கண்களில் நீரில்லை கருவல்லூர் திருக்கோவில் நிலை கண்டபொழுது

ரு காலத்தில் சீரும்,சிறப்புமாகத் திகழ்ந்த பல திருத்தலங்கள் இப்போது சீர்குலைந்திருப்பதைத் தமிழகத்தைச் சுற்றிப் பார்த்தால் தெரியவரும்.ஏராளமான மிகப்பெரிய கோயில்கள்,விலைமதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களாக இருந்தும் இன்று கவனிப்பாரின்றிச் சிதிலமடைந்து கிடக்கின்றன.இவற்றில் பெரும்பாலும் சிறு சிறு கிராமங்களிலேயே காணப்படுகின்றன.
இந்நிலைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியக் காரணம், பாரதம் சுதந்திரம் அடைந்தபின்பு,விவசாயத்தைப் புறக்கணித்து, தொழில்துறையை மட்டுமே அரசாங்கம் அபிவிருத்தி செய்து வந்ததே ஆகும். ஆதலால், ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கிராமங்களைக் காலி செய்துவிட்டு, வேலை தேடி, நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட்டனர். நகரங்களுக்குக் குடிபெயர்ந்து செல்ல முடியாதவர்கள் மட்டும்தான் கிராமங்களில் நீடித்து, வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களிலும் பெரும்பாலானோர் வறுமை நிலையிலேயே வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், திருக்கோயில்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கப்பட்டு, இன்று சீர்குலைந்து நிற்கின்றன. இத்தகைய சோக நிலையிலும்கூட, பொலிவு குன்றாமல், கலையழகு குறையாமல் அவை இருப்பதைக் காணும்போது, நெஞ்சம் புண்ணாகிறது.

அதிலும், வெறி பிடித்த அன்னியர்களால் இடித்து, நாசமாக்கப்பட்ட அழகான கலைச்செல்வங்களான கோயில்களின் இடிபாடுகளைப் பார்க்கும்போது, கட்டுக்கடங்காத துயரம்  மேலிடுகிறது.

கருவலூர்!
இத்தகைய சீர்குலைந்த நகரங்களில் ஒன்றுதான் வரலாற்று ஏடுகளில் சிறப்பான இடம் பெற்றுள்ள கருவலூர் ஆகும். அவினாசியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், அவினாசி - மேட்டுப்பாளையம் சாலையில் இந்த ஊர் உள்ளது. திருப்பூரிலிருந்தும், அவினாசியிலிருந்தும், அன்னூரிலிருந்தும் கணக்கற்ற பேருந்துகள் கருவலூரைத் தொட்டுச் செல்கின்றன.

பேருந்திலிருந்து இறங்கியதும் அழகிய நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. அதன் வழியாகச் சென்றால், பரந்த மைதானமும், அழகிய சிற்பத்தேரும் கண்களைக் கவர்கின்றன.

திருத்தேரைத் தாண்டி நேராகச் சென்றால் சற்று தூரத்தில் மிகப் புராதனமான ஸ்ரீ கங்காதரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சந்நிதியின் உள்ளே சென்றவுடனேயே அது எத்தகைய பழைமையான திருக்கோயில் என்பதை அப்போது ஏற்படும் அதிர்வலைகள் (Vibration) நமக்கு நினைவூட்டுகின்றன. நந்தியெம்பெருமானை வணங்கிவிட்டு உள்ளே சென்றால்,கருவறையில் அளவற்ற தெய்வீக சக்தியுடன் தரிசனமளிக்கிறார். உலகிற்குப் பரம பவித்திரமான கங்கையை அளித்து அளவற்ற கருணைபுரிந்த ஸ்ரீ கங்காதரேஸ்வரர். இத்திருக்கோயில் ஊர் மக்கள் பக்தியினால் ஓரளவு சீர்செய்யப்பட்டு அன்றாட பூஜைகள் நடைபெற்று வந்தாலும்,மேலும் பல திருப்பணிகள் செய்ய வேண்டிய அவசியத்தைக் கோயிலின் இன்றைய நிலை எடுத்துக்காட்டுகிறது.சுமார் 700 ஆண்டு-களுக்கு முன் அன்னியப் படையினர் இத்திருக்கோயிலைக் கடப்பாரைகள் கொண்டு சிதைத்தபோது,இந்துக்களின் இதயம் எவ்வித-மெல்லாம் துடித்திருக்கும் என்பதை நினைத்து நினைத்து, இதயத்திலிருந்து ரத்தம் வடிந்தது.

