மூல நட்சத்திர அன்று அனுமனை வணங்கினால்?

ஆஞ்சநேயர் என்றாலே சகல நலன்களையும் தருபவர் என்று இதிகாச புராணங்கள் கூறு கின்றன.

ஒரு சமயம் இரக்க பிந்து, இரக்க ராட்சசன் என்ற இரண்டு அரக்கர்கள் கடலுக்குள் ஒளிந்திருந்து, தாங்கள் பெற்ற சாகாவரத்தால் பலவிதமான இடைஞ்சல்களை மக்களுக்குக் கொடுத்து வந்தனர்.

நாரதமுனிவர், ராமபிரானிடம் சென்று இந்த அரக்கர்கள் இருவரையும் வதம் செய்து, பூவுலக மக்களின் துயர்களைப் போக்க வேண்டுமென்று வேண்டினார்.

ராமரோ, ``மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற சிரஞ்சீவியான அனுமனே அந்த ராட்சசர்களை அழிக்கத் தகுந்தவன். இப்போதே அனுமனை அனுப்பி வைக்கிறேன்'' என்று கூறி, அனுமனை அழைத்து அப்பணியை முடிக்கச் சொன்னார்.

பலம் வாய்ந்த ராட்சசர்களை அடக்கி வதைக்க அவருக்கு திருமால் தன் சங்கையும், சக்கரத்தையும், பிரம்மா பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஷ்ரீராமன் வில்லையும், அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், கருடாழ்வார் தனது சிறகுகளையும், சிவன் மூன்றாவது கண்ணின் சக்தியையும் கொடுத்தனர்!

பத்துக் கண்கள், சங்கு, வஜ்ராயுதம், கபாலம், மழுவோடு விஸ்வரூபம் எடுத்த அனுமன், பூலோக மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அசுரர்கள் இருவரையும் வதம் செய்துவிட்டு சாந்தமே உருவானார்.

அவரே ஜெயவீரஅனுமனாக இங்கே சாந்த சொரூபியாகக் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களோடு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்!

அனுமனின் திருச்சன்னதிக்கு இருபுறமும் காசிவிஸ்வநாதர், லட்சுமி நாராயணர் சன்னதிகள் உள்ளன.

மனநலம் பாதிக்கப்பட்டோர், மழலைப்பேறு கிட்டாதோர், தொழிலில் நஷ்டம் அடைந்தோர் இந்த ஜெயவீர அனுமனை மனமுருகிப் பிரார்த்தித்துச் சென்றால் சகல நலன்களும் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.

மூல நட்சத்திரத்தன்று இந்த அனுமனை வந்து வணங்கினால் நினைத்த காரியங்கள் நிச்சயம் ஜெயமாகும் என்ற நன்னம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது.

பவானி அருகே ப.கொமாரபாளையத்தில், அக்ரஹார வீதியில் இவ்வாலயம் உள்ளது.

Comments