வேடர் கோலத்தில் வேலவன்

தமிழகத் திருக்கோயில்கள் தனிச் சிறப்புடையன. அதில் ஒன்று வில்லுடையான்பட்டி.
இத்தலத்தில் முருகன் வள்ளி-தெய்வானை சமேதராகக் காட்சி அளிக்கிறார். திருக்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி, சிவனைப் போன்று ஜடாமுடி தாங்கி, விரிசடையராகக் காணப்படுகிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்திருத்தலம் அடர்ந்த காடாக இருந்தது. முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொள்ளச் சென்ற பொழுது, அவரைக் காணாது முனிவர்களும், தேவர்களும் துயரம் அடைந்து துதிக்க, வடமேற்கே இங்கிருந்து இரண்டரைக் காத தூரத்தில் நாம் காட்சி தருவோம் என்று அருளி மறைந்தார்.
அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் மூவரும் புறப்பட்டு வந்து கொண்டுஇருந்த போது, ஓர் அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவைக் கண்டு மகிழ்ந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த சப்த கன்னியரும் முனிவர்களும் பூசாரிக்குப்பம் என்ற இடத்திலிருந்தே அக்காட்சியைத் தரிசனம் செய்தனர். பின் இத்தலம் அடைந்து அனைவரும் வேண்டினர்.
முருகக்கடவுள் வேடர் கோலத்தில் வள்ளி-தெய்வானை சமேதராகக் காட்சி அளித்ததால் வேலுடையான் பட்டு என வழங்கி, இன்று வில்லுடையான்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தன் வேலாயுதத்தை ஊன்றி ஒரு நீரோடை உண்டாக்கி. இது இனி சரவண தீர்த்தமாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார். சரவண தீர்த்தம், திருக்கோயிலின் நேரே கிழக்கு திசையில் அமைந்துள்ளது. சரவண தீர்த்தத்தினை அடுத்து மதுரை வீரன், ஐயனார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலம். தல விருட்சம் வன்னி மரம்.
இத்தலத்தில் முருகக்கடவுள் தனக்குரிய வேலாயுதத்தைத் தன் திருக்கரத்தில் கொள்ளாது, வேடர் உருவத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் வில்லும், அம்பும் ஏந்தி வேட்டையாடச் செல்லும் கோலத்தில் பாதங்களில் குறடு அணிந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு. வேலுண்டு வினையில்லை என்பதைப் போல வில்லுண்டு பயமில்லை என்று தோற்றம் அளிக்கிறார்.
நுழைவாயில் கோபுரத்தில் திருமுருகனின் திருமணக் காட்சியும், நாரதர் திருமணத்தை நடத்தி வைப்பதைப் போன்றும் அமைக்கப்பட்டு, கோயிலின் வரலாற்றைக் கூறும் வகையில் காட்சி தருகிறது.
பங்குனி உத்திரத் திருவிழா இங்கு 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கொடி ஏற்றம், தேர், தெப்பம், வீதி உலா போன்ற விழாக்களுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் கூடுவர். 10 நாட்களும் பக்தர்கள் வெள்ளம்தான்.
இந்தத் தலத்து வேலவனை தரிசித்தால் விரைவில் மணப்பேறு கிட்டும், மங்களங்கள் சேரும் என்பது நம்பிக்கை.
நெய்வேலி டவுன்ஷிப் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தென்கிழக்கே இவ்வாலயம் அமைந்துள்ளது.

Comments