காவிரி கரையில் அமைந்துள்ள கோவில்களின் தொடர்ச்சி ......

இடைப்பாடி
பொதுவாக, பெருமாள் கோயில்களில் தான் திருமால், `பிரசன்ன' என்ற அடைமொழியைக் கொண்டிருப்பார். ஆனால், சேலம் மாவட்டம், இடைப்பாடி திருத்தலத்தில் சிவபெருமான் `பிரசன்ன நஞ்சுண்டேசுவரராக' எழுந்தருளியுள்ளார்.

சைலம் என்றால் மலைப்பகுதி என்று பொருள். சைலம் என்ற பெயரே சேலம் ஆகியது என்றும் கூறுவர். சேலத்தில் உள்ள சூரியகிரி, சந்திரகிரி ஆகிய மலைகளுக்கு இடையே சரபங்கா ஆறு ஓடுகிறது. சரபங்க முனிவர் தவம் இயற்றிய பகுதி அது. இரு மலைகளுக்கு இடையே அமைந்திருப்பதால் `இடைப்பாடி' எனப் பெயர் பெற்றது. ஆனால் மக்கள் இப்போது அழைப்பது என்னவோ, `எடப்பாடி' என்றுதான்!

ஆற்றின் கரையில்!
சேர்வராயன் மலைப்பகுதியில் தவம் இயற்றியவர் சரபங்க முனிவர். அவரது பெயரைத் தாங்கி நிற்கும் இந்த சரபங்கா நதிக்கரையில், வடக்கு தெற்காக பதினொரு சிவாலயங்கள் அமைந்துள்ளன. ஏகாதச ருத்திரர்கள் என்பது போல பதினொரு சிவாலயங்கள் இருப்பது இப்பகுதியின் சிறப்பு. இவை மைசூர் மன்னர்கள் காலத்தில், புதுப்பிக்கப்பட்டனவாம்.

அதனால்தான், கர்நாடக மாநிலத்து `நஞ்சன்கூடு' தலத்தில் உள்ளதுபோல், இடைப்பாடியிலும் நஞ்சுண்டேசுவரரை ஸ்தாபிதம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது, `அமிர்தம்' வெளிப்படுவதற்கு முன்னதாக, கொடிய `ஆலகால விஷம்' வெளியே வந்தது. திக்கெட்டும் ஓடினார்கள் அசுரர்களும் அமரர்களும். தேவர்கள் கரங்கூப்பி நிற்க, எம்பெருமான் அந்த ஆலகால விஷத்தை தானே உண்ணுகிறார். பதறிப்போனார் பார்வதி! சட்டென்று ஈசனின் கழுத்தை தன் இருகரங்களில் அவள் அழுத்திட, அந்த விஷமானது, ஈசனின் கழுத்திலேயே தங்கியது. நஞ்சை உண்ட ஈசன், நீலகண்டன் ஆனார்.

அந்தத் திருநாமத்துடனேயே இங்கே எழுந்தருளியுள்ளதால், பிரசன்ன நஞ்சுண்டேசுவரர் ஆகியுள்ளார். தேவகிரிநாயகி என்ற திருநாமத்துடன் அன்னையும் இத்தலத்தில் தோன்றி மக்களின் துயர் துடைக்கின்றாள்.

70 அடி உயர ராஜகோபுரம் ஐந்துநிலைகளோடு வானைத் தொடுவது போல் நிற்க, முகப்பில் நாலுகால் மண்டபமும் உள்ளது. கொடி மரத்தையும் நந்தி மண்டபத்தையும் கடந்து சென்றால் உட்பிராகாரத்தை அடைகிறோம். விநாயகர், நால்வர், நர்த்தன கணபதி, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவானையுடன் முருகப் பெருமான், ஆறுமுகன், துர்க்கை,  அருணகிரியார் மற்றும் சண்டி கேசுவரர் உள்ளனர். சனிபகவான் தனிச்சன்னதி கொண்டுள்ளார். தெற்கு நோக்கியபடி தேவகிரி அன்னை காட்சி தருகிறாள். நவகிரக சன்னதியும் சென்ன கேசவப்பெருமாள் சன்னதியும் இருக்கின்றன.

இருபுலி
இடைப்பாடிக்கு வடக்கில் 8 கி.மீ. தொலைவில் சரபங்கா நதிக்கு வடகரையில் அமைந்துள்ளது வியாக்ர பாதர் திருக்கோயில். இரு புலிக்கு தென்கிழக்கில் உள்ளது ஆவணிபேரூர். பசுபதீசுவரர் அருள்பாலிக்கும் தலம் இது. அருகிலேயே உள்ள உலகேசு வரரும் உலகநாயகியும் கொலுவிருக்கும் செட்டிமாங்குறிச்சி.

