காவேரிக் கரை கோவில்கள் தொடர்ச்சி....

தான் வீழ்ந்தாலும் தமிழ்மொழி வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனை யோடு, ஆயுளை நீட் டிக்கும் அருங்கனியான கருநெல்லிக்கனியை, தமிழ் மூதாட்டி ஔவைக்கு ஈந்த அதியமான் புகழ் பாடும் தருமபுரி
கொடை வள்ளல் அதிய மான் ஆட்சிபுரிந்த `தகடூர்' தான் இன்றைய தருமபுரி.  அன்னை, கல்யாண காமாட்சியாக எழுந்தருளியுள்ள  தலம்.

`கோட்டை காமாட்சி யம்மன் கோயில்' என்றுதான் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரிதிலும் அரிதான குடவேல மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில் இது. கன்னிராசியில் அஸ்த நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய தலமும் இதுவே.

பிரம்மஹத்தி தோஷம் விலகிட, சேதுக்கரையில் சிவ லிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்டான் ராமன். பின்னர் அங்கிருந்து அயோத்தி நோக்கிப் புறப்பட்ட அவனைவிட்டு முற்றிலுமாக  அந்தக் கொடிய தோஷம் நீங்கவில்லை. கொல்லிமலையை தாண்டி அரியூர் எனுமிடம் வந்து சேர்ந்ததும், அகத்திய முனிவரை அங்கு சந்தித்தார் ராமன். அந்த இடமே இன்றைய `அரூர்'.

`தீர்த்தமலையில் எழுந் தருளியுள்ள சர்வேசுவரனை வணங்கு! உனது மனக்கவலை அத்தனையும் மறையும்! `அருகி லேயே, சனத்குமார நதி யில் நீராடி, தகடூரில் தவமி ருக்கும் காமாட்சியையும், மல் லிகார்ஜுனரையும் வணங்கு! அப்படியே, மன்மதனை உயிர்ப்பிக்குமாறு ஈசனிடம் கோரிக்கையும் வைப்பாயாக' என உபதேசித்தார் அகத்தியர்.

தகடூரை நெருங்கியதுமே, தனது இதயச் சுமை அனைத்தும் இளகியதை உணர்ந்தார் ராமபிரான். `ஓராயிரமீசுவரர்' தரிசனம் அவருக்கு புத்துணர்ச்சியைத் தந்தது. அன்னை காமாட்சியும் ராமபிரானுக்கு அருள் கூட் டினார். `பிரிந்தவர் கூடிடும் தலமாக' இனி இது விளங்கும் என ஈசன் அருள்பாலிக்க, மன்மதன் மீண்டும் `ரதிதேவிக்கு' முன் தோன்றினான்.

பார்த்தன் பெற்ற சாபம்
கிருஷ்ண பகவானின் ஆலோசனைக்கேற்ப, பாசு பதாஸ்திரம் வேண்டி பரமேசுவரனைக் குறித்து தவமிருக்க, இமயமலைக்குச் சென்றான் பார்த்தன். அன்னமும் நீரும் வெறுத்து, ஒற்றைக் காலில் நின்றபடி தவம் இருந்தான். அப்போது கௌரவர்கள் ஏவலால் பார்த்தனின் தவத் தைக் கலைத்திட அங்கே தோன்றினான் மூகாசுரன்.

பன்றி உருவெடுத்து அங்கே வந்த அவனைத் துரத்தியவாறு ஓடிய அர்ச்சுனனை, வேடன் உருவில் எதிர் கொண்டான் வேதநாயகன். இருவருக்கும் கடும் போர் மூண்டது. தனது வில்லால் வேடனைத் தாக்கி னான் விஜயன். வெற்றி தோல்வி எவருக்கு என்று முடிவில்லாத நிலையை அடைந்தபோது, வேடன், பார்த்தனைத் தூக்கி அந்தரத்தில் எறிந்திட, அந்த அமானுஷ்ய சக்தி முன் பாதம் பணிந்தான் பார்த்தன்.

