பாண்டவ தூதப் பெருமாள் நிலாத் திங்கள் துண்டப் பெருமாள் ஆதிவராகப் பெருமாள்


பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாதி ராஜ்யத்தைக் கொடுக்கும்படி, துருபதன் அனுப்பிய தௌமியர், திருதராஷ்டரனிடம் முறையிட்டார்.
பீஷ்மரும், “பாண்டவர்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள். அவர்களுக்குச் சேர வேண்டியதைத் தருவதே தருமம்’ என்று கூற, கர்ணனோ, “ஆட்டத்தில் இழந்தை சொத்தை எப்படித் திரும்பக் கேட்கலாம்!’ என்று வாதிட்டான். முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், திருதராஷ்டிரன், சஞ்சயனை அழைத்து பாண்டவர்களிடம் சென்று, போரைத் தவிர்க்கும் முறையில் பேசிட அனுப்பினார்.

ஊசிமுனை நிலமும் தரமாட்டேன்!
சஞ்சயன், பாண்டவர்களைச் சந்தித்து, பீஷ்மரின் அறிவுரையையும், பிதாவின் பேச்சையும் கௌரவர்கள் மதிக்கவில்லை; மூர்க்கத்தனமாக நடக்கிறார்கள். நீங்கள் பொறுமை காத்திட வேண்டும். ராஜ்யத்தைத் தராவிட்டாலும், போரைத் துவக்காதீர்கள் என்று கூறினான்.
“தத்தம் உரிமையைப் பெறுவது அறநெறியாகும். பாண்டவர்களின் நன்மைக்கு பாதகம் இன்றி, கௌரவர்களோடு சமாதானம் பெற முடியுமானால் நல்லதே! அவர்களுக்குச் சேர வேண்டிய ராஜ்யத்தைப் பெற போருக்குத் தயாராகவே உள்ளார்கள் பாண்டவர்கள்’ என்று கூறினார் கிருஷ்ணன்.
“நாடின்றி, வீடின்றி, நாங்கள் மற்றவரை அண்டிப் பிழைக்க வேண்டுமா? நாங்கள் ஐவர், பாதி ராஜ்ஜியம் அல்லது ஐந்து கிராமங்களையாவது தந்து சமாதானம் செய்து கொள்ளுங்கள். போர் அல்லது சமாதானம், இரண்டுக்குமே நாங்கள் தயார்’ என்றார் தருமர்.
சஞ்சயன், “திபரும்பிச் சென்று பாண்டவர்கள் கூறியதைக் கூறினான். பீஷ்மர் சொற்படி பாதி ராஜ்யத்தைத் தந்து விடுவோம். மீதிப் பாதியை நீங்கள் ஆண்டால் போதும்’ என்றார் திருதராஷ்டிரன். ஆனால் துரியோதனனோ, “ஊசிமுனையளவு நிலம்கூட பாண்டவர்களுக்குத் தரமாட்டேன்’ என்று கூறிவிட்டு சபையை விட்டு வெளியேறினான்.

போர் வேண்டாம்!
போரைவிட சமாதானமே மேல் எனத் துணிந்து, பாண்டவர்களுக்காக, அஸ்தினாபுரத்திற்குத் தூது செல்லத் தயாரானான் தூயவன் கிருஷ்ணன். “இருசாராரின் நலனை உத்தேசித்து, நானே தூது செல்கிறேன்! சமாதானத்திற்கு முயற்சிப்பத நம் கடமை!’ என்று கூறினான் கண்ணன்.

கண்ணன் வந்தான்!
கண்ணன் தூதுவருகிறான் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தவர்களுள் துரியோதனனும் ஒருவன்தான்! எப்படியாவது நம் வலையில் கிருஷ்ணன் சிக்கமாட்டானா என்று ஏங்கியவனாயிற்றே! மாயக் கண்ணன் அவன். சமாதானம் பேச வருபவன், ஏதோ உள் நோக்கத்துடன் தான் வருகிறான். அவனை எப்படியாவது வீழ்த்திவிட்டால், ஐவர் பாண்டவர் என்றுமே என் அடிமையாவர்! என்று, கற்பனையில் ஆழ்ந்தான்.