தாரமங்கலம்
இத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவர் கைலாச நாதர். சிவபெருமானுக்கு பார்வதியை தாரை வார்த்துக் கொடுத்த தலம் என்பதால் `தாரைமங்கலம்' எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். மங்கையை கைலாசநாதர் கரம் பிடித்ததால் `மங் கைநகரம்' என்றும் அழைக்கப்பட்டதாம். இது ஒரு வரலாறு. அதற்குச் சான்று கூறும் வகையில் சிற்பம் ஒன்றும், இந்தக் கோயிலுள்ளே இடம் பெற்றுள்ளது.

மற்றொரு கதை: தாரமங்கலத்துக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது அமரகுந்தி. தேவர்கள் அமர்ந்து இருந்த இடம் என்று பொருள் கொண்டது. இப்பகுதியை கெட்டி முதலி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அப்போது அவனது பசுக்களின் மந்தை, தாரமங்கலம் ஆக இன்று அழைக்கப்படும் தாருகாவனத்தில் மேய்ச்சலுக்குச் சென்று வந்தன. அந்தப் பசுக்களுள் ஒன்றுமட்டும், ஒரு புதரில் தனது பாலை சொரிந்துவிட்டு வந்தததாம். மந்தையில் ஒருபசு மட்டும் சரியாகப் பால்கறக்காததைக் கண்டு, சந்தேகித்த அரசன், அதனைப் பின் தொடர உண்மை தெரிந்தது. பசு பாலைச் சொரிந்த இடத்தில் அழகியதோர் சிவலிங்கத் திருமேனியைக் கண்டு அதிசயித்தான். அன்றிரவு அவனது கனவில் தோன்றிய இறைவன், அந்த இடத்தில் தனக்கு ஒரு கோயிலை உருவாக்கிட அவனுக்கு ஆணையிட்டார். அப்படி உருவானது தான், தாரமங்கலத்து கயிலாசநாதர் திருக்கோயில்.

சகல தோஷங்களையும் நீக்கவல்ல தோஷநிவர்த்தித் தலமாக விளங்கும் வகையில் மேற்குத்திசை நோக்கி அமைக்கப் பட்டுள்ளது கயிலாசநாதர் கோயில். 150 அடி உயரமும், 5 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம், உச்சியில் 7 செப்புக் கலசங்களைக் கொண்டுள்ளது. இரண்டு யானைகள், ராஜ கோபுரத்தை இழுத்துச் செல்வது போல அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலை வலம் வரும் போது, முதலில் விநாயகர் தரிசனம். அவரை அடுத்து பஞ்ச பூத லிங்கங்கள், அதற்கடுத்து சகஸ்ரலிங்கம். வெளிப்பிராகாரத்தில் உள்ளது, குதிரைக்கால் மண்டபம். குதிரை வீரர்கள், வேல்கொண்டு சிறுத்தையைக் குத்துவது போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

அர்த்தமண்ட பத்தின் மேல் விதானத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட `தாமரை' வடிக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிலும் எட்டுச் சங்கிலித் தொடர்கள். தாமரை இதழ்களைக் கொத்தும் கிளிகள், தாமரைமொட்டின் நடுவே சுழலும் வளையும், அஷ்டதிக் பாலர்கள் எல்லாமே ஒரே கல்லில் உருவானவை.

மூலவர் கயிலாசநாதர், மேற்கு முகமாகக் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மூன்று நாட் கள், மாலையில் அந்தி மயங்கும் வேளையில், ஆதவனின் ஒளிக்கதிர்கள், இறைவனின் திருமேனியைத் தழுவுகின்றன. நந்தியம் பெருமானின் இருகொம்புகள் இடையே மட்டும் ஒளி செல்லும் அந்த அற்புதக் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டுமே!

சிவகாமி அம்மையின் சன்னதி, சுவாமி சன்னதிக்கு வட கிழக்கில் அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் சிவகாமசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறாள். அழகு பூரித்து விளங்கும் திரு உருவம் அது. அம்மையின் சன்னதிக்குத் தெற்கில் ஆறுமுகன் தனித்து நிற்கிறார்.

தாரமங்கலத்து சிற்பங்கள் போல, செய்து தர முடியாது என, சிற்பிகள் ஒப்பந்தம் போடுவார்களாம். அத்தனை கலை அழகும் துணுக்கமும் கொண்டவை அவை. வடக்குப் பிராகாரத்தில் நாம் காண்பது பிட்சாடனராக இறைவன் நிற்க, ரிஷிபத்தினிகள் அவரது அழகில் மயங்கி நிற்பதும், காஞ்சி காமாட்சி, ரிஷபாரூடர், மோகினி அவதாரம், காளியும், ஊர்த்துவ தாண்டவரும்தான். காலம் பல ஆனாலும் மனதை விட்டு அகலாது.