`பாசுபதம் தருகிறேன்! மீண் டும் மறுபிறப்பில் வேடனா கவே என்னை வழிபடு!' என்று வரம் தந்தார் பரமேசுவரன். பாசுபதாஸ்திரத்துடன் நாடு திரும்புகையில், பாரத்வாஜர் உபதேசித்தபடி, தகடூரில் சிவ பெருமானை வழிபட்டான். அதனால் இத்தலத்து ஈசன் `மல்லிகார்ஜுனர்' என்று அழைக்கப்படலானார்.

அதேபோல, இந்திரனின் வாகனமான ஐராவதமும், தனது சாபம் நீங்கிட, மல்லிகார்ஜுனரை வழிபட்டதாக தலபுராணம் விவரிக்கிறது.

கோட்டைக் கோயில்
பழைய தருமபுரி என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது கோட்டை காமாட் சியம்மன் கோயில். `ஹளே தருமபுரி' என்று கன்னட மொழியில் கூறுவர். நுளம்பர் ஆட்சியில் உருவானது இந்தக் கோட்டை. பதினே ழாம் நூற்றாண்டில் ஜெகதேவராயன் என்பவர் ஆட்சி யில் விரிவடைந்த இந்தக் கோட்டை, திப்புசுல்தானின் பாசறைகளில் ஒன்றாகவும் இருந்ததாகக் கூறுவர்.

காலவெள்ளத்தின் போக்கை எதிர்க்க முடியாமல் கோட்டை கொத்தளங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. இருந்த போதிலும் `கோட்டை கோயில்' பெயர் மட்டும் இன்றும் நிலைத்துவிட்டது.

குலோத்துங்க சோழர் காலத்துக் கல்வெட்டுகள், இத் தலத்து ஈசுவரனை சாணா யிரம், முழமாயிரம் உடையார், ஓராயீசுவரம் உடையார், திரு வேளாலீசுவரம் உடையார் என்று கூறுகின்றன.

மூன்று கோயில்கள்

தகடூர் கோட்டைக் கோயிலுக்குள்ளே மூன்று தனிக்கோயில்களாக காட்சி தருபவை, மல்லிகார்ஜுனே சுவரர் சந்நதி, காமாட்சியம்மன் சந்நதி மற்றும் இன்று சித்தே சுவரர் என்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதிகளே ஆகும்.

கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கடந்து மகாமண்டபத்தை அடைகிறோம். நான்கு வரிசைகளில் 16 தூண்களைக் கொண்டது அது. பாசுபதம் பெற்ற பார்த் தன், சிவபக்த ஆஞ்சநேயர், சம்பந்தர் பெருமான் இப்படி ஒவ்வொரு தூணிலும், அழகிய சிற்பங்கள்.

தென்கோடியில் வீரபத்தி ரர் சிலையைக் கடந்து சென் றால், நிருத்த மண்டபம். `ஐராவத மண்டபம்' என்றும் இதனை அழைப்பர். பழமையும் புதுமையும் சேர்ந்து, அவற்றின் காலத்தை நிர்ணயிக்க முடியாத நிலை.

கருவறையையொட்டி அமைந்ததே நவரங்க மண்ட பம். தெய்வீகக் கலைத்திறனும், கலாசாரப் பெருமையும் ஒன்றையொன்று மிஞ்சிடும் நிலை. நுளம்ப பல்லவர் காலத்துச் சிற்பிகளின் கைவண்ணம்!

கருவறையில் நாம் தரி சிப்பது, நான்கடி உயர சிவலிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ள, மல்லிகார்ஜுனரைத்தான்.

சாணாயிரம், முழமாயிரம் என்று, எத்தனை ஆயிரம் திருநாமங்களால் போற்றினாலும், அந்த வேல மரத்து ஈசுவரன் புகழ் இணையற்ற தாகும். அர்ச்சுனன் வழிபட்ட திருமேனி!

அன்னை காமாட்சியின் திருக்கோயில், மல்லிகார்ஜுனே சுவரர் சந்நதிக்கும், சோமேசுவரர் சந்நதிக்கும் இடையே உள்ளது. பதினெட்டுப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். எதிரில் நான்கு கால் மண்டபம். அதற்கும் ஓர் அழகிய விமானம், புதுமையானதோர் அமைப்பு.

தாமரை மலரைப் போல 48 இதழ்கள், மூலைகள், 44 தளங்கள், 43 கோணங்கள் கொண்ட அந்தக் கரு வறையைத் தாங்கி நிற்பவை பதினெட்டு யானைகள். 18 யானைகளின் மத்தகங்கள் மீது நிற்பது அன்னையின் கருவறை.

