ஜகன்னாதருக்கு ஜலதோஷம்

டவுளைப் பற்றி நாம் சொல்லும்போது, அவரை `சர்வ சக்திமான்' என்கிறோம், `சர்வவியாபி' என்கிறோம்,
`அவனன்றி ஓரணுவும் அசையாது' என்கிறோம்... ஆனால் அப்பேர்ப்பட்ட கடவுளுக்கே உடம்பு சரியில்லாமல் போனால்....?

கடவுளைக் கிண்டலோ கேலியோ செய்வதாக நினைக்க வேண்டாம். இறைவனையும் தம்மில் ஒருவராகவே பாவித்து அவருக்கும் ஆரோக்யக் குறைபாடுகள் வரும் என்று நினைக்கும் ஆத்திகப் பெருமக்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடவுளுக்கு ஜலதோஷம் இருமல், ஃப்ளு (வராக ஃப்ளு அல்ல), முதலிய பாதிப்புகள் ஏற்படலாம் அல்லது ஏற்படுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுவும் ஜகந்நாதரின் `ரதயாத்திரை' என்றழைக்கப்படும் தேர்த்திருவிழாவுக்கு முந்தின நாட்களில்!

விஷயம் என்னவென்றால், பகவான் ஜகந்நாதரின் `ரதயாத்திரை'க்குச் சில தினங்களுக்கு முன்னால், அவரைச் சுத்தப்படுத்த வேண்டுமென்ற புனித நோக்கத்துடன், நாட்டில் ஆங்காங்கே அவருடைய பக்தர்கள், அவருடைய விக்ரகங்களுக்குத் தினசரி `ஜல அபிஷேகம்' செய்து நீராட்டுகிறார்கள். இப்படித் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, அவரைச் சுத்தம் செய்யும் பக்தர்களின் இந்த உற்சாகம் காரணமாக, அவருக்கு ஜலதோஷம், இருமல், கபம் கட்டுதல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு விடு கிறதாம். அதனால் அவர் எட்டுப்பத்து நாள் படுக்கையில் கிடந்து `ரெஸ்ட்' எடுக்க வேண்டியிருக்கிறது என நம்புகிறார்கள்.

`மஹா அபிஷேக'த்திற்குப் பிறகு நோய்வாய்ப்பட்டு அவஸ்தைப்படும் கடவுளின் ஆரோக்கியத்தைச் சரி செய்யும் மரபும் பாரம்பரியமும், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டும், பின் பற்றப்பட்டும் வருகின்றன. அதன்படி அந்தந்த ஜகந்நாதர் கோயிலின் தலைமைப் பூசாரிகள், ஏறக்குறைய பதினைந்து நாட்கள் வரை கடவுளின் வைத்தியராக இருந்து,அவருக்கு சிகிச் சையும் சேவையும் அளிக்கிறார்கள்.
அது சரி, ஜகந்நாதருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்படுகின்றன? அலோபதியா? ஹோமியோபதியா? இல்லையில்லை, அதெல்லாமில்லை, எல்லாம் பாட்டி வைத்தியம் தான்!

அது என்னதெரியுமா? ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஜாதிக்காய், பன்னீர், கங்கா ஜலம், துளசி, சந்தனம் மற்றும் கற்கண்டு, இவையெல்லாம் கலந்த கஷாயம் தான் நைவேத்தியமாக ஜகந்நாதருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. கடவுள் இந்தக் கஷாயத்தைக் `குடித்து' முடித்த பிறகு, அது பக்தர்களுக்கும் தீர்த்தம் போல பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

பூசாரி வைத்தியரின் இந்தக் கஷாயத்தைக் குடித்த ஜகந்நாதர் சில நாட்களிலேயே முன் போல் மறுபடியும் சுறு சுறுப்புள்ளவராகவும், ஆரோக்கியமுள்ளவராகவும் ஆகிவிடுகிறார்!

அவரை சரிவரப் பரிசோதித்த பின் `வைத்தியர்', அதாவது பூசாரி, `ஓ.கே.'' சொன்ன பிறகுதான் அவருடைய ரதயாத் திரைக்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
கடந்த ஜூன் 24-ம் தேதியன்று இந்த ரதயாத்திரை நாடு முழுவதிலும் பக்தர்கள் மனம் குளிர, எந்தவிதமான விக்னமுமின்றி நடந்தேறியது, அந்த ஜகந்நாதரின் கிருபையே அன்றி வேறென்ன!

போலோ... பாகவான் ஜகந்நாத் கீ, ``ஜே!''

Comments