அரனின் நெற்றிக்கண் நெருப்பால் சாம்பலான மன்மதன், அவனது மனைவி ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவான் என்று ஈசன் அருளினார். இதனை நாம் சிற்ப வடிவில் இங்கே காண்கிறோம்.

வாலி-சுக்ரீவன் சிற்பங்கள். ராமன் மறைந்திருந்து வாலியை வதம் செய்வது போன்றவையும் உள்ளன. வாலி சிற்பத்தின் அருகில் நின்று பார்த்தால் ராமனை நாம் காண முடியாது. அப்படி ஓர் அமைப்பு - பக்தர்கள் இந்த அதிசயத்தை தங்கள் குழந்தைகளுக்கும் விளக்கிக் கூறுவதை நாம் காணமுடிகிறது.

புராண நிகழ்ச்சிகளை, கண்ணெதிரே நிற்கவைக்கும் அற்புதங்கள், தாரமங்கலத்துச் சிற்பங்கள். ஈடு இணையற்ற இவை என்றும் போற்றத் தக்கவை.

இவை தவிர ஜூர ஹரேசுவரர், ஹயக்ரீவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

இக்கோயிலில் முன் காலத்தில் சுரங்கப்பாதையாகப் பயன்படுத்தப்பட்ட பகுதியில், பாதாள லிங்கேசுவரர் அருள்பாலிக்கிறார். பிரதி செவ்வாய்க்கிழமை காலையில் அவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மன்னன் அரண்மனையிலிருந்து, திருக் கோயிலுக்கு சுரங்கப்பாதை ஒன்று இருந்ததாகக் கூறுவர்.

சேலத்துக்கு நேர்மேற்கில் 26 கி.மீ. தொலைவில் உள்ளது தாரமங்கலம். அடிக்கடி நகரப் பேருந்துகள் வசதி உள்ளன வரதராஜப் பெருமாள் கோயிலும் அருகே உள்ளது.

அமரகுந்தி
தாரமங்கலத்துக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளதே அமரகுந்தி. வீர பத்திரராக, வீரேசுவரர் என்ற திருநாமத்துடன் தனித்து இருக்கிறார் ஈசன். தாரமங்கலத்திற்குத் தெற்கில் உள்ளது உலகேசுவரர் - உலக நாயகியுடன் அருள்பாலிக்கும் தலம் தசவிலக்கு. சரபங்கா நதிக்கரையில் உள்ளது. `தட்ச யாகம் நிகழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது. கொடிமரத்தில் தட்சனுடன் வீரபத்ரர் உருவம் உள்ளது.

ஓமலூர்
தாரமங்கலத்துக்கு வடமேற்கில் உள்ளதுஓமலூர். தாரமங்கலத்தில் நடைபெற்ற சிவ-பார்வதி திருமணத்திற்கு `ஹோமம்' வளர்த்த இடமே ஓமலூர் என்று கூறப்படுகிறது. நீர் எடுத்த இடமே ஜலகண்டபுரம் என்றும், அமரர்கள் தங்கிய இடம் அமரகுந்தி என்றும் செவிவழிச் செய்திகள், நிலவுகின்றன.

சரபங்க முனிவர் ஹோமம் செய்ததலமே ஓமலூர் என்றும் கூறப்படுகிறது.

வசந்தேசுவரர் என்ற திருநாமத்துடன் ஓமலூரில் ஈசன் அருள்பாலிக்கிறார். `உண்ணாமுலையம்மன்' என்ற அபிதகுஜாம்பிகையே அன்னையின் திருநாமம். சரபங்க முனிவர் இத்தலத்தில் சித்தி யடைந்ததாகக் கூறப்படுகிறது.

அருகிலேயே மிகப் பெரிய மகாமண்டபத்துடன் கூடிய விஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளது. `கோதண்ட ராமனாக' சேவை சாதிக்கிறார் எம்பெருமான். ராமன் இத்தலத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது.

கொங்குபட்டி

`சின்னத்திருப்பதி' என்றும் காரவல்லி என்றும் அழைக்கப்படும் வைணவத் தலம் இது. ஓமலூருக்கு வடக்கில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மேல் ஒரு பிராகாரத்துடன் கூடிய அழகிய கோயில்.

மூலவர் வேங்கடாசலபதி 5 அடி உயரம் கொண்டு நின்றகோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயார் அலர்மேலு மங்கை தனிச்சன்னதி கொண்டுள்ளாள். பிராகாரத்தில் ஆஞ்ச நேயரும் விநாயகரும் உள்ளனர். திருமங்கை மன்னரின் திருமேனியும் உள்ளது `பிரசன்ன வேங்கடரமண சுவாமி' என்று பெருமாளை அழைப்பதோடு, வடவேங்கடம் செய்ய முடியாத வர்கள் தங்கள் காணிக்கையை இங்கேயே செலுத்துவதையும் காணலாம்.

