காரணம் என்ன?

நான் கேட்டது தண்ணீர் மட்டும் தான்!

கௌதம புத்தரின் தலைமை மாணாக்கரும், பணியாளருமான ஆனந்தர் சாலை வழியாக போய்க் கொண்டிருந்தார். கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்காக ஒரு கிணற்றின் பக்கம் சென்றார். அங்கே மாதங்கனியா என்ற பெண்ணொருத்தி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம், ``அம்மா! தாகத்திற்கு தண்ணீர் தாருங்கள்'' என்று கேட்டார். அவளோ, ``சுவாமி! நான் தீண்டத்தகாத ஷாதியைச் சேர்ந்தவள் ஆயிற்றே! நான் எப்படி தங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது?'' என்று தயக்கத்துடன் கேட்டாள்.

இதைக் கேட்ட ஆனந்தர், ``அம்மா நான் கேட்டது தண்ணீரைத்தான்! ஷாதியை இல்லையே'' என்றார். இந்த வார்த்தைகள் மாதங்கனியாவின் மனதில் பதிந்தன. அவள் நீர் ஊற்றினாள். தண்ணீர் குடித்த ஆனந்தர் புறப்பட்டார். இவளும் அவரைத் தொடர்ந்து சென்று புத்தர் முன் நின்றாள். புத்தரும் அவளுக்கு தமது அமுத மொழியால் அருளாசியும் ஞானமும் அருளினார்.



மாயவலை

ஒரு சாமியார் நீரின் மீது நடந்து, நெருப்பை விழுங்கி, பலவிதமான மாயஜால வித்தைகள் செய்து தான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதை காட்டிக் கொண்டிருந்ததை பார்த்த ஒருவன், தன் குருவிடம், `குருவே, நீங்கள் ஏன் அந்த சாமியாரைப் போல் செய்வதில்லை' எனக் கேட்டான்.

அதற்கு அந்த குரு, `உண்மைதான். அதைவிட பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக வயிறு பசிக்கிறது. சாப்பிட்டால் பசி காணாமல் போகிறது. தூக்கம் கண்களை அசத்துகிறது. தூங்கினால் களைப்பு காணாமல் போகிறது. இப்படி நமக்குள்ளேயே பல அதிசயங்களை வைத்துக் கொண்டு வீணாக ஏன் புற அதிசயங்களில் மயங்குகிறாய்?' எனக் கேட்டார்.

புற இன்பங்களில் கவனம் செலுத்தினால் மாயையின் வலையில் சிக்கிக் கொள்வோம் என்பதை சீடன் உணர்ந்தான்.




ஞானம் என்பதே நெருப்பு

ஒரு தலைமை குரு சீடர்களிலேயே முதன்மையானவனை அழைத்து, ``எனக்கு முதுமை வந்துவிட்டது. இனி நீ தான் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்று சொல்லி தமது நடுங்கும் கைகளால் ஒரு புத்தகக் கட்டை எடுத்து நீட்டி, ``இது அரிய பொக்கிஜம். உனக்கு இது நல்வழிகாட்டும்'' என்று சொன்னார். ``வேண்டாம் குருவே'' என்று சீடன் மறுத்தான்.

தலைமை குரு கேட்டார். ``பசி வந்தால் உணவுக்கு என்ன செய்வாய்?'' ``பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பிட்சைக்குப் புறப்படுவேன்'' என்றான். ``பிட்சையிடும்போது என்ன வேண்டும் என்று கேட்பாய்?'' என்றார் தலைமை குரு. ``எதுவும் கேட்க மாட்டேன். அவர்கள் இட்டதைப் பெற்றுக் கொள்வேன்'' என்றான் சீடன். ``அப்படி உன் பாத்திரத்தில் இடப்பட்ட பிட்சையாக வைத்துக் கொள்'' என்று கூறி புத்தகக் கட்டை நீட்டினார் தலைமை குரு.

மௌனமாக பெற்றுக் கொண்ட சீடர் அதை எரியும் நெருப்பில் போட்டுவிட்டார். ``அடப்பாவி'' என்று அலறினார் குரு.

