மாநிலம் காக்கும் மகாபுருஷருக்கு மகத்தான மணிமண்டப

கவான் பரம கருணை உள்ளம் படைத்தவர்.தனது சிருஷ்டியில் மனிதனுக்குச் சுதந்திரமாகச் செயல்படும் திறனை அளித்திருக்கிறார் படைப்புக்கடவுளான பிரம்மதேவர்.இந்தச் சுதந்திரமே மனிதனுடைய மனதில் பலவித சபலங்களையும் ஏற்படுத்தி,அந்தச் சபலங்களின் காரணமாகப் பல தவறுகளை (பாவங்கள்) செய்து அதன் விளைவாக, பல கிரக தோஷங்களையும் அடைந்து வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.இருப்பினும், பெற்ற தாயினும் பேரன்புடைய பகவான் அவ்வப்போது நம் மனதில் ஏற்படும் தவறான எண்ணங்களில் வீழ்ந்துவிடாமல் நல்வழி காட்டி நம்மைக் காத்தருள பல அவதாரப் புருஷர்களையும், அருளாளர்களையும், பெரியோர்களையும், நன்னெறியாளர்களையும் அவதரிக்கச் செய்கிறான். அவர்கள் அனைவருக்கும் தனது சக்தியையும், அம்சத்தையும் அளித்து, தெய்வீகப் புருஷர்களாகத் திகழும்படி அருள் புரிகிறான். அதனால், அம்மகான்கள் அளவற்ற தெய்வீக சக்தியைப் பெற்று, முக்காலங்களையும் உணர்ந்து, தங்களை நாடிவரும் ஒவ்வொருவரின் மனபலவீனங்களையும், குறைகளையும் கண்டறிந்து, அத்தகைய பலவீனங்-களையும், குறைகளையும் போக்கி, தூய்மைப்படுத்துகின்றனர். அவ்விதம் தூய்மைப்படுத்தும்போதே நாமும் இறையருள் பெற்று, இறைவனுக்கு மிகவும் சமீபத்தில் செல்வதுடன்,ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறைவனுடன் ஐக்கியமாகி பிறப்பு - இறப்பு - மறுபிறவியற்ற முக்தி நிலையையும் பெற்றுவிடுகிறோம்.

காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ மகா பெரியவர்!
இவ்விதம் பகவானுடைய எல்லையற்ற கருணையினால் நமக்குக் கிடைத்த மாபெரும் செல்வமே காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தை, அதன் 68-வது பீடாதிபதியாக அலங்கரித்து, 100 ஆண்டுகள் அருள்பாலித்து, தற்போது ஜீவன் முக்தராக காஞ்சி காமகோடி மடத்தில் ஜீவ பிருந்தாவனத்தில் எழுந்தருளி,அவரது திவ்ய திருவடிகளைப் பூஜிப்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும், ஆசார்யனாகவும் (குரு), நண்பனாகவும் துணையிருந்து காப்பாற்றிவரும் மகாபெரியவாள் என்று கோடானு கோடி மக்கள் பிரேமையுடன் பூஜித்துவரும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளாவர்.

‘நகரேஷு காஞ்சி’ என மகாகவி காளிதாசனால் போற்றிப் புகழுப்பட்டதும், மிகப் புனிதமானதும்,ஏராளமான புண்ணிய தீர்த்தங்களினாலும், வானளாவிய கோபுரங்களினாலும் ருத்ரகோடியில் ஸ்ரீ ஏகாம்பரநாதரும், காமகோடியில் பரம கருணைவாய்ந்த அம்பிகை ஸ்ரீ காமாட்சியும், புண்ணிய கோடியில் பக்தர்கள் கேட்டவற்றையெல்லாம் இல்லை-யெனாமல் உடனுக்குடன் அளிப்பவரான ஸ்ரீ வரதராஜப் பெருமானும் அருள்பாலிக்கும், அழகிற்கு அழகு சேர்க்கும் காஞ்சி மிகப் புராதனமான மகாக்ஷேத்திரமாகும்.