‘கலைப்பொக்கிஷங்கள் இவை’ என்று கருதியாவது இவற்றை விட்டு வைத்திருக்கலாம். ஆனால் அவர்களது மதவெறி, படைத்தற்கரிய இத்தகைய கலைச்செல்வங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்!
ஸ்ரீ கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி இடிந்த நிலையிலும் பொலிவு குன்றாமல் நிற்கிறது ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ஆலயம். சிதறிக் கிடக்கும் ஒவ்வொரு தூணும் ஒரு கலைப்பொக்கிஷம். அமெரிக்கர்கள் கண்டால் டாலர்களை அள்ளிக் கொடுத்து இச்சிற்பக்களஞ்சியங்களை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச்சென்று விடுவார்கள். ஆனால் இக்கலைப் புதையலுக்குச் சொந்தக்காரர்களான நாமோ இவை பற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஏராளமான தூண்கள் கோயிலைச் சுற்றி சிதறிக் கிடக்கின்றன.ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய பிராகாரம் இருந்துள்ளது என்பதைக் கோயிலின் வெளி மதில்சுவர் எடுத்துக்காட்டுகிறது.மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிக்கப்பட்டிருந்த தூண்களை மீண்டும் நிறுத்தி, இத்திருக்கோயிலைப் புனரமைப்பதற்குப் பல லட்சம் ரூபாய் தேவைப்படும்.

400 மாத்வ குடும்பங்கள்!
கருவலூர் அதன் உன்னத நிலையில் இருந்தபோது,வேதங்களைக் கற்றுணர்ந்து,ஆச்சார அனுஷ்டானங்களில் உயர்ந்த 400மாத்வ குடும்பத்தினர் இங்கு வாழ்ந்து வந்ததாகவும், அக்குடும்பப் பெரியோர்களே இத்திருக்கோயிலையும்,கருவலூரையும் பரிபாலித்து வந்தனர் என்பதையும் இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இப்பெரியோர்-களுக்கு விஜயநகர மன்னர்கள்,ஏராளமான நிலங்களை மான்யமாக அளித்திருந்ததையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைச் செல்வாக்கு மிகுந்த பல தனிநபர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டதாகவும், அவர்கள் கோவை, அவிநாசி, திருப்பூர் போன்ற ஊர்களில் வசித்து வருவதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.இதுபற்றி அரசு விசாரித்தால் விவரங்கள் வெளிவரும்.

கருவறை மூலவர்!
கருவறை மூலவர், ஈடிணையற்ற அழகு வாய்ந்த ஸ்ரீ வேணுகோபாலனின் சிற்பத் திருமேனியாகும். இதன் தனிச்சிறப்பு, இதனை சிறு குச்சி அல்லது கம்பி கொண்டு தட்டினால் சப்த ஸ்வரங்களும் கேட்கும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.



2009-ம் ஆண்டு சிலர் ஒரு லாரியைக் கொண்டுவந்து விலைமதிப்பற்ற இவ்வேணுகோபால பெருமானின் திவ்ய திருச்சிலையை எடுத்துச் சென்றுவிட்டதாக கருவலூர் மக்கள் கூறினர். இந்துக்களின் திருக்கோயில் சொத்துகள் எத்தனை எளிதாகக் கவர்ந்து செல்லப்படுகின்றன என்பதை நினைத்தபோது மனதில் ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

