குழந்தை பாக்யம் அருளும் குமரன்

குமரனுக்கு புண்ணிய பூமியான பூனாவிலும் ஆலயம் அமைந்துள்ளது.
மகான் சந்த்துகாராம் வாழ்ந்த இடமான இங்கு குன்றின் மேல் உள்ள கோயிலை அடையும்போதே பக்திப் பரவசத்தால் பலர் உணர்ச்சிவசப்பட்டு, ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
பக்கத்தில் உள்ள ராணுவக் குடியிருப்பில் நிறைய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் முயற்சியால் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயிலின் அடிக்கல் நாட்டப்பட்டது. சிறிது சிறிதாக விரிவடைந்து, கோயிலில் தற்போது விநாயகர், அனுமன், பெருமாள், பத்மாவதி தாயார், நவகிரகம், ஷீர்டி சாய்பாபா ஆகியோருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தசரா, ஸ்ரீராமநவமி, குருபூர்ணிமா, அனுமன் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி என்று பல உற்சவங்கள் நடக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் முருகனுக்கு லட்சார்ச்சனையும்; அதன்பிறகு அன்னதானமும் நடைபெறுகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் மாலை 6.45க்கு முருகனின் உற்சவ மூர்த்தி, கோயில் வளாகத்திற்குள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, ஆரத்திக்குப் பிறகு கோயில் வந்தடையும்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் தேதி கோயிலிலிருந்து 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பம்பிரி என்கிற இடத்திலிருந்து பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து வந்து கோயிலில் லட்சார்ச்சனை செய்வதை பழக்கத்தில் கொண்டுள்ளார்கள்.
கோயிலின் உட்பிராகாரத்தில், ஆறுபடை வீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. எப்போதும் ஓம் சரவணபவ கோயிலில் ஒலித்துக் கொண்டிருப்பதால் நுழைந்த உடனேயே, மனம் நிம்மதியில் ஆழ்ந்து விடுகிறது. எல்லாவற்றுக்கும் சிகரம் போல், பங்குனி உத்திரம் அன்று மயூர் ஸ்தம்ப என்கிற மயில் தூணின் நிழல், முருகனின் காலைத் தொடுவதைக் கண்டு அனைவரும் பரவசப்படுகின்றனர்.
இவரை வழிபட்டால் ஆரோக்யம் மேம்படும்; குழந்தை பாக்யம் கிட்டும் என்பது, இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும், வள்ளி கல்யாணம் நடத்தி தங்கள் நன்றியை பக்தர்கள் தெரிவிப்பதும் வாடிக்கை!
பூனா-பம்பாய் மார்க்கத்தில், தேஹுரோட் என்கிற இடத்தில் மெயின் ரோட்டில், குன்றின்மேல் கோயில் உள்ளது. பூனாவிலிருந்து 25 கிலோ மீட்டர்.

Comments