ஏழு மோட்சபுரிகளில் முதல் மோட்சபுரியாகவும், 51 சக்தி பீடங்களில் நாபி ஸ்தானமான சக்தி பீடமாகவும்,பராசக்தி ஸ்வரூபிணியாகவும், காமகோஷ்டத்தில் அமர்ந்து தன் கடைக்கண் பார்வையாலேயே துன்பங்களைப் போக்கியருளும் ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தெய்வீக சக்தி பெற்றுத் திகழ்கிறது ஸ்ரீ காஞ்சி.சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்து கோடி சூர்ய பிரகாசத்துடன் பிரகாசிக்கிறது காஞ்சி.

வேத தர்மத்திற்குத் தன்னிகரற்ற சேவை செய்த அவதார புருஷரான ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்,வாதத்தில் அனைத்துப் பண்டிதர்களையும் வென்று சர்வஞ்ய பீடம் ஏறி ஸ்ரீ காம கோஷ்டத்தையும்,ஸ்ரீ சக்ர மகா யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்து ஸ்ரீ காமகோடி பீடத்தில் தானே அமர்ந்து திருக்கயிலையிலிருந்து தான் கொண்டு வந்திருந்த யோக லிங்கத்தைத் தினமும் மூன்று வேளை பூஜை செய்து அனுகிரகிக்கும் ஸ்ரீ மூலாம்நாய சர்வஞ்ய பீட சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் மடம் காஞ்சி க்ஷேத்திரத்தை மேலும் பட்டொளி வீசி பிரகாசிக்கச் செய்கிறது.

இத்தகைய தெய்வீகப் பெருமைபெற்ற காஞ்சி புண்ணிய க்ஷேத்திரத்தில் திகழும் காமகோடி பீடத்திற்கு மேலும் தெய்வீக சக்தியையும், பெருமையையும் அளித்த மகாபுருஷர் ஸ்ரீ மகா ஸ்வாமிகள்.


இம்மகான் பக்தர்கள்மீது கொண்டிருந்த வாத்ஸல்யமும் சனாதனதர்மத்தின்மீது வைத்திருந்த ஈடுபாடும், அவரது எல்லையற்ற திவ்ய ஞானமும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. கடலுக்கும் கரை உண்டு.ஆனால் இம்மகானின் கருணைக்குக் கரை என்பதே கிடையாது. சிவபெருமானே தன் குழந்தைகளை ரட்சிப்பதற்காக மகா பெரியவரின் திவ்ய திருமேனியனாக எழுந்தருளிவிட்டானோ என்று உலகமே வியந்து நிற்கும் அளவற்ற தேஜஸ்ஸுடன், இம்மகான் தனது அவதார காலத்தில் தன் பக்தர்களுக்குக் காட்டியுள்ள கருணையும், செய்துள்ள உதவிகளும், காட்டிய நன்னெறிகளும் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு எல்லை கடந்து இருந்தன.

நினைத்தால் பாவம் போகும். பூஜித்தால் புண்ணியம் தேடிவரும். இன்றும் தன்னை நினைத்துப் பூஜிக்கும் பக்தர்களுக்கு இம்மகான் காஞ்சி காமகோடி ஸ்ரீமடத்தில் தன் ஜீவ பிருந்தாவனத்தில் அமர்ந்து, கருணை காட்டி துன்பங்களிலிருந்து விடுவிக்கும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. மகா பெரியவரின் எந்தக் கருணையை நினைத்து நாம் எவ்விதம் முழுமையாக விவரிக்க இயலும்? அம்மகானின் ஒவ்வொரு கருணையும், பக்தர்கள்பால் அவர் கொண்டுள்ள வாத்சல்யத்திற்கு ஓர் உதாரணமாகும்.