இடிபாடுகளைத் தாண்டி, கருவறையில் நுழைகிறோம். அதற்கான ஆகம, சிற்ப சாஸ்திர விதிகளிலிருந்து சிறிதளவும் வழுவாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கற்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது அழகிய கர்ப்பக்கிரகம். மேலே அழகிய விமானம். பழுதடைந்த நிலையிலும், அழகு குறையாமல் இருந்தது மனதிற்குச் சிறிது ஆறுதலை அளித்தது. மூலவர் இருந்த பீடத்திற்கடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட யந்திரங்கள் பிறர் கைபடாமல் இருப்பதன் சக்தியினால்,அச்சிறு கருவறையினுள் நுழைந்த போது இனம்புரியாத அதிர்வலைகள் ஏற்பட்டதை அனுபவத்தில் உணர்ந்தேன். அவ்விடத்தில் கால் வைக்க மனம் மறுத்தது. இடிந்த நிலையிலும் அதன் சக்தி சிறிதளவும் குறையாமல் இருந்ததைக் கண்டு நம் மூதாதையரின் தெய்வீக மந்திர சாஸ்திர திறனையும் கண்டு வியந்தேன். இதே அதிர்வலையை, க்ஷீணமடைந்த நிலையில் இருக்கும் தாயார் சந்நிதியிலும் அனுபவித்தேன்.

ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்!
இத்திருக்கோயிலின் அற்புதமான உற்சவமூர்த்திகள், பாதுகாப்பு கருதி, ஊரின் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இம்மாரியம்மன் திருக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையினரால் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இவை தவிர ஏராளமான சிறுசிறு சுற்றுக்கோயில்களும் இவ்வூரில் உள்ளன.

திருத்தலத்தின் பழைமை!
பரம சிவபக்தரான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், அவிநாசி திருத்தலத்திற்கு எழுந்தருளியபோது முதலை விழுங்கிய பாலகன் ஒருவனை, முதலை வாயிலிருந்து மீட்க, அக்குளக்கரையில் நின்று திருப்பதிகம் பாடியபோது, கருவலூரில் கருமேகம் தோன்றி,அவ்வூரின் நள்ளாற்றில் பெருமழை பொழிந்து,அந்த நீர் பெருகிச் சென்று அவிநாசி குளத்தை நிரப்பியது! அந்நீர்ப் பெருக்கில் தோன்றிய முதலை, சிறுவனை ஆரூர் பெருமானிடம் சேர்த்தது எனத் தலபுராணம் கூறுகிறது.அந்த மேகம் இவ்வூர் வரப்பின் கருவிலிருந்து மழை பொழிந்த காரணத்தால் கருவலூர் என்ற பெயராக அமைந்தது என்பது கர்ண பரம்பரைச் செய்தியாகும்.

காமதேனு வழிபட்ட தலம்!
கருவலூரில் உள்ள நல்லாற்றில் தேவப்பசுவான காமதேனு நீராடி,ஸ்ரீ கங்காதரேஸ்வரரை வழிபட்டு,அதன் பயனாக கருவுற்றுக் கன்றினை ஈன்றதால் ‘கருவலூர்’எனப் பெயர் பெற்றது எனத் தலபுராணம் கூறுகிறது.
இந்துசமய அறநிலையத்துறைக்கு அன்பான வேண்டுகோள்!

ஒரு காலத்தில் மிகப்பெரிய திருக்கோயிலாகப் புகழ்பெற்று விளங்கிய கருவலூர் ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகும்.இதனை உடனடியாக ஆய்வு செய்து மீண்டும் புனர்நிர்மாணம் செய்து உதவும்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.



கோயில் சற்று பெரிதாக இருப்பதால் ஊர் மக்களால் மட்டுமே இப்பொறுப்பைச் சாதிக்கமுடியாது. அறநிலையத்துறை மனம் வைத்தால் மீண்டும் இத்திருக்கோயில் புத்தொளி பெற்றுத் திகழும்.மேலும் விலை-மதிப்பற்ற ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி மூலவர் சிலையை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறோம்.அற்புதமான இத்திருக்-கோயிலை நாம் இழந்துவிடக்கூடாது.

Comments