``ஞானம் என்பதே நெருப்புதானே. நெருப்பு, நெருப்புடன் சேர்ந்துவிட்டது. வேதம் என்பது வெறும் எழுத்துகள். இவற்றில் ஞானம் இல்லை'' என்றார் சீடர்.




இன்றும் நாளையும்

ஒருமுறை மகாவீரரைப் பார்த்து ஒருவர், ``மனிதர்களிடம் உள்ள எது உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது?'' என்று கேட்டார்.

அதற்கு மகாவீரர், ``மனிதர்கள் பணம் சம்பாதிக்கத் தங்கள் ஆரோக்கியத்தைத் தொலைக்கிறார்கள். பிறகு இழந்த ஆரோக்கியத்தை மீட்க பணத்தைச் செலவழிக்கிறார்கள். வருங்காலத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பதில், நிகழ்காலத்தை மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வு நிகழ்காலத்திற்காகவும் இல்லை, எதிர்காலத்திற்காகவும் இல்லை. தங்களுக்கு இறப்பே இல்லை என்பது போல் வாழ்கிறார்கள். அவர்கள் இறக்கும்போது பூரணமான வாழ்வை வாழவே இல்லை என்ற கவலையுடன் இறக்கிறார்கள்'' என்றார் மகாவீரர்.




நாமரூபங்கள் இல்லாதவர்

ஒரு சமயம் ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு சில குஷராத்தி அடியார்கள் வருகை புரிந்தனர். ஆசிரமத்தில் இருந்த புத்தக சாலையில் பகவானின் நூல்கள் சிலவற்றை வாங்கினார்கள். பின்னர் அந்தப் புத்தகங்களை பகவானிடம் கொடுத்து அவரது திருப்பெயரை அவற்றில் எழுதித் தரும்படி வேண்டினார்.

``எந்தப் பெயரை நான் எழுதுவது?'' என்றார் பகவான்.

அதற்கு அந்த அடியவர்கள், ``உங்கள் பெயரை எழுதித் தாருங்கள்'' என்று கூறவும், ``எனக்கென்ன பெயர் இருக்கிறது?'' என்று பகவான் கேட்டார்.

பகவானின் இந்த பதிலால் அதிர்ச்சியுற்ற அந்த அடியவர்கள், ``உங்கள் பெயர் ரமண மகரிஷி இல்லையா?'' என்று கேட்கவும், பகவான் புன்னகை செய்து, ``யாரோ அப்படிச் சொன்னார்கள். உண்மையில் எனக்குப் பெயர் ஏது? ஊர் ஏது? எனக்கொரு பெயர் இருந்தால்தானே நான் எழுதித் தர முடியும்?'' என்று கூறி மறுத்துவிட்டார்.

தனக்கென நாமரூபங்கள் ஏதும் இல்லாத பரிபூரண சத்வஸ்துவே பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.




காரணம் என்ன?

இலங்கையில் அரங்கேறிய அனுமன் லீலைகளைப் புகழ்ந்து ராமதாசர் பாடிக்கொண்டிருந்தார். அங்கு வெள்ளை நிறப் பூக்களைக் கண்டதாக ராமதாசர் பாடினார். உடனே அனுமன், ``இல்லை, நான் சிவப்பு நிறப் பூக்களை அல்லவா கண்டேன்!'' எனக் கூறினார். வெள்ளையா, சிவப்பா என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு தோன்றிய ஸ்ரீ ராமர், ``வெள்ளை நிறப் பூக்கள் என்பதே சரி!'' என்றார். உடனே அனுமன், ``பிரபோ! நான் அங்கு சிவப்பு நிறப் பூக்களை அல்லவா கண்டேன்!'' என மிகவும் வினயத்துடன் கேட்டார். அதற்கு ராமர், ``அசுரர்கள் மீதுள்ள கோபத்தால் உன் கண்கள் சிவந்திருந்தன. எனவே, வெள்ளை நிறப் பூக்களாக இருந்தும், உன் கண்களுக்கு அவை சிவப்பாகவே தெரிந்தது!'' என விளக்கம் கூற, ஹனுமானும் அதை ஏற்றுக் கொண்டார்.


Comments