சங்கு சக்கர அனுமான் .

பிரம்மதேவன் காஞ்சிபுரத்தில் யாகம் செய்தபோது யாக வாசல்களாக வனத்வயம், புரத்வயம், திந்திரிவனம் மற்றும் மகாபலிபுரம் என நான்கு திக்குகளுக்கு நான்கு வாயில்கள் நியமித்ததாக ஐதிகம்.

பிரம்மாவின் யாகசாலைக்கு தெற்காக அமைந்ததே தற்போதுள்ள திண்டிவனம் என்ற திந்திரிவனமாகும். இந்நகரின் நடுநாயகமாகத் திகழ்கிறது, லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.

பல்லவர் காலத்திய கோயிலான இது ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் விளங்குகின்றது. ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கருடாழ்வார் மண்டபம், மகாமண்டபம்; ஆஞ்சநேயர், கோதண்ட ராமர் மற்றும் வேணுகோபாலன் சன்னதிகள் அமைந்துள்ளன.

கர்ப்பகிரஹத்தில் மூலவர் இடது தொடையில் இலக்குமியுடன் லக்ஷ்மி நரசிம்மராகக் காட்சியளிக்கிறார். உத்ஸவமூர்த்தியும் உள்ளார்.

லக்ஷ்மிதேவியானவள் இங்கு இரு கைகளையும் கூப்பிய நிலையில் பெருமானின் மடியில் அமர்ந்திருப்பது சற்று வித்தியாசமான அமைப்பு எனலாம். நமக்காக பெருமானிடம் பணிந்து நமக்கு அருளச் சொல்கிற பாவனை என்று கொள்ளலாம். தனிச் சன்னதிகளில் தாயாரும் ஆண்டாளும் அருள்பாலிக்கிறார்கள்.

ஒருசமயம் இங்கு திண்டிமுன்டி, கிங்கிலி கிலாலி ஆகிய முனிவர்கள் கொடும் செயல்களைப் புரிந்து வனத்தில் தவம் செய்யும் முனிவர்களுக்கு தீங்கு செய்து வந்ததாகவும், திருமால் அனுமனிடம் சங்கு சக்கரங்களைக் கொடுத்து அவர்களை அழித்தபடியால் இங்குள்ள அனுமன் உத்சவமூர்த்தி நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி, கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

அன்பர்கள் அவசியம் தரிசித்து அருள்பெற வேண்டிய திருக்கோயில் இதுவாகும்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் (செஞ்சி பஸ் நிறுத்தம் அருகில்) நகரின் நடுநாயகமாகத் திகழ்கிறது லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.

Comments