இரட்டை பிள்ளையார்கள்

லமரத்தின் நிழலோ, ஆற்றங்கரை வெயிலோ எங்கேயானாலும் ஏகாந்தமாக தனித்தே கோயில் கொண்டருள்வார் ஏகதந்தன்.
அவர் இரட்டைப் பிள்ளையாராக அமைந்து இணையற்ற பலன்களை அருளும் தலங்கள் அபூர்வமானவை.

அப்படி இரட்டைப் பிள்ளையார்கள் இணைந்து அருளும் சிலதலங்களைப் பார்ப்போமா?

கொத்துக்கோவில்
இந்தப் பெயரைக் கேட்டதும், கோவில் அமைப்புகளில் இதுவும் ஒருவகை போலும் என்று நீங்கள் நினைத்தால் அதுதவறு. கும்பகோணம் - காரைக்கால் பேருந்து தடத்தில் உள்ள ஓர் ஊர்தான் கொத்துக்கோவில்.

இந்த ஊரில் உள்ள அழகிய ஆலயத்தில் இரட்டைப் பிள்ளையார்கள் அருள்பாலிப்பது தனிச்சிறப்பானது.

சுந்தர விநாயகர், ராஜ விநாயகர் என்ற திருப்பெயர்களோடு இரட்டைப் பிள்ளையார்கள் இங்கே வந்தது எப்படி?

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒருசமயம் மழை பொய்த்து வயல் வெளிகள் காய்ந்து போயின. மக்கள் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

அப்போது, இந்த ஊரில் இருந்த ஒரு மூதாட்டியின் கனவில் இரண்டு பிள்ளையார் உருவங்கள் தோன்றின.

``நாங்கள் ஊருக்கு வெளியே குளத்தங்கரையில் புதையுண்டு கிடக்கிறோம். எங்களை வெளியே எடுத்து ஊரின் எல்லையில் பிரதிஷ்டை செய்துவை. வறட்சி விலகி வசந்தம் பிறக்கும்.'' என கூறிவிட்டு மறைந்தனர்.

அந்த மூதாட்டி ஊர்ப் பெரியவர்களிடம், தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினாள். உடனே எல்லோரும் புறப்பட்டுப் போய்,  அவள் கனவில் கண்ட இடத்தில் தோண்டியபோது இரண்டு பிள்ளையார் சிலைகள் கிடைத்தன.

ஊரின் எல்லையில் கோவில் எழுப்பி அவற்றைப் பிரதிஷ்டை செய்தனர். அதற்காகவே காத்திருந்தது போல் வானம் கறுத்து மழை பொழியத் தொடங்கியது. ஊர்மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்தனர்.

அன்று முதல் இந்த இரட்டைப் பிள்ளையார்கள் ஊர் எல்லையில் இருந்து காவல் தெய்வமாக அருள் பாலித்து வருவதாக பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

மகனோடு சேர்ந்து மகேசனும் அடுத்து வந்த காலத்தில் இத்தலத்தில் இடம் பிடித்தார்.அவரது திருநாமம் மகாலிங்கர் என்று வழங்கப்படலாயிற்று. கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தினசரி ஒரு காலபூஜை மட்டுமே நடைபெறுகிறது.

வினாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி நாட்களில் சிவபெருமானுக்கும் இரட்டைப் பிள்ளையார்க்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பிரம்மசாரியாக இருந்தாலும் இத்தலத்துப் பிள்ளையார்கள், கணவன்- மனைவி இடையே ஏற்படும் மன சங்கடங்களையும், மனதளவில் ஏற்படும் பிரிவினையையும் தீர்த்து வைப்பதில் நிகரற்றவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது வீண்போவ தில்லை என்பது நிச்சயம்!

மரத்துறை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாளில் இருந்து சீர்காழி செல்லும் பேருந்து தடத்தில், பந்தநல்லூருக்கு கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது மரத்துறை என்ற கிராமம்.

இங்கும் உள்ளது இரட்டைப் பிள்ளையார் ஆலயம் ஒன்று.

அழகிய சிறிய கோவில். சிறிய மண்டபத்தில் மூஞ்சுறு அமர்ந்திருக்க, கருவறையில் இரட்டைப் பிள்ளையார்கள் அருள்பாலிக்கின்றனர்.

