உள்ளத்தில் தெளிவு இருந்தால்........

கடற்கரை ஓரமாக, அலைகளுக்குள் தலை காட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கரும்பாறை.

சீறி வரும் அலைகள்... ஒரு நாகம் போல படம் தூக்கி, அந்தப் பாறையின் உச்சந் தலையில் கொத்திக் கொண்டே இருக்கின்றன. பாவம், அந்தப் பாறை! வெகு காலமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.

நான், அந்தப் பாறையை ஒருபோதும் உலர்ந்த நிலையில் பார்த்ததில்லை. கடற் காகங்களோ, வேறு பறவையோகூட அதன் மீது அமர்ந்து நான் கண்ட தில்லை. அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, திருவாளர் வெகுஜனத்தின் நினைவு வந்து விடும்.

அகத்திலிருந்தும், புறத்திலிருந்தும் அலை அலையாய் பிரச்னைகள் புறப்பட்டு வர... அந்தப் பாறையை விடவும் அதிகம் கண்ணீர் கொட்டுகிறவர்கள் நம்மவர்கள் என்பதை, நான் நன்றாகவே அறிவேன்.

மனிதர்கள் ஆனந்தமாக வாழ்வதில்லை; அவர் களுக்கு வாழத் தெரியவுமில்லை.

காலைப் பொழுதின் அழகைக் கண்டு, குயில்கள் எவ்வளவு குதூகலம் அடைகின்றன? அவை, வசந்தத்தை வரவேற்கும் விதம், எவ்வளவு இனிமை?!


சிட்டுக் குருவியின் தாம்பத்தியமும், அது குடும்பம் நடத்தும் அழகும் கண்ணுக்கு எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது?!

ஆறாம் அறிவு கொண்டதாக பிதற்றிக் கொள்ளும் இந்த மனித ராசிகள் மாத்திரம், ஆனந்தம் வறண்ட இதயத்துடன் இருப்பதென்ன?!

விழியில் ஒளி இல்லை; இதழில் நகையில்லை; வாழ்வில் பாடல் இல்லை. முட்செடிகளை மேயும் ஒட்டகத்தைப் போல், வலி கொண்ட அனுபவங்களை மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். 'துக்கத்தில் தவிக்கும் மனிதர்களே... எங்கள் கையில் ஆட்சியைக் கொடுங்கள். உங்கள் கையில் சொர்க்கத்தின் சாவிக் கொத்துகளைத் தருகிறோம்!' என்று எல்லாத் தேர்தல்களிலும் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.

ஆட்சி மாறுகிறது; காட்சி மாறுவதில்லை! சட்டத்தைத் திருத்தி அமைத்தால், சமூகத்தை மாற்றி அமைத்தால், ஆனந்தமாக வாழ்ந்து விட லாம் என்ற ஆசைகளும் நிராசைகளாகவே மாறி வந்திருக்கின்றன.

அரசு, குடும்பம், சமூகம்- இவை யாவும் மனிதனைக் கரை சேர்ப்பதற்கான ஓடங்க ளாக இருந்திருக்க வேண்டும். விபரீதம் என்ன வெனில், இந்த ஓடங்கள் இன்று முதலைகளாக இருக்கின்றன. மழைக்குப் பயந்து கூரையில் ஒதுங்கினால், அந்தக் கூரை இடிந்து தலை யில் விழுந்த கதையாகவே இருக்கிறது.

தண்ணீர்ப் பொய்கையே தாமரைக்கு விஷமாகிப் போனால், என்ன செய்ய முடியும்? இன்றைய வாழ்க்கைச் சூழல் அப்படித்தான் இருக்கிறது.

இயற்கையின் மீது நாகரிகத்தின் விஷ நீலம் பரவுகிறது. நிலங்கள் மலடாகிக் கொண்டே வருகின் றன. வர்த்தக சூதாட்டங்களில், சில மகுடங்கள் வெட்டுப் பட்ட காய்களாக உருள்கின்றன. அதிகாரங் களின் ஆடும் கால்களில்... அமைதி, முயலகனாய் மிதிபட்டு முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது!