விதுரன் வீட்டில் விருந்து!
நடுநிலை வகிக்கும் விதுரன் வீட்டிற்கே முதலில் சென்றான் கண்ணன். தருமத்தைக் கடைப்பிடிக்கும் விதுரனைக் கண்டால் துரியோதனனுக்கு பிடிக்காது. வசைமாறி பொழிந்து, அவரது விரோதத்தையும் சம்பாதித்தான்.

காத்திருந்த கண்கள்
கண்ணனைக் காண்பதற்காக கௌரவர் சபையில் கூடியிருந்த ஆயிரமாயிரம் கண்களும் காத்திருந்தன. அத்தனை பேரின் பார்வையும் அந்த மகாபுருஷனின் வருகையை நோக்கியே இருந்தது. துரியோதனனோ, கண்ணன் உள்ளே நுழையும்போது எவரும் அவனுக்கு மரியாதை செய்யக் கூடாதென எச்சரித்திருந்தான். பமியே கால், நாபியே ஆகாசம், கண்கள் இரண்டும் சூரிய சந்திரர்கள், செவிகள் திசைகள், சிரஸே சுவர்க்கம் என்று அண்டம் பூராவும் வியாபித்துள்ள வாசுதேவன், அரங்கில் நுழைந்ததுமே, துரியோதனனின் ஆணையையும் மீறி, சபையோர் எழுந்து நின்று அவனுக்கு வணக்கம் செய்தனர். அதைவிட ஆச்சரியமாக எல்லோருக்கும் முன்னதாக எழுந்தவன் துரியோதனன் என்பதுதான்.

சுரங்கத்தில் மல்லர்கள்
கண்ணன் அமரவிருக்கும் ஆசனத்தின் கீழே, ரகசியமாக ஒரு நிலவறையை அமைத்து, அதனுள்ளே பல மல்லர்களையும் இருக்க வைத்த, மேலே மூடி ஆசனமிட்டு வைத்திருந்தான் துரியோதனன். அவன் எதிர்பார்த்தது, ஆசனத்தில் அமர்ந்தவுடன் கண்ணன் நிலவறைக்குள் விழுந்து மல்லர்களால் தாக்கப்படுவான் என்று ஆனால் என்ன நிகழந்தது?
துரியோதனனின் திட்டப்படி கண்ணன் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் அது சரிந்தது. மாயவன் கண்ணனோ விசுவரூபம் எடுத்து, மல்லர்களை அழித்ததோடு, ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வியாபித்துத் தனது விசுவரூபத்தை உலகுக்குக் காட்டினான்.
கௌரவர்கள் அஞ்சி ஒடுங்கி, பிரமித்த நிற்க, சான்றோர் அனைவரும் ஆகாகாரம் செய்து கிருஷ்ணபரமாத்மாவை தொழுது வணங்கினர். பாண்டவ தூதனாக, கௌரவ சபையில் கண்ணன் அமர்ந்த கோலத்தையே காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயிலில் நாம் இன்று காண்கிறோம்!

எட்டாம் நூற்றாண்டிற்கு முந்தையது!
ஒரு திருக்கோயிலை வலம்வரும்போத, அது எத்தனை ஆண்டுகளுக்க முற்பட்டது என்பதை அரிய ஆவல் உந்துகிறது. திருமழிசை ஆழ்வார், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருடைய பாசுரங்கள் ஏற்றதால், அவரது காலத்துக்கும் முந்தையது என்று கூறலாம். ராஜகேசரிவர்மன் என்று அரசனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு கூறுகிறது.

ஜனமேஜயன் பெற்ற பேறு1
பாரதப்போர் முடிந்து வெகு காலம் ஆன பிறகு, ஜனமேஜயன் எனும் அரசன், பாரதக் கதையை விவரித்துக் கூறுமாறு வைசம்பாயனரை கேட்டுக் கொண்டான். அப்போது அவர், கண்ணனன் விசுவரூப தரிசனம் பற்றி விளக்கியபோது, மெய்சிலிர்த்தான். அந்தக் காட்சியை நான் காண முடியுமா என்று வினவியபோது, சத்யவிரத ÷க்ஷத்திரத்தில் அசுவமேதயாகம் செய்தால், அந்தப் பேறு அவனுக்குக் கிட்டும் என்று கூறினார், வைசம்பாயனர். அதன்படியே செய்து, தூது சென்ற தூதுவனின் திருக்கோலத்தை காஞ்சியில் கண்டான் ஜனமேஜயன் என்கிறத தலவரலாறு.