சோமசூத்திர பிரதட்ச ணம் போல, வலமிருந்து இடப் புறமாகச் சுற்றி வந்தால், அதிஷ்டானத்தின் அடிவரிசையிலே, ஓர் அடி உயரமும், இரண்டடி நீளமும் கொண்ட பலகைச் சிற்பங்களாக நாம் கண்டு அதிசயிப்பது, ராமாயண காதையைத்தான்.

கருவறையின் பின்னால் உள்ள இரண்டாவது யானை யின் பக்கம் துவங்குகிறது ராமகாதை. புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய அமுத கலசத்தை தசரதன் மூன்று பத்தினிமார்களுக்கும் அளித் தல், ராம லட்சுமண, பரத, சத்ருகன் அவதாரம். அதனையடுத்து குருகுலவாசம், வசிஷ்டரிடம் சிறுவர்கள் கல்வி பயிலுவது, விசுவாமித்ரர் வருகை, தாடகை வதம், சீதா கல்யாணம், கைகேயி வரம், குகனோடு கங்கையை கடத்தல், சூர்ப்பனகை மானபங்கம், கர தூஷண வதம்...

மாயமானாக மாரீசன் வருகை, சீதா அபகரணம், சுக்ரீவன் நட்பு, அனுமனின் சாகசங்கள், சேது பந்தனம், இலங்கைப் போர், மேக நாத னின் மாயப்போர், கும்பகர் ணன் வதம், இலங்கேசுவர வதம், விபீஷணபட்டாபிஷேகம், ராமபட்டாபிஷேகம், சீதை வனம் செல்தல், லவகுசா ஜனனம், அசுவமேத யாகம்... இப்படி, முப்பத்தைந்து சிற்பங்களில் முழுக்கதையும் நம் கண் முன்னே!

ஈசனின் கருவறையை விட பெரியதாக அமைந்துள் ளது அன்னை காமாட்சியின் கருவறை. அவள் அழகும், கருணையும் எல்லையற்றவை. தங்கக் கவசம் சார்த்திய கோலத்தில் அன்னையைத் தரிசித்திட பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலம் கொண் டுள்ள அன்னை காமாட்சி, கருணை ததும்பும் தனது பார்வையினாலேயே நமது அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் அருட்கோலம் அது.

அமாவாசை நாட்களில், பெண்கள் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்வதோடு, உற்சவ திருமேனியைத் தாங்களே சுமந்து கோயிலினுள்ளே வலம் வருவது சிறப்பு.

பதினெட்டுப் படிகள் ஏறி சாட்சியம் சொல்வதும், சத்தியப் பிரமாணம் செய்வதும் அந்த நாட்களில் வழக்கமாக இருந்ததாம். கல்யாண காமாட்சி முன்னே உள்ள `உலோகத்தினால் ஆன கிளி' ஒன்று அதற்கு சாட்சி. ஊர்ப் பஞ்சாயத்தில், காமாட்சியே கிளி வடிவில் பறந்து சென்று சாட்சி சொன்னாளாம்.

மகிஷனை வதைத்திடும் கோலத்தில் காணப்பட்டாலும், நாடி வரும் அன்பர்களுக்கு நலம் சேர்ப்பவள் ராஜ துர்க்கை. சங்கு, சக்கரம் ஏந்தி, கீழ் இடது கரத்தால் மகிஷனின் கொம்பை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, வலது கரத்தில் ஏந்திய சூலாயுதத்தினால் அவனது தோளில் குத்தும் காட்சி. வலது காலை கீழே ஊன்றியபடி, இடது காலினால் அசுரனின் தோளை மிதித்தபடி அமைந்த திருக்கோலம்.

சற்று வித்தியாசமாக, வட்ட வடிவில் அமைந்த பலகைச் சிற்பமாக பைரவர் சிலையையும் காண்கிறோம்.

சித்தேசுவரர்

மூன்று கோயில்களில், வடபுறம் அமைந்துள்ள சந் நதியே `சித்தேசுவரர்' என இன்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதி. சந்திரனுக்கு அருள் செய்தவர். மனக்குழப்பம் நீங்க, உள்ளத் தெளிவு பெற, சோமேசுவரரை வழிபடுதல் பயன்தரும்.

