சோகத்தை போக்கும் சனபிரட்டி சக்கரவர்த்திதிருமகன்

கவான் அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருப்பினும் அவற்றில் தனி தெய்வீகச் சிறப்பு வாய்ந்தது ஸ்ரீ ராமாவதாரம்.  ஸ்ரீ ராமாவதாரத்தில் மட்டும்தான் பகவான் தான் பரம்பொருள் என்பதை வெளிக்காட்டாமலேயே சாதாரண மனிதனாக, கர்மத்தின் பிடியில் அகப்பட்டு, வாழ்வதைப் போல்,  இன்ப, துன்பங்கள், சுக, துக்கங்கள் ஆகியவற்றை அனுபவித்து, சராசரி மனிதன் எத்தகைய சோதனைகள் ஏற்பட்டாலும் எவ்விதம் தர்மநெறியின்படி நடந்துகொள்ளவே ண்டும் என்பதைத் தானே வாழ்ந்து காட்டிய அவதாரம் ஸ்ரீ ராமாவதாரம்.
ஸ்ரீ ராமபிரான் அவதரித்தது இஷ்வாகு குலத்தில். இக்குலத்தில் உதித்த அனைத்து மன்னர்களுமே தர்மநெறி தவறாமல் இப்பாரத பூமியை ஆண்டு வந்தனர். இவர்கள்  தர்மமே தெய்வம்; தெய்வமே தர்மம் என்று அரசாட்சி செய்து வந்தனர்.

எத்தனையோ எடுத்துச் சொல்லியும் மக்கள் தர்மநெறியிலேயே மனஉறுதியுடன் நிலைத்திருக்காததால் பகவான் ஸ்ரீமந் நாராயணன் தானே ஸ்ரீ ராமபிரானாக அவதரித்து,  எத்தகைய சோதனைகள் ஏற்பட்டாலும், எவ்விதம் நடந்துகொள்ளவேண்டும் என்பதைத் தானே நடந்துகாட்டிய திவ்ய அவதாரம் ராமாவதாரம்.

ஆதலால், ஸ்ரீ ராமபிரான் தனது அவதார காரியம் முடிந்து வைகுண்டத்திற்கு எழுந்தருளிய பின்பு அவனுக்காக அழகான பல திருக்கோயில்களை நிர்மாணித்து, அவற்றில்  ஸ்ரீ சீதா, லட்சுமண, பரத, சத்ருக்கன சமேதனாக அவனை அர்ச்சாவதார மூர்த்தியாகப் பிரதிஷ்டை செய்து, இன்றும் பூஜித்து வருகின்றனர். பாவங்களைப் போக்குவதில்  ராமநாமத்திற்கும், ராமாயணத்திற்கும் ஈடிணை கிடையாது. இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள திருக்கோயில்களில் வடுவூர், கும்பகோணம்,  ஓரகடம், தில்லைவளாகம், மதுராந்தகம், திருவஹிந்திரபுரம், புன்னைநல்லூர், பொன்பதர்கூடம், சனப்பிரட்டி ஆகிய திருக்கோயில்களைக் கூறலாம். இத்திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் கோதண்டராமனின் பேரழகைச் சாதாரண வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இத்திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள கோதண்டராமன் மற்றும்  அன்னை சீதாதேவி, ஸ்ரீ லட்சுமணன்,

ஸ்ரீ அனுமன் ஆகியோரின் திருமேனிகள் சிற்பிகளால் வடிக்கப்பட்டிருக்க முடியாது.

ஸ்ரீ ராமபிரானே மனம் உவந்து இத்தனை அழகனாக நமக்காக எழுந்தருளியுள்ளானோ என நினைக்கும்படி அழகிற்கு அழகு செய்யும் பேரழகனாக எழுந்தருளியி ருக்கிறான்.

துரதிருஷ்டவசமாக, பெரும்பான்மையான இத்திருக்கோயில்கள் இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றன. ஒவ்வொரு ராமனும் நம்மை பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு வித  அழகுடன் பிரகாசிக்கிறான். இத்திருக்கோயில்களை அழிவிலிருந்து எவ்விதமாவது    பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் பெரும்பாடுபட்டு வருகிறார்கள்.

சனப்பிரட்டி
இத்தகைய அற்புதமானதும், புராதனமானதுமான திருக்கோயில்களில் ஒன்றுதான் கரூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் தன்னிகரற்று விளங்கும் சனப்பிரட்டி ஸ்ரீ கோதண்ட ராமபிரான் திருக்கோயிலாகும்.