கிழக்கு நோக்கியது
காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களுள் கிழக்கு நோக்கியபடி அபூர்வமாக அமைந்துள்ள திருக்கோயில், இது ஒன்றே! ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு அருகில், தென்மேற்கே அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரமும், ஒரு பிரகாரமும் கொண்ட அழகிய ஆலயம். காஞ்சிபுரத்தின் பாடகம் என்று அழைக்கப்படுகிறது.

25 அடி உயரம்
தூது சென்ற அந்த மாயவனின் 25 அடி உயரத் திருமேனியைக் கருவறையில் காணும்போது மெய்சிலிர்க்கிறது.
அரவு நாள் கொடியோனவையுளாசனத்தை ஆஞ்சிடாதேயிட, அதற்கு பெரிய மாமேனி அண்டம் உடுறுவப் பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன்! என்று திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வார் செய்த பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று பெரிய திருஉருவாய்க் காட்சி தருகிறார் பாண்டவதூதர்.
அர்ச்சாவதாரங்களுள் இவ்வளவு பெரிய திருஉருவை வேறு எந்த திவ்ய தேசத்திலும் காண இயலாது.
பெருமான் தன்னுடைய ஸெளசீல்யம் எனும் குணத்தைப் பாண்டவர்களுக்காகக் காட்டிய தலமிது... அதனால் திருப்பாடகம் என்பர்.
பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு என பூதத்தாழ்வாரும்.
மறைபாடக மனந்தன் வண்குழாய்க் கண்ணி இறை பாடியாய விவை என்று பேயாழ்வாரும்.
பாடகத்து மூரகத்தும் நின்றிருந்து வெஃகனைக் கிடந்தது என்ன நீர்மையே! என்று திருமழிசை ஆழ்வாரும் போற்றிப் பாடியுள்ளனர்.
மத்ஸ்ய தீர்த்தம், கோயிலின் பிராகாரத்தில் வடகிழக்கில் உள்ளது. ருக்மணித் தயார் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். உள்பிராகாரத்தில் விஷ்வக்சேனர், சுதர்சனர், கருடன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், மணவாளமாமுனிகள் உள்ளனர்.

அங்கப்பிரதட்சணம்
கிருஷ்ணபரமாத்மா, தனது பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளைக் கொண்டு அருளிய தலம் இது. எனவே, இங்கு அங்கப்பிரதட்சணம் செய்தால், துன்பங்கள் அனைத்தும் தொலைந்திடுமாம். ரோகிணி நட்சத்திரக்காரர்களின் அபிமானத்தலமும்கூட!

