வெளிநாடுகளில் ராமகாதை

ராம கதையை முதலில் பாடியவர் வால்மீகி. ஆனால், பல காலகட்டங்களில் பல நாடுகளில் அந்தக் கதை பரவும்போது பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

தமதாக்கிக் கொள்ளும்போது அந்தந்த இடம், இனம், மரபுகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது இலக்கிய கர்த்தாக்களின் இயல்புதானே! வெளிநாடுகளில் வழங்கும் ராம கதைகளில் உள்ள சில விசித்திர மாறுதல்கள் இதோ;

திபெத்தில்: பிரபல பௌத்த நூல்களான ‘அநாமக ஜாதகம்’, ‘தசரத ஜாதகம்’ இரண்டும் சீன மொழியில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தசரத ஜாதகத்தில் ராமகதை கூறப்பட்டுள்ளது. இந்த பௌத்த - திபெத்திய ராமாயணத்தில் ராவணனின் வரலாறு, சீதையைக் காட்டுக்கு அனுப்புதல், பிறகு சீதையும் ராமனும் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் உள்ளன.

திருமால், தசரதனுக்குப் புதல்வனாகப் பிறந்ததும், தசரதனுக்கு இரு ராணிகள் இருந்ததும், முதல் ராணி ஜ்யேஷ்டாவுக்கு ராமனும், இளைய ராணி கனிஷ்டாவுக்கு லட்சுமணனும் பிறந்ததாக இது சொல்கிறது. ‘சீதை ராவணனின் மகள்; மண்டோதரியின் வயிற்றிலிருந்து பிறந்தபோது, தீய அறிகுறிகள் தென்பட்டதால், இந்தக் குழந்தையைக் கடலில் மிதக்க விட்டுவிட்டார்கள். இந்தக் குழந்தையை ஒரு விவசாயி எடுத்து வளர்த்து, இதற்கு சீதா என்று பெயர் வைத்தான்’ என்கிறது, இந்த ராம கதை. இக்கதையின்படி தசரதனின் இரு புதல்வர்களில் யாருக்கு ஆட்சி பீடத்தை அளிப்பது என்று புரியாமல் குழப்பம் ஏற்படவே, ராமன் தன் அரச பதவியை லட்சுமணனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, காட்டுக்குச் செல்கிறான்.

காட்டில் அந்த விவசாயியின் வேண்டுகோளுக்கிணங்கி, சீதையை மணந்து கொள்கிறான். பிறகு, தலைநகருக்குத் திரும்புகிறான்.

துருக்கியில்:

இங்கே வழங்கும் ராமகதைக்கு ‘கோதானீ’ என்று பெயர். இது புத்தரை ராமனாகக் கூறுகிறது. கதையில் இன்னொரு பெரிய மாற்றம்- தசரதனுடைய புதல்வனின் பெயர் ‘ஸஹஸ்ரபாகு’ இவன் பரசுராமனின் தந்தையிடமிருந்து காமதேனுவைக் களவாடிக் கொள்கிறான். இதனால் கோபம் கொண்ட பரசுராமன், ஸஹஸ்ரபாகுவை வதம் செய்து விடுகிறான். ஸஹஸ்ரபாகுவின் புதல்வர்களான ராமனும் லட்சுமணனும் வாலிபர்களானதும் பரசுராமனைப் பழிவாங்குகிறார்கள்.

இந்த ராமாயணத்தில் ராமன் காட்டுக்குச் சென்றதன் காரணம் கூறப்படவில்லை.

இந்தோனேஷியாவில்: இங்கே பிரபலமாக உள்ள ராமாயணத்துக்கு ‘காகாவின்’ என்று பெயர். யோகீச்வரர் எழுதியது.

இதில் அனுமன் மூலமாக ராமன், கணையாழிக்கு பதிலாக கடிதமே அனுப்புகிறார். இந்த ராம கதையில் சீதையும் சூடாமணியை அனுப்பாமல், பதில் மடல் எழுதி அனுப்புகிறார். இந்த ‘காகாவின்’ ராமாயணத்தில் இன்னொரு விசித்திரம்: ‘இந்திரஜித்துக்கு ஏழு மனைவிகள். இவர்கள் லட்சுமணனுடன் போர் புரிந்து மாண்டார்கள்.’

கம்போடியாவில்: இங்கே வழங்கும் ராம கதைக்கு ‘ரேயாம்கேரா’ என்று பெயர். இதில்-ஜனகர், யமுனைப் பிரவாகத்தில் மிதந்து வரும் சீதையை ஓர் ஓடத்திலிருந்து எடுத்து வந்து வளர்க்கிறார். தாடகையை ராமன் வதம் செய்யவில்லை.

காட்டிலிருக்கும் சீதை, ராமன் இறந்து விட்டதாகப் பொய்த் தகவலை வானரத் தூதன் ஒருவன் மூலம் கேட்டு, மூர்ச்சித்து விடுகிறாள். பிறகு, அயோத்திக்கு வர இசைகிறாள். அங்கே ராமனை உயிரோடு கண்டதும், அதிர்ச்சியாலும் பிரிவுத் துயராலும் மயங்கி விழுகிறாள். அப்போது பூமி பிளந்து, அதற்குள் அடக்கமாகி விடுகிறாள்.

தாய்லாந்தில்: இங்கு ராம கதையை ‘ராமகியேன்’ என்று குறிப்பிடுகிறார்கள். சீதை சுயம்வரத்திலிருந்து, அவள் கடத்தப்படுவது வரைக்கும் கதை சீராக இருக்கிறது.

இதிலுள்ள சில மாறுதல்கள்: லட்சுமணனுக்கும் அனுமனுக்கும் போர் நடப்பது, சேது பாலம் கட்டுவதற்கு முன்பு ராவணன் அந்தணனாக வந்து போர்க்களத்துக்கான இடத்தை நிச்சயம் செய்து கொண்டு போவது, விபீஷணனின் மகள் பென்சகாயா, சீதை போல வேடமிட்டுக் கொண்டு கடலில் மூழ்கி இறத்தல், பிரம்மதேவனிடம் ராவணன் சென்ற ராமனைப் பற்றி வழக்குரைத்தல், ராவணன் இறந்தபின், அவனுடைய புதல்வர்களுள் ஒருவன் விபீஷணனுக்கு எதிராகப் புரட்சி செய்தல், அதை அடக்க வந்த பரதனின் கையால் அவன் மடிதல், விபீஷணனின் மகள் பென்சகாயா, நாககன்னி ஒருத்தி, மண்டோதரி ஆகியோரிடம் அனுமன் காதல் கொள்ளுதல் ஆகியன.

இப்படிப் பல விசித்திரமான - மூலக் கதைக்குப் புறம்பான - முரணான பல மாறுதல்களைப் புனைந்த ராமகதைகள் ஆசிய நாடுகளில் வழங்கி வருகின்றன என்றாலும், ராம கதையில் அந்த மக்களின் ஈடுபாடும், இலக்கிய மற்றும் பண்பாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ள ஒட்டுறவும் சிலாகிக்கத் தக்கவை.

Comments