உத்தமர் பூஜிக்கும் உத்தர மாயுரம்

மிழகம் தெய்வம் உறையும் புண்ணிய பூமி. அதிலும், தஞ்சை மாவட்டம் தனிச்சிறப்புப் பெற்ற பூமியாகும்.எத்தனை எத்தனை மகாபுருஷர்கள்! கங்கையின் புனிதமாய அன்னை காவிரியின் கருணை-யினால் ‘சோழ நன்னாடு சோறுடைத்து’ என ஆன்றோர்களால் புகழப்பட்ட தெய்வபூமி,தஞ்சையும் தஞ்சையை அடுத்த அனைத்துப் புண்ணிய தலங்களும்.
இத்தகைய புராதன திருத்தலங்களில் எவை பெரியவை, எவை சிறியவை, எவற்றிற்குச் சக்தி அதிகம் என வரையறுத்துக் கூறமுடியாத அளவிற்குப் புராதன பெருமையும்,சக்தியும் கொண்டவை.ஒவ்வொரு திருத்தலத்திலும், பிரத்தியேக சக்திகள் கொண்ட யந்திரங்கள் மந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், ஒவ்வொரு திருக்கோயிலும் சில குறிப்பிட்ட கிரக தோஷங்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இவற்றிலும், ஒருசில க்ஷேத்திரங்கள் மரணத்தையும் வென்று நீண்ட ஆயுளைத் தரும் அளவிற்கு வீர்யமும், விசேஷ சக்தியும் பெற்றவை ஆகும்.

சில தலங்கள் கல்வி அபிவிருத்தியை அளிக்கும். ஸ்ரீ வாஞ்சியம் போன்ற ஒரு சில தலங்கள் கொடிய வியாதிகளைப் போக்கும். விதிவசத்தினால், குணமளிக்க முடியாத வியாதியாக இருப்பின் நோயாளிகளுக்கு ஏற்படும் மரண வேதனையையும் பெருமளவில் குறைக்கும் சக்தி கொண்டவை சில.

ஸ்ரீ வள்ளலார் கோயில்!
இவ்விதம் ரகசிய சூட்சுமங்களும்,அளவற்ற மந்திரசக்தியும் கொண்ட க்ஷேத்திரம் மயிலாடுதுறை ஸ்ரீ வள்ளலார் கோயில்.இந்த க்ஷேத்திரத்திற்கு உத்திர மாயூரம் என்ற பெயரும் உண்டு.இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஞானாம்பிகா சமேத ஸ்ரீ வதான்யேஸ்வரர் ஸ்வாமி ஞானத்தையும், தர்மநெறியையும் அளிப்பதில் பிரத்யேக சக்தி கொண்ட பெருமான்.இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமேதா தட்சிணா-மூர்த்தி வித்யா உயர்வை (கல்வி முன்னேற்றம்) அளிப்பதில் தன்னிகரற்ற பெருமானாவார். காசிக்குச் சமமாகப் பூஜிக்கப்படும் இத்திருத்தலத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டு ஞானஉபதேசம் பெற்ற மகரிஷிகளில் கண்வ மகரிஷி, அகத்தியர் ஆகியோரைக் கூறலாம்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நவக்கிரகங்களில் எவ்வித தோஷமும் இல்லாத பரிபூரண சுபக்கிரகமான குருபகவானே ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஞானாம்பிகா சமேத ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமியைப் பூஜித்து அனுக்கிரகம் பெற்ற தனிச்சிறப்பு இத்தலத்திற்குரிய பெருமையாகும்.சப்தமாதர்களில் சாமுண்டி பூஜித்த திருத்தலமும் இதுதான்.

பூங்கமல வதனமும் கருணை பொழியும் நயனமும் கொண்டு புன்முறுவல் பூக்கும் தன் அருள் நோக்கால், தரிசித்த அந்த விநாடியே தன்னை நாடிவரும் அன்பர்களின் இன்னல்களைப் போக்கி அருளும் இப்பெருமானின் பெருமையை ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் ‘ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி திருவருட்பா’ என்ற பத்துப் பாடல்களால் போற்றிப் பூஜித்துள்ளார்.படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை இப்பாடல்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் பிரசித்திபெற்ற ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ‘வதான்யம் சங்கரம் பஜரே’ என்ற அருமையான நெஞ்சை நெகிழ வைக்கும் கீர்த்தனையைப் பாடி இப்பெருமானை அர்ச்சித்திருக்கிறார்.

பரிகாரத்தலம்!
சகவாச தோஷத்தினால் படிப்பில் கவனம் செலுத்தாது, பெற்றோர்களுக்குக் கவலை தரும் பெண்கள், பிள்ளைகள் ஆகியோரின் ஜாதக தோஷத்திற்குச் சக்திவாய்ந்த பரிகாரத் தலம் ஸ்ரீ வள்ளலார் கோயில்.கிடைத்தற்கரிய தெய்வீகப் பொக்கிஷமான இத்திருக்-கோயிலைக் குழந்தைகளுடன் சென்று தரிசித்து, குழந்தைகளின் கல்வி, நடத்தை பற்றிய தோஷங்கள் நீங்கி நிம்மதியும்,மகிழ்ச்சியும் பெற வேண்டுகிறோம்.

முகவரி :
ஸ்ரீ வள்ளலார் கோயில் தேவஸ்தானம்,
மயிலாடுதுறை-609 001.
04364 - 242996/9443497464
தகவல்கள் உதவி : திரு. ஆர்.வி. ராமானுஜம்,
விழுப்புரம்.

Comments