோர்களை அழைத்து வந்து காட்டினார்.

அப்போதுதான் தெரிய வந்தது. அந்த இடத்தினருகே சமாதி கொண்டிருந்த சாமியார் ஒருவர் வழிபட்ட பிள்ளையாரின் சுயம்பு மூர்த்தம்தான் அது என்பது!

அப்புறம் என்ன... பிள்ளையார் அங்கேயே கோயில் கொண்டார். சமாதியில் இருந்த சன்யாசி வழிபட்ட கடவுள் என்பதால், சமாதிப்பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது அவருக்கு.

அதுவே சமாதுப் பிள்ளையார் என்று திரிபுபட்டு இன்றுவரை அப்படியே நிலைத்து விட்டது.

இக்கல் பிள்ளையாரே கர்ப்பகிருஹத்தில் இன்றும் உள்ளார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்றபடி பலருக்கும் இப் பிள்ளையார் குலதெய்வமாக இருந்து வருகிறார்.

சின்னப்பிள்ளைகளின் செல்லப்பிள்ளையாராக வெளிப்பட்ட இந்தத் தலத்து சுயம்பு விநாயகர், இன்று சுற்றியுள்ள பல இடங்களில் இருக்கும் பக்தர்கள் யாவரும் போற்றி வழிபடும் பெருமையோடு திகழ்கிறார்.

இலங்கையில் திருகோணமலை எனும் நகரின் மத்தியில் இருந்து அருள்பாலிக்கிறார் சமாதுப் பிள்ளையார்.

Comments