நங்கவள்ளி
இடைப்பாடி - மேச்சேரி சாலை நடுவே அமைந்துள்ள திருத்தலமே நங்கவள்ளி. தாரமங்கலத்திற்கு வடமேற்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது.

காரமடை, மொண்டி பாளையம் ஆகிய தலங்களைப் போல இங்கேயும் பெருமாள் சுயம்பு வடிவில், புற்றின் மேலே நிறை கொண்டுள்ளார். வெள்ளிக் கவசத்தை அகற்றிப் பார்க்கும் போது, ரேகைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. சுவாமிக்கு அருகிலேயே புற்றும் உள்ளது. தட்டு வைத்து மூடினாலும், அவ்வப்போது `அனந்தன்' வெளியே வந்து, ஆலயத்தை வலம் வரும் அதிசயம்' இன்றும் நிகழ்கிறதாம்.

`தொட்டி நங்கை' என்ற மங்கை தலையில் ஒரு கூடையைச் சுமந்தவாறு, பிழைப்பைத் தேடி அகோபிலத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள். நங்கவள்ளியை அவள் அடைந்தபோது, அவள் சுமந்து வந்த கூடை கனத்ததாம். என்னவென்று பார்க்க, கூடையை கீழே இறக்கினாள் நங்கை. சாளக்ராம வடிவில், மத்தியில் ரேகையுடன் கூடிய கல் ஒன்றைக் கண்டு அதிசயித்தாள். `இது என்ன கல்லோ' என பயந்து அதனை கீழே எறிந்துவிட்டுப் புறப்பட்டாள். மீண்டும் அதே கல்! மிரண்டு போனாள் பேதை! கூடையோடு அதனை புதர் ஒன்றில் எறிந்துவிட்டு ஓடினாள்.

எதிரில் வந்த வேறு ஒரு பெண், ``நீ தூக்கி எறிந்த கல், சாதாரணமானதல்ல! அகோபில நரசிம்மரே தான் அது! இந்தக் காட்டில் அது போலவே லட்சுமி உருவம் கொண்ட கல் ஒன்றும் இருக்கிறது, அதனையும் தேடிக் கண்டுபிடித்து ஆராதனை செய்!'' என்றாள்.

காலம் கடந்தது.

நரசிம்ம பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிங்கபிரான், தான் இருக்குமிடத்தைக் கூறி, அங்கே தனக்கு ஆலயம் எழுப்புமாறு சொன்னார். சிறிய கோயிலாக அமைந்து, பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் எழுந்தது அழகியதோர் கோயில். கருவறை சுவரில், செப்புத் தகட்டினால் ஆன நரசிம்மர் திருஉருவம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சிலையை எப்போதும் புற்றுமண் மூடிக்கிடக்குமாம். புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்புவதில்லையாம். சபா மண்டபத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. தூண்களில் தசா வதாரம், காளிங்க நடனம், வேடன் கண்ணப்பர், போன்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. சொர்க்க வாசலும் உண்டு.

அருகிலேயே சோமேஸ்வரர் ஆலயமும் உள்ளது. சௌந்தரவல்லி சமேதராக அருள்பாலிக்கிறார். வன்னி மரத்து விநாயகர், நாகர் புற்று, விஷ்ணு துர்க்கை சன்னதிகள் சிறப்பு சேர்க்கின்றன. பௌர்ணமி நாட்களில் நரசிம்மர் ஆலயத்தில் சத்யநாராயண பூஜையும், செவ்வாய் - வெள்ளியில் அரச மரத்து விநாயகருக்கு 1008 சங்காபிஷேகமும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

மேச்சேரி
நங்கவள்ளிக்கு வடமேற்கில், 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேச்சேரி. சுயம்பு மூர்த்தியாக பசுபதீசுவரர் அருள்பாலிக்கிறார். அன்னை, காளியம்மன். மேச்சேரிக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் வெள்ளார் உள்ளது. மல்லிகார்ஜுன சுவாமி அருள் பாலிக்கும் தலம்.

மேட்டூர்
மேச்சேரியிலிருந்து தென் மேற்காகத் திரும்பி, காவிரி புகும் மேட்டூரை அடைகிறோம். நீர் வற்றிடும் காலத்தில், மூழ் கடிக்கப்பட்ட ஜல கண்டேசுவரர் கோயிலையும் பெரிய நந்தியையும் காணமுடியும், ஊருக்குள் உள்ளது மீனாட்சி சொக்கநாதர் கோயில்.

காவேரிபுரம்
மேட்டூருக்கு வடமேற்கில் 16 கி.மீ. தொலைவில் காவேரிபுரம் உள்ளது. ஜலகண்டேசுவரர் அகிலாண்டேசுவரியோடு அருள்பாலிக்கும் தலம் இது.

Comments