கீழ்ப்பழநி ஸ்ரீதண்டாயுதபாணி!




தைப்பூச தரிசனம்!


திருச்சி சமயபுரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இருங்களூர். இங்கிருந்து அரியலூர் நோக்கிச் செல்லும் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமுளூர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து குமுளூருக்கு டவுன் பஸ் வசதி (103 ஏ) உள்ளது. இந்தக் கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி!

ஒரு காலத்தில், கண்டமங்கலம் எனும் கிராமத்தில்தான் ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் விக்கிரகம் இருந்ததாம்! அப்போது, திடீர் வெள்ளத்தில் அந்த ஊரே மூழ்கும் நிலையில்... ஊர்மக்கள் சிலர், ஸ்ரீபாலதண்டாயுதபாணியின் விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு, அந்த ஊரை விட்டுக் கிளம்பிச் சென்றனர். வழியில் சிறியதொரு மலையின் அடிவாரத்தில் அனைவரும் இளைப்பாற... அசரீரியாக வந்த உத்தரவையடுத்து, மலையில் சிறிதாகக் கோயில் அமைத்து, விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள், என்கிறது ஸ்தல வரலாறு!



இந்த ஊர்க்காரர்களும் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களும் குமுளூர் முருகன் கோயிலை, கீழ்ப்பழநி என்றே அழைக்கின்றனர். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்தத் தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். அத்துடன், இந்தக் கோயிலின் திருப்பணி யையும் கும்பாபிஷேகத்தையும் செய்தருளியுள்ளார். பழநி, பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் ஆகிய தலங்களில் உள்ளது போல், இந்தத் தலத்திலும் ஸ்ரீமுருகக் கடவுள் மேற்கு நோக்கியபடி சந்நிதி கொண்டிருக்கிறார். எனவே, இது பழநியம்பதிக்கு நிகரான தலம் என்கின்றனர். பழநிக்கு வருவதாக வேண்டிக் கொண்டு, செல்ல இயலாத வர்கள் இங்கு வந்து வழிபட, தீராத கவலைகளும் தீரும் என்பது ஐதீகம்.

மலையின் வழி நெடுக, ஸ்ரீவள்ளி - தெய்வானையுடன் முருகன், அவ்வைக்கு காட்சி தந்த முருகன், விநாயகர், பாம்பாட்டியுடன் கூடிய நாகம், வேடன், காவடியான் என சிலைகளைக் காண முடிகிறது. இவை, முருகனின் அருளால் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடனாக வைத்த சிலைகளாம்! ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவ பெருமான், ஸ்ரீஇடும்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. தைப்பூச நாளில், லால்குடி, சமயபுரம், அரியலூர், சிறுகனூர், பாடாலூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பால் குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். மலையில், அழகுத் திருக்கோலத்தில் காட்சி தரும் கந்தக் கடவுள், அன்றைய நாளில் ஊருக்குள் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்!

Comments