சோமஸ்கந்தர் எனும் வடிவில், பரமனுக்கும் பார்வதிக்கும் இடையே, பாலகனாக முருகன் இருப்பார். அதே போன்ற அமைப்பாக, சிறிய பிள்ளையார் நடுவே அமர்ந்திருக்க, இடதுபுறம் பெரிய பிள்யையாரும் வலது புறம் சிவபெருமானும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

பிள்ளையார் தந்தையுடன் அமர்ந்து அருள்பாலிப்பதால் இவர் எதையும் இரட்டிப்பாகத் தரும் வல்லமை மிக்கவர் என பக்தர்கள் நம்புகின்றனர்.

வினாயகர் சதுர்த்தி அன்று இரட்டைப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இந்த இரட்டைப் பிள்ளையாரை வணங்கி விட்டு விவசாயத்தைத் தொடங்கினால் விளைச்சல் இரட்டிப்பாகும் என ஊர் இந்த மக்கள் நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் நிறைவேற்றி அருள்பாலிக்கின்றனர் இத்தலத்து இரட்டைப் பிள்ளையார்கள்.

பாபநாசம்
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்... குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டு இருந்தது. எத்தனை எத்தனையோ பொருட்கள் அந்த  வெள்ளத்தில் மிதந்தும் உருண்டும் புரண்டும் கொண்டிருந்தன. அவற்றோடு எங்கிருந்தோ இரண்டு பிள்ளையார் சிலைகளும் அடித்து வரப்பட்டன.

அப்போது, பாபநாசத்தில் உள்ள ஒரு பக்தரின் கனவில் பிள்ளையார் தோன்றினார்.

``வெள்ளம் வடிந்ததும் இத்தலத்தில் நான் கரை ஒதுங்குவேன். என்னை ஒரு அரசமரத்தினடியில் பிரதிஷ்டை செய். நான் இந்த ஊரைக் காப்பேன்!'' என்றார்.

திடுக்கிட்டு எழுந்தார் பெரியவர். ஆற்றை நோக்கி ஊர் மக்களுடன் சென்றார். என்ன அதிசயம்!

கரையோரம் இரண்டு பிள்ளையார் சிலைகள் ஒதுங்கி இருக்க, ஊர் மக்கள் உதவியுடன் இரண்டு சிலைகளையும் கரையேற்றி ஊரின் நடுவே உள்ள ஓர் அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார்.

காலப்போக்கில் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழும்பியது. கருவறையில் இரட்டைப் பிள்ளையார்களும் இடம் பிடித்தனர்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இரட்டைப் பிள்ளை யார்களுக்கு தன் கீழ் இடமளித்த பழமையான அரசமரம் இன்றும் பரந்து விரிந்து ஆலயத்தின் உள்ளே நிழல் வீழ்த்தி குளிரச் செய்து வருகிறது.

ஆலயம் கிழக்கு நோக்கி இருந்தாலும் தென் திசையிலும் ஒரு வாயில் உள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயிலையே பயன்படுத்துகின்றனர்.

முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம், பலி பீடம், மூஞ்சுறு ஆகியவை உள்ளன.

அர்த்த மண்டப நுழை வாயிலின் இடதுபுறம் முருகன், வள்ளி- தெய்வானையுடன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். முரு கனுக்கு எதிரே பலிபீடமும், மயிலும் உள்ளன.

வலதுபுறம் ஆதிகும் பேஸ்வரரின் திருமேனி தனிச்சன்னதியில் உள்ளது. இந்த லிங்கத் திருமேனி காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாம். வடக்கில் மங்களாம்பாள் சன்னதி உள்ளது. நவகிரக சன்னதியும் இருக்கிறது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இங்கு இருபது நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது.
தினசரி இரண்டு கால ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆலயம் காலை 8.00 முதல் 9.30 வரையிலும், மாலை 5.30 முதல் 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருமணம் வேண்டி காத்து நிற்கும் ஆணோ, பெண்ணோ இங்குள்ள இறைவனுக்கு ஒன்பது வகை தானியங்களால் அர்ச்சனை செய்ய, அவர்களுக்கு விரைந்து திருமணம் நடப்பது கண்கூடான உண்மை என்கின்றனர்.

இங்கு நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்து கொள்வதால் கடன் தொல்லைகளிலிருந்தும், பில்லி, சூன்யம், முதலிய பாதிப்புகளிலிருந்தும் மீண்டு, நலம் பெறலாம் என்பது நம்பிக்கை.

தஞ்சை-கும்பகோணம், பேருந்துத் தடத்தில் கும்பகோணத்திலிருந்து 15கி.மீ. தூரத்தில் உள்ளது பாபநாசம்.

Comments