இவை தவிர, கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் எல்லாம் கோட்டை காமாட்சியம்மன் கோயிலில் உண்டு. வில்வ மரத் தடியில் நாகர் சிலைகளும், ரேணுகாதேவி சிலையும் உள் ளன. மூன்றாவது பிராகாரம் எல்லாம் முற்றிலும் அழிந்திட, குடவேல மரம் மட்டும் தனித்து நிற்கிறது.

சனத் குமார நதியைத் தவிர, மூன்று அழகிய திருக்குளங் கள் இருந்ததாம். அவற்றில் ஒன்று மட்டும் உருமாறி, பெயர் மாற்றத்துடன் ஒரு குறுகிய சந்தில் உள்ளது.

அதியமான் கோட்டை
தகடூர் மன்னன் அதிய மானின் அரண்மனை, கோட்டை அத்தனையும் மறைந்துபோனாலும், அவனது புகழ்பாடிட, ஒரு சிற்றூர் மட்டும் அவனது பெயரோடு இன்றும் நிலைத்துள்ளது. அதுதான் அதியமான் கோட்டை.

தருமபுரி -சேலம் சாலை யில், தருமபுரிக்கு தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரன் வழிபட்டதால், இத்தலத்து ஈசன் சோமேசுவரர் என்று திருநாமங் கொண்டுள்ளார். குலோத்துங்க சோழர் காலத்துக் கட்டுமானம்.

அருகிலேயே உள்ளது சென்னராயப் பெருமாள் கோயில். `சென்ராயப் பெரு மாள்' என்று அழைக்கிறார்கள். அவரது காதுகள் தொங்கும் நிலையில் உள்ளது. கோயிலில் பைரவர் சந்நதி உள்ளதும் ஓர் அதிசயம் ஆகும்.

`சிவாடி' எனும் தலம், அதிய மான் கோட்டைக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. காசி விசுவநாதர் - விசாலாட்சி அருள்பாலிக்கும் திருத்தலம் இது.

பூமாந்தஹள்ளி

தமிழ்நாட்டில் பட்டி, பாளையம், என்று கூறுவது போல், கர்நாடக மாநில எல் லையை எட்டிப் பிடிக் கும் போது `ஹள்ளி' என்ற அடைமொழியோடு உள்ள ஊர்களைக் காணலாம். பீமே சுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. தருமபுரிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலேயே, 6 கி.மீ. தொலைவில் உள்ள அதகபாடி - தடுத்தாண்ட ஈசன் அருள் பாலிக்கும் தலம்.

கூத்தப்பாடி
ஈசனுக்கு கூத்தன் எனும் பெயர் உண்டு. தேசநாதீசுவரர் அருள்பாலிக்கும் கூத்தப்பாடி, தருமபுரிக்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

பாலக்கோடு

தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள திருத்தலம் இது. தரும புரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. பார்வதி - பரமேசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம். ஒரு பிராகாரத்துடன், பரிவார தேவதைகளுடன் கூடிய சிறிய கோயில்.

பாலக்கோடுக்கு மேற்கில் உள்ளது `திருமழவாடி.' பெரம் லூர் மாவட்டத்தில், மழபாடி மாணிக்கத்தை தரிசித்திட்ட நாம் இங்கே மல்லீசுவரராக அவரைக் காண்கிறோம். பாலக்கோடுக்கு தெற்கே உள்ள பாப்பாரப்பட்டியில் வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. ஹொய்சாள மன்னர் காலத்தது. ஊரின் மையமாக, சிவாலயம் ஒன்றும் உள்ளது. சுதைச் சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன.

இலளிகம்
நான்கு அடி உயர கருங்கல் சிற்பமாக, நின்ற கோலத்தில் சென்னராயப் பெருமாள் அருள்பாலிக்கும் தலம் இலளிகம். தருமபுரிக்கு தென்கிழக்கில் உள்ளது. எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த ஆலயத்தில் பெரும் வரப்பிரசாதியான `வீரஆஞ்சநேயர்' தனிச்சிறப்பு பெற்றுள்ளார். `கல்யாண ஆஞ்சநேயர்' என்றும் இவரை அழைக்கிறார்கள்.

Comments