இம்மையே நன்மை தருவார் கோவில்

சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்த ஞானிகளையும் முனிவர்களையும் அறிவோம். வனங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, அவர்கள் கடும் தவம் இருந்ததையும், அதனால் சிவனருள் பெற்றதையும், பின்னர் அந்த இடங்களில் மன்னர் பெருமக்களால் பிரமாண்டமான ஆலயங்கள் கட்டப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டதையும் தெரிவிக்கிற ஸ்தல புராணங்கள் கொண்ட கோயில்கள் நிறைந்திருக்கிற தேசம் இது!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள 'இம்மையில் நன்மை தருவார் கோயிலு’க்குச் சென்றிருக்கிறீர்களா? இந்தத் தலத்தின் சிறப்பு... சிவபெருமானே சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் இது! எனவே இந்தத் தலத்தை, ஆத்ம லிங்க க்ஷேத்திரம் என்று போற்றுகின்றன புராணங்கள்.

அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமீனாட்சியம்மை. ஸ்வாமி - ஸ்ரீசொக்கநாதர். இம்மை மற்றும் மறுமையில், உலக உயிர்களின் நன்மைக்காக சிவபெருமான் மேற்கு நோக்கியபடி அமர்ந்து, சிவலிங்கத்தை கிழக்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், இம்மையிலும் மறுமையிலும் வருகிற எல்லா இடர்பாடுகளையும் கருணையுடன் களைந்து, அருள்பாலிப்பார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீவரஸித்தி விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமத்திய புரி அம்மன், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கின்றனர்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற நாட்களில் இம்மையில் நன்மை தருவாரைத் தரிசித்தால், மனதில் அமைதியையும் நிம்மதியையும் தந்தருள்வார் சிவனார். மாசி- மகா சிவராத்திரி நாளில் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்காக மதுரை மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, விடிய விடிய ஸ்வாமியைத் தரிசிப்பார்கள்.

மகா சிவராத்திரியன்று இங்கு வந்து, ஒவ்வொரு காலமும் நடைபெறுகிற பூஜை களில் கலந்துகொண்டு சிவபெருமானைத் தரிசித்தால், வீடு- மனை வாங்கும் யோகம், நல்ல உத்தியோகம், பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; குழந்தைச் செல்வத்துடன் சகல சந்தானங்களும் கிடைத்து நிம்மதியாக வாழ்வர் என்பது ஐதீகம்!



மகா சிவராத்திரி நாளில், அதிகாலை சூரியோதயம் துவங்குகிற 6.30 மணி முதல், மறுநாள் காலை சூரியோதயம் வரை, மகா சிவராத்திரி விரத காலம் அனுஷ்டிப்பார்கள். அன்றைய நாளில், அதிகாலையில் கோயில் நடை திறக்கப்படும். பிறகு, அபிஷேக - ஆராதனைகளும், மதியம் சங்காபிஷேக பூஜையும் நடைபெறும்.

அன்று மாலையில், சிவராத்திரியையட்டி சிறப்பு அர்ச்சனையும் அபிஷேகங்களும் நடைபெறும். இரவு முழுவதும் சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டும், 108 முறை பிராகார வலம் வந்தும், சிவபுராணம் பாராயணம் செய்துகொண்டும் எண்ணற்ற பக்தர்கள் விடிய விடியக் கண்விழித்திருப்பார்கள்.

இரவு 10 மணிக்கு, முதல் பூஜை நடைபெறும். அப்போது விபூதியால் சிவலிங்கத் திரு மேனிக்கு அபிஷேகம் நடக்கும். நள்ளிரவு 12 மணிக்கு வில்வத்தால் அபிஷேகம்; இரவு 2 மணிக்கு ருத்ராட்ச அபிஷேகம்; அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பாலபிஷேகமும் நடைபெறும். அப்போது சிவலிங்கத் திருமேனிக்கு, வெண்பட்டு சார்த்தி அலங்காரம் செய்வார்கள்.

பிறகு, காலை 6 மணிக்கு சிவராத்திரியின் நிறைவு பூஜையும் அபிஷேகமும் நடைபெறும். இதனைத் தரிசிக்க, வீட்டில் இருந்தபடியே விரதம் அனுஷ்டித்தோரும் வந்து கலந்து கொள்வார்கள். இந்த நாளில், மிளகு- ஜீரக சாதம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.

வாழ்வில் ஒரேயரு முறை யேனும் 'இம்மையில் நன்மை தருவார் கோயிலு’க்கு வந்து தரிசிக்க வேண்டும். குறிப்பாக, மகா சிவராத்திரி நன்னாளில் இங்கு வந்து, ஸ்வாமியை தரிசிப்பது பெரும் புண்ணியம்!

நாம் இப்போதே மானசீகமாக, நன்மை தரக் காத்திருக்கிற சிவபெருமானை வணங்கித் தொழுவோம்!

Comments