புராதன காலத்தில் இத்திருத்தலம்
ஸ்ரீநரசிம்ம சமுத்திரம் எனப் பிரசித்தி பெற்று விளங்கியது. டில்லி சுல்தானின் தளபதியான மாலிக்காபூரின் 2-வது படையெடுப்பின்போது இங்கு விளங்கிய ஸ்ரீநரசிம்மனின்  திருக்கோயில் அடியோடு அழிக்கப்பட்டு, அழகான உற்சவமூர்த்தி கவர்ந்து செல்லப்பட்டது. மூலவர் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரைக் காப்பாற்றும் பொருட்டு அப்பகுதியில் ஏதோ ஓர் இடத்தில் ஸ்ரீ நரசிம்மப் பெருமானைப் பூமிக்கடியிலோ அல்லது இன்றும் அங்குள்ள கிணற்றிலோ  மறைத்து விட்டார்கள் - வேறு வழியின்றி! அதிலிருந்து இன்றுவரை ஏராளமான பக்தர்களின் கனவில் அந்த ஸ்ரீலட்சுமிநரசிம்மன் தோன்றி, தான் பூமிக்கு அடியில்  மறைக்கப்பட்டிருப்பதாகவும் தன்னை வெளிக்கொணர்ந்து திருக்கோயிலைப் புனரமைத்து, மீண்டும் எழுந்தருளச் செய்யுமாறும் பணித்து வருகிறார். இதுபற்றி பல தடவை  கேரளத்திலிருந்து பல பெரியோர்களை வரவழைத்து பிரச்சன்னம் கேட்டதில், சனப்பிரட்டி ஊரில் ஏதோ ஓர் இடத்தில் ஸ்ரீநரசிம்மன் இருப்பதாகவும் உரிய காலத்தில் அவர்  வெளிப்படுவார் என்றும் பிரச்சன்னம் கூறியுள்ளனர். மக்களும் அந்த ஸ்ரீ நரசிம்மனை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும் என்ற ஆதங்கத்தில் முயற்சி செய்து வ ருகின்றனர். இதற்கிடையில் ஸ்ரீ கோதண்ட ராமரின் திருக்கோயிலையாவது புனர்நிர்மாணம் செய்யவேண்டும் என்று பக்தர்கள் ஒன்றுகூடி ‘நரசிம்ம சமுத்திரம் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பினை ஏற்படுத்தி, திருப்பணிகள் நடந்து வருகின்றன.

திருக்கோயிலின் பழைமை!
அமராவதி நதியின் கரையில் அமைந்துள்ளது சனப்பிரட்டி என்ற கிராமம். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு கரூர் உட்பட்டிருந்தபோது சனப்பிரட்டி  மிக முக்கியமான பெரிய ஊர்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. அப்போது இந்த ஸ்ரீ கோதண்டராமன் திருக்கோயிலும், அருகிலுள்ள ஸ்ரீ விருத்தாசலேஸ்வரர் திருக்கோயிலும் மிகப் பிரசித்திபெற்று விளங்கின. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நான்கு வேதங்களையும் கற்றறிந்த பெரியோர்கள் ஜடாவல்லபர்  என்ற பெரியவரின் தலைமையில் நரசிம்ம சமுத்திரம் ஊருக்கு குடிபெயர்ந்தனர். சாம வேதத்தில் திறமை வாய்ந்த பெரியோர்கள் விருத்தாசலம்
ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து கொண்டுவந்த புனித மண்ணை அஸ்திவாரத்தில் சேர்த்து அதன்மீது விருத்தாசலேஸ்வரர் திருக்கோயிலை நிர்மாணித்தனர்.  ஆதலால் இரவு பகல் எந்நேரத்திலும் இத்திருக்கோயிலிலிருந்து சாமவேதம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சனப்பிரட்டியின் பெருமை!
ஸ்ரீ ராமபிரான் தேவி சீதாபிராட்டியைத் தேடிக்கொண்டு இலங்கை நோக்கி வந்தபோது அமராவதி  நதிக்கரையில் உள்ள சனப்பிரட்டி ஊரில் ஓரிரவு தங்கியிருந்ததாகத்  தலவரலாறு கூறுகிறது. அதனால் மேலும் தெய்வீகச் சிறப்பினைப் பெற்றது இவ்வூர்!

