கிருபானந்த வாரியாரின் விளக்கங்கள்

நம சிவாய என்கிறோம். நம என்பதற்கு என்ன பொருள்?

ம - என்னுடையது; ந- இல்லை. நம - என்னுடையது இல்லை. நம, நம என்று இறைவன் திருவடியில் மலரிட்டு அர்ச்சிப்பது எனதன்று என்ற தற்போதத்தை இழப்பதற்காகவே என அறிக. ஒரு பொருள் தன்னுடையதன்று என்று எண்ணுவோர்க்கு அந்தப் பொருள் தன்னை விட்டு விலகும்போது மனக்கவலை வராது. `யாதனில் யாதனில் நீங்கியான் நோதல் அதனில் அதனில் இலன்' என்பார் திருவள்ளுவர். ஆதலால், பற்றற்றவனே பரம ஞானி. அவனுக்கு இன்பமும் துன்பமும் எய்தமாட்டா.






விலங்கு, பறவை எல்லாம் ஒன்றுபோல் இருக்க மனிதர்கள் மட்டும் வெவ்வேறு முகத்துடன் பிறப்பது ஏன்?


பார்த்த மாத்திரத்தில் `இவள் நம் மனைவி' `இவர் நம் கணவர்' என்று அறிந்து வாழ்வதற்காகவே வேறு வேறு உருவ வேறுபாடுகளை இறைவன் அமைக்கிறான். உலகம் தோன்றிய நாள்தொட்டு உலகம் ஒடுங்குகிறவரை தோன்றுகிற அத்தனை பேருக்கும் வேறு வேறு அச்சு மாற்றிப் படைக்கிற இறைவனுடைய பேராற்றலையும் பெருங்கருணையையும் நினைத்தால் உள்ளம் உருகும்.



`தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாம் தலை' - என்று வள்ளுவர் கூறுவது ஏன்? நம் அறிவைக் கொண்டு வாழ்வது போதாதா?

சகுனியைத் துணையாகப் பற்றினான் துரியோதனன். குடும்பத்துடன் அழிந்தான். கண்ணபிரானைத் துணையாகப் பற்றினான் அர்ச்சுனன். எல்லா நன்மைகளையும் பெற்றான்.

பதினான்காவது நாள் போரில் துரியோதனனுக்குத் துணையாக வந்த வருண ராஜகுமாரன் கதாயு என்பான், தனஞ்சயனைக் கொல்லும் பொருட்டு, தன் தந்தை தனக்குத் தந்த சிறந்த வஜ்ர கதாயுதத்தை விடுத்தான். அர்ச்சுனன் அந்தக் கதையை அழிக்க ஆயிரம் பாணங்களை விடுத்தான். அந்தப் பாணங்களையெல்லாம் கதாயுதம் அழித்து அவனை நோக்கி வந்தது. அமரர்கள் அஞ்சினார்கள். அர்ச்சுனன் நடுங்கினான். கதாயுதம் அர்ச்சுனன் அருகில் வந்ததும், அவனது தேரைச் செலுத்துகின்ற கண்ணபிரான், தேர் ஓட்டுகிற கோலைக் கீழே வைத்துவிட்டு, தன் மார்பைக் காட்டினான். கதை கண்ணன் மார்பில், மலையில் இடி விழுவது போல் பட்டது. அதை எய்த கதாயுவின் தலை ஆயிரம் துண்டுகளாக வெடித்து மாண்டான். கண்ணனை வணங்கிக் காரணம் கேட்டான், அர்ச்சுனன். ``நிராயுதன் மீது இந்தக் கதையை விடுத்தால் உன் தலை வெடிக்கும்'' என்று இவன் தந்தை கட்டளையிட்டிருந்தான். இதனால் இவ்வாறு நிகழ்ந்தது என்று கண்ணன் கூறினான். அர்ச்சுனன் அகமகிழ்ந்தான். ஆதலால், நாம் எப்போதும் பெரியவர்களைத் துணை கொண்டு இன்புறுவோமாக.





ஆடு, மாடு, நாய் போன்ற பிராணிகளுக்கு முடி நரைப்பதில்லை. மனிதனுக்கு மட்டும் நரைப்பது ஏன்?

ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை. மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை அடைய நீ வந்தாய். அதை மறந்துவிட்டவர்களுக்கு ஓர் உணர்ச்சி வரும் பொருட்டே இறைவன் நரையைத் தந்தான். நரைக்கத் தொடங்கும்போதாவது உன் ஆவி ஈடேறும் நெறியில் செல்.





இறைவனை அப்பரடிகள் `அப்பன் நீ, அம்மை நீ' என்றவர், `அன்புடைய மாமனும் மாமியும் நீ' என்று பாடியுள்ளாரே? இது எப்படி சரியாகும்?

