இறைவன் தருவான்

கேள்... கொடு...!

துறவியை நாடி ஒரு சீடன் வந்து ``ஐயா! என்னைத் தேடி வந்து பலர் தொல்லை தருகின்றனர். என்னால் அமைதியாக தவம் செய்ய முடியவில்லை. இதற்குத் தாங்கள் நல்ல வழி சொல்ல வேண்டுகிறேன்'' என்றான்.

அதற்குத் துறவி, ``உன்னை நாடி வரும் செல்வந்தர்களிடம் கடன் கேள். ஏழைகளுக்குக் கடன் கொடு. பிறகு தொல்லை வராது'' என்றார்.



மனிதனா? விலங்கா?

ஒரு சமயம் ஒரு மகான் தன் சீடர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். எல்லோரும் உண்ணத் தொடங்குவதற்கு முன் மகான் அவர்களைப் பார்த்து, ``நாம் இப்போது மனிதர்களைப் போல் உண்ணப் போகிறோமா? அல்லது விலங்குகளைப் போல் சாப்பிடப் போகிறோமா?'' என்றார்.

எல்லா சீடர்களும் ஒரே குரலில், ``மனிதர்களைப் போலத்தான் உண்ணப் போகிறோம்'' என்றனர்.

அதற்கு மகான், ``அப்படியென்றால் அது மிகவும் கெட்டது! ஏனென்றால், விலங்குகள் தங்களுக்குப் போதுமானது கிடைத்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடும்!'' என்றார்.



கண்ணாடி

ஆணவம் கொண்ட அரசன் ஒருவன் ஆசிரமம் ஒன்றிற்குச் சென்றான்.

அப்போது அங்கு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரும் கண்மூடி தியானித்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னை அவமதித்து விட்டதாக எண்ணிய அரசன் ஆசிரம குருவை நோக்கி, ``சந்நியாசியா நீ, உன் முகத்திலே கயவனின் தோற்றம் தெரிகிறது'' என்றான்.

உடனே குரு, ``என் முகம் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் என்பது இன்றுதான் தெரிந்தது. மிகவும் நன்றி அரசே!'' என்றார்.

அரசனால் பதில் ஒன்றும் பேசமுடியவில்லை.




எந்தக் கோடி?


வயதான சந்நியாசி ஒருவர் தடுமாறி ஆற்றில் விழுந்துவிட்டார். அந்த வழியே சென்று கொண்டிருந்த நாத்திகன் ஒருவன் தன் கையிலிருந்த தடியின் மறுமுனையை தத்தளிக்கும் சந்நியாசியை நோக்கி நீட்டினான்.

தடியைப் பற்றிய சந்நியாசி தட்டுத்தடுமாறி கரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உடனே தடியை நீட்டியவன், ``என் தடியின் ஒரு கோடியில் சோம்பேறி ஒருவன் இருக்கிறான்'' என்றான் இறுமாப்புடன்.

உடனே சந்நியாசி கேட்டார் ``எந்தக் கோடியில் அன்பனே?'' என்று.
தடியை நீட்டியவன் தலைகவிழ்ந்தான்.



கடவுள்

மகான் ஒருவரிடம் சிலர், `கடவுள் பற்றி ஏதாவது சொல்லுங்கள்' என்று கேட்டனர். அதற்கு அவர், ``கடவுளைப் பற்றிக் கேட்காதவரையில் எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரிகிறது. ஆனால் உங்கள் கேள்வி என்னைக் குழப்பி விடுகிறது. இது போன்ற கேள்விகளை இனி தவிர்த்து விடுங்கள். நான் கடவுளைக் கண்டவன். ஆனால் என்னால் உங்களுக்கு அவரைப் பற்றி விளக்க இயலாது'' என்றார்.




இறைவன் தருவான்

வள்ளல் ஒருவரைக் காண வந்த நண்பர், `உங்களை நாடி வருபவர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்குகிறீர்களே... அப்படி இருந்தும் உங்கள் செல்வம் பெருகுகிறதே தவிர குறைவதே இல்லையே... இது எப்படி?' என்று கேட்டார்.

அதற்கு அந்த வள்ளல் சொன்னார், ``என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் நான் என் சிறிய கைகளால் பொருட்களை எடுத்து அன்புடன் தருகிறேன். நான் ஒவ்வொருமுறை அப்படித் தரும்போதும் கடவுள் தனது பெரிய கைகளால் எனக்குப் பொருளை அளிக்கிறார். அதனால்தான் எனது செல்வம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே செல்கிறது.


Comments