ஸ்ரீ ராமபிரான் மற்றும் அவருடைய தம்பி ஸ்ரீ லட்சுமணரின் திருவடிகள் பட்டு புனிதமடைந்த பரம பவித்திரமான இத்திருத்தலத்தில் ஸ்ரீ ராமபிரான் எழுந்தருளியிருந்த போது, அப்போது ஆரண்யமாக (காடு) இருந்த இப்பகுதியில் தவம்புரிந்து கொண்டிருந்த மகரிஷிகள் ஸ்ரீ ராமபிரானைத் தரிசிக்கும் பேறு பெற்றனர். இறைவனைத் தேடி  இம்முனிவர்கள் செல்வதற்குப் பதிலாக, அவதார புருஷரான ஸ்ரீ ராமபிரானே தங்களைத் தேடி, நாடி வந்ததாக பரமானந்தப்பட்ட இம்மாமுனிவர்கள், அங்கிருந்த கனிவர்க் கங்களை (பழங்கள்) ஸ்ரீ ராமபிரானுக்கும், இளைய பிரானுக்கும் (லட்சுமணர்) கொடுத்து உபசரித்து மகிழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயில் இன்றிருக்கும் நிலையைக் கண்டு வருந்திய பக்தர்கள், ஸ்ரீராமபிரானின் திருக்கோயிலைச் சீரமைப்பதற்காக, பரமராம  பக்தரான திரு. ஆர். ஜெயராமன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, ‘நரசிம்ம சமுத்திரம் நற்பணி  மன்றம்’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி, தற்போது ஓரளவு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது மிகப் பழைமையான இத்திருக்கோயில்.

ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் இத்திருக்கோயில் நல்ல நிலையில் இருந்தபோது, மானியங்களாக நிறைய  நிலங்களை அளித்துள்ளனர். அவை அனைத்தும் தற்போது எவர் கைகளில் உள்ளன என்பது தெரியவில்லை.

பிளந்து நிற்கும் பெரிய தூண்களையும், செதுக்கப்பட்டுள்ள அனுமன், கருடன், சங்கு சக்கரம், சிதிலமடைந்த முகமண்டபம் ஆகியவற்றின் நிலைமையையும் காணும்போது  நெஞ்சமெல்லாம் பதறுகிறது. நம்மாழ்வாரும், குலசேகர ஆழ்வாரும், விஷ்வக்சேனரும், துவாரபாலகர்களும் அழகிற்கு அணிசெய்வதுபோல் அழகாகக் காட்சி தருகின்றனர்.  கருவறையில் அழகனாக ஸ்ரீராமபிரானும், கற்பிற்கோர் அணிகலனாக அன்னை சீதையும், ஸ்ரீ ராமகைங்கர்யத்தில் உயர்ந்தவனான
ஸ்ரீ லட்சுமணனும், ஸ்ரீ ராமதாசனான ஸ்ரீ அனுமனும் மூலவர்களாக சேவை தருகிறார்கள். இதனைக் காண கண்கோடி வேண்டும். உற்சவ விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி  வேறொரு திருக்கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

சிருங்கேரி மடாதிபதி
ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி அவர்கள் சனப்பிரட்டிக்கு விஜயம் செய்ததோடு, ஒரு ஸ்லோகமும் இயற்றியுள்ளார்.

தமிழக பக்தர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறது அற்புதமான இத்திருக்கோயில். அவரவர் வசதிக்குட்பட்டு,  புராதனமான இத்திருக்கோயிலில் மீதமுள்ள திருப்பணிக்கு  முடிந்த அளவு உதவும்படி வேண்டுகிறோம். எம்பெருமானின் திவ்ய கைங்கர்யத்திற்கு அவன் ஒருவனால்தான் கைம்மாறு செய்யமுடியும். அதைச் செய்ய ஒருநாளும்  தவறமாட்டான் அந்தப் பிரபு. உதவிட விரும்பும் அன்பர்கள்
‘Narasimha Samudram Narpani Mandram
A/c No. 475958654, Indian Bank,
Thillai Nagar, Trichy’ என்ற பெயரில் வரைவோலையாகவோ, காசோலையாகவோ எடுத்து, கீழ்க்கண்ட    முகவரிக்கு அனுப்பி     வைக்கும்படி வேண்டுகிறோம்.

திரு. ஆர். ஜெயராமன்,
9, விஸ்வநாதபுரம், தென்னூர்,
திருச்சி-620 017.
போன் : 0431 - 4023129

குறிப்பு : கரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது சனப்பிரட்டி திருத்தலம்.

Comments