`மொட்டை யாண்டவர் கரடு'

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த வகையில், அரவக்குறிச்சி அருகில் உள்ள `மொட்டை யாண்டவர் கரடு' என்ற குன்றில் முருகன், இயற்கை சார்ந்த எழிலுடன் நம்மை அழைக்கிறான்.
மாமல்லபுர குடை வரைக் கோயில்கள் வரி சையில் இவ்வாலயம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மன்னர்களது காலத்தில் உருவாக்கப்பட்டது.

முருகன், வள்ளி, தெய் வானை ஆகியோர் யானை வடிவமைப்பிலான ஒரே பாறையில் அமைந்து அருள் தருகின்றனர்.

தமிழ்க் கடவுள் முருகன் கோபங்கொண்டு பழநிக்குச் செல்லும்போது இந்தப் பாறையில் தங்கிச் சென்றதன் நினைவாக முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருவது போன்ற சிலைகள் இங்கு செதுக்கப்பட்டனவாம். அவரது திருநாமத்தாலேயே மொட்டையாண்டவர் கரடு என இத்தலம் அழைக்கப்படுகிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை நோக்கியே மொட்டையாண் டவர் கரடு மூலவரை அமைத் திருப்பது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு.

இரண்டு தலவிருட்சமும்  இரண்டு ஆனைமுகத்தோனும் இங்குள்ளனர். கன்னி மூலை யில் சக்தி விநாயகர் ஆலயமும், அதன் பின்புறமாக ஆல், அரசு, வேம்புடன் செல்வ விநா யகர் நாக சர்ப்பத்துடனும் அமைக்கப்பட்டுள்ளனர்.

மொட்டையாண்டவர் திருத்தலத்தைச் சுற்றிலும் பெரிய மலைப்பாதைகள்  அமைந்துள்ளன. இப்படி அமைந்துள்ள ஓர் பாறை யின் நுனிப் பகுதியில் செங்கற்களால் ஆன சிறிய பாழடைந்த இடம் காணப்படுகிறது.

மாமன்னர்கள் இவ்விடத்தில் அரண் அமைத்திருந்ததற்கான சாட்சியாக உள்ள இந்தக் குன்றின் மீதுதான் மாமுனி எனும் சித்தர் வாசம் செய்த தாகவும், இன்றளவும் அவ்வப் போது அவர் இங்கு வந்து போவதாகவும் அவரையே காவல் தெய்வமாகவும் இப் பகுதியினர் பூஜிக்கின்றனர்.

சுமார் மூன்று குடும்பங்கள் வசிக்கக்கூடிய அளவிலான பரப்பளவில் அக்காலத்திய தியானக்குழிகளும் இத்திருத் தலத்தில் காணப்பட்டனவாம். ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அக்குழி களானது, மூடப்பட்டு விட்டதாம்.

இங்குள்ள பாறை மற்றும் வனப்பகுதியில் பல்வேறு `ரிஷி'களும் வாழ்ந்துள்ளதற்குச் சான்றுகளும் உள்ளன.

மொட்டையாண்டவர் தலம் அமையப்பெற்றுள்ள மலையின் அருகாமையிலுள்ள மலையின்மேல் வாயு மூலை யில் அகன்ற பாறையின் மீது மாயவர் சன்னதியும், எப்போதும் வற்றாத தாமரை தீர்த்தப் பாளியும் உள்ளன. மொட்டையாண்டவர் திருத் தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு இந்தத் தீர்த்தப்பாளியிலிருந்தே தீர்த்தம் தரப்படுகிறது.

மலை மேலுள்ள மாயவருக்கு ஆண்டுதோறும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள்  நடைபெறு கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மொட்டையாண்டவருக்கு பௌர்ணமி தினங்களில் அன்னதானம் நடைபெறு கிறது. பங்குனி உத்திரத்தின் போது ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, மும்மூர்த்தி களின் ஸ்தலமான மகுடீஸ்வரர் அமைந்துள்ள கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்து முருகனுக்குச் செலுத்துகின்றனர்.

அன்றைய தினத்தில்  மொட்டையாண்டவருக்கு, இளநீர், பால், பன்னீர், திருநீறு, திருமஞ்சனம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், மலர் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

மலையின் மேலுள்ள தாமரைப்பாளியிலிருந்து கீழேயுள்ள தியானக் குழிகளுக்கு சுனை நீர் விழுந்துகொண்டே இருப்பது இப்பகுதியில் அதிசயமாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தில் ஏராளமா னோர் திருமணம், வளை காப்பு, காதுகுத்து போன்ற வைபவ நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அடிக்கடி பழநி செல்ல முடியவில்லை என்று ஏங்கும் இப்பகுதி மக்கள், அருகிலேயே உள்ள மொட்டையாண்டவர் திருத்தலத்திற்குச் சென்று அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

மொட்டையாண்டவர் திருத்தலத்திற்கு, அரவக்குறிச்சி _தடாகோவிலிலிருந்து  சுமார் 3 கி.மீ. தொலைவு கிழக்கு முகமாகச் சென்று கணக்க வேலன் பட்டியை அடைந்தும் செல்லலாம். மேலும், அரவக் குறிச்சியிலிருந்து பெரிய வளையபட்டி சென்று அங்கிருந்தும் மொட்டை யாண்டவர் தலத்தை அடை யலாம்.

Comments