அருளாளர்களின் கருணை!
ஏதோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பகவானின் கடலணைய கருணையினால் இப்பூவுலகில் அவதரிக்கின்றனர்.ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு, இம்மகா புருஷர்கள் தங்கள் திவ்ய சரீரத்தை விட்டு வெளிவந்து தங்களது ஜீவ பிருந்தாவனத்தில் இருந்து நம்மை அவர்களது தவவலிமையால் காப்பாற்றி வருகின்றனர். தங்களது அவதார காலம் முடிந்த பின்பும்கூட நம்மை இக்கலியில் அனாதைகளாக விட்டுவிட மகான்களின் கருணையுள்ளம் இடம் தருவதில்லை. ஆதலால்தான், ஜீவபிருந்தாவனங்களில் தொடர்ந்து எழுந்தருளி நமக்குத் துணையிருந்து வருகிறார்கள். இவ்விதம்தான் கிடைத்தற்கரிய மகா பெரியவரும் நம் ஜீவித காலத்தில் இன்றும் நமக்குத் துணையிருந்து வருகிறார்.



இவ்விதம் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதய கமலங்களில் எழுந்தருளியிருக்கும் இம்மகானுக்கு ஒரு திருச்சந்நிதியை நிர்மாணித்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவா பக்தர்களின் மனதில் மிகப் பெரிய ஆவலாய் இருந்து வந்தது. இறைவனே நமக்கு அளித்தருளிய இம்மகாபுருஷருக்கு நாம் திருக்கோயில் நிர்மாணிக்க வேண்டும் என்றால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆதலால், ஒரு மணிமண்டபத்தையாவது சமர்ப்பித்து மனநிறைவு பெறவேண்டும் என்ற பக்திபூர்வமான ஆசை பக்தர்களின் மனதில் வளர்ந்து வந்தது. அதற்கு ஏற்ற இடம் காஞ்சிபுரத்துக்கு அருகில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஓரிக்கையைவிட ஓர் உயர்ந்த தலம் இருக்கமுடியாது என்பதை உணர்ந்த மக்கள்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் அறக்கட்டளை என்ற அமைப்பினைச் சீடர்களும், பக்தர்களும் ஒன்றுகூடி,அணையா விளக்காகத் திகழும் அற்புத மணிமண்டபம் அமைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்டார்கள். காலமனைத்தும் கடந்த கருணையெம்பெருமானான மகா பெரியவருக்குக் காலத்தையெல்லாம் கடந்து நிற்கும் அளவிற்குக் கருங்கல்லினால் அற்புதமான மணிமண்டபத்தை நிர்மாணிக்க அரும்பாடுபட்டனர் இந்த அறக்கட்டளையினர். இம்மகாபுருஷரின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மனமுவந்து, நன்கொடை அளித்து மகிழ்ந்தனர். அவர்களில் பலரும் தங்கள் பெயரைக்கூட வெளியிட விரும்பவில்லை.



சுமார் 100 அடி உயர விமானம். 100 தூண்கள் கொண்ட மகா மண்டபம், பாதுகா மண்டபம், ருத்ராட்ச மண்டபம், கர்ப்பக்கிரகம் ஆகியவற்றுடன் ஒரு சிற்ப அதிசயமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு இணையான பேரழகுடன் இம்மணிமண்டபத்தின் முதல் கட்டம் இப்போது நிறைவேறியுள்ளது.தமிழகத்தின் பிரசித்திபெற்ற சிற்பக்கலை மறைந்து போய் விட்டதோ என தமிழக மக்கள் வேதனையுடன் உள்ள இக்காலகட்டத்தில். ‘இல்லை - இல்லை!’ எனும்படியாக இம்மணிமண்டபம் ஒரு சிற்பக் களஞ்சியமாக கல் அழகுப் பெட்டகமாக அமைந்திருப்பது ஸ்ரீ மகா ஸ்வாமிகளின் அனுக்கிரகத்தால்தான் என்பதே உண்மை.

Comments