சோமா கணபதி

திருமணத் தடையா? குழந்தைப்பேறு தாமதமா? குடும்பத்தில் பிரச்னையா? ஆரோக்யத்தில் குறைபாடா? கடன் தொல்லையா?
கவலை வேண்டாம். உங்கள் கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நீக்கி,உங்கள் இஷ்டங்களைப் பூர்த்தி செய்யக் காத்திருக்கிறார் இஷ்டசித்தி விநாயகர்.

கணபதி இதே பெயரில் பல தலங்களில் கோயில் கொண்டிருந்தாலும் அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தோடு கோயில் கொண்டிருக்கும் தலமாகத் திகழ்கிறது. சென்னை மாதவரம் பால்பண்ணை ஊரில் உள்ள இவர் ஆலயம்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஓலைக் கொட்டகையாக இருந்த ஆலயம், ஆனைமுகன் அருளால் இன்று பல்வேறு தெய்வங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது.

பலிபீடம், மூஞ்சுறு கடந்தால் கருவறை. உள்ளே  நமது இஷ்டங்களை நிறைவேற்றக் காத்திருக்கிறார், இஷ்ட சித்தி விநாயகர். அருகில் உற்சவர்.

கோயில் ஆரம்பிக்கப்பட்டபோது முதன்முதலில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதிவிநாயகரும், பாலமுருகனும் கருவறைக்கு வெளியே இருபுறமும் வீற்றிருக்கின்றனர்.

சங்கடஹர சதுர்த்தியன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விநாயக சதுர்த்தியன்று விதவிதமான வழிபாடுகளும், மாலையில் வீதியுலாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கோஷ்டத்தில் அருளும் துர்க்கைக்கு செவ்வாய், வௌ்ளி ராகு கால பூஜை விசேஷம். 

தனயனுக்கு வலப்புறம் தந்தை ஈசன், நாகக்குடையின் கீழ் கயிலாசநாதர் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியில் அருள்புரிகிறார். சகலவித சர்ப்ப தோஷங்களையும் நீக்கும் வல்லமை படைத்தவராம் இந்த சர்வேஸ்வரன். 

மகனின் சன்னதிக்கு  இடப்புறம் தனிச்சன்னதியில் அன்னை விசாலாட்சி காட்சி தருகிறாள். அவளது காலடியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இடமும் வலமுமாக பரமனும் பார்வதியும் இருக்க, இடையே மைந்தன் கணபதி இருப்பதை `சோமாகணபதி' அமைப்பு என்பர். இப்படிப்பட்ட அமைப்புள்ள தலங்களில் வழிபடுவது தனிச்சிறப்பு.

வடநாட்டில் பிரபலமான சந்தோஷி மாதாவுக்கு இவ்வாலயத்தில் தனிச்சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் சந்தோஷி மாதா சன்னதியில் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.தனிச் சன்னதியில்  குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி புவனேஸ்வரி அம்மன் அருள்கிறாள்.

வடக்கு நோக்கி வீர ஆஞ்சநேயர் கதையுடன் காட்சி தருகிறார். அவரது வால் தலைக்கு மேல் வளைந்து காணப்படுகிறது. அமாவாசையன்றும் மூல நட்சத்திரத்தன்றும் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அண்ணன் ஆனைமுகன் சன்னதிக்கு முன்புறம் தம்பி ஆறுமுகன் கிழக்கு நோக்கிய தனிச்சன்னதியில் வள்ளி, தேவசேனா சமேதராக  அருள்புரிகின்றார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும் தரிசனம் தருகிறார். அய்யப்பன் சன்னதி, நவகிரக சன்னதியும் இங்கே உண்டு.  ஈசனுக்கு மிகவும் விருப்பமான வில்வ மரம், கருவறைக்கு நேரெதிரே அமைந்துள்ளது சிறப்பாகக் கருதப்படுகிறது.

இவ்வாலயத்திற்கு நீங்களும் ஒருமுறை சென்று ஆனைமுகன் உள்பட அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு வாருங்களேன்.

சென்னை மாதவரம் பால்பண்ணை ஊரில், அருள்நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தொலைவில், அலெக்ஸ் நகர் `ஏ' காலனியில் இவ்வாலயம் உள்ளது.

Comments