எம்பெருமானார்
ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் யக்ஞமூர்த்தி வேதசாஸ்திர விற்பன்னர். ஸ்ரீராமானுஜரின் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டபோதிலும், காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார். ஏக தண்டியான ராமானுஜரை, யதிராஜராக அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்வைதக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர்.
தனது கொள்கைகளை வலியுறுத்தி, ராமானுஜரோடு, இத்தலத்தில் வாதம் புரிய வந்தார். பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்தது போல, இருவரின் வாதமும் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது.
பதினேழாம் நாள் யக்ஞமூர்த்தி எழுப்பிய வினா, யதிராஜரையே ஒருநாள் காலக்கெடு கோரும்படி செய்தது. யதிராஜர் பேரருளாளன் வரதராஜனை வேண்டிட, வினாவுக்கான விடை, ஆளவந்தார் அருளிச்செய்த மாயாவாத காண்டத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். பதினெட்டாம் நாள், ராமானுஜரின் விளக்கத்தை கேட்டு யக்ஞமூர்த்தி, தன்னையும் அவரத சிஷ்யராக ஏற்கும்படி மண்டியிட்டார். யக்ஞமூர்த்தியன் பாண்டியத்தியத்திற்கு உரிய மதிப்பு தந்து, ராமானுஜர், அவரை அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்று சிறப்பு தந்து அழைத்திட்டார். பாண்டவதூதர் ஆலயத்தில் எம்பெருமானாருக்கு தனி சந்நதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆவணி மாதத்தில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி, இங்கு பெருவிழா நடைபெறுகிறது. எம்பெருமானாரின் வம்சாவளியினரே திருக்கோயிலை நிர்வகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவாலயத்தினுள்ளே பெருமாள் (நிலா திங்கள் துண்டப்பெருமாள்)
அடுத்து, நாம், ஏகாம்பரநாதர் திருக்கோயிலினுள்ளே அமைந்துள்ள மற்றொரு திவ்ய தேசத்திற்குச் செல்கிறோம். 108 திவ்ய தேசங்களுக்குள் 80-வது திருத்தலம் இது. எப்படி இந்த சந்நதி, சிவாலத்தினுள்ளே வந்தது என்பது புரியாத புதிர்! மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் சந்நதி.
புருஷசூக்த விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் நிலாத்திங்கள் துண்டம் பெருமாள். வைணவத் திருப்பதியாக இருந்தபோதிலும், சிவாகம முறைப்படி. சிவாசாரியார்களே வழிபாடுகள் செய்வதும்; தீர்த்தம் வழங்கி, சடாரி வைப்பதும், தனிச் சிறப்பு ஆகும்.
தல வரலாறு என்ன கூறுகிறது?
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும்போது தனக்கு ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்காக பிரம்மனை நோக்கிப் பிரார்த்திக்கையில், பிரம்மனும், காஞ்சியில் குடிகொண்டுள்ள ஏகம்பரை வணங்கினால், இவ்வெப்பம் நீங்கும் என்று கூறினார்.
அதன்படி திருமால் ஏகம்பன் கோயிலில் ஈசான்ய பாகத்தில் ஈசனை தியானம் செய்கையில், சிவபெருமானின் சிரசிலிருந்து சந்திரனின் ஒளி தன்மீது பட்டு, வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால், நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்று பெயரும் ஏற்பட்டது.
சிவபெருமானின் சாடையில் அணிந்துள்ள பிறை துண்டத்தின் தண்ணொளிபட்டதை, திருமங்கையாழ்வார் போற்றிப் பாடியுள்ளார்.

திருக்கள்வனூர்
நிலாத் திங்கள் துண்டப் பெருமாள் எப்படி ஏகாம்பரநாதர் ஆலயத்தினுள்ளே குடிபுகுந்தாரோ, அதே போல, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலினுள்ளேயும், 85-வது திவ்விய தேசமான திருக்கள்வனூரில் ஆதிவராகப் பெருமாள், குடிகொண்டுள்ளார்.
இத்திருத்தலத்தில் உள்ள பஞ்ச தீர்த்தக்கரையில் உமையம்மையும், மகாலட்சுமியும் உøயாடிக் கொண்டிருந்ததை திருமால் ஒளிந்திருந்து கேட்டதால், பார்வதிதேவி திருமாலுக்கு கள்வன் என்ற பெயரைச் சூட்டினாள்.

சொக்கட்டான் ஆட்டம்!
பார்வதி தேவியும், மகேசனும், சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். ஒருமுறை மகேசுவரன் வெற்றிபெற்றபோது ஆர்ப்பரித்தபோது உமையம்மை சிவனாரின் உடல், அலங்காரம் பற்றி கேலியாகப் பேசினாள். அதனால் சினமுற்ற சிவன், உமையம்மையின் அழகு குன்றிட சபித்தவிட்டார்.
சாபவிமோசனம் வேண்டிய உமையை, காஞ்சிபுரம் சென்று, தவம்புரிந்திட ஆணையிட்டார். பஞ்ச தீர்த்தக்கரையில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து, மீண்டும் ஈசனோடு இணைந்திட்டாள் என்பதே தலவரலாறு.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலினுள்ளே, கருவறையின் வலதுபக்கம், ஆதிவராகப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். பார்வதிக்கு வாமனராக தரிசனம் தந்த திருமால், ஆதிவராக மூர்த்தியாக நிலை கொண்டுள்ளார்.
இடப்புறம், நின்ற கோலத்தில் அஞ்சிலை வல்லி என்ற திருநாமத்துடன் இருகரங்கூப்பியபடி, காட்சி தருகிறார் தாயார். அபய நாச்சியார் என்றும் இவரை அழைப்பர்.
இங்கேயும் பெருமாளுக்கு சிவாச்சாரியார்களே ஆராதனை செய்கிறார்கள்.
நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் மற்றும் திருக்கள்வனூர் ஆதிவராகர் தரிசனமும், சற்று வித்தியாசமானதுதான்!

Comments