இரும்புச் சங்கிலியைத் தகர்த்த ஈசன்!



ராமர், வனவாசத்தின்போது அத்ரி மகரிஷி - அனுசுயாதேவியின் ஆசிகளைப் பெறுவதற்காக திரிகூட மலைப்பகுதிக்கு வந்தார்.
பதிவிரதா தன்மையில் தலைசிறந்த அனுசுயா தேவி, தங்கள் தபோவனத்திற்கு வந்த சீதையை நகைகளால் அலங்கரித்து மகிழ்ந்தாள். அதன்பின் அப்பகுதியின் இயற்கை எழிலை ரசித்தவாறே நடந்தார் ராமபிரான். மாலைவேளை வந்ததையும் மறந்து அந்த சூழலில் லயித்தார்.
சந்தியா வந்தனம் செய்யும் நேரம் அது என்பதை அத்தலத்தில் லிங்க வடிவில் தோன்றிய ஈசன், அசரீரியாக ராமனுக்கு உரைத்தார். இப்படிக் கருத்தினை உணர்த்தியதால், இறைவன் கருத்தீஸ்வரன் எனப்பெயர் பெற்றார்.
ராமனின் சித்தம் அறிந்து உரைத்ததால், சித்தநாதீஸ்வரர் என்று வடமொழியில் கூறுகின்றனர். ராமனின் பாதம் பதிந்த பாறையை, இவ்வூரில் உள்ள ராமசுவாமி கோயிலில் வைத்து வழிபடுகின்றனர். அன்னை அழகிய வடிவுடன் அருள்வதால் தமிழில் அழகம்மை என்றும், வடமொழியில் சவுந்தர்ய நாயகி எனவும் அழைக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடலில் இருந்து கடையம் செல்லும் சாலையில் உள்ள பாப்பான்குளத்தில் உள்ளது இத்திருத்தலம்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர் ஆதித்தவர்மனால் இக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நெற்கட்டும் செவல் மன்னனாக பூலித்தேவன், இப்பகுதியில் உள்ள “நெற்கட்டும் பாறை’யில் தங்கி கருத்தீஸ்வரனையும் அழகம்மையையும் வழிபட்டுள்ளான். இங்கு விளையும் நெல் மற்றும் தானியங்களை தல இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்ட பின்னரே மக்களுக்கு வழங்கினான்.
இப்பகுதியில் விளையும் தானியங்களுக்குக் கப்பம் கட்டவேண்டும் என, பூலித்தேவனை ஆங்கிலேயர் நிர்ப்பந்தம் செய்தனர். அந்நியருக்குக் கப்பம் கட்ட மறுத்தான், பூலித்தேவன். ஆங்கிலேயப் படை அவனை கைது செய்து சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றது. கருத்தீஸ்வரரை நோக்கி முறையிட்டான் பூலித்தேவன்.
“நெற்கட்டும் பாறைக்கு நிகரில்லை என்றிருந்தேன்; பொய்க் கட்டாய்க் கட்டி வீதியிலே போகவிட்டான் சண்டாளன்! கருத்தலிங்கம் உனக்குச் சம்மதம் தானா?’ என்று கருத்தீஸ்வரனை அவன் கேட்க, மறுநிமிடமே பூலித்தேவனின் கைவிலங்குகள் ஈசன் அருளால் தெறித்தன. கட்டியிருந்த இரும்புச் சங்கிலிகள் தகர்ந்து விழுந்தன. இது மாயவித்தை என நினைத்து பயந்து ஓடியது ஆங்கிலேயர் படை.
இத்தலத்தில் வழிபடுவோர் மனக்கவலைகள் நீங்கும்; திருமணத்தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. மணப்பேறு கைகூடிட பெண்கள் அழகம்மையை வழிபடுகின்றனர்.
கருத்தீஸ்வரர் அழகம்மையோடு, சொக்கநாதர், மீணாட்சி, குருபகவான், சனீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சுப்த கன்னியர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர்.
தினசரி ஒருவேளை பூஜையும், பிரதோஷம், சோமவார வழிபாடும் நடைபெறுகிறது. அம்பாளுக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
பூலித்தேவன் வழிபட்ட இத்தலம், இன்று காண்போர் கலங்கும்படி சிதலடைந்த நிலையில் உள்ளது. காலங்களைக் கடந்து வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இக்கோயிலைக் காப்பது நம் கடமையாகும்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் பேருந்தில் சென்றால், 40 கி.மீ. தொலைவில் உள்ளது பாப்பான் குளம், மடவார்விளாகம் பஸ் ஸ்டாப்பில் இறங்கினால், அருகிலேயே கோயில் உள்ளது. கடையம், பொட்டல்புதூரில் இருந்து பஸ், மினி பஸ் வசதி உண்டு.

Comments