இப்படி ஒரு சூழலில் எப்படி அமைதியாக- ஆனந்தமாக வாழ முடியும்? நாட்டிலும் வீட்டிலும் புகை மண்டலங்களாக... பிரச்னை கள் மூச்சுத் திணற வைக்கும் போது, துண்டை விரித்து தூங்கி விட முடியுமா? முடியாது! அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இது ஒரு விதத்தில் சரி.

ஆனால், இதைவிட மிக மோசமான சூழ்நிலையிலும் அமைதியாக- ஆனந்த மாக வாழ நினைத்தால் அது முடியும். வெளியே இருக்கும் சூழ்நிலையைப் பொருட் படுத்த வேண்டியதில்லை.



இன்று, நாம் வாழும் சமூகத்தைச் சிருஷ்டித்தவர்கள் நாம்தான்.

காகம், முள்ளால் தனக்கொரு கூடு கட்டிக் கொண்டதைப் போல், இந்த உலகத்தை- சமூகத்தை நாம்தான் சிருஷ்டி செய்து கொண்டோம். ஓர் அணில், தனக்கு இலவம்பஞ்சில் கூடு கட்டிக் கொள்வதைப் போல், இதமான- மென்மையான ஓர் உலகத்தை சிருஷ்டிக்க நினைத்தால், அதுவும் முடியும்.

வன்முறையும், போட்டியும் நிறைந்த உலகில் அன்பின் கனிவும், அமைதியின் மலர்ச்சியும் கொண்ட ஒரு வாழ்வை வாழ்ந்து விட முடியும்.

நாகத்தின் தலையில் மாணிக்கம் விளைவதுபோல், நஞ்சு நிறைந்த உலகச் சூழலில்தான் மிகப் பெரும் சான்றோர்கள் தோன்றிச் சிறந்திருக்கிறார்கள்.

அலைகள் நிறைந்த
கடலில் -
அழகிய பாறை
புத்தனின் மொட்டைத் தலைபோல்!

என்ன அழகான கவிதை! இது, என் கடற்கரைக் காட்சியை மாற்றி அமைத்து விட்டது. புத்தனின் தலைக்கு வெளியேதான் அலைகள்; உள்ளே இல்லை. உள்ளே, பாறையின் அமைதி; அலைகளால் அலைக்கழிக்கப்படாத உறுதி.

நாமும் அப்படி அமைதியாக வாழ வேண்டும். அதற்கு வழிகாட்டுவதுதான் ஆன்மிகம். ஆன்மிகம் என்பது தேங்காய்- பழம்- பூ- பத்தி இவற்றுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. ஆனந்த வாழ்க் கைக்கு வழிகாட்டுவதே ஆன்மிகம்.

நாமும் இங்கே ஆனந்தமாக வாழ நினைத்தால் வாழலாம்.

''ஆவீன மழை பொழிய அகத்தடியாள் மெய்நோவ'' என்று தொடங்கும் தனிப்பாடல் ஒன்று தமிழில் உண்டு.

அதாவது, ஒரு வீட்டில் பசுமாடு கன்று போட்டது. அந்த நேரம் பார்த்து இடியும் மின்னலுமாய் மழை வேறு பெய்தது. போதாக்குறைக்கு மனைவி உடல் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.

பெய்கிற மழையில் வயலில் விதைத்த நெல் எல்லாம் தண்ணீரோடு போய்விடுமே என்று பயம்வேறு வதைத்தது. இந்த நிலையில் போஸ்ட்மேன் வந்து மரண தந்தி ஒன்று கொடுத்துவிட்டுப் போகிறான். விருந்தினர்கள் வேறு, அந்த நேரம் வந்து விட்டார்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், கடன்காரன் வழியை மறிக்கிறான். பழைய தட்சிணையைக் கேட்டு குருக்கள் ஒருவரும் வந்துவிட்டார்.

இப்படித் துன்பங்களை அடுக்கிக் கொண்டே போகிறது அப்பாடல். ஒரே நேரத்தில் அடுக்கடுக்கான துன்பங்கள் வருமா? வரலாம். சிலருக்கு வந்துமிருக்கிறது.

