பஞ்சபூததல பிள்ளையார்

ஞ்சபூதத் தத்துவ மானவர் கணபதி. பஞ்ச தலங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அவரது பெருமை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
காஞ்சிபுரம்

`பிருத்வி' என்னும் மண் தலம் இது. இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் நான்கு கோபுரவாயில்களிலும் பெரிய வடிவில் விநாயகர் திருவுருவங்கள் உள்ளன. இருப்பினும் இந்தத் தலத்து விநாயகரான விகடச் சக்கர விநாயகரே தனிச்சிறப்புமிக்கவர். இவரது சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளது. ஒரு முறை திருமாலின் சக்ராயுதத்தை விநாயகர் விளையாட்டாக விழுங்கி விட, திருமால் விகடக் கூத்தாடி விநாயகரை சிரிக்க வைத்தாராம். ஆனந்தம் அடைந்த விநாயகர், சக்கரத்தினை தன் வயிற்றிலிருந்து வெளிப்படுத்தி அருள் புரிந்தமையால், விகடச் சக்கர விநாயகரானார்.

திருவானைக்கா

நீர்த்தலமான இங்கு தூண் சிற்பங்களாக பல்வேறு கணபதி திருவுருவங்கள் உண்டு. ஓங்கார கணபதியே இந்தத் தலத்து விநாயகர். இவர் மூலவர் திருமுன் தென்மேற்குப் பகுதியில் எழுந்தருளியிருக்க, மற்றொரு விநாயகர் பத்துத் திருக்கரங்களுடன் வல்லபை கணபதி என்ற திரு நாமத்துடன் சுவாமியின் இடப்புறத்தில் விளங்குகிறார். ஆதிசங்கரர் இத்தலம் வந்த சமயம் அம்பிகையின் உக்கிரத்தைத் தணிக்க நிறுவிய ஹேரம்ப கணபதி, அம்மனுக்கு முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.

திருவண்ணாமலை
நெருப்புத்தலமான அண்ணாமலையார் கோயிலில் சிறிதும், பெரிதுமாக இருபத்திரண்டு விநாயகர்களின் திருவுருவங்கள் உள்ளன.
அருணை தலத்திலுள்ள கணபதிகளுள் அற்புதமாகப் போற்றப்படுபவர், ஆயிரம் யானை திரை கொண்ட விநாயகர். இவர் கிளிகோபுரத்தின் அருகே அமர்ந்திருப்பார். முகிலன் எனும் தீயவனை கட்டுப்படுத்தி அவனி டமிருந்து ஆயிரம் யானை கைளக் கப்பமாகப் பெற்றதால் இப்பெயர் இவருக்கு. சிவகங்கை தீர்த்தத்தின் வடகரையில் இருப்பவர், சர்வசக்தி விநாயகர். மூலவர் சன்னதிக்கு வடக்கே உள்ளவர் சம்பந்த விநாயகர். உருவினைப் போலவே அருளிலும் பெரியவர் இவர். அம்மன் சன்னதியில் அருள்பவர், விஜயராகவலு விநாயகர்.

திருக்காளத்தி
வாயுத் தலமான இங்கு அகத்தியர் வந்தபொழுது விநாயகரை வணங்க மறந்தார். அதனால் கோபம் அடைந்த விநாயகர், இங் கிருந்த பொன்முகலி ஆற்றின் நீரை வற்றச் செய்தார். தவறு உணர்ந்த அகத்தியர், ஆற்றின் நீர் மட்டத்திற்கு சுமார் முப்பது அடி கீழே விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே, இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று பெயர் பெற்று கோயிலின் பிராகாரத்திற்கு வெளியே ஆலயத் தளத்திற்குக் கீழே வீற்றிருந்து அருள் செய்கிறார்.

தில்லை
ஆகாயத் தலமான தில்லையின் தலவிநாயகர், கல் வெட்டுகளில் குலோத்துங்க சோழ விநாயகர் என்று குறிக்கப் பெற்ற, கற்பக விநாயகரே ஆவார். இவர் மேலைக் கோபுரத்தின் வெளிப்பகுதியில் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறார்.தமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் காணப்படாத அமைப்பாக தெற்குக் கோபுர வழியில் தட்சிணா மூர்த்தியுடன் கூடிய நடன விநாயகரையும் காணலாம். உலகம் உய்ய திருமுறைகள் இருக்கும் இடத்தை காட்டி யருளிய திருமுறைக் காட்டிய விநாயகரும், முக்குறுணி விநாயகரும் இந்தத் தலத்தின் புகழ் பெற்ற விநாயகப் பெருமான்கள்.

இவ்வாறான பஞ்ச பூதத்தல விநாயகப் பெருமான்களை வழிபட்டு ஐம்பூதங்களால் ஏற்படும் அல்லல்கள் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவோம்.

Comments