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது முரண் போல் தோன்றும். ஆழமாகச் சிந்தித்தாலன்றி விளங்காது. தந்தையே மாமனாராக வரமுடியுமா? பெண் தந்தவன்தானே மாமன்? பெற்றவன் மாமனாக முடியாதே? என்றெல்லாம் நினைக்கத் தோன்றும். தந்தை, அவன் தேடிய பொன், பொருள், வீடு, நிலபுலம் யாவும் ஓரளவு மகன் நுகர இசைந்தாலும் முற்றிலும் தர இசையான். தான் உள்ளவரை அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும். தான் மறைந்தபிறகு மகனுக்குச் சேரட்டும் என்று நினைப்பான். இதுதான் உலக இயல்பு.

மாமனார் தான் பெற்ற பெண்ணைக் கொடுத்து, அவருக்கு உரிய ஆடை அணிகலன்கள் யாவும் மருமகன் அனுபவிக்கக் கண்டு மகிழ்கிறார். அதுபோல் மண், விண், தென்றல், காய், கனி, தானியம், பால், தேன், பொன், மணி, கடல், கதிர், மதி யாவும் இறைவனிடம் பெற்றவை. இவற்றையெல்லாம் நாம் அனுபவிக்க, இறைவன் மகிழ்கிறான். இறைவன் படைத்த பொருள்களையெல்லாம் உயிர்கள் அனுபவித்து இன்புறக் கண்டு இறைவன் மகிழ்கிறான். அதனால் `அன்புடைய மாமியும் நீ ' என்று அழகாகக் கூறியருளினார்.

இங்கேயும் மாமனை முதலில் வைத்து, மாமியைப் பின்னே அமைத்த அழகைச் சிந்தியுங்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளை மருமகளுடன் மிக்க அன்பாக மருவி மகிழ்வதைக் கண்டு நிறைவு பெறுவதில்லை. குறையும் படுவார்கள். மாமன் மாமி தன் மகளுடன் மருமகன் மிக்க அன்பாக மருவி மகிழ்வதைக் கண்டு மனநிறைவு பெறுவார்கள். அதனால்தான் `அன்புடைய' என்ற சொல்லை அப்பன் நீ, அம்மை நீ, என்ற இடத்தில் கூறாமல், மாமன் மாமிக்கு அடையாக்கி `அன்புடைய மாமனும் மாமியும் நீ ' என்று கூறியருளினார். இது அப்பர் பெருமானின் நுண்ணறிவைக் காட்டுகிறது.







உலகிலேயே இகழ்ச்சியானது எது?

பிறரிடம் யாசிப்பதுதான் பெரிய இகழ்ச்சி. வறுமையின் உச்சத்தில் வாழ்ந்த குசேலர் கூட வயல்களில் உதிர்ந்த நெல்லைப் பொறுக்கும் தொழில் (உஞ்ச விருத்தி) புரிந்து, தம் குடும்பத்தைக் காப்பாற்றினார். கண்ணனிடம் கூடத் தம் வறுமை நிலையைக் கூறி யாசித்தாரில்லை. ஒரு பொருளை யாசிப்பவன் எத்துணைப் பெரியவனாயினும் குன்றி விடுவான் என்ற நுட்பத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டே நெடியோனாகிய நெடுமால் மாவலியிடம் மூவடி மண் தானம் கேட்கச் சென்றபோது குள்ளராகச் சென்றார்.



பெண்ணை ஆண்தான் காப்பாற்றுகிறான். அதனால் ஆண்மைதானே பெண்மையை விட உயர்வானது?

மென்மையை வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும். ஆடவர் வன்மையுடையவர். மகளிர் மென்மையுடையவர். அதனால் பெண்மையை ஆண்மை காவல் புரிகிறது. தங்கம் மென்மையானது. இரும்பு வன்மையானது. வன்மையான இரும்புப் பெட்டியில் மென்மையான தங்கத்தை வைத்துக் காப்பாற்றுவார்கள். காவலிலிருக்கும் தங்கம் தாழ்ந்ததென்று உலகம் கருதுகிறதா? உய்த்துணர்க!




`முந்து தமிழ் மாலை' என்று அருணகிரிநாதர் கூறுகிறாரே... இதன் பொருள்?