சொல்லப்போனால் வாழ்க்கையில் நிறையவே துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

தாயின் கருப்பையில் இருக்கும்போதே. - அவளது வயிற்றின் அக்கினி ஒரு குழந்தையைத் தகிக்கிறது.

பிறந்து வளர்ந்தால், ஒவ்வொரு பருவத்திலும் அதற்கேயுரிய துன்பங்கள் இருந்துகொண்டு தானிருக்கின்றன.

அடுக்கிவரும் துன்பங்கள், அறிவுடையவன் எதிரே தோல்வியை அடைகின்றன.

அறிவுடையவன் துன்பத்துக்கு துன்பம் கொடுத்துவிடுகிறான்.

ஒரு ஞானி இருந்தார். அவர் வசிப்பதோ சிறு குடிசை வீடு. அந்த வீடும் ஒருநாள் தீப்பற்றி எரிந்து விட்டது.



இச்செய்தி அந்த ஞானியிடம் அன்பு கொண்ட அரசன் காதுக்குப் போயிற்று. அரசன் வருத்தம் அடைந்தான். ஏதேனும் உதவி வேண்டுமா? வீடு தீப்பிடித்ததில் வருத்தமா என்று கேட்டு கடிதம் எழுதினான். அந்த ஞானி பதில் கடிதம் எழுதினார். அதுவும் ஒரு கவிதையாக.

தீப்பற்றி எரிந்தது
வீழும் மலரின்
அமைதி என்னே!

இந்தக் கவிதையை பாரதியார் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். துன்பத்திலும் வீழும் மலரின் அமைதியை, ஞானி இப்படி சுட்டிக் காட்டுவதாக பாரதியார் கூறுகிறார்.

எந்தச் சூழலிலும் அமைதியாய் ஆனந்தமாய் வாழ்வதற்கு அறிவிலே தெளிவு வேண்டும். இல்லையென்றால், இன்பத்திலே தலைகால் புரியாமல் நடப்போம். துன்பத்திலே பெட்டிப் பாம்பாய் பெருமூச்சு விட்டபடி கிடப்போம்.

ஒரு கதை.

ஒரு கிராமத்தில் சிறுவிவசாயி ஒருவன் இருந்தான். சின்ன வயதிலிருந்தே வறுமையை அனுபவித்து வளர்ந்தான் அவன். அதனால் அவன் தன் துன்பங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை.

ஆனாலும் அவனை அழ வைத்துப் பார்க்க வேண்டும் என்று சாத்தான் நினைத்தான். தனக்குக் கீழே வேலை செய்யும் சில குட்டிச் சாத்தான்களை ஏவி... அவனைத் துன்பப்படுத்துங்கள் என்று கட்டளையிட்டான். குட்டிச் சாத்தான்கள் எத்தனை விதமாக துன்பப்படுத்த முடியுமோ, அத்தனையும் செய்து பார்த்தன. ம் ஹும். அவன் எதற்கும் கலங்கவில்லை.

கடைசியில் ஒரு குட்டிச்சாத்தான் யோசித்தது. இவனைத் துன்பத்தால் அசைக்க முடியாது. வேறு உபாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தது.

அவனது விளை நிலத்தில் நிறைய விளையும்படி தனது மாய வித்தையை ப்ரயோகப்படுத்தியது.

அந்தச் சிறு விவசாயி செல்வந்தன் ஆகிவிட்டான். செல்வம் வர வர எல்லாப் பழக்கங்களும் அவனைத் தொற்றிக் கொண்டன. அவனது நிம்மதி குலைந்தது.

அவன் தமிழ்ச் சினிமா நாயகன் மாதிரி வாழ்வே மாயம் என்று சோகப்பாடல் பாட ஆரம்பித்தான்.

அவனுக்கு முன்னால் ஒரு உருவம் அவனது பாட்டுக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருந்தது சந்தோஷமாக. அது வேறு யாருமல்ல, மேற்படி குட்டிச்சாத்தான்தான்.

அறிவிலே தெளிவிருந்தால் இன்பம், துன்பம் என்ற இரண்டுவித அலை களிலும் புத்தனின் அமைதியோடு நாமிருக்க முடியும்.

Comments