உள்ளத்தின் சிந்தனையை வெளிப்படுத்த உதவுவது மொழி. அந்த மொழியில் இனிமை வேண்டும். கரடுமுரடாக இருக்கக்கூடாது. நான்கு பேர் நடந்து செல்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் ஒல்லியாக இருக்கிறான். ஏனையோர் கனமாக உள்ளனர். இவர்களில் ஒல்லியானவன் தான் வேகமாக நடைபோடுவான். மொழிகள் எல்லாம் இறைவனை நோக்கிப் பயணம் செய்யுமானால் அவற்றில் தமிழ்தான் முந்திச் செல்லும். அதன் மென்மைதான் காரணம். அதனால்தான் ``முந்து தமிழ் மாலை கோடிக்கோடி'' என்று பாடினார் அருணகிரிநாதர்.







ஜாதி - குலம் வித்தியாசம் உண்டா?

ஜாதி என்பது பெரும் பிரிவு. குலம் என்பது சிறு பிரிவு. ஒரிசா மாநிலம், பீகார் மாநிலம், தமிழ்நாடு என்று கூறுவதை அறிக. நெல்லை மாவட்டம், மதுரை மாவட்டம் என்று கூறுவதையும் காண்க. மனித ஜாதி, மிருக ஜாதி, பட்சி ஜாதி என்று கூறுவோம். ஜாதி என்பது மனிதனையும் விலங்கினையும் பிரிக்கும் பெரும் பிரிவு. குலம் என்பது மனிதருக்குள் அந்தண குலம், அரச குலம், வைசிய குலம், வேளாள குலம் என்பதாகும். இந்த நுணுக்கத்தை உணராமல் பிராமண ஜாதி, வேளாள ஜாதி என்கிறார்கள். இது திருச்சி மாநிலம் என்று கூறுவது போலாகும்




கனவுகளுக்குப் பலன் உண்டு என்கிறார்களே?

உண்மைதான். கனா சாஸ்திரம் என்று வியாழ பகவான் எழுதியிருக்கிறார். கனவு அதிகாரம் என்று பாம்பன் அடிகளாரும் நூல் எழுதியுள்ளார்.


பற்றற்று பணி செய்தல் என்பதுதான் கர்மயோகம் என்கிறார்கள். அப்படியென்றால்?

உலகத்திலே நீ இரு; ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது. குடும்பத்தில் நீ இரு ; ஆனால் குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது. வண்டி மேல் நீ ஏறு; வண்டி உன் மேல் ஏறக்கூடாது. கப்பல் கடலில் இருக்க வேண்டும்; கடல் கப்பலில் புகக் கூடாது. கடல்நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் மூழ்கிவிடும்.


அறிவின் முடிவான பயன்தான் என்ன?

பிறவுயிர் படும் துன்பத்தைக் கண்டு கருணை செய்வதுதான் அறிவினால் ஆகும் பயன் என்கிறார் திருவள்ளுவர்.


தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது ஏன்?

தொழுநோய், காசநோய், ஆஸ்துமா போன்ற பல கொடிய நோய்களுடன் பல காலம் போராடி வாழலாம். பசி நோயுடன் சில மணி நேரம்கூட போராடி வாழ முடியாது.



சிவனுக்குப் பல பெயர் உண்டு. அதில் உண்மைப் பெயர் என்ன?

சிலர் தங்களுக்குப் புனை பெயராகப் பல பெயர்களை வைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் கட்டுரை எழுதுகிறவர்கள் சுகி, பரணர், கபிலன், மகி என்றெல்லாம் வைத்துக் கொள்வார்கள். அவர்கள் ஏதாவது வீடு, நிலம், பணம் இவற்றை வாங்கிய பத்திரத்தில் அவர்களுடைய மூலப் பெயரே இருக்கும். அதில் புனை பெயர் இருக்காது அல்லவா?

சிவபெருமானுடைய குடியிருப்பு இடுகாடு. அதனை யார் விலைக்கு வாங்குவார்கள்? அவருடைய அணிகலன் பாம்பு; உண்ணும் பாத்திரம் தலை மண்டையோடு; உண்பது நஞ்சு; பூசுவது சுடலைப் பொடி; உடுப்பது தோல்; இவற்றை ஒருவரும் விரும்பி விலை தந்து பெற மாட்டார்கள். அவர் அம்பலத்துள் இருப்பவர், அவரும் ஒன்றை வாங்க மாட்டார்.



அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நால்வரில் அப்பர் (திருநாவுக்கரசர்) தானே மூத்தவர்?

அல்ல. மாணிக்கவாசகர்தான் மூத்தவர். அவர் காலம் 3ஆம் நூற்றாண்டு. அப்பரும், சம்பந்தரும் 7ஆம் நூற்றாண்டு. சுந்தரர் 9ஆம் நூற்றாண்டு. அப்பர் பெருமான் ``நரிகளைப் பரிகள் செய்வாரும்'' எனப் பாடுகிறார். அப்போது, மாணிக்கவாசகர் அவருக்கு முன்தானே இருந்திருக்க வேண்டும்?


Comments